||4.14|| லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
||4.14|| லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 செப்டம்பர், 2021

ஞானகர்மஸந்யாஸ யோகம் 4.13 - 4.14

||4.13|| நான்கு வர்ணமும் கர்மமும்:

चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्मविभागश:

तस्य कर्तारमपि मां विद्ध्यकर्तारमव्ययम् ।। १३ ।। 

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் கு3ணகர்மவிபா431:

தஸ்ய கர்தாரமபி மாம் வித்3த்4யகர்தாரமவ்யயம் ।। 13 ।।


मया    மயா  என்னால்   गुणकर्मविभागशகு3ணகர்மவிபா431:  குண மற்றும் கர்மத்தின் அடிப்படையில்    चातुर्वर्ण्यं  சாதுர்வர்ண்யம்  நான்கு வர்ணங்கள்   सृष्टं  ஸ்ருஷ்டம்  சிருஷ்டிக்கப்பட்டன   तस्य   தஸ்ய  அதற்கு   कर्तारम् अपि   கர்தாரம் அபி  கர்த்தா எனினும்   मां   மாம்  என்னை   अकर्तारम्  அகர்தாரம்  கர்த்தா அல்லாதவனாகவும்   अमव्ययम्   அவ்யயம்  அழியாதவனாகவும்  विद्धि    வித்3தி4  அறிந்து கொள்.


குணத்துக்கும் கர்மத்துக்கும் ஏற்ப நான்கு வர்ணங்கள் என்னால் படைக்கப்பட்டது. அதற்கு கர்த்தா எனினும், என்னை கர்த்தா அல்லாதவனாகவும் அழிவற்றவனாகவும் அறிந்து கொள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன். செயற்கையற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தோனென்றுணர்.


விளக்கம்:

நான் வகுத்துக் கொடுத்த பாதையிலேயே பயணிக்கிறார்கள்என 4.11-ல் பகவான் கூறியதற்கான விளக்கத்தை இங்கு கூறுகிறார். மனித சமுதாயம் இரண்டு கோணத்தில் பிரிக்கப்பட்டுள்ளது.

  (i) சமுதாய அமைப்பு [social]

  (ii) தனிப்பட்ட வாழ்க்கை முறை [individual life style]

=> தனிப்பட்ட வாழ்க்கை முறை(ஆஸ்ரம விபாகம்):

தனிப்பட்ட வாழ்க்கை முறையை பகவான் நான்காகப் பிரித்துள்ளார். அதை ஆச்1ரமம்(आश्रम) என்கிறோம். பிரம்மச்சரியம், கிரஹஸ்தம், வானப்ரஸ்தம் மற்றும் சந்யாசம். ஒவ்வொரு ஆஸ்ரமத்திற்கும் உரிய விசேஷ தர்மங்கள் உள்ளன. புற வாழ்க்கை சம்பந்தப்பட்ட இது, அந்த குறிப்பிட்ட ஆஸ்ரமத்திற்கான தன்னறத்தை(ஸ்வதர்மம்) குறிக்கும்.

* பிரம்மச்சரியம் - கல்வி கற்றல் 

* கிரஹஸ்தம் - ஐந்து வகையான யக்ஞங்கள்(3.13) 

* வானப்ரஸ்தம் - கடமைகளை துறத்தல் மற்றும் தபஸ்

* சந்யாசம் - சாஸ்த்திர சிரவண, மநந மற்றும் நிதித்யாசனம்.

இவையனைத்துக்கும் பொதுவானதாக இருப்பது சாமான்ய தர்மம் எனப்படும். இது அகம் சம்பந்தப்பட்டது. ஒருவன் தனக்குத்தானே செய்துகொண்டு, தன்னை தெய்வ நிலைக்கு உயர்த்திக் கொள்வதற்கான வழிமுறைகளை வகுப்பது இது. உதாரணமாக அஹிம்சை, சத்தியம், தூய்மை, எல்லா ஜீவராசிகளிடத்திலும் சமமான அன்பு மற்றும் புலனடக்கம் போன்றவற்றை கூறலாம்.


