||18.49|| ஞானயோகத்தின் சாரம் தொடங்குகிறது:
असक्तबुद्धि: सर्वत्र जितात्मा विगतस्पृह: ।
नैष्कर्म्यसिद्धिं परमां संन्यासेनाधिगच्छति ।। ४९ ।।
அஸக்தபு3த்3தி4: ஸர்வத்ர ஜிதாத்மா விக3தஸ்ப்ருஹ: ।
நைஷ்கர்ம்யஸித்3தி4ம் பரமாம் ஸந்ந்யாஸேநாதி4க3ச்ச2தி ।। 49 ।।
सर्वत्र ஸர்வத்ர எங்கும் असक्त बुद्धि: அஸக்த பு3த்3தி4: பற்றற்ற புத்தியுடையவனாய்
जितात्मा ஜிதாத்மா சிந்தையையடக்கியவனாய் विगत स्पृह: விக3த ஸ்ப்ருஹ: ஆசையற்றவனாய் संन्यासेन ஸந்ந்யாஸேந சந்யாசத்தால் परमां பரமாம் மேலான नैष्कर्म्य सिद्धिं நைஷ்கர்ம்ய ஸித்3தி4ம் நைஷ்கர்ம்ய சித்தியை अधिगच्छति அதி4க3ச்ச2தி அடைகிறான்.
எங்கும் பற்றற்ற புத்தியுடையவனாய், சிந்தையையடக்கியவனாய், ஆசையற்றவனாயிருப்பவன் சந்யாசத்தால் உத்தமமான நைஷ்கர்ம்ய சித்தியை அடைகிறான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
யாங்கணும் வீழ்விலா மதியுடையோனாய், தன்னை வென்று விருப்பந் தவிர்த்து பின்னர்ச் செயலிலாப் பெரிதுயர்ந்த வெற்றியைத் துறவினால் எய்துவான்.
விளக்கம்:
சுலோகம் நாற்பத்தொன்பது முதல் ஐம்பத்திநான்கு வரை ஞானயோகத்தின் சாரம் பேசப்படுகிறது.
=> பற்றற்ற புத்தியுடையவன்:
‘ஸக்த’ எனில் பற்றுடைய, ஒன்றில் அதிக ஈடுபாடு கொண்ட என்பது பொருள். எனவே ‘அஸக்த பு3த்3தி4’ என்பது யாருடைய மனதில் பற்று இல்லையோ அவனை அதாவது கர்மயோகியைக் குறிக்கிறது. அவன் எதில் பற்றற்று இருக்கிறான்? அசக்தமான புத்தியுடையவன் விருப்பு-வெறுப்புகளில் பற்றற்றவனாக இருக்கின்றான். இந்த விருப்பு வெறுப்புகளானது ஏதேனும் ஒரு பொருளின் மீதோ அல்லது ஒரு செயலினுடைய பலனின் மீதோ உள்ள ஈடுபாடாகவோ அல்லது வெறுப்பின் வடிவத்திலோ வெளிப்படுகின்றன. ஒரு மனிதன் பொதுவாக தான் விரும்பியதைச் சேகரிப்பதிலும், விரும்பாதவைகளைத் தவிர்ப்பதிலும் முழுமையான அர்ப்பணிப்புடன் இருக்கிறான். வெளிப் பொருட்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன: தனக்குப் பிடித்தவை, தனக்குப் பிடிக்காதவை, மற்றும் தான் அலட்சியமாக இருக்கும் பொருட்கள். பொருட்கள் வெளிப்புறத்தில் இருந்தாலும், விருப்பு வெறுப்புகள் என்பது நம் மனதில் குடிகொண்டுள்ளன. நமது அன்றாடச் செயல்பாடுகள் அனைத்தும் இந்த விருப்பு-வெறுப்பகளை நிறைவேற்றுவதிலேயே முழுமையாகக் கழிகின்றது. இதில் தவறொன்றும் இல்லைதான் எனினும், அவை நிறைவேறாதபோது ஏற்படுகிற தீவிர எதிர்வினையான மனக்கசப்பு, கோபம், விரக்தி, துக்கம் போன்றவையே இங்கு சிக்கலைத் தருகிறது.
