ஞாயிறு, 17 மே, 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.26 - 18.27

||18.26|| சாத்விக கர்த்தா:

मुक्तसङ्गोऽनहंवादी धृत्युत्साहसमन्वित: ।

सिद्ध्यसिद्द्योर्निर्विकार: कर्ता सात्त्विक उच्यते ।। २६ ।।

முக்தஸங்கோ3ऽநஹம்வாதீ3 த்4ருத்யுத்ஸாஹஸமந்வித: ।

ஸித்3த்4யஸித்3த்4யோர்நிர்விகார: கர்தா ஸாத்த்விக உச்யதே ।। 26 ।।


मुक्त सङ्ग:  முக்த ஸங்க3:  பற்று நீங்கியவன்     अनहंवादी  அநஹம்வாதீ3  அகங்காரமற்றவன்     

धृति उत्साह समन्वित:  த்4ருதி உத்ஸாஹ ஸமந்வித:      உறுதியும் ஊக்கமும் உடையவன்      

सिद्धि असिद्द्यो:  ஸித்3தி4 அஸித்3த்4யோ:  வெற்றி தோல்வியில்      

निर्विकार:  நிர்விகார:  வேறுபடாதவன்     सात्त्विक:  ஸாத்த்விக  சாத்விகமானவனென்று       

कर्ता उच्यते  கர்தா உச்யதே  உரைக்கப்படுகிறது. 


பற்று நீங்கியவன், அகங்காரமற்றவன், உறுதியும் ஊக்கமுமுடையவன், வெற்றி தோல்வியில் வேறுபடாதவன் — இத்தகைய கர்த்தா சாத்விகன் எனப்படுகிறான். 


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

நசைகளற்றான், நானென்ப தற்றான் உறுதியுங் களிதரும் ஊக்கமு முடையான், வெற்றி தோல்வியில் வேறுபா டற்றான் - இங்ஙன மாகித் தொழில்க ளியற்றுவோன் ஒளியியல் யுடையானென்ப.

விளக்கம்:

சுலோகம் இருபத்தாறு முதல் இருபத்தெட்டு வரை மூன்று வகையான கர்த்தாக்கள் குறித்து பகவான் பேசுகிறார். இங்கு சாத்விக கர்த்தா எப்படிப்பட்டவன் எனக் கூறுகிறார்.


=> சாத்விகம்:

மனம் சாத்விகமாக இருப்பவனே சாத்விக-கர்த்தாவாக இருக்கிறான். மனம் சாத்விகமாக மாறியவுடன், அறிவு மற்றும் செயல் இரண்டும் அவ்விதமாகவே மாறுகிறது. சாத்விகம் என்பது சிந்தனையிலும் மனப்பான்மையிலும் ஏற்படுகிற மாற்றமாகும். செயலைச் செய்பவன் கர்த்தா எனப்படுகிறான். சாத்விகமான கர்மத்தை செய்பவன் சாத்விக-கர்த்தா ஆகிறான். அவன் எப்படிப்பட்டவன்?


=> பற்று நீங்கியவன்:

சத்வகுணப் பிரதானமான மனதை கொண்டுள்ள சாத்விக-கர்த்தா, பற்றிலிருந்து விடுதலை அடைந்தவனாக இருக்கிறான் — முக்த ஸங்க3. தான் செய்கிற கர்மத்திலும், கர்ம பலனிலும் விருப்பு வெறுப்பு இல்லாதவனாக, பெருமையோ அல்லது அகங்காரமோ அற்றவனாக இருக்கிறான். எனவேதான் அவன் ‘அநஹம்வாதீ3’ எனவும் அழைக்கப்படுகிறான். 