=> சமூக அமைப்பு(வர்ண விபாகம்):

வர்ண: - வர்ண்யதே ஞாயதே அநேந இதி வர்ண: குண:எந்த குணத்தினால் ஒருவனின் தன்மையை அறிய முடிகிறதோ அது வர்ணம். பொதுவாக நான்கு வகையான வர்ணங்கள் பேசப்படுகின்றன.

* பிராமணர்கள் - வேதத்தை படிப்பவன் பிராமணன்; பரப்ரம்மத்தை அறிபவன் பிராமணன்(ப்ரம்ம வேத்தி ஜானாதி இதி).  

     * க்ஷத்திரியர்கள் - ஆபத்திலிருந்து, அழிவிலிருந்து காப்பாற்றுபவர்கள்.

* வைசியர்கள் - பல இடங்களுக்கு சென்று பொருளை மாற்றுபவர்கள்; வியாபாரி மற்றும் விவசாயி.

* சூத்திரர்கள் - மற்றவர்களுக்கு சேவை செய்பவர்கள்.

=> முக்குணங்கள்:

இங்கு பகவான் குணம் மற்றும் கர்மத்தின் அடிப்படையில் மேற்கூரிய நான்கு வர்ணங்களைப் படைத்ததாக கூறுகிறார். சத்வம்(சாத்விகம்), ரஜஸ்(ராஜஸம்), தமஸ்(தாமசம்) முதலிய மூன்று குணங்களைப் பற்றிய அறிமுகம் நமக்கு ஏற்கனவே உண்டு. சத்வ குணம் சிந்தனையை, அறிவைக் குறிக்கிறது. விசாரித்தல், அமைதி, சிந்தித்து தெளிதல், மனஒழுக்கம், புலனடக்கம் முதலியவைகள் சாத்விக குணத்தைச் சார்ந்தது. ரஜஸ் என்பது செயல்பாட்டை, செயல்படும் சக்தியைக் குறிக்கிறது. ராஜஸம் ஆதிக்கம் செலுத்தும் நபரிடமும் ஒழுக்கம் காணப்பட்ட போதிலும், அதனுடன் சேர்த்து லட்சியம், ஆற்றல் மற்றும் உற்சாகம் போன்றவைகளும் இருக்கும். தமஸ் என்பது மந்தமான, செயலற்ற தன்மையைக் குறிக்கும். சோம்பல் மற்றும் உறக்கம் தாமசம் ஆகும்

ஒவ்வொரு தனிநபரும் மூன்று குணங்களையும் கொண்டவர்களே. ஆனால் அவற்றின் விகிதாசாரத்தில் வித்தியாசம் உள்ளது. எடுத்துக்காட்டாக குழந்தைகளுக்கு, தமஸ்-ரஜஸ்-சத்வம் என்ற வரிசைப்படி குணங்கள் இருக்கும். தாமசம் மேலோங்கியவர்களாக அதிக நேரம் உறங்கிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வளர வளர ராஜஸம் மேலோங்கி சுறுசுறுப்பாக மாறுகின்றனர், ரஜஸ்-தமஸ்-சத்வம். இறுதியில் அவர்கள் சத்வமானவர்களாக வளர்ந்து வர வேண்டும் என்பது எதிர்பார்ப்பு.  


=> குணத்தின் அடிப்படையில் விபாகம்:

வர்ண விபாகத்தில், நான்கு வகையைச் சார்ந்தவரும் வெவ்வேறான குணக் கலவையுடன் உள்ளனர். அவர்கள், எந்த குணத்தில் மேலோங்கியும், அதைத் தொடர்ந்து அடுத்ததாக எந்த குணங்களைக் கொண்டும் இருக்கிறார்கள் என்பதை கீழ்கண்ட விளக்கத்தில் காணலாம்.

முதலாவதாக, சத்வம் —> ரஜஸ் —> தமஸ். சத்வ குண ஆதிக்கத்தில் இருக்கும் இவர், அதைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் ரஜோகுணமும், மூன்றாம் இடத்தில் தமோ குணமும் கொண்டவராக இருக்கிறார். உண்மையில் இக்கலவை ஒருவனின் உள் அமைப்பின் மிக அழகான வெளிப்பாடாகும். அவர் அதிகம் சிந்திக்க கூடியவராக, தெளிவான நோக்கம் கொண்டவராக இருப்பார். மனவெழுச்சியில் பக்குவமடைந்தவரும், அடிப்படை மதிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவரும், தத்துவஞானியும் இக்கலவையுடன் கூடியவர்களாக இருப்பார்கள். குணத்தின் அடிப்படையில் இவர்கள் பிராமணர்கள்.   