அசக்த-புத்தியுடன் இருப்பது என்பது வெறுமனே பற்றின்மையை மட்டும் குறிப்பதல்ல, மாறாக அது நன்கு புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒரு நுட்பமான விஷயமாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட மனப்பான்மையே கர்மயோகம் என்பதால் உண்மையில் அங்கு தனியாக செய்வதற்கென்று எதுவுமில்லை; புரிந்துகொள்வது மட்டுமே அங்கு நிகழுதல் வேண்டும். ஒருவன் அதை எவ்வளவு அதிகமாகப் புரிந்துகொள்கிறானோ அவ்வளவு எளிதாக ஒரு கர்மயோகியின் மனப்பான்மையைப் பெற முடியும். விருப்பு-வெறுப்புகளில் பற்றற்ற புத்தியுடையவனாக இருக்கின்ற கர்மயோகி ஏறக்குறைய மன சமநிலையை அனுபவிக்கிறான் - ஸமத்வம் யோக3 உச்யதே. அதாவது, விருப்பம் ஒன்று நிறைவேறும்போது அவனுக்கு பெருமகிழ்ச்சி ஏற்படுவதில்லை, அல்லது ஏதேனுமொரு விஷயம் நிறைவேறாதபோது மனச்சோர்வோ அல்லது விரக்தியோ ஏற்படுவதில்லை. மேலும் அவன் பற்றிலிருந்து விடுதலையை அடைந்திருப்பதால், விருப்போ அல்லது வெறுப்போ அவனை தர்மத்திற்கு எதிராகச் செயல்பட வைக்கும் அளவுக்கு முக்கியத்துவம் பெறுவதில்லை. தர்மத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயலைத் தேர்வு செய்கிறான். அதாவது செய்ய வேண்டியதை தர்மப்படி செய்கிறான்; செய்யக்கூடாததை இயல்பாகவே அவன் விரும்புவதில்லை.
மேலும் செயலின் விளைவுகளிலும் அவன் அசக்தமாகவே இருக்கிறான். அது எதிர்பார்த்தபடி இருந்தாலும், அதற்கு மேல் இருந்தாலும், குறைவாக இருந்தாலும், முழுமையாக எதிர்மாறாக இருந்தாலும், அதை அவன் பிரசாத-புத்தியுடன் ஏற்றுக்கொள்கிறான். விளைவுகள் அவனை ஆட்டிப்படைப்பதில்லை. இந்த பற்றின்மை என்ற மனப்பான்மையானது, செயலில் மட்டும் அல்ல; அனைத்து உறவுகளிலும், அனைத்து சூழ்நிலைகளிலும் பரவிக் காணப்படுகிறது — ஸர்வத்ர. மகன், மனைவி, குடும்பம் போன்றவற்றிலும் அளவுக்கு மீறிய பற்றின்மை இல்லாத நிலை என சங்கரர் அதற்கு உதாரணம் கொடுக்கிறார்.
=> சிந்தையை அடக்கியவன்:
தன்னையே வென்றவன் ‘ஜிதாத்மா’ ஆவான். தனது மனதை அடக்கியதன் விளைவாக தன்னையே வெற்றி கொண்டவன் என்பது இதன் பொருள். இவனுக்கு மனம் என்பது ஒரு கருவியாக செயல்படுகிறது. விருப்பு வெறுப்புகளைக் கட்டுப்பாட்டில் வைத்து, கர்மயோக வாழ்க்கையை வாழ்ந்து அவன் இந்த ஆளுமையைப் பெற்றுள்ளான். பொதுவாக கடலில் அலைகள் தோன்றுவது போல சிந்தையில் ஓயாது எண்ணங்கள் உதிப்பது இயல்பு. திரைகடல் போன்றது உலகத்தவர் உள்ளம். ஆனால் யோகியின் உள்ளமோ தேங்கித் திரையற்ற கடல் போன்றது.