=> கர்வமற்றவன்:

எல்லா வடிவங்களும் ஈசன் சொரூபம்; எல்லாச் செயல்களும் அவனுடையவை என்ற எண்ணத்தில் சாதகன் நிலைத்திருக்கிறான். அதனால் செய்கிற செயலின் பலனை அடைவதற்கான எதிர்ப்பார்ப்புகளும் விருப்பங்களும் அவனுக்கு இல்லை. ஒரு பெரிய தியாகத்தைச் செய்தபோதிலும், ‘நான் மிக மேலானவன்; அதனால் இதை நான் செய்கிறேன்; இது எனக்கு பெயரையும், புகழையும் கொடுக்கும்’ என்றெல்லாம் கர்வம் கொள்வதில்லை. மாறாக, ‘இது எனக்குச் செயல்பட கொடுக்கப்பட்டுள்ளது, எனவே என்னால் இது செய்யப்படுகிறது’ என்கிற மனப்பான்மையைக் கொண்டவனாக இருக்கிறான். கொடுக்கின்ற நிலையில் இருந்தபோதிலும், பெறுகின்ற நிலையிலும் தன்னை வைத்துப் பார்க்கின்ற மனப்பக்குவம் சாத்விக குணத்தினால் அவனுக்கு அமையப்பெற்றிருக்கிறது. அந்த மனப்பான்மை தன்னைப் பற்றி பெருமை பேசாதவனாக அவனை ஆக்குகிறது. இதனால் அவனுக்கு அஹங்காரம் இல்லை — அநஹம்வாதீ3. உடல், மனம், புலன்கள், வளங்கள், உலகம் மற்றும் வாய்ப்புகள் என அனைத்தும் தனக்கு கொடுக்கப்பட்டது என்பதை அவன் அங்கீகரிக்கிறான். இந்த புரிதலுடன் செயல்படும்போது ஒருவன் பணிவுடையவனாக, சாத்விகமானவனாக ஆகின்றான்.  


=> உறுதியுடன் கூடியவன்:

மேலும், சாத்விகமானவனிடம் உறுதிப்பாடு அல்லது விடாமுயற்சி இருக்கிறது — த்4ருதி. பல்வேறு விஷயத்தில் ஒருவனால் உறுதியுடன் இருக்கமுடியும். உதாரணமாக, ஹிட்லரிடம் இருந்த உறுதியும் த்ருதியே ஆகும். ஆனால் அது தவறான சிந்தனையினால் மிகவும் ஆபத்தில் முடிந்தது. எனவே யாருக்கும் உறுதி இருக்கலாம், அது ராஜஸிகமாக அல்லது தாமஸமாக இருக்கலாம். எனில் இங்கு விவாதிக்கப்படும் நபரின் உறுதியானது எப்படிப்பட்டது? அது அவனுக்கும் மற்றவர்களுக்கும் நன்மையை விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. ஏனெனில் அது அவனது சாத்விகமான சிந்தனையிலிருந்து எழுந்த சரியான தீர்மானம் ஆகும். மோக்ஷத்திற்காக மனத் தூய்மையை அடைவதில் உறுதியுடன் இருக்கிறான். அர்ஜுனன் அல்லது தர்மபுத்திரனைப் போல, தர்மசிந்தனைக்கு எதிராக எழாத உறுதி சாத்விகமானது. ‘த்4ருதி’ எனும் இந்த வார்த்தையின் வேர்ச்சொல்லான ‘த்4ர்’ என்பது நிலைநிறுத்துவது எனப் பொருள்படும். எனவே தொடர்ந்து ஒரு விஷயத்தில் நிலைநிற்பதை அது குறிக்கிறது. அதாவது ஏதேனுமொரு விஷயத்தை தொடங்கி, பின்னர் முயற்சி தளர்ந்ததினால் அது கைவிடப்பட்டால் அங்கு எந்த த்ருதியும் இல்லை என்பது பொருள். எனவே தடை வரும்போதும் உறுதியுடன் இருந்து தொடங்கியதை முடிப்பவன் சாத்விகன்.

மேலும், உறுதி இருந்தாலும் உற்சாகத்துடன் செய்யப்படாத ஒன்று பெரும்பாலும் அதன் முடிவை நெருங்குவதில்லை. எனவே சாத்விகமானவன் செய்கிற செயலை ஊக்கத்தோடு முழு மனதுடன் கூடியவனாகச் செய்கிறான். இவ்விதம் முயற்சி மற்றும் உற்சாகத்துடன் தனது தீர்மானத்தில் உறுதியாக இருப்பவன் — த்4ருத்யுத்ஸாஹ ஸமந்வித:, சாத்விகமானவன். 