இரண்டாவது கலவை, ரஜஸ் —> சத்வம் —> தமஸ், க்ஷத்திரியர்கள். ராஜஸம் மேலோங்கிய இவர்கள், மிகவும் சுறுசுறுப்பானவர்களாக, லட்சியத்தில் தன்னை முழுதும் ஈடுபடுத்திக் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் நலனை லட்சியமாக கொள்ளும் இவர்களை வழிநடத்த நிறைய சிந்திக்கும் திறன் தேவைப்படுவதால், இரண்டாம் இடத்தில் சத்வ குணம் உள்ளது. பொதுவாக இத்தகையவர்கள் நல்ல தலைவர்களாக மாறுகிறார்கள்

மூன்றாவது கலவை, ரஜஸ் —> தமஸ் —> சத்வம், வைசியர்கள். ராஜஸ ஆதிக்கத்தினால் இவர்கள் சுறுசுறுப்பாக செயலாற்றுபவர்களாகவும், தாமசம் இரண்டாமிடத்தில் இருப்பதால் இவர்கள் சிந்தனையைக் காட்டிலும் லட்சியத்தில் அதிக கவனம் கொண்டவர்களாகவும் இருப்பர். மற்றவர்களைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல் பணம், பதவி மற்றும் அதிகாரத்தின் பின் செல்பவர்களாக இருப்பார்கள்

நான்காவதாக, தமஸ் —> ரஜஸ் —> சத்வம். தாமசம் மேலோங்கியவர்களாக இவர்கள் மந்தத் தன்மை காரணமாக, பெரிதான லட்சியம் எதுமில்லாத எளிய ஊழியர்களாக இருப்பார்கள். பணத்திலும்கூட பெரிய ஆர்வமில்லாத இவர்கள், சோம்பலினால் தங்களுடைய சிறிய ஆசைகளையும் சமரசம் செய்யத் தயங்க மாட்டார்கள். குணத்தின் அடிப்படையில் இவர்கள் சூத்திரர்கள்.


=> கர்மத்தின் அடிப்படையில் விபாகம்:

சமுதாயத்தில் கர்மம் மற்றும் கடமையின் அடிப்படையிலும் இந்த நான்கு வர்ணங்கள் பிரிக்கப்படுகின்றன. உதாரணமாக ஒரு பிராமணனின் கடமை அல்லது கர்மம், கற்றல், கற்பித்தல் மற்றும் வேத சடங்குகளில் பணியாற்றுதல். எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டவராக, சமூகத்தின் நலனுக்காக பிரார்த்தனைகளில் ஈடுபடுபவராக இருப்பார். மனஒழுக்கத்தையும் புலனடக்கத்தையும் பயின்றவராக வேதத்தை படித்தல் மற்றும் படிப்பித்தலில் ஈடுபடுவார். இதிலிருந்து குண-பிராமணன் மற்றும் கர்ம-பிராமணன் என வர்ணமானது பார்க்கப்படுகிறது

இதேபோல, தர்மத்தைப் பாதுகாப்பதும், அறிவுக்கு துணைநிற்பதும் மற்றும் வேதங்களைப் பாதுகாப்பதும் க்ஷத்திரிய கர்மமாகிறது. இவ்விதத்தில் ஒரு க்ஷத்திரியனாக, நிர்வாகம், நீதித்துறை, சட்ட அமலாக்கம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மக்களை ஆட்சி செய்து பாதுகாப்பதே அர்ஜுனனின் கடமையாக இருந்தது

வர்த்தகம், செல்வம், பண்ணைகள் மற்றும் விவசாயம் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் வைசியர்கள். மக்களுக்கு தேவையான பொருட்களை, உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து கொண்டு வந்து, அவர்களுக்குத் தேவைப்படும் இடங்களில் கிடைக்கச் செய்வது வைசியர்களின் கர்மம்

