||18.20|| சாத்விக ஞானம்:
सर्वभूतेषु येनैकं भावमव्ययमीक्षते ।
अविभक्तं विभक्तेषु तज्ज्ञानं विद्धि सात्त्विकम् ।। २० ।।
ஸர்வபூ4தேஷு யேநைகம் பா4வமவ்யயமீக்ஷதே ।
அவிப4க்தம் விப4க்தேஷு தஜ்ஞாநம் வித்3தி4 ஸாத்த்விகம் ।। 20 ।।
विभक्तेषु सर्वभूतेषु விப4க்தேஷு ஸர்வபூ4தேஷு வேறு வேறாயுள்ள பூதங்களில்
अविभक्तं அவிப4க்தம் வேறுபடாததை अव्ययम् அவ்யயம் அழியாததை
एकं भावम् ஏகம் பா4வம் ஒரு வஸ்துவை येन யேந எதனால் ईक्षते ஈக்ஷதே பார்க்கிறானோ तत् ज्ञानं தத் ஞாநம் அந்த ஞானத்தை सात्त्विकम् ஸாத்த்விகம் சாத்விகமானதென்று
विद्धि வித்3தி4 அறி.
வேறு வேறாயுள்ள பூதங்களில் வேறுபடாத, அழியாத, ஒரே வஸ்துவை எதனால் பார்க்கிறானோ அந்த ஞானத்தை சாத்விகமானதென்று அறிக.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
பிரிவுபட்டு நிற்கும் எல்லா உயிர்களிலும் பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பைக் காணும் ஞானம் சாத்வீகமென்றறி.
விளக்கம்:
சுலோகம் இருபது முதல் இருபத்திரெண்டு வரை மூன்று வகையான ஞானம் குறித்து விளக்கமளிக்கிறார் கிருஷ்ணர். இருப்பதை அவ்விதமே புரிந்து கொள்ளுதல் யதார்த்த(யதா2ர்த2) ஞானம் ஆகும். ஆனால் பொருள் ஒன்றாக இருக்க எண்ணம் வேறாக இருத்தல் அயதார்த்த(அயதா2ர்த2) ஞானம் எனப்படுகிறது. அதாவது அதை வேறாகப் புரிந்து கொள்ளுதலை இது குறிக்கிறது. இதிலிருந்து ஞானம் என்பதை ஏதேனுமொரு பிரமாணத்தின் துணைகொண்டு மனதில் எழுகின்ற எண்ணம் எனலாம். இந்த ஞானம் சாத்விகம், ராஜஸம் மற்றும் தாமஸம் என மூன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்த சுலோகத்தில் சாத்விக-ஞானம் எது எனக் கூறப்படுகிறது.
=> சாத்விக ஞானம்:
இந்த சுலோகம் சாங்க்ய-சாஸ்திரத்திலிருந்து சொல்லப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். யுக்திக்கும் அனுபவத்திற்கும் அவைகளை ஒப்பிடலாம் எனும் விதமாக ஒரு புகழ்ச்சியாக சென்ற சுலோகத்தில் சாங்க்ய மதம் குறிப்பிடப்பட்டது அவ்வளவே. இனி, முதலில் ‘யேந ஈக்ஷதே’ எனும் வெளிப்பாட்டை எடுத்துக்கொள்வோம். இதன் பொருள் ‘எதனால் ஒருவன் அதைப் பார்க்கிறானோ, அதை அங்கீகரிக்கிறானோ’. அதாவது இங்கு அது ஞானத்தைக் குறிக்கிறது. எந்த ஞானத்தினால் அவன் அதை பார்க்கிறானோ அந்த ஞானம் சாத்விகம் எனப்படுகிறது. எதை பார்க்கிறான்? வேறு வேறாய் பலவற்றைக் காண்கின்ற அதே நேரத்தில், அந்த பலவற்றில் உள்ள ஒன்றைப் பார்க்கின்ற அந்த அறிவு சாத்விகமானது — விப4க்தேஷு ஸர்வபூ4தேஷு ஏகம் பா4வம், என்கிறார். ‘ஸர்வபூ4தேஷு’ எனில் எல்லாவற்றிலும், அதாவது வெளித்தோற்றத்திற்கு வராதது முதல் வெளித்தோற்றத்திற்கு வந்தது வரை, மேலும் அவற்றுள் ஜடமானதும் உணர்வுள்ளதுமான அனைத்தும், மற்றும் நகராத தாவரங்களில் தொடங்கி பிரம்மதேவர் போன்ற மிக உயர்ந்த உயிரினங்கள் வரை அனைத்திலும் ஓர் இருப்பை மட்டுமே காண்பது, ஏகம் பா4வம். எந்த ஞானத்தினால் ஒருவன் அவ்விதம் ஒரே இருப்பை மட்டும் காண்கிறானோ அந்த அறிவு சாத்விகம் ஆகும்.
