ஞாயிறு, 5 ஜூலை, 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.42

||18.42|| பிராமணர்களின் சுபாவம்:

शमो दमस्तप: शौचं क्षान्तिरार्जवमेव च ।

ज्ञानं विज्ञानमास्तिक्यं ब्रह्मकर्म स्वभावजम् ।। ४२ ।।

1மோ த3மஸ்தப: செள1சம் க்ஷாந்திரார்ஜவமேவ ச ।

ஞாநம் விக்ஞாநமாஸ்திக்யம் ப்3ரஹ்மகர்ம ஸ்வபா4வஜம் ।। 42 ।।


शम:  1ம:  மனக்கட்டுப்பாடு    दम:  3ம:  புலனடக்கம்    तपस्  தபஸ்  தவம்    शौचं  செள1சம்  தூய்மை    क्षान्ति:  க்ஷாந்தி:  பொறுமை    आर्जवम् एव च  ஆர்ஜவம்  நேர்மை     ज्ञानं  ஞாநம்  ஞானம்    विज्ञानम्  விக்ஞாநம் ஏவ ச  புரிந்துகொள்ளப்பட்ட ஞானம்    आस्तिक्यं  ஆஸ்திக்யம்  ஈஷ்வர நம்பிக்கையும்    स्वभावजम्  ஸ்வபா4வஜம்  சுபாவத்தில் உண்டாகிய     ब्रह्म कर्म  ப்3ரஹ்ம கர்ம  பிராம்மண கர்மங்களாகின்றன.    


மனக்கட்டுப்பாடு, புலனடக்கம், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, சாஸ்திர ஞானம், புரிந்துகொள்ளப்பட்ட ஞானம், ஈஷ்வர நம்பிக்கை — இவையாவும் பிராம்மண இயல்பாயுண்டாகிய கர்மங்களாகின்றன.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

அகக் கரணத்தை யடக்குதல், புறக் கரணத்தை யடக்குதல், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, ஞானம், கல்வி, ஆத்திகம் -- இவை இயல்பிலே தோன்றும் பிராம்மண கர்மங்களாகும்.


விளக்கம்:

இந்த சுபாவத்தை உடையவன் பிராமணன் என பகவான் இங்கு கூறுகிறார்.


=> பிராமணனின் கடமைகள்:

உண்மையில் இந்த விளக்கத்தில் குறிப்பிட்ட கர்மம் எதுவும் சொல்லப்படவில்லை என்பதை கவனிக்கலாம். குணநலன்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக லெளகிகத்தில் பிறந்த குடியை வைத்து ஒருவனை பிராமணன் எனக் கூறும் வழக்கம் இருக்கிறது. ஆனால் மனபரிபாகத்தையும் வாழ்க்கைமுறையையும் பார்த்து ஒருவனை பிராமணன் என்கிறது வேதாந்தம். எந்த சமூகத்தில் எந்தக் குடியில் எக்காலத்தில் வேண்டுமானாலும் பிராமணன் தோன்றலாம். ஏனென்றால் பிறப்பு உரிமையில் பொருள் ஒன்றுமேயில்லை. மனபரிபாகமே முக்கியமானது. 

சாஸ்திரத்தின் பார்வையில் ஒவ்வொருவரும் குணத்தால் பிராமணனாக ஆக வேண்டும். சாஸ்திரத்தின் நோக்கம் கர்மங்களை வரையறுப்பது அல்ல, மாறாக ஒரு மனிதன் வளர்ச்சியை அதாவது மனமுதிர்ச்சியை அடைய உதவுவதே ஆகும். ஒவ்வொருவரும் அவரவர் கர்மங்களை ஒரு குறிப்பிட்ட மனப்பான்மையுடன் செய்வதன் மூலம் குணத்தால் பிராமணனாக முடியும் என்பதே அதன் பார்வை. இந்த அத்தியாயத்தின் நாற்பதைந்தாவது சுலோகத்தில் கிருஷ்ணர், ‘தனது சூழ்நிலையில் செய்ய வேண்டியதை மகிழ்ச்சியுடன் செய்பவன் மனபரிபாகத்தை அடைகிறான் — ஸ்வே ஸ்வே கர்மண்யபி4ரத: ஸம்ஸித்3தி4ம் லபதே நர:’, எனக் கூறுகிறார். எந்த சூழ்நிலையில் ஒருவன் பிறந்துள்ளானோ, அங்கு அவனுக்கு அளிக்கப்பட்ட கர்மமே அவனை முதிர்ச்சி அடையச் செய்யப் போதுமானது. ஒருவன் பணம் சம்பாதிக்கவோ அல்லது குறிப்பிட்ட பதவிகளைப் பெறவோ விரும்பினால், அதை அடைய அவன் சூழ்நிலையை மாற்ற வேண்டியிருக்கும். ஆனால் ஒருவன் மனமுதிர்ச்சியை விரும்பினால், அங்கு அவனது நோக்கம் அகமாற்றம் என்பதால் அது அவன் இருக்கின்ற இடத்திலேயே கிடைக்கின்றது.

