||17.27|| ஸத் என்பதன் மேலும் சில பயன்பாடுகள்:
यज्ञे तपसि दाने च स्थिति: सदिति चोच्यते ।
कर्म चैव तदर्थीयं सदित्येवाभिधीयते ।। २७ ।।
யக்ஞே தபஸி தா3நே ச ஸ்தி2தி: ஸதி3தி சோச்யதே ।
கர்ம சைவ தத3ர்தீ2யம் ஸதி3த்யேவாபி4தீ4யதே ।। 27 ।।
यज्ञे யக்ஞே யக்ஞத்திலும் तपसि தபஸி தவத்திலும் दाने च தா3நே ச தானத்திலும்
स्थिति: ஸ்தி2தி: நிலைத்திருப்பது सत् इति उच्यते ஸத் இதி உச்யதே ஸத் என்று சொல்லப்படுகிறது च ச மேலும் तदर्थीयं தத3ர்தீ2யம் அதன் பொருட்டு
कर्म च एव கர்ம ச ஏவ கர்மமும் सत् इति एव ஸத் இதி ஏவ ஸத் என்றே
अभिधीयते அபி4தீ4யதே இயம்பப்படுகிறது.
வேள்வியிலும், தவத்திலும், தானத்திலும் நிலைத்திருப்பது ‘ஸத்’ என்று சொல்லப்படுகிறது. இன்னும் ப்ரம்மத்தின் பொருட்டுச் செய்யும் கர்மமும் ‘ஸத்’ என்றே இயம்பப்படுகிறது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
வேள்வி, தவம், தானம் இவற்றில் உறுதி நிலையும் 'ஸத்' எனப்படுகிறது. பிரம்மத்தின் பொருட்டாக செய்யும் கர்மமும் 'ஸத்' என்றே சொல்லப்படும்.
விளக்கம்:
இங்கு ஸத் என்பதன் மேலும் சில பயன்பாடுகளைக் கூறுகிறார் கிருஷ்ணர்.
=> (4) உறுதி:
‘ஸ்தி2தி:’ என்பது எடுத்துக்கொண்ட முயற்சியில் உறுதியாக இருக்கின்ற நிலையைக் குறிக்கிறது. வேதச் சடங்கு, தவம், தானம் போன்ற செயல்களைச் செய்வதில் இருக்கின்ற அர்ப்பணிப்பு ‘ஸத்’ என்று கருதப்படுகிறது. சிரத்தையுடனும் சரியான மனப்பாங்குடனும் செய்யப்படுகிற இவைகள் அனைத்தும் சரியான முயற்சியைக் குறிக்கிறது. இதற்காக செய்யப்படுகிற கர்மமும் ‘தத3ர்தீ2யம்’, ஸத்கர்மம் ஆகிறது.
=> (5) ஈசனுக்காக செய்கிற செயல்:
‘தத3ர்தீ2யம் கர்ம’ எனில் ஈஷ்வரனுக்காகவென கர்மயோகமாக செய்யப்படுகிற செயலைக் குறிக்கிறது. இறை அர்ப்பணிப்பாக செய்யப்படுகிற எந்தவொரு செயல்பாடும் ஸத்கர்மமாகக் கருதப்படுகிறது. சாஸ்திர, சம்பிரதாய சடங்குகள் மட்டுமல்லாது, தர்மத்திற்கு உட்பட்டு செய்யப்படுகிற எந்தவொரு லெளகிகமான செயலும்கூட ஸத்கர்மமே ஆகும். ஏனெனில் தர்மம் என்பது ஈஷ்வரனிலிருந்து வேறாக இல்லை என்பதால், தர்மத்தின்படி நடக்கிற செயல்பாடு என்பதும் இயல்பாகவே பரமேஷ்வரனுக்கான செயல் என்றே ஆகிறது. எனவே அது ஸத்கர்மம் ஆகும்.