=> வெற்றி-தோல்வியில் வேறுபடாதவன்:

பற்றுடையவன் வெற்றியின்போது மகிழ்கிறான்; தோல்வியில் துன்பமடைகிறான். ஆனால் இங்கு சொல்லப்படுகிற சாத்விகீ, அனைத்தும் கடவுளுடைய செயல் என்று எண்ணுகிற யோகியாக இருப்பதால், கர்மத்துக்கு கர்த்தாவாக தோன்றுகிறானென்றபோதிலும், மனதினுள் அதை ஈசனின் செயலாகப் பார்ப்பதினால், அவன் வெற்றி தோல்விகளில் நிர்விகாரியாக, அதாவது சமமாக இருப்பவனாக ஆகிறான் — ஸித்3தி4 அஸித்3த்4யோ: நிர்விகார:. வெற்றியோ தோல்வியோ, விளைவு எதுவாயினும் அதை ஈஷ்வரப் பிரசாதமாக ஏற்றுக் கொள்கிறான். இதனால் அவனது மனம் சஞ்சலத்தை அடைவதில்லை. 

ஒரு கர்ம-யோகிக்கு கர்மத்தை செய்து முடிப்பதே வெற்றி; அதில் வருகிற முடிவைப் பற்றி அவன் கவலைப்படுவதில்லை. இங்கு சொல்லப்படுவதுபோல் வெற்றி தோல்விகளில் சஞ்சலப்படாமல் மனதை சமநிலையில் வைத்திருக்கிற நிலை கர்மயோகத்தைக் குறிக்கிறது. எனவே இங்கு பேசப்படுவதும் கர்ம-யோகம்தான். ஏதேனுமொன்றை அடைய வேண்டுமென்பதற்காக அல்லாமல், தர்மத்திற்கு இணங்க, சாஸ்திரத்திற்கு இணங்க மட்டுமே செயல்களில் ஈடுபடுபவனாக அவன் இருக்கிறான் என்று சங்கரர் மேலும் கூறுகிறார். அத்தகையவன் சாத்விகமானவன் என்று அழைக்கப்படுகிறான்; வேறு வார்த்தையில் கூறுவதானால், அவன் ஒரு கர்ம-யோகி. நாம் இங்கே ஞானியை பற்றிப் பேசவில்லை, கர்த்தாவைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். ஒரு ஞானியின் அணுகுமுறை இதிலிருந்து மிகவும் வித்தியாசமானதாக இருக்கப்போவதில்லை என்றாலும், அது அவனது சொரூபமாகவே இருக்கிறது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

கள்ளங்கபடமற்ற மனமிருந்தால் ஈஷ்வரனை எளிதில் அடையலாம். கற்கள் இல்லாமல் உழுது பண்படுத்தப்பட்ட மிருதுவான பூமியில் நடப்படும் வித்து எளிதில் முளைத்துக் கிளம்பி, சீக்கிரத்தில் பயன் அளிப்பதைப் போல, கள்ளங்கபடமற்ற மனத்தில் ஆத்மீக உபதேசங்கள் எளிதில் பயன் அளிக்கின்றன. 

————————————————————————————————

||18.27|| ராஜஸ கர்த்தா:

रागी कर्मफलप्रेप्सुलुब्धो हिम्सात्मकोऽशुचि: ।

हर्षशोकान्वित: कर्ता राजस: परिकीर्तित: ।। २७ ।।

ராகீ3 கர்மப2லப்ரேப்ஸுலுப்3தோ4 ஹிம்ஸாத்மகோऽசு1சி: ।

ஹர்ஷசோ1காந்வித: கர்தா ராஜஸ: பரிகீர்தித: ।। 27 ।।


रागी  ராகீ3  ஆசையுள்ளவன்      कर्मफलप्रेप्सु:  கர்மப2லப்ரேப்ஸு:  வினைப்பயனை விரும்புபவன்      लुब्ध:  லுப்34:  லோபி       हिम्सात्मक:  ஹிம்ஸாத்மக:  துன்புறுத்தும் தன்மையுடையவன்    

अशुचि:  அசு1சி:  சுத்தமில்லாதவன்     हर्ष शोक अन्वित:  ஹர்ஷ சோ1 அந்வித:  மகிழ்வும் சோர்வும் கொள்பவன்     कर्ता  கர்தா  அத்தகைய கர்த்தா       राजस:  ராஜஸ: ராஜஸனென்று     

परिकीर्तित:  பரிகீர்தித:  சொல்லப்படுகிறான்.