கர்மயோகியின் வாழ்க்கையை வழிநடத்துவது ராக-த்வேஷங்கள் அல்ல. தர்மத்தை மட்டுமே கொண்டு செயல் செய்யப்படுவதால் அவன் தனது மனதை வென்றுள்ளான். விருப்பு–வெறுப்புகளின் அழுத்தம் இல்லாதபோது மனமானது பிரச்சனையின்றி சமநிலையுடன் இருக்கும். சரியான மனப்பாங்குடன் அவன் வாழ்கிற பிரார்த்தனை மிகுந்த வாழ்க்கை, அவனது எந்தவித உள்ளார்ந்த பிரச்சனைகளையும் சரிசெய்து விடுகிறது. இதனால் எந்த சூழ்நிலையிலும் மனமானது இழுத்துச் செல்லப்படாமல் இருப்பதால், அதனுடைய அடிமையாக அல்லாமல் அதை வென்றவனாக ஜிதாத்மாவாக ஆகிறான்.
=> ஆசையற்றவன்:
தன்னைத்தானே கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்று ஜிதாத்மாவாக இருப்பவன், இயல்பாகவே விதவிதமான பொருட்களின் மீதான ஆசையிலிருந்து விடுபட்டவனாக இருக்கிறான் — விக3த ஸ்ப்ருஹ:. வெளியில் இளைஞர்களிடம் பொதுவாக காணப்படும் ஆசை, அலைச்சல், துடிப்பு, புதுமைத் தேடல் போன்றவை வயது முதிர்ந்த பிறகும் உள்ளுக்குள் தொடரலாம்; ஆனால் கர்மயோகிக்கு அது இருப்பதில்லை.
பொதுவாக ஏதேனுமொரு பொருளைத் துறக்க நேரிடும்பொழுது, அந்தப் பொருளை அடைய வேண்டும் என்ற அழுத்தமும் நீங்கிவிட்டது எனக் கூறவிட முடியாது. சில சமயங்களில், அவற்றை அடைய முடியாததால் அவை கைவிடப்படுகின்றன. தான் விரும்பியதை அடைய முடியாது என்பதை ஏற்றுக்கொண்டவனாக அங்கு அதை ஒருவன் சமரசம் செய்கிறான். ஆனால் இங்கு நாம் விசாரம் செய்துகொண்டிருப்பவனின் மனப்பான்மையான ஆசையிலிருந்து விடுபடுதல் என்பது, அந்த வகையான துறத்தலைக் குறிப்பது அல்ல. தன்னைப்பற்றியும், தனது சொந்த லட்சியங்களின் தன்மையை பற்றியும் ஒரு குறிப்பிட்ட புரிதல் அவனுக்கு இருக்கிறது. ஒன்றை அடைய முடியாத காரணத்தினால் அவன் அதை விடவில்லை; ஆசையற்றவனாய் விட்டதனால் அவனுக்குள் அதை நாடும் அழுத்தம் இருப்பதில்லை. அவன் மனதில் அது குறித்த ஏக்கம், தாபம், துடிப்பு இல்லை. வாழ்க்கையில் நாம் நாடும் பல்வேறு விஷயங்களுக்கும் அதற்கேயுண்டான இயல்பான வரம்புகள் உள்ளன என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளும்போது, அந்த புரிதல் மனதில் ஒரு வைராக்கியத்தை உருவாக்குகிறது. இதனால் பொருட்களின் உண்மையான தன்மை என்னவோ அவைகளை அப்படியே பார்க்கின்ற முதிர்ந்த நோக்கு உண்டாகிறது. இந்த முதிர்ச்சி வந்தவுடன்
ஆசைகளின் துடிப்பானது தானாகவே குறைகிறது. இதனால் அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற உள் அழுத்தமும் மறைகிறது. வெளிப்பொருள்களின் மீதான ஏக்கமற்ற இந்த நிலை அவனை ‘விக3த ஸ்ப்ருஹ’-வாக ஆக்குகிறது.