ஒரு கர்மம் சாத்விகமாக இல்லாவிட்டாலும், அல்லது முழுமையடையாவிட்டாலும், சிரத்தையுடன் ‘ஓம் தத் ஸத்’ என்ற இந்த மூன்று சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் அது சாத்விகமானதாக மாறி, முழுமையானதாக ஆகிறது என்கிறார் சங்கரர். சரியான அணுகுமுறை இல்லாததாலும், சில படிநிலைகள் தவிர்க்கப்பட்டதாலும் அல்லது சில தவறு செய்யப்பட்டதாலும் அசாத்விகமானதாக இருந்த கர்மத்தில், ‘ஓம் தத் ஸத்’ என உச்சரிக்கப்படும்போது, இந்த தவறுகள் அனைத்தையும் அது ஈடு செய்துவிடுகிறது. இறுதியாக, எந்த சிரத்தையும் இல்லாமல் ‘ஓம் தத் ஸத்’ என்று சொல்வதும் பயனற்றது என்று அவர் கூறுகிறார். எனவே இங்கு சிரத்தை மிக முக்கியமான காரணி ஆகிறது. அது முழுமையாக இருக்கும்போதே அங்கு சாத்விக கர்மம் உருவாகிறது. இது அர்ஜுனனின் கேள்விக்கு பதிலளிக்கிறது. இவ்விதத்தில் அனைத்து கர்மங்களின் செயல்திறன் என்பது ஒருவனுக்கு எந்த வகையான சிரத்தை உள்ளது என்பதைப் பொறுத்தது. சிரத்தையே அதை செயல்பட வைக்கிறது.
---------------------------------------------------------------------------------------------
||17.28|| சிரத்தையின் பெருமை:
अश्रद्धया हुतं दत्तं तपस्तप्तं कृतं च यत् ।
असदित्युच्यते पार्थ न च तत्प्रेत्य नो इह ।। २८ ।।
அச்1ரத்3த4யா ஹுதம் த3த்தம் தபஸ்தப்தம் க்ருதம் ச யத் ।
அஸதி3த்யுச்யதே பார்த2 ந ச தத்ப்ரேத்ய நோ இஹ ।। 28 ।।
अश्रद्धया அச்1ரத்3த4யா சிரத்தையின்றி हुतं ஹுதம் ஹோமம் செய்ததும்
दत्तं த3த்தம் தானம் செய்யப்பட்டதும் तप्तं तपस् தப்தம் தபஸ் செய்யப்பட்ட தவமும்
कृतं च க்ருதம் ச செய்யப்பட்ட கர்மமும் यत् யத் எதுவோ அது
असत् इति उच्यते அஸத் இதி உச்யதே அஸத் என்று சொல்லப்படுகிறது पार्थ பார்த2 பார்த்தா तत् தத் அது न प्रेत्य च ந ப்ரேத்ய ச (மரணத்திற்கு பின் வருகிற) பரலோகத்துக்கும் உதவாது
न इह ந இஹ இஹலோகத்துக்கும் பயன்படாது.
சிரத்தையின்றிச் செய்யும் யாகமும் தானமும் தவமும் மற்ற கர்மமும் ‘அஸத்’ என்று சொல்லப்படுகிறது. அர்ஜுனா, அது மறுமைக்கும் உதவாது; இம்மைக்கும் உதவாது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அசிரத்தையுடன் செய்யும் வேள்வியும், தானமும், தவமும், கர்மமும் 'அஸத்' எனப்படும். பார்த்தா! அவை மறுமையிலும் பயன்படா; இம்மையிலும் பயன்படா.
விளக்கம்:
சிரத்தையின் பெருமை குறித்து பகவான் இந்த சுலோகத்தில் எடுத்துரைக்கிறார்.
=> செய்யப்படாததை போன்றது:
சிரத்தை இல்லாது செய்யப்படுகிற யக்ஞம், தானம், தவம் உள்ளிட்ட எந்தவொரு கர்மமும் ‘அஸத்’ என்றே சொல்லப்படுகிறது — அஸத் இதி உச்யதே; அதாவது செய்யப்படாததாகவே கருதப்படுகிறது. ஏனெனில் அதனால் எந்த நன்மையும் இல்லை; எந்த பிரயோஜனமும் இல்லை.
