||18.2|| பகவானின் பதில்:
श्रीभगवानुवाच
काम्यानां कर्मणां न्यासं संन्यासं कवयो विदु: ।
सर्वकर्मफलत्यागं प्राहुस्त्यागं विचक्षणा: ।। २ ।।
ஸ்ரீப4க3வாநுவாச
காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் ஸம்ந்யாஸம் கவயோ விது3: ।
ஸர்வகர்மப2லத்யாக3ம் ப்ராஹுஸ்த்யாக3ம் விசக்ஷணா: ।।2 ।।
श्री भगवान् ஸ்ரீப4க3வான் ஶ்ரீ பகவான் उवाच உவாச சொன்னது
कवय: கவய: ஞானிகள் काम्यानां कर्मणां காம்யாநாம் கர்மணாம் காமிய கர்மங்களின்
न्यासं ந்யாஸம் துறவை संन्यासं ஸம்ந்யாஸம் சந்யாசமென்று विदु: விது3: அறிகிறார்கள் विचक्षणा: விசக்ஷணா: தீர்க்கதரிசிகள் सर्व कर्म फल त्यागं ஸர்வ கர்ம ப2ல த்யாக3ம் அனைத்து கர்மங்களின் பலன்களை துறப்பதை त्यागं த்யாக3ம் தியாகம் प्राहु: ப்ராஹு: என்கிறார்கள்.
ஶ்ரீ பகவான் சொன்னது:
காமிய கர்மங்களைத் துறப்பதை சந்யாசமென அறிகிறார்கள் ஞானிகள். எல்லாக் கர்மங்களின் பலனை விடுவதைத் தியாகமென்கின்றனர் தீர்க்கதரிசிகள்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
விருப்பத்தால் செய்யப்படும் செய்கைகளைத் துறப்பது சந்நியாசமென்று புலவர் தெரிந்துளர். எல்லாவிதச் செயல்களின் பலன்களையுந் துறந்து விடுதல் தியாகமென்று ஞானிகள் கூறுவர்.
விளக்கம்:
=> ஐந்து வகையான கர்மங்கள்:
(1) நித்ய கர்மம் - செய்ய வேண்டிய கடமைகள்.
(2) நைமித்திக கர்மம் - குறிப்பிட்ட காலத்தில் செய்யப்பட வேண்டியவைகள். உதாரணம் பித்ரு கர்ம, ஜாத கர்மம்.
(3) காமிய கர்மம் - போகத்திற்காகச் செய்வது.
(4) நிஷித்த கர்மம் - செய்யக் கூடாதது.
(5) ப்ராயசித்த கர்மம் - செய்த தவறை உணர்ந்து பிராயச்சித்தமாக செய்வது.
=> வேதம் கூறும் கர்மங்கள்:
வேதங்களில் கட்டாயமாகச் செய்யப்பட வேண்டியவைகள் என நித்ய மற்றும் நைமித்திக-கர்மங்களும், மற்றும் விருப்பத்திற்குரியவைகளை அடைவதற்காக காமிய-கர்மங்களும் கூறப்பட்டுள்ளன. வேள்வி கர்மங்கள் அனைத்தும் புண்ணியத்தை உண்டாக்கிய போதிலும், அர்த்த மற்றும் காமத்துக்காகச் செய்யப்படும்போது அந்த நித்ய மற்றும் நைமித்திக கர்மங்களும்கூட காமிய-கர்மமாகவே கருதப்படுகிறது. அக்னிஹோத்ரம் முதலிய எளிய கர்மமானாலும் அல்லது அஸ்வமேத யாகம் போன்ற மிக விரிவான வேள்விகளானாலும் விரும்பிய விஷயங்களை அடைய செய்யப்படும்போது அது காமிய-கர்மமாகின்றது.
நைமித்திக-கர்மங்கள் என்பது ஒரு குறிப்பிட்ட சிறப்பு சந்தர்ப்பங்களில் செய்யப்படுபவைகாக இருக்கின்றன. உதாரணமாக, கிரஹண நாட்களில் செய்யப்பட வேண்டியது, பிறந்த குழந்தைக்காகச் செய்யப்படுகிற ஜாத-கர்மம், அல்லது இறந்தவர்களுக்காகச் செய்யப்படுகிற பித்ரு கர்மங்கள் போன்றவை இதில் அடங்கும். நித்ய-நைமித்திக கர்மங்கள் கட்டாயம் செய்யப்பட வேண்டியவைகள் என சாஸ்திரம் கூறுகிறது.