=> கர்மயோகத்தின் பலன்:
எல்லாவற்றிலும் பற்றற்ற புத்தியுடன் இருப்பது, மனதை வென்றவனாக இருப்பது, ஆசைகளற்றவனாக இருப்பது ஆகிய இந்த குணாதிசயங்கள் அனைத்தும் கர்மயோகத்தின் விளைவுகளாகும். இவற்றை அடையும் ஒருவன் நைஷ்கர்மிய சித்தியை, கர்மத்திலிருந்து விடுதலையை அடைகிறான் — நைஷ்கர்ம்ய ஸித்3தி4ம் அதி4க3ச்ச2தி. கர்மங்களைத் துறப்பதனால் அல்ல, மாறாக சரியான மனப்பான்மையுடன் கர்மங்களைச் செய்வதன் மூலமே அவன் இறுதியில் நைஷ்கர்மிய சித்தியைப் பெறுகிறான் என்பதை இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் கர்மயோகமே அவனுக்கு நைஷ்கர்மிய சித்தியை நேரடியாக அளிப்பதில்லை. உண்மையில் அது கர்மத்திலிருந்து விடுபட்ட நிலையை அடைவதற்கானத் தகுதியை அவனுக்கு அளிக்கிறது. மனதைத் தயாராக்கி, அறிவைப் பெறும் நிலைக்கு அவனை அழைத்துச் செல்கிறது. இனி அவனுக்கு ஆத்ம ஞானத்தைப் பெற எந்த தடையும் இல்லை. ஆசிரியர் சொல்லும் உபதேசம் அவனுக்குள் எத்தடையுமின்றி பிரதிபலிக்கிறது. அவன் தன்னை குரு வெளிப்படுத்தும் அதே ஆத்மாவாகவே கண்டறிகிறான். அத்தகையவன் நைஷ்கர்மிய சித்தியை அடைகிறான்.
=> நைஷ்கர்மிய சித்தி என்றால் என்ன?
‘நைஷ்கர்ம்ய ஸித்3தி4’ எனில் ‘கர்மம் இல்லாத நிலை’, கர்மத்திலிருந்து விடுபட்ட நிலை என்று பொருள். யாரிடமிருந்து அனைத்து கர்மங்களும் நீங்கிவிட்டனவோ, அவனே அந்த நிலையை அடைந்தவன் என்கிறார் சங்கரர். அவனிடமிருந்து எல்லா கர்மங்களும் நீங்கிவிட்டன, அவனுக்கு இனி கர்மம் எதுவும் இல்லை. எப்படி? அது கர்மத்தை வெறுமனே விட்டுவிடுவதால் கிடைப்பதல்ல; ஆத்மா கர்மமற்றது, ஒருபோதும் எந்த செயலையும் செய்யாது என்பதைத் தெளிவாக அறிந்ததால் கிடைக்கும் நிலை. அவன் தன்னை எந்த மாற்றத்திற்கும் உட்படாத, செயலற்ற பரப்ரம்மமாகத் தெளிவாக அறியும்போது, அவன் செய்திருந்த வேதகர்மங்கள், லெளகிக கர்மங்கள், கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால கர்மங்கள் அனைத்தும் அந்த ஞானத்தின் ஒளியில் நீங்கிவிடுகின்றன. ஆத்மா எந்தக் காலத்திலும் எந்தச் செயலையும் செய்வதில்லை. இதை அறிந்தவன் ‘நிஷ்கர்மா’ என்று அழைக்கப்படுகிறான், அவனது அந்த நிலை ‘நைஷ்கர்ம்ய’, அதாவது செயலற்ற நிலை ஆகும். இது ஒருவனை முழுமையாக விடுவிப்பதால் இது ஒரு சாதனை — ஸித்3தி4. இவ்வாறான செயலற்ற நிலையை அடைவதே நைஷ்கர்மிய சித்தி என்றழைக்கப்படுகிறது. இதற்கு சங்கரர் மோக்ஷம் என்கிற இரண்டாவது பொருளையும் கொடுக்கிறார்.