இந்த முதிர்ச்சியை அடைய சுருதியானது உலகளாவிய அளவில் ஒரு பொதுவான முறையை வழங்குகிறது. அதுவே கர்மயோகமாகும். அதாவது எதை செய்யும்போதும் அதை ஒரு சரியான மனப்பான்மையுடன் மனத்தூய்மைக்காகவென ஈஷ்வர அர்ப்பணமாகச் செய்யவேண்டும். இதை அனுசரிக்கும் கர்மயோகி மனமுதிர்ச்சியை அடைகிறான், ஏனெனில் அவனுடைய விருப்பு வெறுப்புகள் அனைத்தும் அவனது கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. இதனால் அவன் ஒரு பிராமணனாக ஆகிறான். அதை அடைவதற்காக ஒருவன் அனுசரிக்க வேண்டியவைகள் என்னென்ன என்பது இந்த சுலோகத்தில் ‘ப்3ரஹ்ம கர்ம’ என்ற பெயரில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதன் பொருள் பிராமணனுக்குரியது, ஒருவனை பிராமணனாக்குவது என்பதைக் குறிக்கிறது. ஒரு பிராமணனாக ஆக ஒருவன் வளர்த்துக் கொள்ளவேண்டிய குணநலன்கள் அதுவே. மேலும் இவை அனைத்தும் அவனுடைய இயல்பிலிருந்து, அதாவது சுபாவத்திலிருந்து பிறக்கின்றன — ஸ்வபா4வஜம்.


=> பிராமணனின் சுபாவம்:

(1) மனக்கட்டுப்பாடு அல்லது மனவடக்கம் — 1. இது ஒருவனின் சிந்தனையின் மீதுள்ள ஆளுமையைக் குறிக்கிறது. நாம் ஏற்கனவே பார்த்ததுபோல, நமது எண்ண வடிவங்களுக்கும் நமது சொந்த புரிதலுக்கும் இடையில் போதுமான அளவு இடைவெளியை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதனால் எந்தவொரு குறிப்பிட்ட உணர்ச்சியாலோ அல்லது மயக்கத்தாலோ நாம் எளிதில் இழுத்துச் செல்லப்பட மாட்டோம். அந்த இடைவெளியை அனுபவிக்கும் ஒருவன் மனக்கட்டுப்பாடு உடையவன் ஆகிறான். மனக்கட்டுப்பாடு என்பது எண்ணத்தை முற்றிலுமாக நீக்குவது அல்ல — அது அவசியமும் இல்லை, சாத்தியமும் இல்லை. சிந்தனைகள் தொடர்ந்துகொண்டே இருக்கும், ஆனால் அவன் ஒரு குறிப்பிட்ட எண்ண ஓட்டத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல், அதன் மீது செயல்படுவதா வேண்டாமா என்று தேர்ந்தெடுக்கும் நிலையில் நிதானமாக இருந்தால், அவன் ‘ச1ம’ எனும் குணத்தை உடையவனாகிறான். முதலில் அந்தக் குணத்தை ஒருவன் பயிற்சி செய்து அனுபவிக்கத் தொடங்கும்போது, பின் ​​அதுவே அவனுடைய சொந்த இயல்பாக, அதாவது சுபாவமாக மாறுகிறது.

(2) புலனடக்கம் — 3. புலன்களின் தூண்டுதல்களில் கடைபிடிக்கப்பட வேண்டிய நிதானம், அல்லது இந்திரிய ஒழுக்கம் உடையவன்.

(3) தவம் — தபஸ். ஆடம்பரமற்ற ஒரு எளிமையான வாழ்க்கையை இது குறிக்கிறது. வசதிகளும் உடைமைகளும் குறைந்தபட்சமாக வைத்து வாழுகின்ற ஒரு சிக்கனமான வாழ்க்கைமுறைப் பேசப்படுகிறது. மேலும் வாக்கு மற்றும் செயலில் கடைபிடிக்கப்படுகிற ஒழுக்கமுறை தவம் ஆகும்.