தைத்திரீய உபநிஷத் வாக்கியம், ‘ச்1ரத்3த4யா தே3யம் அச்1ரத்3த4யா அதே3யம்’, சிரத்தையுடன் கொடுக்க வேண்டும், சிரத்தையில்லாமல் கொடுக்கக் கூடாது எனக் கூறுகிறது. சாஸ்திரத்தின் மீதும், ஈஷ்வரனின் இருப்பிலும் நம்பிக்கையில்லாது செய்யபடுகிற கர்மங்கள் செய்யப்படாததைப் போலவே ஆகிறது. ‘ஹுதம்’ என்பது பொதுவாக ஹோமம் செய்தலை, நெருப்பில் வழங்கப்படுகிற ஆஹுதியைக் குறிக்கிறது. ஹோமத்தில் ஈடுபடும் ஒருவன் ஆஹுதி செய்யும்போது ஒருகால், ‘இந்த நெய்யை இங்கே வழங்குவதன் மூலம் வீணாக்குகிறேன்; அதைப் பயன்படுத்தக்கூடிய ஏழைகள் இருக்கிறார்கள்’ என்று நினைக்கிறானாகில் அந்த ஆஹுதி பயனற்றதாக ஆகிறது. மதத்தின் மீதுள்ள பற்றினாலும் அல்லது கட்டாயத்தினாலும் மட்டுமே சிலர் யக்ஞ, தான கர்மங்களில் ஈடுபடுகின்றனர். தந்தை அல்லது தாயின் கட்டாயத்திற்காகவோ அல்லது சமுதாயத்தில் தனக்கு நற்பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவோ ஒருவன் அதைச் செய்யலாம். இத்தகையவர்கள் உண்மையில் நம்பிக்கையில்லாத நாஸ்திகர்களாய் இருந்து கொண்டு தங்களை ஆஸ்திகர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள்.
மேலும் சிலர் தவங்களையும்கூட சிரத்தையின்றி, பெயர் மற்றும் புகழுக்காக மட்டுமே செய்கிறார்கள். இறைவனின் புகழைப் பாடுவது அல்லது நமஸ்காரம் செய்வது போன்றவையும் சிரத்தையில்லாமல் செய்யப்படும்போது அவை அனைத்தும் ‘அஸத்’ ஆகின்றன. அதாவது அது எந்த பலனையும் உருவாக்குவதில்லை. எனவே அது செய்யப்பட்டும், செய்யப்படாததற்கு இணையானதாகவே இருக்கிறது.
இதுபோன்ற கர்மங்கள் ஈஷ்வரனை அடைவதற்கான வழிமுறைகளுக்கு முற்றிலும் வெளியே உள்ளதாக சங்கரர் தனது பாஷ்யத்தில் கூறுகிறார். ஏனெனில் சரியாகச் செய்யப்படுகிற கர்மமே அந்த-கரண-சுத்தியைப் பெற உதவுகிறது. தயார்நிலையில் இருக்கின்ற மனதினால் மட்டுமே ஈஷ்வரனுடனான ஐக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது ஈஷ்வரனை அடைதல் என்பது அறிவினால் மட்டுமே சாத்தியம், அந்த அறிவை அடைதல் என்பது மனத்தூய்மையைப் பொறுத்தது, அந்த மனத்தூய்மை என்பது சரியான அணுகுமுறையுடன் கர்மங்களைச் செய்வதன் மூலம் அடையப்படுகிறது. சிரத்தை இல்லாதபோது, அது செய்யப்பட்டாலும், அதனால் எந்தப் பயனும் இல்லை. ச்1ரத்3தா4வாந் லப4தே ஜ்ஞாநம் — சிரத்தையுடையவன் ஞானத்தை பெறுகிறான்(4.39), என்கிறார் பகவான். எனவே எல்லா விஷயத்திலும் சிரத்தை முக்கியமானதாக ஆகிறது.