எளிய ஊழியர்களாக, மற்றவர்களுக்கு சேவை செய்பவர்களாக சூத்திரர்கள் இருக்கிறார்கள். இத்தகைய மக்கள் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. சமூகம் செயல்பட இவர்களின் பங்கு இன்றியமையாதது


=> மனமுதிர்ச்சியே மேண்மையின் வெளிப்பாடு:

எந்தவொரு கர்மமும் இனியொன்றை விட மேலானது அல்ல. அவரவர்களின் கடமை அவர்களுக்கு அவசியமானதாக, நன்மையை கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. ஆகவே எந்தக் குழுவைச் சார்ந்தவரும் மற்ற குழுவினரைவிட உயர்ந்தவர்களோ அல்லது தாழ்ந்தவர்களோ அல்லர். எந்த வர்ணத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் கர்மயோக மனப்பான்மையுடன் தனது கடமையைச் செய்யும்போது அவர் சத்வ-ரஜஸ்-தமஸ் கலவையைச் சார்ந்தவராக குண-பிராமணனாக ஆகிறார். தனிப்பட்ட செல்வாக்கிற்காக வேதம் ஓதும் குல-பிராமணன், ரஜஸ் —> சத்வம் —> தமஸ் என்ற கலவையில் சேர்கிறார். தனக்கு உணவளிப்பதற்காக அன்றி வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்லாமல் மந்தமான மனப்பான்மையுடன் கோயிலில் சடங்கைச் செய்யும் பூசாரி, ரஜஸ் —> தமஸ் —> சத்வ குணத்தை அடைகிறார். பகவான் இங்கு குணம் மற்றும் கர்மத்தின் அடிப்படையில்தான் வர்ணங்களைப் படைத்ததாகக் கூறுகிறார், பிறப்பின் அடிப்படையில் அல்ல

இன்றைக்கு சமூகத்தில் உள்ள நிலைமையில் பிறப்பை அனுசரித்து வர்ணத்தை, ஜாதியை நிர்ணயிப்பது சிறிதும் பொருந்தாது. ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறப்பது பிராரப்தம். அதில் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை. மேலும் ஒரு குறிப்பிட்ட கர்மமும் சில சமயங்களில் பிராரப்தத்தினால் அமைகிறது. ஆனால் ஒருவனின் உயர்வு என்பது குணத்தினால் நிகழ்வது. அத்யாத்ம வித்யைக்கு ஏற்ப நான்கு வர்ணங்கள் மனபரிபாகத்தை ஒட்டியது. அதன்படி நான்கு சகோதரர்களுக்கிடையில் மனபக்குவதிற்கு ஏற்ப ஒருவன் பிராமணனாகவும், இன்னொருவன் க்ஷத்திரியனாகவும், மற்றொருவன் வைசியனாகவும், வேறு ஒருவன் சூத்திரனாகவும் இருக்கமுடியும்குணத்தின் அடிப்படையில் ஒருவன் தன்னை பிராமணனாக மாற்றிக் கொள்ள முழு வாய்ப்பு உள்ளது. வர்ணத்தில் மேல்நோக்கி போகப் போக பரவித்யையில் ஈடுபடுவது அதிகரிக்கிறது. வர்ணத்தில் கீழே போகப் போக கர்மபலனில் பற்று அதிகரிக்கிறது. சத்வ குணத்தில் மேலோங்கியிருக்கும் இந்த குணப் பிராமணனுக்கே வேதாந்தம் புரியும். ஆத்ம தத்துவம், பிரகிருதி தத்துவம் முதலியவை விளங்குகின்றன. குணப் பிராமணன் மோக்ஷத்திற்கு தகுதியுடையவன்

நான்கு வர்ணத்தின் கர்மங்கள் 18-வது அத்தியாயத்தில் 42, 43, 44வது சுலோகங்களில் விளக்கப்படுகின்றன.