(4) தூய்மை — செள1சம். புறத்தூய்மை மற்றும் அகத்தூய்மை இரண்டும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அகத் தூய்மை என்பது வெறுப்பு மற்றும் துன்பமான பிற உணர்வுகளுக்கு எதிரான உணர்வையோ அல்லது குணத்தையோ மனதிற்குக் கொண்டு வருவதன் மூலம் அவற்றை நடுநிலைப்படுத்துவதாகும். இதுவும் ஒரு பிராமணனால் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இவை தினமும் செய்யப்பட வேண்டிய விஷயங்கள். உடலை தினமும் சுத்தம் செய்வது போலவே, மனதையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

(5) பொறுமை — க்ஷாந்தி. புறவுலகிலிருந்து வருகிற இடர்பாடுகள் மற்றும் நெருக்கடிகளின் போது பிராமணன் பொறுமையே வடிவெடுத்தவனாக இருக்கிறான். துன்புறுத்துபவன் யாரையும் அவன் நொந்துகொள்வதில்லை. 

(6) நேர்மை — ஆர்ஜவம். சிந்தனையிலும் சொல்லிலும் செயலிலும் அவன் நேர்மையைக் கடைபிடிக்கிறான். அதாவது இது எண்ணம், சொல் மற்றும் செயல் ஆகியவற்றில் இருக்கின்ற நேர்கோட்டைக் குறிக்கிறது. அதற்காக ஒருவன் நினைக்கின்ற அனைத்தும் சொல்லப்பட வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால் சொல்லப்படுபவை அவனது மனதின் எண்ணங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். அதேபோல, செய்யப்படுகிற செயல், அவன் செய்வதாகச் சொன்னதற்குச் சரியாகப் பொருந்த வேண்டும்.

(7) ஞானமும் விக்ஞானமும் — ஞாநம் விக்ஞாநம் ஏவ ச. அறிவும், அது புரிந்து கொள்ளப்பட்டு தனது அனுபவமாக ஆக்கப்பட்டதும்(சுவானுபவம்) பிராமணனின் சுபாவத்திலிருந்து பிறக்கும் குணநலன்கள் ஆகும். இது இரு நிலையில் பார்க்கப்படுகிறது. 

(i) தர்மத்தின் அடிப்படையில்:

இங்கு ஞானம் என்பது சாஸ்திரங்களிலிருந்து பெறப்பட்ட சரி மற்றும் தவறு(தர்ம-அதர்ம) பற்றிய அறிவு ஆகும். நம் அனைவருக்கும் விழுமியங்களைப் பற்றிய அறிவு இருக்கிறது, ஆனால் வெறும் அறிவு மட்டும் போதாது. அது உள்வாங்கப்பட்ட அறிவாக, விக்ஞானமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது ஒருவனிடமிருந்து பிரிக்க முடியாததாக ஆகிறது. இல்லையெனில் அது வெறுமனே மற்றவர்கள் நம்மிடம் இவ்விதம் ஒழுக்கமானவர்களாக நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிற ஒரு வெற்று அறிவாக மட்டுமே இருக்கிறது. அது உள்வாங்கப்படும்போதே தனது நடத்தையில், வாழ்க்கைமுறையில் அது மாற்றத்தை உண்டுபண்ணுகிறது. 

(ii) ஆத்மாவின் அடிப்படையில்:

சிருஷ்டியின் படைப்பிற்கு காரணமாக விளங்குவது ப்ரம்மம் என்றும், மேலும் அந்த ப்ரம்மமே ‘நான்’ எனப்படும் இந்த ஆத்மா என்றும் சுருதிகள் கூறுகின்றன. இந்த பரோக்ஷ-ஞாநம் இங்கு ஞாநம் எனக் கூறப்படுகிறது. அறிவு என்பது அறியப்பட்ட ஒரு தகவலாக இல்லாமல் அது தெளிவாக புரிந்துகொள்ளப்பட்டதாக, நேரடி-அறிவாக, தன்மயமாக்கப்பட்டதாக இருக்க வேண்டும் — அபரோக்ஷ-ஞாநம். சிரவணத்தினால் அறியப்பட்ட ஞானம், சிரத்தையின் துணையுடன் மநநம் மற்றும் நிதித்யாசன நிலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தன்மயமாக்கப்பட வேண்டும். இந்த தெளிவான அறிவு ‘விக்ஞாநம்’ என்று அழைக்கப்படுகிறது. 

