।।2.65।। ஸ்தித ப்ரக்ஞன் எப்படி நடமாடுகிறான் என்ற அர்ஜுனனின் கேள்விக்கு பதில்:
प्रसादे सर्वदु:खानां हानिरस्योपजायते ।
प्रसन्नचेतसो ह्याशु बुद्धि: पर्यवतितिष्ठाते ।। ६५
ப்ரஸாதே3 ஸர்வது3:கா2நாம் ஹாநிரஸ்யோபஜாயதே ।
ப்ரஸந்நசேதஸோ ஹ்யாசு1 பு3த்3தி4: பர்யவதிஷ்ட2தே ।। 65
प्रसादे ப்ரஸாதே3 மன அமைதியில் अस्य அஸ்ய இவனுடைய
सर्व-दु:खानां ஸர்வது3:கா2நாம் எல்லா துக்கங்களுக்கும் हानि: ஹாநி: அழிவு
उपजायते உபஜாயதே உண்டாகிறது हि ஹி ஏனெனில்
प्रसन्न-चेतस: ப்ரஸந்ந-சேதஸ: அமைதியான மனதையுடையவனுக்கு आशु ஆசு1 விரைவில்
बुद्धि: பு3த்3தி4: புத்தி पर्यवतितिष्ठाते பர்யவதிஷ்ட2தே நிலைபெறுகிறது.
மன அமைதியில் மனிதனது அனைத்து துன்பங்களும் அழிகின்றன. ஏனெனில் அமைதியான மனதையுடையவனுக்கு புத்தியானது விரைவில் ஆத்ம சொரூபத்தில் நிலைபெறுகிறது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு :
சாந்தி நிலையில் மனிதனுக்கு எல்லாத் துன்பங்களும் அழிகின்றன. சித்தம் சாந்தி பெற்ற பின் ஒருவனுடைய புத்தி விரைவிலே நிலைப்படுகிறது.
விளக்கம்:
=> அமைதியான மனதில் ஞானம் நிலைபெறும்:
மன அமைதியுடையவனது துன்பங்கள் அனைத்தும், நாசத்தை அடைகின்றது. ஒரு மனிதன் 3 வகையில் துன்பத்தை அடைகின்றான்:
(1) புயல், மழை போன்ற இயற்கையினால் உண்டாகும் துன்பம் —> ஆதிதெய்விக-துக்கம்(अादिदैविक दुख)
(2) நம்மைச் சுற்றியிருக்கும் சூழ்நிலை, மனிதர்கள் மற்றும் உயிரனங்களால் உண்டாவது —> ஆதிபெளதிக-துக்கம்(अादिभौतिक दुख)
(3) நம் உடல், மனம், புலன்களால் உண்டாவது —> ஆத்யாத்மிக-துக்கம்(अाद्यात्मिक दुख).
இங்கு பகவான், இந்த மூன்று விதமான துக்கமும் அழிகின்றன(ஸர்வது3:கா2நாம் ஹாநி: உபஜாயதே) என்கிறார். அப்படியெனில், துயரமே ஏற்படாதா? சென்று விடுமா? எனும்போது அவைகள் செல்வதில்லை, மாறாக துக்கத்தை விளைவிக்கும் தகுதியை இழந்துவிடுகின்றன. உடலில் வலி இருக்கலாம், ஆனால் அது மன அமைதியை(ப்ரஸந்ந-சேதஸ:) அடைந்தவனது மனதில் துயரத்தை ஏற்படுத்தாது. விரும்பத்தக்க மற்றும் விரும்பத்தகாத சூழ்நிலைகள் அவனிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.
அனைத்து துயரமும் அழியும் போது ஆத்மாவின் சொரூபமான அமைதி, ஆனந்தம் மனதிலும் வெளிப்படுகிறது. மனதிலுள்ள ராக-த்வேஷங்களே ஆத்மாவின் ஆனந்த-சொரூபம் மனதில் வெளிப்படுவதை தடுக்கின்றன. ஆகவே ராக-த்வேஷங்களிலிருந்து விடுபடும் போது, துயரத்தின் நாசம் உண்டாகிறது(ஹாநி: உபஜாயதே), அதாவது ‘ஏற்படுகிறது’.