குணம்

கர்மம்

பிராமணன்

சத்வம் —> ரஜஸ் —> தமஸ்

படித்தல், படிப்பித்தல், சந்யாசி

க்ஷத்திரியன்

ரஜஸ் —> சத்வம் —> தமஸ்

இராணுவம், அரசியல்

வைசியன்

ரஜஸ் —> தமஸ் —> சத்வம்

வியாபாரி, விவசாயி

சூத்திரன்

தமஸ் —> ரஜஸ் —> சத்வம்

தொழிலாளி, உழைப்பாளி


=> முரண்பாடு:

நான்கு குழுக்களாகப் பிரதிபலிக்கப்பட்ட இந்த குறிப்பிட்ட கட்டமைப்பு, தன்னால் உருவாக்கப்பட்டதாக கிருஷ்ணர் கூறுகிறார். எனவே, சிருஷ்டித்தவராக கர்த்தாவாக ஈஷ்வரனை நாம் அறிய வேண்டும். அதேசமயம், அவர் தன்னை அகர்த்தா என்றும் புரிந்து கொள் என்கிறார், ‘இவைகளுக்கு கர்த்தா எனினும், என்னை கர்த்தா அல்லாதவனாக, அகர்த்தாவாக தெரிந்து கொள்’— கர்தாரம் அபி மாம்  அகர்தாரம் வித்3தி4. ஒரு பொருள், இரு வேறுபட்ட தன்மையுடன் ஒரே காலத்தில் மற்றும் ஒரே இடத்தில் இருக்காது. உதாரணம்., இருள் மற்றும் வெளிச்சம் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் இருக்காது. இவ்விதத்தில் மேற்கூரிய பகவானின் வாக்கியத்தில் முரண்பாடு தெரிந்தாலும், விசாரம் செய்துபார்த்தால் அது விலகுகிறது. ஈஷ்வரன் தன்னை ப்ரம்ம சொரூபமாகப் பார்த்தால் எந்தச் செயலும் செய்யாதவர். ப்ரம்ம திருஷ்டியில் சிருஷ்டி என்பதே கிடையாது. தன்னை மாயையுடன் சேர்த்துப் பார்த்தால் இவ்வுலகின் கர்த்தாவாகிறார். இது மாயா திருஷ்டி ஆகும்.

முதலில் மாயையை என் வசப்படுத்தி, இவைகளனைத்திற்கும் நான் கர்த்தா என்றும், உண்மையில் நான் அழியாத ஞான சொரூபம், அகர்த்தா என்றும் புரிந்து கொள்’.

இதுவே ஞான-கர்ம-சந்யாசத்திற்கு விதையாக உள்ள இடம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------

||4.14|| பகவான் கர்த்தாவாக இருந்தபோதிலும் பந்தம் இல்லை:

मां कर्माणि लिम्पन्ति मे कर्मफले स्पृहा  

इति मां योऽभिजानाति कर्मभिर्न बध्यते ।। १४ ।। 

மாம் கர்மாணி லிம்பந்தி மே கர்மப2லே ஸ்ப்ருஹா

இதி மாம் யோऽபி4ஜாநாதி கர்மபி4ர்ந 3த்4யதே ।। 14 ।।


कर्माणि  கர்மாணி  கர்மங்கள்  मां  மாம்  என்னை  लिम्पन्ति   லிம்பந்தி   தொடுவதில்லை   

कर्मफले  கர்மப2லே  கர்மபலத்தில்  मे  மே  எனக்கு  स्पृहा   ஸ்ப்ருஹா  ஆசையில்லை 

इति  இதி  இப்படி  :  :  யார்  मां  மாம்  என்னை  अभिजानाति   அபி4ஜாநாதி  அறிகிறானோ  

:  :  அவன்   कर्मभि:   கர்மபி4:  கர்மங்களினால்  बध्यते   3த்4யதே  பந்தப்படுவதில்லை.