தர்மத்தின் அடிப்படையிலும் சரி, ஆத்மாவின் அடிப்படையிலும் சரி அறிவைப் பெறுவதற்கும்(ஞானம்), அதை ஆழ்ந்த அறிவாக (விக்ஞானமாக) மாற்றுவதற்கும் தேவையான அனைத்தையும் ஒரு பிராமணன் செய்ய வேண்டும். சாஸ்திரத்தின் உட்கருத்தையும் பிரபஞ்சத்தில் உயிர் வாழ்க்கையின் தத்துவத்தையும் அவனே உள்ளபடி அறிய வல்லவனாகிறான். 

(7) இறை நம்பிக்கை — ஆஸ்திக்யம். ஈஷ்வர நம்பிக்கையுடன் கூடியவர்கள் மற்றும் சாஸ்திரத்தில் நம்பிக்கை உடையவர்கள் ஆஸ்திகர்கள் ஆவர். இந்த பௌதிக உடலின் மரணத்திற்குப் பிறகும் நிலைத்திருக்கும் ஒரு ஆத்மா உண்டு என்றும், புண்ணியம் மற்றும் பாவம் என்ற வடிவத்தில் ஒவ்வொரு செயலுக்கும் அதிருஷ்ட-பலன் என்ற கண்ணுக்குப் புலப்படாத ஒரு விளைவு உண்டு என்றும் நம்புபவர்கள் ஆஸ்திகர்கள். இந்த அதிருஷ்ட-பலனானது மற்றொரு பிறவியில் தனக்கு வந்து சேரும் என்ற புரிதலும் அவனுக்கு இருக்கிறது. இதுவும் ஒரு நல்ல தொடக்கம்தான், ஏனென்றால் இதன் காரணமாக அவன் ஒரு நெறிமுறைமிக்க வாழ்க்கையை வாழ முக்கியத்துவம் கொடுக்கிறான். அது அவனுக்கு தன்னைப்பற்றிய இயல்பை ஆராய்வதற்கு தேவையான முதிர்ச்சியைக் கொடுக்கிறது.

இதுவரை நாம் விவாதித்த இந்த குணாதிசயங்கள் அனைத்தும் ஒரு பிராமணனுக்கு உரியவை. ​​ஏன் ஒரு பிராமணன் வேதாந்தத்திற்குத் தகுதியானவனாகக் கருதப்படுகிறான் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ள முடியும். மேலும் இந்த சுபாவமே ஒரு பிராமணனை தீர்மானிக்கின்றதே தவிர வேறு எதுவும் இல்லை என்பதையும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். சுருதியில் கூறப்பட்டுள்ளது போல, ஒரு பிராமணனாக இருப்பவன் பொதுவான லௌகீகச் செயல்களின் மீது பற்றின்மை கொண்டவனாக இருக்கிறான். செயல்களின் மூலம் பெறப்பட்ட அனுபவங்களை கவனமாக ஆராய்ந்த பிறகு, படைக்கப்படாத ஒன்றை செயலின்மூலம் அடைய முடியாது என்பதை அவன் புரிந்துகொள்கிறான். தான் தேடுவது, தான் செய்துகொண்டிருப்பதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை நன்கு உணர்கிறான். ஒரு பிராமணனின் அனைத்துச் செயல்களும் இந்த புரிதலை உருவாக்குவதற்காகவே அமைந்துள்ளன. ஒவ்வொருவரும் இந்த நிலையை அடைய வேண்டும்.

இனி க்ஷத்ரியனின் சுபாவம் எப்படிப்பட்டது என்பதை அடுத்த சுலோகத்தில் பார்க்கலாம். 

————————————————————————————————


திங்கள், 29 ஜூன், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.40 - 18.41

||18.40|| உலகிலுள்ள அனைத்தும் முக்குண வடிவம்:

न तदस्ति पृथिव्यां वा दिवि देवेषु वा पुन: ।

सत्त्वं प्रकृतिजैर्मुक्तं यदेभि: स्यात् त्रिभिर्गुणै: ।। ४० ।। 

ந தத3ஸ்தி ப்ருதி2வ்யாம் வா தி3வி தே3வேஷு வா புந: ।

ஸத்த்வம் ப்ரக்ருதிஜைர்முக்தம் யதே3பி4: ஸ்யாத் த்ரிபி4ர்கு3ணை: ।। 40 ।।


प्रकृतिजै:  ப்ரக்ருதிஜை:  பிரக்ருதியிலிருந்து உதித்த     एभि:  ஏபி4:  இந்த     त्रिभि: र्गुणै:  த்ரிபி4: கு3ணை:  மூன்று குணங்களிலிருந்து        यत् मुर्क्तं स्यात्  யத் முக்தம் ஸ்யாத்  எது முக்தியடைந்திருக்கிறதோ     तत् सत्त्वं  தத் ஸத்த்வம்  அந்த உயிர்     पृथिव्यां  ப்ருதி2வ்யாம்  பூவுலகிலோ     वा  வா  அல்லது    पुन:  புந:  மேலும்     दिवि देवेषु  தி3வி தே3வேஷு  தேவலோகத்தில் தேவர்களுக்கு இடையிலோ       न अस्ति  ந அஸ்தி  இல்லை.