=> அழியாதது:
பொதுவாக, ‘இருக்கின்ற’ என்ற அர்த்தத்தைக் கொண்டுள்ள ‘பா4வ’ எனும் சொல்லானது, எந்தவொரு இருக்கின்ற பொருளையும் குறிக்கலாம். இங்கு அது ஒரே வஸ்துவான ஆத்மாவைக் குறிக்கின்றது, ஏனெனில் ‘பா4வ’ எனும் சொல்லுக்கு அடைமொழியாக ‘ஸர்வபூ4தேஷு’ கூறப்பட்டுள்ளதால், அது எல்லா உயிரினங்களிலும் இருக்கின்ற அந்த ஒன்றைக் குறிப்பதாக ஆகிறது என்கிறார் சங்கரர். மேலும் அது ஒரு வஸ்துவாக இருந்து, பின்னர் இவையனைத்துமாக மாறிய ஒன்று அல்ல. முன்பு அது ஒன்றாக இருந்தது, இப்போதும் அது ஒன்றாக இருக்கிறது; எனவே ‘அவ்யய’, அதாவது மாறாதது, தேயாதது, இழப்பில்லாதது, அழியாதது என்று கூறுகிறார் பகவான். எல்லா உயிரினங்களிலும் எவ்வித மாற்றத்திற்கும் ஆளாகாத, அனைத்து நாம-ரூபங்களையும் தன்மீது ஏற்றிவைத்துள்ளதாக, எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கின்ற அந்த ஒன்று, மாறாதது.
=> பிளவுபடாதது:
பல்வேறாக பிளவுபட்டுள்ள இவைகளில் அது பிளவுபடாததாக இருக்கிறது — அவிப4க்தம் விப4க்தேஷு. உடல்கள் வேறுபட்டுள்ளன, ஆனால் அவைகளினூடே அது வேறுபடாததாக இருக்கிறது. ஆகாசத்தைப் போன்று பிளவுபடாதது என்று சங்கரர் கூறுகிறார். இங்கு ஒரு உடல் இருக்கிறது; அங்கு ஒரு உடல் இருக்கிறது; இடையில் எந்த உடலும் இல்லையாதலால் ஒரு உடல் மற்றொன்றிலிருந்து வேறுபட்டது. ஆனால் ஆத்மா அப்படி அல்ல. ஆகாசத்தைப் போலவே, ஆத்மா இல்லாத இடம் என்று ஒன்று இல்லை. ஆகாசம் எவ்விதம் பிளவுபடாததாக, வேறுபடாததாக இருக்கின்றதோ, அவ்விதமே வேறுபட்டுள்ள பல்வேறு ஜீவராசிகளுக்குள் ஒரு முழுமையான பூரண-ஆத்மாவானது பிளவுபடாமல் இருக்கிறது.