=> பயனற்றதாகிறது:
இந்த கர்மங்கள் அனைத்தும் நிறைய பொருள், காலம் மற்றும் மனித உழைப்பு போன்ற பல்வேறு முயற்சிகளைக் கொண்டு செய்யப்படுகின்றன. ஆனால் சிரத்தை இல்லாதபோது அவைகள் இங்கும் எந்த நன்மையையும் கொடுப்பதில்லை — ந இஹ. அதிர்ஷ்ட பலனான புண்ணியத்தை கொடுக்காத காரணத்தினால் மரணத்திற்கு பிந்தய பரலோகத்திற்கும் உதவுவதில்லை — ந ப்ரேத்ய. இம்மையிலும் பயனில்லை; மறுமையிலும் உதவுவதில்லை. எனவே பொருளும் காலமும் உழைப்பும் முயற்சியும் வீணடிக்கப்பட்டதாக ஆகிறது. வேறு வார்த்தையில் கூறுவதானால் செய்த செயலானது பயனற்றுப் போகிறது.
அர்ஜுனன் இங்கே என்ன கர்மம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறான்? போர் புரிய வேண்டும். இரண்டாவது அத்தியாயத்தில் கிருஷ்ணர், ‘ஆகையால், போருக்கு தயாராகுக— ததோ யுத்3தா4ய யுஜ்யஸ்வ’ எனக் கூறினார். ஏனெனில் க்ஷத்ரியனான அர்ஜுனனுக்கு தர்மத்திற்காக போர் புரிதல் என்பது தன்னறம் ஆகிறது. சரியான பாவனையுடனும், சரியான அணுகுமுறையுடனும் செய்யப்படும்போது அது அந்த-கரண-சுத்தியைக் கொடுக்கிறது. அதன் மூலம் ஈஷ்வரனுடனான ஐக்கிய அறிவு அவனுக்கு சாத்தியப்படுகிறது.
இதிலிருந்து கீதை என்பது அர்ஜுனனை எழுந்து போராட வைப்பதற்கான ஒரு ஊக்கவுரை மட்டுமல்ல என்பது தெளிவாகிறது. இது ப்ரம்மத்தை குறித்த ஞானத்தை வெளிப்படுத்தும் ஒரு சாஸ்திரம் ஆகும். மேலும் இது கர்ம-யோகத்தையும் கையாளுகிறது, இதில் ஞானத்தை பெறுவதற்குத் தேவையான அனைத்தும் அடங்கும். இது ப்ரம்ம ஞானத்தைப் பெறுவதற்கான சாதனங்கள், அணுகுமுறைகள் மற்றும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதைப் பற்றிப் பேசுகிறது. பதினேழாம் அத்தியாயத்தில் கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான இந்த உரையாடலின் முக்கியமான தலைப்பாக மூன்று வகையான சிரத்தை அமைகிறது.
---------------------------------------------------------------------------------------------
ऒं तत् सत् । इति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
श्रीकृष्णार्जुनसंवादे श्रद्धात्रयविभागयोगोनाम सप्तदशोऽध्याय: ।।
ஓம் தத் ஸத்। இதி ஶ்ரீமத்3ப4க3வத்3கீ3தாஸு உபநிஷத்ஸு ப்3ரஹ்மவித்3யாயாம் யோக3சா1ஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே3 ச்1ரத்3தா4த்ரயவிபா4க3யோகோ3நாம ஸப்தத3சோ1ऽத்4யாய: ।।
ப்ரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஶ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத் கீதை என்னும் உபநிஷத்தின்கண் சிரத்தாத்ரய விபாக யோகம் என்ற பதினேழாம் அத்தியாயம்.
---------------------------------------------------------------------------------------------
சிரத்தாத்ரய விபாக யோகம் - சாரம்:
(1) சிரத்தையை பற்றிய கேள்வி [1]
(2) அர்ஜுனின் கேள்விக்கான பதில் [2 - 6]
(3) மூன்று விதமான ஆகாரம் [8 - 10]
(4) மூன்று விதமான யக்ஞம் [11 - 13]
(5) இரு கோணங்களில் மூவித தவம் [14 - 19]
(6) மூன்று விதமான தானம் [20 - 22]
(7) ஓம் தத் ஸத் - சொற்களின் விளக்கங்கள் [23 - 27]
(8) சிரத்தையின் மஹிமை [28]
---------------------------------------------------------------------------------------------