மன அமைதியே துயரத்தை அழித்து விடுமா? இல்லை. உண்மையில் ஆத்ம ஞானம் மட்டுமே எல்லா துன்பத்தையும் அழிக்கவல்லது. ப்ரசன்னமான மனதையுடையவனுக்கு ஆத்ம ஞானம் தொலைவில் இல்லை. தூய்மையான, விக்ஷேபமில்லாத மனதில், ஆதாரமான ப்ரம்மம் தென்படுகிறது. ஞானம் வந்த பின், மனதை அமைதியாக பாதுகாத்தலே ஞானத்தை ஞான நிஷ்டையாக மாற்றுகிறது. இப்படிப்பட்ட ஸ்தித ப்ரக்ஞனிடம் ஆத்ம ஞானம் உறுதியாக நிலைபெறுகிறது. ஞானத்தில் நிலைபெற்ற மனம், இவனுக்கு ப்ரயோஜனமான கருவியாக மாறுகிறது, எந்த சிக்கலையும் ஏற்படுத்துவதில்லை.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
பாலுக்குப் பிரை ஊற்றினபின் அது தயிராக உறையும்வரையில் அமைதியாக ஓரிடத்திலேயே வைக்கப்படவேண்டும். இடம் மாற்றி வைத்தால் அது நல்ல தயிராகாது. அங்ஙனம் மனதை ஈஷ்வரனிடத்திலேயே வைக்கின்றவளவு அது அமைதி பெறுகிறது.
-------------------------------------------------------------------------------------।।2.66।। தன்னை திருத்தியமைக்காவிட்டால் ஆவதென்ன?
नास्ति बुद्धिरयुक्तस्य न चायुक्तस्य भावना ।
न चाभावयत: शान्तिरशान्तस्य कुत: सुखम् ।। ६६
நாஸ்தி பு3த்3தி4ரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பா4வநா ।
ந சாபா4வயத: சா1ந்திரசா1ந்தஸ்ய குத: ஸுக2ம் ।। 66
अयुक्तस्य அயுக்தஸ்ய மனம் அடங்காதவனுக்கு बुद्धि: பு3த்3தி4: ஆத்ம ஞானம்
न अस्ति ந அஸ்தி ஏற்படாது अयुक्तस्य அயுக்தஸ்ய மனக் கட்டுப்பாடில்லாதவன்/யோகியல்லாதவனுக்கு भावना च பா4வநா ச ஆத்மபாவனையும்(நிதித்யாசனமும்) न ந இல்லை अभावयत: च அபா4வயத: ச ஆத்ம தியானமில்லாதவனுக்கு शान्ति சா1ந்தி சாந்தி न ந இல்லை अशान्तस्य அசா1ந்தஸ்ய சாந்தியில்லாதவனுக்கு कुत: குத: ஏது सुखम् ஸுக2ம் சுகம்?
மனம் அடங்காதவனுக்கு ஆத்ம ஞானம் ஏற்படாது. மனக் கட்டுப்பாடில்லாதவனுக்கு நிதித்யாசனமும் நட்க்காது. ஆத்ம தியானமில்லாதவனுக்கு சாந்தி இல்லை. சாந்தியில்லாதவனுக்கு ஏது சுகம்?
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு :
யோகமில்லாதவனுக்குப் புத்தியில்லை. யோகமில்லாதவனுக்கு மனோபாவனை இல்லை. மனோபாவனையில்லாதவனுக்குச் சாந்தி இல்லை. சாந்தியில்லாதவனுக்கு இன்பமேது?
விளக்கம்:
=> மன ஒழுக்கம் இல்லாவிடில் ஏன் நிதித்யாசனம் செய்ய முடியாது?