பிரக்ருதியிலிருந்து உதித்த இம் முக்குணங்களினின்று விடுதலையடைந்த உயிர் மண்ணுலகில் அல்லது விண்ணுலகில் வானவர்களுக்குள்ளும் இல்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

இயற்கையில் தோன்றும் இம் மூன்று குணங்களினின்றும் விடுபட்ட உயிர் மண்ணுலகத்திலுமில்லை; வானுலத்தில் தேவருள்ளேயுமில்லை.


விளக்கம்:

குண அடிப்படையில் பல்வேறு விஷயங்களின் மூவகை பிரிவுகளைப் பற்றி பேசிய பகவான் இந்த பகுதியை இங்கு முடிவுரை செய்கிறார். உலகிலுள்ள அனைத்தும் முக்குண வடிவமாகவே இருக்கிறது என்கிறார்.


=> குணபேதத்திலிருந்து விடுபட்டவர் எவருமில்லை:

இங்கு ‘ஸத்த்வம்’ எனில் ஒரு உயிரினத்தை, உயிர் வாழும் ஒரு உயிரியைக் குறிக்கிறது. முக்குணங்களிலிருந்து விடுபட்ட எந்தவொரு உயிரும் இல்லை என பகவான் கூறுகிறார். எங்கு? பூமியில், மற்ற உலகங்களில், தேவலோகத்தில் — ப்ருதி2வ்யாம் தி3வி தே3வேஷு. மனிதர்கள் உட்பட பூமியிலுள்ள உயிரினங்கள், சொர்க்கத்திலுள்ள தேவர்கள் என எங்கும் இந்த மூன்று குணத்திலிருந்து விடுபட்ட எந்தவொரு உயிரும் கிடையாது — த்ரிபி4: கு3ணை: முக்தம் ஸ்யாத் ந அஸ்தி. புல் முதல் பிரம்மதேவர் வரை எல்லா உயிர்களும் முக்குண மயமான பிரக்ருதியில் கட்டுண்ட ஆத்மாக்கள் ஆவர். அவர்கள் மக்களாக இருந்தாலும் சரி, தேவர்களாக இருந்தாலும் சரி முக்குணங்களைக் கடக்கும் வரையில் எல்லாரும் பந்தப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். அதாவது பிறப்பும் இறப்பும் அவர்களுக்கு மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. குணவேறுபாடுகளுக்கு ஏற்ப அந்த ஜீவர்களின் பிறப்பு மேலானதாகவோ கீழானதாகவோ அமைகின்றது. அனைத்து ஜீவர்களுள் மிகப் பெரியவர் பிரம்மதேவர். அவர் அடைந்திருப்பது ஒரு பதவியேயன்றி முக்தியல்ல. அதாவது முக்குணங்களில் அவரும் சம்பந்தப்பட்டிருக்கிறார். முக்குணங்களைக் கொண்டல்லாமல் படைப்புத் தொழில் நிகழாது. பிரக்ருதி லயம் என்பது அவர் பெற்றுள்ள பெரிய பதவியாகும். ஆனால் மற்ற ஜீவர்களுக்கு இருப்பது போல பிரம்மாவுக்கு மேலும் பிறப்பு இல்லை. ஒரு கல்பத்தின் முடிவில் அவர் கிரமமுக்தியடைகிறார். அப்பொழுது அவர் முக்குணங்களைக் கடந்தவர் ஆகிறார். 

எனவே பிரக்ருதியான மாயையிலிருந்து தோன்றிய இந்த சத்வ, ரஜஸ் மற்றும் தமஸிலிருந்து முற்றிலும் விடுபட்ட எந்த உயிரும் இல்லை. சங்கரர் இதை உயிரினமாக எடுத்துக்கொள்கிறார், ஆனால் அதை தோன்றியிருக்கின்ற எந்தவொன்றுக்கும் நீட்டித்துப் பார்க்க முடியும். எதுவும் இந்த குணங்களிலிருந்து விடுபடவில்லை. முற்றிலும் தமஸின் வடிவாக இருக்கின்ற பாறையிருந்து சில வேறுபாடுகளுடன் தமஸை பிரதானமாகக் கொண்ட மரம், செடி, பறவை, விலங்கு போன்றவைகளும் இதில் அடக்கம்.