ஆசையுள்ளவன், வினைப்பயனை விரும்புபவன், லோபி, துன்புறுத்தும் தன்மையுடையவன், சுத்தமில்லாதவன், மகிழ்வும் சோர்வும் கொள்பவன் — இத்தகைய கர்த்தா ராஜஸனென்று சொல்லப்படுகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

வேட்கையுடையோன், செய்கைப் பயன்களை விரும்புவோன், லோபி, இடர் செய்வோன், தூமையற்றோன், களிக்குந் துயிலுக்கும் வசபட்டோன் இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர்.


விளக்கம்:

இந்த சுலோகத்தில் ராஜஸ-கர்த்தா எப்படிப்பட்டவன் என பகவான் வரையறுக்கிறார்.


=> பலன்-விரும்பி:

அவன் ஒரு ராகியாக இருக்கிறான் — ராகீ3. அதாவது பற்றுடன் கூடியிருப்பவன்; விஷய போகத்தை முதன்மையாகக் கொண்டவன். லெளகிக கர்மங்கள் அனைத்தையும் அவன் ராக மற்றும் துவேஷத்திற்காக மட்டுமே செய்கிறான். அதேபோல எந்த வகையான வைதிக-கர்மத்தையும் அவன் கர்ம-பலனுக்காக மட்டுமே செய்கிறான். செயல்களினால் வருகிற பலன்களில் குறிப்பிடத்தகுந்த ஆசை இருப்பதால் அவன் ‘கர்மப2லப்ரேப்ஸு’ என்று அழைக்கப்படுகிறான். அத்தகையவன் தனது கடமையையும்கூட பலனைக் கருத்தில் கொண்டே செய்கிறான். அவன் தர்ம, அர்த்த அல்லது காமத்தை மட்டுமே விரும்புகிறான் என்பதால் அவன் கர்ம-யோகியாக அல்லாமல் கர்ம-ப2ல-ப்ரேப்ஸு-வாக, செயலின் பலனை மட்டுமே விரும்புபவனாக இருக்கிறான். 


=> லோபி:

ராஜஸ-கர்த்தா லோபியாக இருக்கின்றான் — லுப்34. லோபியை இரு வகையில் வரையறுக்கலாம். (1) தன் பொருளை மற்றவர்களுக்கு கொடுக்காதவன் - ஸ்வ த்3ரவ்யம் அபரித்யாகி3. கொடுக்க வேண்டிய சூழ்நிலை அமையும்போதும் அவன் அதை செய்வதில்லை. பொதுவாக, இந்தியாவில் புனித யாத்திரைத் தலங்களுக்குச் செல்லும்போது மக்கள் பணத்தை தானமாகக் கொடுப்பது வழக்கம். அதையும்கூட அவன் தனது லோபத்தால் செய்வதில்லை. மேலும் மற்றவர்களுக்கு மட்டுமல்ல தனக்கும்கூட பணத்தை செலவிட இயலாத கஞ்சனாக இருக்கிறான். அவனது மனமானது ஏதோ வங்கியின் சில புள்ளிவிவரங்களிலும், சில நிதிநிலை அறிக்கைகளின் பத்திகளிலும், எங்கோ சில இடங்களில் சொத்தாக முதலீடு செய்வதிலும் இருக்கும். ஆனால் தனக்கென்றோ அல்லது மற்றவர்களுக்கென்றோ செலவு செய்ய மனம் வராது. 

(2) இனியொருவருடைய பொருளுக்கு ஆசைப்படுபவன் - பரத்3ரவ்யே ஸஞ்ஜாத த்ருஷ்ண:. ஏதேனும் ஒரு விதத்தில் பிறர் பொருளை தன்னுடையதாக ஆக்கிக்கொள்ள முயலும் பேராசைக்காரனாக அவன் இருக்கிறான். 