கர்மங்கள் என்னை தொடுவதில்லை; எனக்கு கர்மபலத்தில் ஆசையில்லை. இவ்விதம் என்னை யார் அறிகிறானோ அவன் கர்மங்களினால் பந்தப்படுவதில்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

என்னைக் கர்மங்கள் ஒட்டுவதில்லை. எனக்குக் கர்மப் பயனில் விருப்பமில்லை. இங்ஙனம் என்னை யறிவோன் கர்மங்களால் கட்டப்பட மாட்டான்


விளக்கம்:

இந்த சுலோகத்தில் கிருஷ்ணபகவான், தன்னைக் குறித்த ஓர் உண்மையை வெளிப்படுத்துவதோடு, அதே நியதியை தனியொருவனுக்கும் நீட்டித்துத் தருகிறார். பகவான் இந்த உலகத்தையே உருவாக்கி, அது தொடர்ந்து செயல்பட பல்வேறு செயல்களைச் செய்திருந்தாலும், இச் செயல்கள் எதுவும் அவரை பந்தப்படுத்தாது; பாதிக்காது. எனவே அவர், ‘கர்மங்கள் என்னைத் தொடாது’ — மாம் கர்மாணி லிம்பந்தி என்கிறார். இச் செயல்கள் அவரைப் பிணைப்பதில்லை; அதாவது சுக துக்கத்தை கொடுப்பதில்லை. ஏனெனில் அவைகள் ஜீவர்களைப் போல புண்ணிய-பாபத்தை பகவானுக்கு உருவாக்குவதில்லை. ஏன்? ஏனெனில், ‘நான் செய்பவன்என்ற பாவனை அவருக்கு இல்லை.

மாறாக ஒரு ஜீவனோ, தன் சுயமானது எல்லா செயல்களையும் செய்கிறது என நினைத்து கர்த்ருதுவத்தை(செய்பவன் எனும் பாவனை) தன் மீது ஏற்றிவைத்துக் கொள்கிறான். கர்த்ருதுவத்தினால் போக்த்ருதுவமும்(அனுபவிப்பவன் எனும் பாவனை) கிடைக்கிறது. ஆனால் உண்மையில் சுயம் என்னும் மெய்ப்பொருள் எதையும் செய்வதில்லை, அது அகர்த்தா; ஆகவே எந்தச் செயலினாலும் அது பாதிக்கப்படுவதுமில்லை

இப்போது ஒரு கேள்வி எழலாம். தன்னை செயல் செய்பவன் அல்ல என்று தெரிந்த கண்ணன், பிறகு ஏன் செயலைச் செய்தார்? எதையாவது சாதிக்க வேண்டுமென்ற ஆசை காரணமாகவா? எனில், ‘இல்லைஎன்கிறார் பகவான். செயலின் பலனில் எனக்கு இச்சையோ, ஏக்கமோ, எதிர்பார்ப்போ இல்லைகர்மப2லே மே ஸ்ப்ருஹா. ஆகவே அவர் செயல் செய்தது, தனக்கென ஒரு குறிப்பிட்ட பலனை அடைவித்துக் கொள்ளவோ அல்லது செயலின் மூலம் தன்னை மேம்படுத்தி உயர்த்திக் கொள்ளவோ அல்ல


=> செயல் செய்யாதவனாக தன்னை அறிக:

இந்த நியதி ஈஷ்வரனுக்கு மட்டும்தானா என்ன? செயல்களால் பாதிக்கப்பட்டு, பலன்களுக்காக ஏங்கித் தவிக்கும் ஒரு ஜீவனின் கதி தான் என்ன? என்னைப் பற்றிய இந்த உண்மையை அறியாதவர்களே, இந்த ஜீவ பந்தத்தில் மாட்டிக் கொண்டவர்கள் என கிருஷ்ணர் கூறுகிறார். ஈஷ்வரனைத் தெளிவாக அறிந்தவர்: மாம் அபி4ஜாநாதிகிருஷ்ணபகவான் கூறிய அதே வாக்கியத்தை கூறலாம், ‘செயல்கள் என்னை பாதிக்காது. அவற்றின் முடிவுகளுக்காக நான் ஏங்கவில்லை’. 

ஜானாதிஎன்ற சொல்லுக்குஅறிதல்என்றும், ‘அபிஜானாதிஎன்றால்தெளிவாக அறிதல்என்றும் பொருள். தனது சுயத்தை ஈஷ்வரனாகத் தெளிவாக அறிந்தவர் இங்கே பேசப்படுகிறார். குணங்களற்ற, அகர்த்தாவான, அபோக்தாவான பரமாத்மாவை அறிய இதைத் தவிர வேறு வழியுமில்லை.