மனிதர்களிடமும் இந்த மூன்று குணங்களில் ஏதேனும் ஒன்று மேலோங்கி இருக்கலாம். இது நமக்கு நான்கு அடிப்படை சாத்தியக்கூறுகளை அளிக்கிறது, ஆனால் அங்கேயும் லட்சக் கணக்கான வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக குணங்களின் பார்வையிலிருந்தும் கர்மத்தின் அடிப்படையிலும் நான்கு பிரிவுகள் உள்ளன — பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன்.


=> அடுத்த பகுதிக்கான சங்கரரின் அறிமுகம்:

குணம் மற்றும் கர்மத்தின் அடிப்படையில் மனிதர்களை நான்கு பிரிவுகளாகப் பகுப்பதை சங்கரர் பின்வருமாறு அறிமுகப்படுத்துகிறார். செயல், அந்தச் செயலுக்கான காரணங்கள் மற்றும் செயலின் விளைவு ஆகியவற்றால் வகைப்படுத்தபடுகிற பிறவிச் சுழற்சியான சம்சாரம் என்பது, பதினைந்தாவது அத்தியாயத்தில் வேர்கள் மேல்நோக்கிய மரத்தின் (ஊர்த்4வமூலம்) உவமையால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார். கர்மத்தின் விளைவினால் ஒரு உடலின் பிறப்பு ஏற்படுகிறது, அதன் காரணமாக மீண்டும் கர்மம் உண்டாகிறது, அந்த கர்மத்திற்கு ஒரு பலன் கிடைக்கிறது, அது மீண்டும் மற்றொரு உடலின் பிறப்பிற்கு வழிவகுக்கிறது. இதுவே சம்சாரம் ஆகும். இந்த சம்சாரத்திலிருந்து விடுபட விரும்பினால், இந்த மூன்று குணங்களிலிருந்தும் விடுபட வேண்டும். ஏனெனில், சம்சாரம் என்பது சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய இந்த மூன்று குணங்களால் ஆனது. அவற்றின் பிடியில் இருக்கும் வரை, சம்சாரத்திலிருந்து விடுபட முடியாது. யாராக இருந்தாலும் ஒன்று சாத்விக கைவிலங்கு எனப்படும் பொன்-விலங்கினாலோ, அல்லது ராஜஸ கைவிலங்கு எனப்படும் வெள்ளி-விலங்கினாலோ, அல்லது தாமஸ கைவிலங்கான இரும்பு-விலங்கினாலோ பிணைக்கப்பட்டிருக்கிறான். மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலம் கைவிலங்கை மாற்ற முடியுமே தவிர சம்சாரத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. உதாரணமாக, மனிதன் ஒருவன் அதிக புண்ணியத்தை ஈட்டி தேவனின் வடிவத்தை அடையலாம். ஆனாலும் தேவனும் முக்குணத்திற்கு உட்பட்டவனே ஆவான். எனவே இந்த மூன்று குணங்களைக் கொண்ட சம்சாரத்திலிருந்து எப்படி விடுதலை பெறுவது என்பது கூறப்பட வேண்டும். இதற்காக, ஒரு புதிய பகுதி தொடங்குகிறது.

முழு கீதையின் சாராம்சத்தையும் தொகுத்துக் கூற வேண்டும்; மேலும், மோக்ஷ புருஷார்த்தத்தில் ஆர்வம் கொண்டவர்களால் இது பின்பற்றப்பட வேண்டும். இந்த நோக்கத்திற்காகவே பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் என்ற பிரிவுகள் கூறப்பட்டுள்ளன. இந்தப் பிரிவுகள் நிச்சயமாக குணங்களுடன் தொடர்புடையவை, ஆனால் அதே நேரத்தில் இது ஒரு புதிய தலைப்பு ஆகும்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஒருவன் தாழ்ந்த சுபாவத்தோடு நெடுங்காலம் போராடியும் ஆத்ம ஞானத்தின் பொருட்டு இடைவிடாது உழைத்தும் சமாதி நிலையை அடையும்போது அகங்காரம் அடியோடு அகலும். ஆனால் சமாதி நிலையை அடைவது மிகவும் கஷ்டம். முக்குணத்தில் பிறந்த அகங்காரமானது எளிதில் நீங்குவதில்லை. அதனால்தான் நாம் இவ்வுலகில் மறுபடியும் பிறந்து துன்பத்தை அனுபவிக்கிறோம்.