=> ராஜஸன்:

அவனது செயலின் மூலமாக மற்றவர்களை துன்புறுத்துபவனாக இருக்கிறான் — ஹிம்ஸாத்மக. இனியொருவரை காயப்படுத்துவது அவனது இயல்பாக இருக்கிறது, அதில் அவன் மகிழவும் செய்கிறான். அவன் மகிழ்ச்சியில்லாமல் இருப்பதால், வேண்டுமென்றோ அல்லது கவனிக்காமலோ மற்றவர்களது மகிழ்ச்சியையும் குலைக்கிறான். மேலும், அவன் தூய்மையற்றவனாக இருக்கிறான் — அசு1சி. அவனது அகம் மற்றும் புறம் இரண்டும் சுத்தமற்று இருக்கிறது. அவன் எண்ணுவதிலும், பேசுவதிலும், செய்வதிலும், உடலை வைத்துக் கொள்ளும் முறையிலும் சுத்தமில்லை. அகத்தூய்மையற்ற தன்மை என்பது கோபமாக வெறுப்பாக வெளிப்படுகிறது. இனியொருவரை காயப்படுத்தும் தன்மையும் திடம்பெற்ற விருப்பங்களும் இருக்கும்போது, இயல்பாகவே அவனுக்கு அகத்தூய்மை இருக்காது. அதேசமயம் அவனிடம் புறத்தூய்மையும்கூட இருப்பதில்லை.

சென்ற சுலோகத்தில் பார்த்த கர்மயோகியினுடைய மனநிலையான வெற்றி தோல்விகளில் சமமாக இருக்கின்ற தன்மைக்கு நேர் எதிரானவனாக இங்கு விவாதிக்கப்படுபவன் இருக்கிறான் — ஹர்ஷ சோ1க அந்வித:. தனக்கு வேண்டியது நடக்கும்போது மகிழ்ச்சியும், வேண்டாதது வந்தமையும்போது துயரமும் மனச்சோர்வும் கொள்கிறான். ரஜோகுணம் நிறைந்தவனது கர்த்ருத்துவம், அதாவது கர்த்தா என்று உணரும் பான்மை இத்தகையதாக இருக்கிறது.   


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

வீண் கர்வம் பிடித்தவனாயிருப்பது கேவலம் தாழ்ந்த சுபாவம். காக்கையைப் பார். தான் சாமர்த்தியமுள்ள பக்ஷியென அது நினைத்துக் கொண்டிருக்கிறது. ஒருபோதும் அது வலையில் அகப்படுவதில்லை. ஆபத்து வருமென்பதைச் சற்றுத் தெரிந்துகொண்டதும் பறந்தோடி விடுகிறது. வெகு தந்திரமாக ஆகாரத்தைத் திருடுகிறது. என்றாலும் மலம் தின்பதில் மட்டும் அதற்கு அருவருப்பில்லை. அதிகச் சமர்த்தாக இருப்பதின் பலன் இதுதான்.

————————————————————————————————

திங்கள், 11 மே, 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.24 - 18.25

||18.24|| ராஜஸ கர்மம்:

यत्तु कामेप्सुना कर्म साहङ्कारेण वा पुन: ।

क्रियते बहुलायासं तद्राजसमुदाहृतम् ।। २४ ।।

யத்து காமேப்ஸுநா கர்ம ஸாஹங்காரேண வா புந: ।

க்ரியதே ப3ஹுலாயாஸம் தத்3ராஜஸமுதா3ஹ்ருதம் ।। 24 ।।


तु  து  மேலும்     कामेप्सुना  காமேப்ஸுநா  ஆசையின் வசப்பட்டவனால்     वा  வா  அல்லது      

पुन:  புந:  மேலும்     साहङ्कारेण  ஸாஹங்காரேண  அஹங்காரமுடையவனால்       

बहुल आयासं  3ஹுல ஆயாஸம்  அதிக ஆயாசத்துடன்      यत् कर्म  யத் கர்ம  எக்கர்மம்      

क्रियते  க்ரியதே  செய்யப்படுகிறது     तत्  தத்  அது       राजसम्  ராஜஸம்   ராஜஸமானதென்று       उदाहृतम्  உதா3ஹ்ருதம்  உரைக்கப்படுகிறது.


மேலும் ஆசையின் வசப்பட்டவனால் அல்லது அகங்காரமுடையவனால் பெரும் ஆயாசத்துடன் எந்த கர்மம் செய்யப்படுகிறதோ அது ராஜஸமானதென்று உரைக்கப்படுகிறது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

விருப்பங்களுக்கு வசப்பட்டவனால் அல்லது அகங்காரமுடையவனால் செய்யப்படும் மிகுந்த ஆயாசத்துக் கிடமான செய்கை ராஜச மெனப்படும்.