இந்த சுலோகத்தில் நைஷ்கர்மிய சித்தி என்ற சொல், உத்தமமானது அல்லது மேலானது எனும் பொருளைத் தருகிற ‘பரமாம்’ என்ற அடைமொழியுடன் கொடுக்கப்பட்டுள்ளது. ஏன்? சொர்க்கத்தை அடைதல் எனும் சாதனையோ அல்லது நல்ல கர்மவினையின் காரணமாக இகலோகத்தில் பெறப்பட்ட பதவி, பெயர், புகழ் போன்ற சாதனையோ ஒரு ஜீவனை எப்போதும் பிணைப்பு கைதியாகவே வைத்துள்ளது. தற்செயலாக அவ்வப்போது கிடைக்கின்ற இதுபோன்ற சிறு சிறு மகிழ்ச்சியை எதிர்பார்த்துக் கழிப்பதைச் சாதனை வாழ்க்கை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் நைஷ்கர்மிய சித்தி எனும் சாதனையோ ஒருவனின் சொந்த பூரணத்துவத்தின் பொக்கிஷமாக இருப்பது; எனவே யாராலும் அதை பறிக்க முடியாது. ஆத்மாவை மையமாகக் கொண்ட இந்த விடுதலை என்பது எதிர்காலத்தில் அல்ல; இங்கு இப்போதே இருப்பது ஆகும். எனவே இது மேலானது.
=> நைஷ்கர்மியத்தை எப்படி அடைவது?
இப்படிப்பட்ட விடுதலையை ஒருவன் எப்படி அடைவது? ஸந்ந்யாஸேந — சந்யாசத்தினால் என்கிறார் பகவான். இங்கு சந்யாசம் என்பது ஞான-கர்ம-சந்யாசம், அதாவது அறிவினால் அனைத்து கர்மங்களையும் துறத்தலைக் குறிக்கிறது. ஆத்மா எப்போதும் அனைத்து கர்மங்களிலிருந்தும் விடுபட்டது என அறிவதன் மூலமே அவன் அனைத்து கர்மங்களிலிருந்தும் விடுபடுகிறான். ஆகையினால் செயலற்ற-நிலையான நைஷ்கர்ம்யம் என்பதை, எந்தச் செயலையும் செய்யாமல் வெறுமனே மந்தமாக இருப்பது என்று கருதக்கூடாது. அது முற்றிலும் அறிவின் வடிவிலானது; நான் யார் என அறிவதே நைஷ்கர்ம்ய-சித்தி என்று அழைக்கப்படுகிறது. இங்கு சந்யாசத்தின் பொருளைப் புரிந்துகொள்ள, ‘ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்ய ஆஸ்தே ஸுக2ம் … நைவ குர்வந்ந காரயந் — எல்லாக் கர்மங்களையும் அறிவினால் விட்டுவிட்டு ஒன்றும் செய்யாதவனாகவும் செய்விக்காதவனாகவும் சுகமாக வீற்றிருக்கிறான்’, எனும் சுலோகத்தை 5.13-லிருந்து சங்கரர் மேற்கோள்காட்டுகிறார். எனவே அவன் எந்தக் கர்மத்தையும் வெளிப்படையாகத் துறப்பதில்லை; செயல் எதுவும் தன்னால் நிகழவில்லை என்பதை அறிந்ததாலேயே கர்மத்திலிருந்து அவன் விடுபடுகிறான். எனவே இங்கு ‘ஸந்ந்யாஸேந’ என்பதை ‘ஞாநயோகே3ந’ என எடுத்துக்கொள்ளலாம். ஞானயோகம் எனில் சிரவணம், மநநம் மற்றும் நிதித்யாசனத்தை குறிக்கிறது. ஞானயோகத்தின் மூலம் ஆத்மா என்றுமே செயலற்றது, ‘அந்த ஆத்மாவாக நான் இருக்கிறேன்’ என புரிந்துகொள்ளும்போது நைஷ்கர்மிய சித்தி அடையப்படுகிறது. இதுவே ஒருவன் அடையக்கூடிய மேலான இலக்கு ஆகும்.
————————————————————————————————