முன் சுலோகத்தில் கூறப்பட்ட கருத்து இங்கு மீண்டுமொருமுறை எதிர்மறையாக சொல்லப்படுகிறது எனலாம். அல்லது மன அமைதியுடையவர்களை(ப்ரஸந்ந-சேதஸ:) பகவான் இவ்விதமாக பாராட்டுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம். அயுக்த: என்னும் சொல், தனது ராக-த்வேஷத்தில் போதுமான அளவு அக்கறை செலுத்தாமல் மனதின் இஷ்டப்படி விட்டவர்கள்; இந்திரிய, மன ஒழுக்கமில்லாதவர்கள் என பொருள்படும். இங்கு, பு3த்3தி4: - தன்னை/ஆத்மாவைப் பற்றிய அறிவு. விருப்பு வெறுப்பினால் கட்டுண்ட மனதையுடையவனுக்கு ஆத்ம ஞானத்தை அடைவதற்கோ, தன்னைப் பற்றிய விசாரத்தில் ஈடுபடுவதற்கோ நேரம் கிடைப்பதில்லை. புலன்களில் வேட்கையிருக்குமளவு மனிதன் துன்பப்பட்டே ஆகவேண்டும். மன ஒழுக்கத்தின் மூலம், இந்திரியங்களை வெல்லாதவனுக்கு ஆத்ம ஞானம் ஏற்படுவதில்லை. ஆகையால் ஆத்ம தியானம் அவனால் செய்ய முடியாது. நிதித்யாசனம் செய்யாதவனுக்கு ஆத்ம சொரூப ஞானமில்லை. அதிலிருந்து கிடைக்கும் சாந்தியுமில்லை. விவகாரங்களிலிருந்து விலகிக் கொள்ளுதலும்(உபரம:_उपरम:) சாத்தியமில்லை. இவ்வளவு நஷ்டங்கள் மனமடங்காமையால் வருகின்றன.
ஒருவன், தனக்கு அமைதி தேவையில்லை, சுகம் மட்டும் போதும் என கூறலாம். ஆனால், அமைதியான மனதில் தான் அனைத்துவித மகிழ்ச்சியும் உண்டாகும். சஞ்சலமான மனதில் மகிழ்ச்சி ஏற்படாது. ஆகவே, கர்ம-யோகம், குரு வாயிலாக சாஸ்திரத்தை கேட்டல்(श्रवणम्), சந்தேகம் தெளிதல்(मननम्) மூலம் ராக-த்வேஷத்திலிருந்து விடுபட்டு, மன அமைதியை அடைந்த ஒருவன் நிதித்யாசனத்தின் மூலம் ஆத்ம சொரூபத்தில் நிலை பெறுகிறான்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
வேகாத மண்ணைக்கொண்டு குயவன் சட்டிகளும் பானைகளும் செய்கிறான். ஒரு தரம் சுடப்பட்டுவிட்டால் அந்த மண்ணைக்கொண்டு அவனால் ஒன்றும் செய்யமுடியாது. அதுபோல உலக இச்சைகளாகிய நெருப்பால் வெந்துபோன ஒருவனுடைய மனதில் உயர்ந்த மனோபாவங்கள் உண்டாகா. அதை ஒரு அழகிய உருவமாக்கவும் முடியாது.
-------------------------------------------------------------------------------------
।।2.67।। மனமடங்காதவனுக்கு ஞானம் உண்டாகாமல் போவதற்கான காரணம்:
इन्द्रियाणां हि चरतां यन्मनोऽनुविधीयते ।
तदस्य हरति प्रज्ञां वायुर्नावमिवाम्भसि ।। ६७
இந்த்3ரியாணாம் ஹி சரதாம் யந்மநோऽநுவிதீ4யதே
தத3ஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்ப4ஸி ।। 67
हि ஹி ஏனென்றால் चरतां इन्द्रियाणां சரதாம் இந்த்3ரியாணாம் அலைகின்ற இந்திரியங்களை
यत् मन: யத் மன: எந்த மனமானது अनुविधीयते அநுவிதீ4யதே பின்பற்றிப் போகிறதோ
तत् தத் அது अस्य அஸ்ய அவனுடைய प्रज्ञां ப்ரஜ்ஞாம் ஞானத்தை
हरति ஹரதி அரிக்கிறது नावम् நாவம் கப்பலை वायु: வாயு: காற்றானது
अम्भसि इव அம்பஸி இவ நீர்மேல் நிலைகுலைப்பது போன்று.