————————————————————————————————

||18.41|| குண அடிப்படையில் நான்கு வர்ணதர்மத்தின் விளக்கம்:

ब्राह्मणक्षत्रियविशां शूद्राणां च परन्तप ।

कर्माणि प्रविभक्तानि स्वभावप्रभवैर्गुणै: ।। ४१ ।।  

ப்3ராஹ்மணக்ஷத்ரியவிசா1ம் சூ1த்3ராணாம் ச பரந்தப ।

கர்மாணி ப்ரவிப4க்தாநி ஸ்வபா4வப்ரப4வைர்கு3ணை: ।। 41 ।।


परन्तप  பரந்தப  எதிரிகளை எரிப்பவனே      ब्राह्मण क्षत्रिय विशां  ப்3ராஹ்மண க்ஷத்ரிய விசா1ம்  பிராம்மண, க்ஷத்ரிய, வைசியர்களுடைய       शूद्राणां च  சூ1த்3ராணாம் ச  சூத்திரர்களுடையவும்      कर्माणि  கர்மாணி  கர்மங்கள்      स्वभाव प्रभवै:  ஸ்வபா4வ ப்ரப4வை:  சுபாவத்திலிருந்து பிறந்த      गुणै:  கு3ணை:  குணங்களுக்கு ஏற்றவாறு       प्रविभक्तानि  ப்ரவிப4க்தாநி  பிரிக்கப்பட்டிருக்கின்றன.


எதிரிகளை எரிப்பவனே, பிராம்மண, க்ஷத்ரிய, வைசிய சூத்திரர்களுடைய கர்மங்கள் அவரவர் இயல்பில் உதித்த குணங்களுக்கு ஏற்பப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

பரந்தபா! பிராம்மணர் க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய தொழில்கள் அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின்படி வகுப்புற்றனவாம்;


விளக்கம்:

பொதுவாக வர்ணம் என்று அழைக்கப்படுகிற பிராம்மண, க்ஷத்ரிய, வைசிய மற்றும் சூத்திரர்களுடைய கர்மங்கள் அல்லது கடமைகள் குறித்த பிரிவுகள் இங்கு பேசப்படுகிறது. இந்த ஒவ்வொரு பிரிவுகளில் இருப்பர்களின் கடமைகள் மற்றவர்களின் கடமைகளிலிருந்து வேறுபட்டவை. இந்த பேதங்கள் அல்லது பிரிவுகள் ஒருவனின் குணங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த குணங்கள் சுபாவத்திலிருந்து, அதாவது ஒருவனுடைய இயல்பிலிருந்து பிறந்தவை — ஸ்வபா4வ ப்ரப4வை: கு3ணை:, என்கிறார் பகவான். சுபாவம் என்பதற்கு ஈஷ்வரனுடைய பிரக்ருதி அல்லது மாயை என விளக்கமளிக்கிறார் சங்கரர். அது முக்குணமாயுள்ளது. குணத்துக்கு தகுந்தபடி கர்மம் வேறுபடுகிறது. கர்மத்திலிருந்து பெறப்படுகிற சம்ஸ்காரத்துக்கு ஏற்றவாறு சுபாவம் மாறுகிறது. எனவே கர்மமும் சுபாவமும் இணைபிரியாதவைகள். ஒருவனின் சுபாவம் எப்படியோ அப்படி வர்ணம் மாறுகிறது. ஆகவே, ஒரு மனிதன் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவன் என்பதை அவனுடைய சுபாவத்திலிருந்தும், அதிலிருந்து உண்டாகிற கர்மத்திலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். சுபாவம் என்பது மிக சூக்ஷமமானது. எளிதில் அதை தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் ஒருவன் செய்கிற கர்மத்திலிருந்து அவனுடைய சுபாவம் எத்தகையது என்பது வெளிப்படுகிறது.


=> சுபாவம்:

ஸ்வபா4’ என்பதற்கு ‘ஒருவனின் இயல்பு’ என இனியொரு பொருளையும் கூறுகிறார் சங்கரர். ஒருவனது இயல்பே அவனது குறிப்பிட்ட செயல்களுக்கு காரணமாகிறது, மேலும் அந்த இயல்புக்குக் காரணமாக இருப்பது முக்குணங்களின் விகிதாச்சாரமே ஆகும். ஒரு பிராமணனின் இயல்பு சத்வ குணத்தின் ஆதிக்கத்தால் பிறக்கிறது. அதே சமயம் ஒரு க்ஷத்ரியனின் இயல்பு ரஜோ குணத்தின் ஆதிக்கத்தாலும், இரண்டாம் நிலையில் சத்வ குணம் துணையாக இருப்பதாலும் ஏற்படுகிறது. ஒரு வைசியனுக்கும் ரஜோ குணத்தின் ஆதிக்கம் இருக்கும், ஆனால் அவனுக்கு இரண்டாவதாக தமோ குணம் இருக்கிறது. மேலும் ஒரு சூத்திரனுக்குத் தமோ குணத்தின் ஆதிக்கமும், ரஜோ குணம் இரண்டாம் நிலையிலும் இருக்கிறது. இதுவே ஒரு பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், அல்லது சூத்திரன் என்பதற்கான உண்மையான வரையறை ஆகும். இந்த பிரிவுகள் ஒரு நபரின் இயல்பை அடிப்படையாகக் கொண்டது, எனவே இது உலகளாவியது.