சாத்விக ஞானத்தினால் ஒருவன் இதைக் காண்கிறான் — ஈக்ஷதே. இந்த சொல் மிகவும் அற்புதமானது ஏனெனில், இது அவன் ஊகிக்கவில்லை, மாறாக பார்க்கிறான் எனக் கூறுகிறது. அந்த ஓர் இருப்பு அவனுக்கு தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில் அது அவனது சொந்த இயல்பாக(சொரூப) இருப்பதால், பிளவுபடாத முழுமையாயுள்ள தன்னில் அனைத்தும் இருக்கிறது என்பதாய் பூரணமானவனாகத் தன்னை காண்கிறான். இங்கு பிளவுபடாத முழுமை என்பது எழுவாய்-செயற்படுபொருள் என்கிற வேறுபாடு இல்லை என்பதைக் குறிக்கிறது. எனவே எந்த ஞானத்தினால், அல்லது மனதில் எழுகிற எந்தவொரு எண்ணத்தினால் ஒருவன் பரிபூரண-ஆத்மாவைப் பார்க்கிறானோ அது சாத்விக-ஞானம் ஆகும்.
உண்மையில், அது மட்டுமே ஞானம், ஏனெனில் அது மட்டுமே ஒருவனை கர்மத்திலிருந்து விடுவிக்கிறது. மற்ற எண்ணங்கள் அனைத்தும் கர்மத்திற்குப் பயனுள்ளதாக இருக்கலாமே தவிர மோக்ஷத்திற்கு அல்ல. பந்தத்திலிருந்து விடுவிப்பதற்கு பதிலாக, பலன்கள் மற்றும் அதை அடைவதற்கான வழிமுறைகளைப் பற்றிய அறிவாக அது மாறி, ஏதேனுமொரு விஷயத்தை துரத்தச் செய்து, பின்னர் அடிமைத்தனத்தில் ஆழ்த்திவிடுகிறது. மாறாத, பிளவுபடாத அந்த ஓர் இருப்பை பற்றிய அறிவு மட்டுமே ஒருவனை பிணைப்பிலிருந்து விடுவிக்கிறது — ஏகம் பா4வம். அந்த அறிவு சாத்விக-ஞானம் ஆகும்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
காற்று நல்ல வாசனையையும் கெட்ட வாசனையையும் கொண்டு வீசுமாயினும் அவைகளால் விகாரப்படுவதில்லை. பரம்பொருளும் அந்தக் காற்றைப் போன்றது.
---------------------------------------------------------------------------------------------
||18.21|| ராஜஸ ஞானம்:
पृथक्तवेन तु यज्ज्ञानं नानाभावान् पृथग्विधान् ।
वेत्ति सर्वेषु भूतेषु तज्ज्ञानं विद्धि राजसम् ।। २१ ।।
ப்ருத2க்த்வேந து யஜ்ஞாநம் நாநாபா4வாந் ப்ருத2க்3விதா4ந் ।
வேத்தி ஸர்வேஷு பூ4தேஷு தஜ்ஞாநம் வித்3தி4 ராஜஸம் ।। 21 ।।
तु து பின்பு यत् ज्ञानं யத் ஞாநம் எந்த ஞானமானது
सर्वेषु भूतेषु ஸர்வேஷு பூ4தேஷு எல்லா உயிரினங்களிலும்
पृथग्विधान् ப்ருத2க்3விதா4ந் வெவ்வேறு விதமான
नानाभावान् நாநாபா4வாந் பல இயல்புகளை पृथक्तवेन ப்ருத2க்த்வேந தனித்தனியாக
वेत्ति வேத்தி அறிகிறதோ तत् ज्ञानं தத் ஞாநம் எந்த ஞானம்
राजसम् ராஜஸம் ராஜஸம் என்று विद्धि வித்3தி4 அறிந்து கொள்.
பின்பு, எந்த ஞானம் வெவ்வேறு விதமான பல இயல்புகளை உயிர்களனைத்திலும் ஒன்றிலிருந்து ஒன்று வேறானதென்று அறிகிறதோ அந்த ஞானத்தை ராஜஸமென உணர்க.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
உயிர்களனைத்திலும் வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள் இருப்பதாகப் பிரித்துக் காணும் ஞானம் ராஜச மென்றுணர்.
விளக்கம்:
இந்த சுலோகத்தில் ராஜஸ-ஞானம் விளக்கப்படுகிறது.