கப்பலை காற்றானது நீர்மேல் நிலைகுலைப்பது போன்று, அலைகின்ற இந்திரியங்களை பின் தொடரும் மனது அவனது ஞானத்தை அரிக்கிறது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு :
இந்திரியங்கள் சலிக்கையில் ஒருவனுடைய மனமும் அவற்றைப் பின்பற்றிச் செல்லுமாயின், அம்மனம் கடலில் தோணியைக் காற்று மோதுவதுபோல் அறிவை மோதுகிறது.
விளக்கம்:
=> பண்பட்ட மனமே ஞானத்தில் நிலைபெறும்:
புலன்கள் புறவுலகைச் சார்தற்கென்றே அமைந்தவைகள். உதாரணமாக கண்கள் வடிவங்களையும், வண்ணங்களையும் அறிதல், காதுகள் சப்தங்களைக் கேட்டல் போன்ற புறவுலக அனுபவங்களைக் கொடுக்கிறது. இந்த சுலோகத்தில் பகவான், இப்படிப்பட்ட புலன்களின் பின்னால் மனக் கட்டுப்பாடின்றி செல்பவனது நிலையை உதாரணத்தின் மூலம் வர்ணிக்கிறார்.
விருப்பு வெறுப்பினால் தூண்டப்பட்டவனாக, புலனின்பத்தை நாடிச் சென்றால் அச் செயலானது பகுத்தறிதலின் மூலம் அவன் அடைந்த ஆத்ம சொரூபத்தை பற்றிய விவேகத்தை திருடிச் செல்கிறது. இதனால் அவனது மனம் எப்போதும் புறப்பொருட்களைப் பற்றிய சிந்தனையிலேயே இருக்கிறது. காற்றானது எப்படி சிறு படகை அதன் இலக்கிலிருந்து திசை திருப்பி தண்ணீருக்குள் இழுத்துச் செல்லுமோ அது போல தன் இலக்கிலிருந்து தவறியவனாக, தனது ஞானத்தை இழக்கிறான்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
இந்திரிய சுகங்கள் தினவு நோய்க்குச் சமானமானவைகள். தினவைச் சொறியச் சொறிய இன்பமாயிருக்கிறது. ஆனால் அந்நோய் அதன்மூலம் வளர்கிறது. இந்திரிய சுகத்தைப் பின்பற்றுகிறவளவு மனது தன் பெருமையை இழப்பதாகிறது.
-------------------------------------------------------------------------------------
।।2.68।। அப்படியானால் இப்படிப்பட்ட புலன்களை என்ன செய்ய வேண்டும்?
तस्माद्यस्य महाबाहो निगृहीतानि सर्वश: ।
इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता ।। ६८
தஸ்மாத்3யஸ்ய மஹாபா3ஹோ நிக்3ருஹீதாநி ஸர்வச1: ।
இந்த்3ரியாணீந்த்3ரியார்தே2ப்4யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி2தா ।। 68
महाबाहो மஹாபா3ஹோ தோள்வலிவுடையவனே तस्मात् தஸ்மாத் ஆகையினால்
यस्य யஸ்ய யாருடைய इन्द्रियाणि இந்த்3ரியாணி இந்திரியங்கள் इन्द्रिय-अर्थेभ्य: இந்த்3ரிய-அர்தே2ப்4ய: இந்திரிய விஷயங்களிலிருந்து सर्वश: ஸர்வச1: முழுமையாக (எல்லாவிதத்திலும்) निगृहीतानि நிக்3ருஹீதாநி ஒழுக்கப்படுத்தப்பட்டுள்ளதோ(அடக்கப்பட்டிருக்கின்றதோ) तस्य தஸ்ய அவனுடைய प्रज्ञा ப்ரஜ்ஞா ஞானம் प्रतिष्ठिता ப்ரதிஷ்டி2தா நிலைபெற்றதாக இருக்கும்.