நான் செய்பவன்என்ற பாவனை இருக்கும் வரை தனித்துவமும் அதற்கான பிரத்தியேக குணங்களும் உள்ளன. செய்பவன் என்ற பாவனை நீங்கும் போது, அனுபவிப்பவன் என்பதும் சேர்ந்து நீங்குவதால், எந்த தனித்துவ அம்சங்களும், குணங்களும் இல்லாத ஆத்மா மட்டுமே எஞ்சுகிறது

தனித்துவமான அம்சங்கள் எதுவுமில்லையெனில், எவ்வளவு ஆத்மா இருக்க முடியும்? வேறுபட்ட அம்சங்களின் இல்லாமை, ஒரேயொரு ஆத்மா மட்டுமே உள்ளது என்பதைக் குறிக்கிறது. ஈஷ்வர-ஆத்மா மற்றும் ஜீவ-ஆத்மா என்ற பேதம் இல்லை. ஒரு ஆத்மா மட்டுமே, அதுவே ஈஷ்வரன், அதுவே ஜீவன். எனில், ஏன் வித்தியாசம் இருப்பதைப் போல தெரிகிறது? உபாதியின் காரணமாகவே இந்த வேறுபாடு தெரிகிறது. ஏதேனும் ஒருபொருள் தற்காலிகமாக எடுத்துக் கொள்ளும் வியக்தி, அல்லது வடிவம், அல்லது நிலைக்கு, ‘உபாதிஎன்று பெயர். நீர் என்பது ஒரு பொருள். அது கடல் நீர், ஆற்று நீர், குளத்து நீர், கிணற்று நீர், சேற்று நீர், மழை நீர், ஓடை நீர் மற்றும் அருவி நீர் என அது இருக்கும் இடத்திற்கு ஏற்ப பெயர் பெறுகின்றது. ஆனால் நீர் என்பது அனைத்திற்கும் பொதுவானது. அதுபோல, அனைத்தையும் உள்ளடக்கிய மொத்த உபாதி, சமஷ்டி-உபாதி, ஈஷ்வரன் என்றும், தனிப்பட்ட உபாதி, வ்யஷ்டி-உபாதி, ஜீவன் என்றும் அழைக்கப்படுகிறதுஇவ்விரு வெளிப்பாட்டிற்கும் அதிஷ்டானமாக விளங்கும் ஆத்மா பொதுவானது

இந்த சுலோகத்தில் ஜீவனும் ஈஷ்வரனும் சமன்படுத்தப்படுவதால் இது மஹா-வாக்கியம் என கூறப்படுகிறது. கிருஷ்ணரின் வாக்கியமானநான் பந்தப்படவில்லை, என்னை அறிந்த எவரும் பந்தப்படுவதில்லைஎன்பது ஈஷ்வரனுக்கும் ஜீவனுக்குமிடையேயான ஐக்கியத்தை வெளிப்படுத்துகிறது. இதைப் புரிந்து கொள்வதே முக்தி.    

=> பந்தத்தை ஏற்படுத்தாததற்கான காரணங்கள்:

பகவானை செயல்கள் பந்தப்படாததற்கு இரண்டு விதமான காரணங்களைத் தொகுக்கலாம்.

(1) அகங்காரம்(‘நான் இதை செய்கிறேன்எனும் பாவனை) உடையவர்களிடத்துக் கர்மம் மனோவிகாரத்தை உண்டுபண்ணுகிறது. பகவானிடத்தோ அகங்காரம் சிறிதுமில்லைஅஹங்கார அபா4வாத். ஆகையால் கர்மம் தீண்டப் பெறாதவராக அவர் இருக்கிறார்

(2) அடையாத ஒன்றை அடைய விரும்புதல் ஆசையாகும். பகவானோ பரிபூரணர். அவர் ஆசைப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆகவே எந்தப் பலனிலும் ஆசையில்லைபல இச்சா அபா4வாத்

ஈஷ்வரனுடைய இதே நியதி மனிதனுக்கும் பொருந்துகிறது. நான் செய்கிறேன் என்ற அகங்காரமோ, பலனில் இச்சையோ இல்லாமல் செய்யும் செயல் எவரையும் பந்தப்படுத்தாது

-------------------------------------------------------------------------------------