விளக்கம்:

இந்த சுலோகத்தில் பகவான் ராஜஸம் கர்ம எது என வரையறுக்கிறார்.


=> ராஜஸ கர்மம்:

இங்கு ‘து’ எனும் சொல்லானது முந்தைய சுலோகத்தில் விவரிக்கப்பட்ட சாத்விகம் கர்மத்திலிருந்து இதை வேறுபடுத்திக் காட்டுகிறது. இங்கு சொல்லப்படுகிற ‘காமேப்ஸுநா’ எனும் வார்த்தையானது சென்ற சுலோகத்தில் சொல்லப்பட்ட ‘2லப்ரேப்ஸுநா’ எனும் பொருளை ஒத்துள்ளது, அதாவது பலனை விரும்புபவன். ‘காம’ எனில் ஒருவனால் விரும்பப்படுவது; எதன் பொருட்டு ஒருவன் கர்மத்தில் ஈடுபடுகிறானோ அந்த கர்ம-பலனைக் குறிக்கிறது. தனது தற்போதைய நிலைமையிலிருந்து உயர்வை அடைதல் எனும் இகவுலக பலனையோ, அல்லது புண்ணியத்தை அடைந்து வேறு லோகத்திற்கான பலனையோ அடைதல் என்பதை கருத்தில் வைத்து, ஆசையினால் தூண்டப்பட்டுச் செய்யப்படுவது ‘காமேப்ஸுநா’ ஆகும்.  

இந்த சுலோகத்தில் வருகிற ‘புந:’ எனும் சொல்லிற்கு பெரிதான அர்த்தம் எதுவுமில்லை என்றும், சந்தத்தை நிரப்ப மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றும், அல்லது அதனுடைய நேரடிப் பொருளான ‘மீண்டும்’ என்பதை எடுத்துக் கொள்ளலாம் என்றும் சங்கரர் பாஷ்யத்தில் கூறுகிறார். இது சுலோகத்தினால் விளக்கப்படுகிற அர்த்தத்தை எவ்விதத்திலும் பாதிக்காது. மீண்டும், இந்த வகையான கர்மம் அகங்காரத்துடன் செய்யப்படுவதாக இருக்கிறது. ‘ஸாஹங்காரேண’ என்பது பெருமிதத்துடன் கூடியவனை, அகங்காரம் நிறைந்தவனை, சுயநலவாதியைக் குறிக்கிறது. உதாரணமாக பதவியின் காரணமாக கிடைக்கின்ற செல்வாக்கில் பெருமிதம் கொண்டு மற்றவர்களை அவன் மதிப்பதில்லை. இவ்விதம் செல்வம், அந்தஸ்து, பதவி போன்ற வெளி அடையாளங்களுடன் தன்னை தொடர்புபடுத்தி இறுமாப்புடன் கூடியவனாக செய்யப்படுகிற செயல் ராஜஸம் கர்ம ஆகும்.

அடுத்ததாக, இவ்வகை கர்மங்கள் மிகுந்த துன்பத்துடன், களைப்புடன் செய்யப்படுகிறது — 3ஹுலாயாஸம். ‘ஆயாஸம்’ எனில் மன அழுத்தம், பதற்றம், கொந்தளிப்பு. அதிக பணத்தை நோக்கமாகக் கொண்டு சிலர் மன அழுத்தத்தையும் பொருட்படுத்தாது, அலுவலகத்தில் மிகைநேரப் பணி புரிவார்கள். அந்த களைப்பில் அவர்கள் வீட்டிற்கு வரும்போது, எப்போது வெடிப்பார்கள் எனத் தெரியாத அளவு பொருமிக் கொண்டே இருப்பார்கள். இதனால் வாழ்க்கையே நரகமாகிவிடும்; குடும்பம் நரகமாகிவிடும், பணம் இருக்கிறது, அந்தஸ்து இருக்கிறது; பதவி இருக்கிறது, ஆனால் வாழ்க்கை இல்லை, குடும்பம் இல்லை, நிம்மதி இல்லை, ஆன்மிகம் இல்லை.