பிராமணன் —> சத்வ குணம்.

க்ஷத்ரியன் —>  ரஜோ குணம், சத்வ குணம்.

வைசியன் —> ரஜோ குணம், தமோ குணம்.

சூத்திரன் —> தமோ குணம், ரஜோ குணம்.

இந்த நான்கு வகையான குணபேதம் கொண்ட மனிதர்கள் இல்லாத சமூகம் எது? ஒருவனிடம் சத்வம், ரஜஸ் அல்லது தமஸ் இவற்றில் எது மேலோங்கி இருக்கிறது என்பதை எப்படி அறியமுடியும்? அந்த நபரின் நடத்தை சில அறிகுறிகளைக் காட்டிக் கொடுக்கும். சத்வம் மேலோங்கி இருக்கும்போது அமைதியும் நிதானமும் இருக்கும்; ரஜஸ் மேலோங்கி இருக்கும் இடத்தில் தலைமைப் பண்பு இருக்கும். ரஜஸ் மேலோங்கியும், சத்வம் இரண்டாவதாகவும் உள்ள ஒருவன் இயல்பாகவே ஒரு சிறந்த அமைப்பாளராக இருப்பான். மேலும் சுயநலம், பேராசை போன்றவை இருக்கும் இடத்தில், ரஜஸ் மேலோங்கியும் தமஸ் இரண்டாவதாகவும் இருக்கிறது. குழப்பம், மயக்கம், மந்தநிலை போன்றவை இருக்கும் இடத்தில் தமஸ் மேலோங்கி இருக்கிறது. எனவே ஒருவனின் சுபாவம் அப்படி இருக்க இந்த குணங்களே காரணங்கள். அவைகளே அவர்களை அந்த குறிப்பிட்ட வகையான செயல்களை செய்யத் தூண்டுகின்றன.


=> மனப்பான்மையில் மாற்றம்:

பிறப்பின் அடிப்படையில் அல்ல, சுபாவத்தின் அடிப்படையிலேயே இந்த வர்ணபேதம் பகவானால் பகரப்படுகிறது. ஒருவன் எந்த சூழ்நிலையில் பிறந்திருந்தாலும், பிராமணனின் குணத்தை அதாவது சத்வ குணப் பிரதானத்தை பெறுவதற்குத் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒருவன் கடமையால் க்ஷத்ரியனாக இருக்கலாம், ஆனால் அவனிடம் ரஜோ குணம் மேலோங்கி இருக்க வேண்டிய அவசியமில்லை. செயலில் போர் வீரனாக இருப்பவன் குணத்தால் ஒரு பிராமணனாக இருக்கலாம். இதைத்தான் கிருஷ்ணர் இங்கு அர்ஜுனனிடம் கூறுகிறார். சரியான மனப்பான்மையுடன் உன் கடமையைச் செய், அப்போது நீ ஒரு பிராமணன் ஆகிறாய்; ஆனால் உன் கடமையை மாற்றுவதால் நீ பிராமணன் ஆகிவிடுவதில்லை. நீ எங்கிருந்தாலும், என்ன செய்துகொண்டிருந்தாலும், அதுவே ஒரு பிராமணனாக ஆவதற்குப் போதுமானது. இட மாற்றமோ அல்லது கடமை மாற்றமோ ஒருவனை மாற்றுவது கிடையாது, மாறாக மனப்பான்மையில் மாற்றம் தேவை. அதுதான் இந்த முழு வாதத்தின் சாராம்சம் ஆகும். அதை நாம் இப்போது காணலாம்.

ஒருவனிடம் சத்வ குணம் மேலோங்கி இருந்தால், அவனுடைய வெளிப்பாடு எப்படி இருக்கும் எனும் கேள்விக்கு கிருஷ்ணர் அடுத்த சுலோகத்தில் பதிலளிக்கிறார்.

————————————————————————————————