=> ராஜஸ ஞானம்:
ஒவ்வொரு தேகத்திலும் ஒரு தனி ஆத்மா இருக்கிறதென்றும், அதற்கு தனித்துவமான லக்ஷணங்கள் இருக்கின்றன என்றும் அறிவது ராஜஸ அறிவு. பொதுவாக சாஸ்திரத்தில் நம்பிக்கை இருக்கின்ற ஒருவன், உடலுக்கு மீறிய ஒன்றாக ஆன்மா இருக்கிறது என்றும், உடல் இறந்த பிறகும் ஆன்மா உயிர்வாழ்கிறது என்றும் ஏற்றுக்கொள்கிறான். ஆனாலும் அதன் இருமையற்ற இயல்பை அவன் அங்கீகரிப்பதில்லை. எனவே ஒவ்வொரு உடலுக்கும் ஒரு தனிப்பட்ட ஆன்மா இருப்பதாக எண்ணுகிறான். வேறு வார்த்தையில் கூறுவதானால், ஒவ்வொரு ஆத்மாவும் மற்ற ஆத்மாவிலிருந்து வேறானது — ப்ருத2க்த்வேந, என்கிறான். இதனால் தனித்தனியானதாக வெவ்வேறு உயிர்கள் அல்லது பொருள்களை அங்கீகரிக்கிறான். அனைத்தும் வெவ்வேறானவை, தனித்துவம் வாய்ந்தவை — நாநாபா4வாந், ப்ருத2க்3விதா4ந். எனவேதான் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கேயுண்டான விருப்பு வெறுப்புகள், இன்ப துன்பங்கள் உள்ளன. அறிவு வேறுபட்டுள்ளதால் ஒவ்வொருவரும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள்; இதனால் ஆசைகள் வேறுபடுகின்றன; ரசனைகள் வேறுபடுகின்றன, என்கிறான்.
பொன் தாதுவைப் பூமியில் வெவ்வேறு இடங்களிலிருந்து வெட்டியெடுக்கலாம். தாதுவில் படிந்துள்ள அழுக்கானது ஒவ்வொரு தேசத்துக்கும் ஒவ்வொரு விதமாயிருக்கலாம். அந்த அழுக்குகள் எல்லாம் நீக்கப்படுகிறது. இப்போது அழுக்குகள் நீங்கப்பெற்ற தங்கம் என்பது ஒரே இயல்புடையதாகிறது. இது இந்த தேசத்துத் தங்கம் என்கிற வேற்றுமை போய்விடுகிறது. அதுபோலவே, உபாதி வேற்றுமையினால் ஆத்மாக்கள் பலவாகத் தென்படுகின்றன. உபாதிகளுக்கு முதன்மை கொடுப்பது ரஜோகுண அறிவின் இயல்பு. உபாதி எனும் அழுக்கை நீக்கிவிட்டால் எஞ்சியிருக்கிற சுத்த சைதன்யம் அல்லது ஆத்மா எப்போதும் ஒன்றே என்பது விளங்கும். சித்த-சுத்தி முழுமையடையும் போதுதான் அத்வைதத்திற்கு வர முடியும். கனவு இல்லாத ஆழ்ந்த உறக்கத்தில் வெவ்வேறு பிரக்ஞைகள் இல்லை. வேற்றுமையைக் கடந்துள்ள அந்நிலையை எண்ணிப்பார்க்கும்போது ஒற்றுமையை உணர முடியும்.
காரண ஞானம் என்பது சாத்விகம்; காரிய ஞானம் அல்லது நாமரூப அறிவு ராஜஸம் ஆகும். அனைத்து உயிரினங்களிலும் வெவ்வேறு விதமான அல்லது எல்லா உயிரினங்களிலும் உள்ள ஆத்மாவை தனித்தனியானதாக எந்த அறிவு அங்கீகரிக்கிறதோ அந்த அறிவு ராஜஸ-ஞானம் ஆகும் — தத் ஞாநம் வித்3தி4 ராஜஸம். ரஜோகுணத்தை பிரதானமானக் கொண்ட அந்தக்கரணம், இந்த வகையான அறிவை மட்டுமே கொண்டிருக்க முடியும்.
இனி, தாமஸ அறிவு என்பது என்ன என அடுத்த சுலோகத்தில் பார்க்கலாம்.
---------------------------------------------------------------------------------------------