மேலும் சிலர் தான் செய்கிற கர்மங்களை மற்றவர்கள் அறிவதற்கேற்ற விரிவான ஏற்பாடுகளைச் செய்வார்கள். இது கர்மத்தைக் காட்டிலும் அதிக களைப்பை அளிக்கக்கூடியதாக இருந்தும் அதை தவறாமல் செய்கிறார்கள். இத்தகைய செயல் ரஜோ குணத்திலிருந்து பிறக்கிறது. இவை ராஜஸ கர்மம் என்றழைக்கப்படுகிறது.  


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

துஷ்ட அஹங்காரம் என்பது யாது? “என்னைத் தெரியாதா? எனக்கு அவ்வளவு செல்வமிருக்கிறது; என்னிலும் மேம்பட்டவர் யார்?” என்று சொல்லுகிற அகங்காரந்தான்.

————————————————————————————————

||18.25|| தாமஸ கர்மம்:

अनुबन्धं क्षयं हिंसामनपेक्षय च पौरुषम् ।

मोहादारभ्यते कर्म यत्तत्तामसमुच्यते ।। २५ ।।

அநுப3ந்த4ம் க்ஷயம் ஹிம்ஸாமநபேக்ஷய ச பெளருஷம் ।

மோஹாதா3ரப்4யதே கர்ம யத்தத்தாமஸமுச்யதே ।। 25 ।।


अनुबन्धं  அநுப3ந்த4ம்  வினையின் விளைவையும்     क्षयं  க்ஷயம்  நஷ்டத்தையும்       

हिंसाम्  ஹிம்ஸாம்  துன்பத்தையும்     पौरुषम् च  பெளருஷம்   தன் வல்லமையையும்

अनपेक्षय  அநபேக்ஷய  எண்ணிப்பாராது       मोहात्  மோஹாத்  மோகத்தால்      

यत् कर्म  யத் கர்ம  எக்கர்மம்      आरभ्यते  3ரப்4யதே  ஆரம்பிக்கப்படுகிறதோ     तत्  தத்  அது      तामसम् தாமஸம்  தாமஸமென்று      उच्यते  உச்யதே  உரைக்கப்படுகிறது. 


வினையின் விளைவையும், நஷ்டத்தையும், துன்பத்தையும், தன் திறனையும் எண்ணிப்பாராது மயக்கத்தால் எக்கர்மம் தொடங்கப்படுகிறதோ அது தாமஸமெனப்படும். 


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

செய்கையின் பின் விளைவையும், அதனால் பிறருக்கு நேரக்கூடிய நாசத்தையும் துன்பத்தையும் செய்வானது திறமையையும் கருதாமல், அறிவின்மையால் தொடங்கப்படும் கர்மம் தாமசமெனப்படும்.

விளக்கம்:

இங்கு தாமஸம் கர்ம விளக்கப்படுகிறது. 


=> தாமஸ கர்மம்:

கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை, பொருட்படுத்தாது அல்லது கருத்தில் கொள்ளாது தொடங்கப்படுகிற செயல் தாமஸம் எனப்படுகிறது. 

(1) செய்கிற செயலின் விளைவு என்னவாக இருக்கும் என எண்ணிப்பார்க்காது செய்யப்படுவது(அநுப3ந்த4ம்) தாமஸம் ஆகும். உதாரணமாக திருடுதல் போன்ற செயலில், அதனுடைய விளைவை அவன் பார்ப்பதில்லை. தான் செய்த கர்மத்திலிருந்து விளைவது நன்மையா, கேடா என்பதை சிறிதும் பொருட்படுத்துவதில்லை. 

(2) மேலும் அவனது இழப்புகளை அவன் கருத்தில் கொள்வதில்லை — க்ஷயம். பண நஷ்டம், ஆற்றல் மற்றும் முயற்சியின் இழப்பு, நம்பகத்தன்மை இழக்கப்படுவது, சுயமரியாதை இழக்கப்படுவது போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதா என அவன் எண்ணிப்பார்ப்பதில்லை. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் சூதாட்டம் ஆகும். எப்போதும் தான் வெற்றி பெறப்போவதாகவே ஒரு சூதாட்டக்காரன் நம்புகிறான். இத்தகைய செயல்களில் இழப்புகள் மட்டுமல்ல, வரப்போகிற எதிர்மறையான விளைவுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. மேலும் உடலிலுள்ள வலிவு, ஆயுள், நிம்மதி, புண்ணியம் ஆகியவற்றின் நஷ்டத்தையும் பொருட்படுத்தாது செய்கிற செயல்களும் தாமஸம் கர்ம ஆகிறது.