ஆகையால், தோள்வலிவுடையவனே, யாருடைய புலன்கள் தத்தம் விஷயங்களிலிருந்து ஒழுக்கப்படுத்தப்பட்டுள்ளதோ அவனது ஞானம் நிலைபெற்றதாக இருக்கும்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு :
ஆதலால், பெருந்தோளாய், யாங்கணும் விஷயங்களினின்றும் இந்திரியங்களைக் கட்டவல்லான் எவனோ, அவனறிவே நிலைகொண்டது.
விளக்கம்:
=> புலனடக்கத்தின் மேண்மை
இங்கு ‘ஆகவே(தஸ்மாத்)’ என்னும் சொல், ஞானத்தில் நிலைபெற(ஞான நிஷ்டைக்காக) முயன்று கொண்டிருப்பவனுக்கான உபாயத்தை பற்றி விளக்கும் இந்த பகுதியை, பகவான் முடிவுரை செய்கிறார் என்பதைக் குறிக்கிறது.
எவருடைய இந்திரியங்கள் முழுமையாக, எல்லாவிதத்திலும் இந்திரிய விஷயங்களிலிருந்து ஒழுக்கப்படுத்தப்பட்டுள்ளதோ அவருடைய ஞானம் நிலைபெற்றுள்ளது. இந்திரியங்கள் தத்தம் தொழில் புரியாதிருக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள். வஸ்துக்களை போகத்திற்குரியவைகளென்று எண்ணி அவைகள் மீது புலன்கள் உலாவுதலால் கேடு விளைகிறது. இந்திரிய நிக்கிரகம் என்பது இந்திரியங்களைக் கீழ்மையிலிருந்து மீட்டெடுத்து மேண்மையில் வைப்பது.
எவ்விதம் ஆமையானது ஆபத்தின் போது தனது அங்கங்களை உள்ளிளுத்துக் கொள்கிறதோ அவ்விதம் புலன்களை விஷயங்களிலிருந்து இயல்பாக விலக்கிக் கொள்ளும் வலிமையுடையவனின் மனம், விருப்பு வெறுப்பின் அழுத்தத்திலிருந்து விடுபடுகிறது.
ஒருவனுடைய அறிவு தெளிவு பெற பெற அவனது மனக்கட்டுப்பாடு வலிமை பெற்று, ராகத்வேஷத்தை கையாளும் திறன் வளர்கிறது. கர்ம யோக பாவனையின் வாயிலாக ராகத்வேஷத்தை குறிப்பிட்ட அளவு குறைப்பதன் மூலம் ஞானம் தெளிவு பெறுகிறது. இவையிரண்டும் ஒன்றுக்கொன்று உதவி செய்கிறது. ஆகவே இந்திரியக் கட்டுப்பாட்டை அடைந்தவன் ஞானத்தில் நிலைபெறும் தகுதியை அடைகின்றான்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
கண்களை மூடினாலொழிய, பழகாத குதிரைகள் ஓரடி கூட எடுத்து வைக்கா. ஆசைகளை அடக்காவிட்டால் ஈசுவரனைக் காண முடியாது. ஆகையால் ஞானமார்க்கத்தில் செல்பவர் தம் ஆசைகளை அடக்கப் பிரயத்தனப்படுவார்கள். முதலில் பொறியடக்கம்; அப்பால் ஈசுவர ஞானம்.
-------------------------------------------------------------------------------------