(3) இத்தகையவனது முயற்சி அல்லது செயலானது தனக்கு மட்டுமல்ல மற்றவர்களையும் பாதிப்பதாக இருக்கிறது — ஹிம்ஸா. ஆனால் அதை அவன் கருத்தில் கொள்ளாது செயல்படுகிறான்.

(4) தான் கொண்டுள்ள திறமையானது தான் எடுத்துக் கொண்டுள்ள கர்மத்தைச் சமாளிப்பதற்கு ஏற்றதல்ல என்பதை அம்மனிதன் அறியான். தனது சொந்த வலிமை, திறன், வளம், மற்றும் மனித சக்தி போன்றவற்றை முறையாக அங்கீகரிப்பது, அதாவது ஒரு செயலைச் செய்வதற்கான தகுதி அல்லது வல்லமை தனக்கு இருக்கிறதா(பெளருஷம்) என்பதை புரிந்துகொண்டு அச்செயலை தொடங்குவது அவசியம். ஆனால் தாமஸகுணப் பிரதானமாக இருப்பவன் அவ்விதம் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

மேற்கூறியவைகள் அனைத்தையும் சிறிதும் பொருட்படுத்தாது செய்யப்படுகிற செயல் தாமஸம் கர்ம ஆகிறது. இந்த காரணிகளைக் கருத்தில் கொள்ளாமல் ஏன் ஒருவன் ஒரு செயலைத் தொடங்குகிறான்? ஒருவகையான மோஹத்தினால் அவன் அவ்விதம் செயல்படுகிறான் — மோஹாத். ஒரு விஷயத்தை சரியான விதத்தில் பகுத்தறிய இயலாமல் போவது என்பது ஒரு குறிப்பிட்ட ஆடம்பர மனப்பான்மை அல்லது தவறான நம்பிக்கை ஆகியவற்றின் வெளிப்பாடாக அமைகிறது. இந்த மயக்கத்தை அல்லது குழப்பத்தை நாம் சில சமயம் முட்டாள்தனம் என்றும் அழைக்கிறோம். அப்படிப்பட்ட செயலை மேற்கொள்பவன் தாமஸம் கர்ம எனப்படுகிற ஒரு செயலைச் செய்கிறான்.  

மூன்று வகையான கர்மம் கூறப்பட்டது. இதற்கு முன்னர் மூன்று வகையான ஞானத்தைக் குறித்துப் பார்த்தோம். அடுத்தாக, கர்த்தாவினது ​​மூன்று விதமான பாகுபாட்டைக் குறித்து பகவான் பேச இருக்கிறார்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

மிகுந்த தபசுக்குப் பிறகுதான் மனிதர்கள் கபடமற்றவராகவும் தயாளகுணம் வாய்ந்தவராகவும் ஆகின்றார்கள். கள்ளங்கபடமற்ற மனதையுடையவராயிருந்தால் கடவுள் காட்சி கிடைக்கும். அவ்வித எளிய மனதையுடையவர்கே கடவுள் தம்மைக் காட்டுவிப்பார் என்று பகவான் கூறுவது வழக்கம். ஆனால் எளிமை, உண்மை இவற்றின் பேரால் ஒருவன் ஏமாளியாகிவிடக் கூடாதென்று அஞ்சிப் பின்வருமாறு குறிப்பிடுவதும் உண்டு. “பக்தனாக இருக்க வேண்டும்; ஆனால் அதன்பேரில் மூடனாக இருக்கக் கூடாது. எப்பொழுதும் மெய்ப் பொருளிலிருந்து பொய்ப்பொருளையும், நித்யத்திலிருந்து அநித்யத்தையும் அகற்றுவதற்காக மனதிலே விசாரணை செய்து பார்க்க வேண்டும். பிறகு அநித்யத்தை அகற்றி விட்டு நித்ய வஸ்துவின்மீது மனதை நிறுத்தவேண்டும்”.

————————————————————————————————