மாறாக, காமிய கர்மம் என்பது விருப்பத்தை பொறுத்தது என வேதம் சொல்கிறது. ஒருவனுக்கு மகன் வேண்டுமென்ற ஆசை இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அதற்காக வேதம் புத்ரகாமேஷ்டி என்கிற ஒரு சடங்கை பரிந்துரைக்கிறது. மகன் வேண்டுமென்ற விருப்பம் இல்லையெனில் அதை செய்யத் தேவையில்லை, அங்கு வேதத்தின் விதியை மீறியதாக ஆகாது. இதேபோல், சொர்க்கத்தை அடைதல், மழையை வரவழைத்தல், செல்வத்தை பெருக்குதல் உள்ளிட்ட ஒரு குறிப்பிட்ட முடிவை விரும்பி செய்யக்கூடிய பல சடங்குகள் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. அவைகளனைத்தும் காமிய-கர்மத்தின் கீழ் வருகின்றன. சித்த-சுத்திக்காக அல்லாமல், ஏதேனும் பலனை விரும்பி செய்யும் போது நித்ய-நைமித்திக கர்மமும் காமிய-கர்ம்மமாக ஆகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
நிஷித்த-கர்மம் என்பது நாம் செய்யக் கூடாத கர்மத்தை, வேதத்தால் தடை செய்யப்பட்ட கர்மத்தைக் குறிக்கிறது. உதாரணமாக, ‘ஹிம்ஸாம் ந குர்யாத் - ஹிம்சை செய்யாதே’. எந்த உயிரினத்திற்கும் தீங்கு செய்யக் கூடாது. இதுபோன்ற நிஷித்த கர்மங்கள் செய்யப்படும்போது அதன் விளைவாக பாபம் உருவாவதால் இவைகள் தடை செய்யப்பட்ட செயல்களாகின்றன.
இறுதியாக, கடந்த காலத்தில் செய்த தவறான செயல்களுக்கு பிராயச்சித்தமாக செய்யும் செயல்கள், ப்ராயச்1சித்த-கர்ம ஆகும். இது அந்த பழைய செயல்களின் விளைவாக உண்டான கர்ம-பலத்திலிருந்து ஒருவனை விடுவிப்பதாக வேதம் கூறுகிறது.
தனது புருஷார்த்தத்தில் தெளிவை அடைந்த ஒருவன், நிஷித்த மற்றும் பிராயச்சித்த கர்மங்களோடு சேர்த்து இயல்பாகவே காமிய-கர்மங்களையும் கைவிட்டு, நித்ய-நைமித்திக கர்மத்தை மட்டுமே செய்கிறான். இது துறவு எனப்படுகிறது, ந்யாஸ.
=> சந்யாசம்:
பொதுவாக சந்யாசம் என்பது நித்ய-நைமித்திக-கர்மங்களையும் கூட துறப்பதைக் குறிக்கிறது. கடமைகளை ஆதாரமாகக் கொண்ட இந்த சமுதாயத்தில், அதைச் செய்வதை நிறுத்தும்போது அது சோம்பேறித்தனமாகவோ அல்லது அதர்மமாகவோ தெரியலாம். அனைவரும் செயல்பட வேண்டிய சமூகத்தில், விதிக்கப்பட்ட கடமையை ஒருவன் செய்யத் தவறும்போது அந்த அமைப்பானது ஸ்தம்பித்துவிடும் அல்லது குழம்பிவிடும். எனவேதான், சந்யாசம் என்பது ஒரு விதியின் அடிப்படையில் நித்ய-நைமித்திக-கர்மங்களைக் கைவிடுதல் என நாம் கூறுகின்றோம். முதலில் அந்த நபர், தனக்கு என்ன வேண்டும் என்பது பற்றிய தெளிவுடன், புருஷார்த்த-நிச்சயத்துடன் ஒரு குருவிடம் செல்ல வேண்டும். அங்கு காலத்தினால் வரையறுக்கப்பட்டது, அதாவது அநித்யமானது எது என்பதை சரியாக அறிந்து அதன் மீது பற்றை நீக்க வேண்டும், வைராக்3ய. பின்னர் கால-வரையறைக்கு உட்படாத நித்ய-வஸ்துவின் மீது இச்சை உருவாகி, அதைப் பற்றிய அறிவை மட்டுமே விரும்ப வேண்டும். அந்நிலையில் குருவானவர் அவனுக்கு சந்யாசம் தருகிறார். அதுவரையில், கர்மங்களைச் செய்து கொண்டிருக்கும் அவன், சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட சடங்கின் மூலம் அனைத்து கட்டாயக் கடமைகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்கிறான். அதுவே சந்யாசம் ஆகும். கடமைகளை அடித்தளமாகக் கொண்ட இந்த சமூகத்தில், இது ஒரு சாதாரண விஷயம் அல்ல. அனைத்து வகையான பாத்திரங்களிலிருந்தும், அனைத்து கடமைகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளும் இந்த சடங்கை சமூகம் ஏற்றுக்கொள்கிறது; வேதங்களும் அதை ஏற்றுக்கொள்கின்றன.
=> எதற்காக சந்யாசம்?
சந்யாசம் என்பது உண்மையில் நியத கர்மங்களைத் துறத்தல் என்று நாம் கூறினாலும், ஒரு கோணத்தில் அது தரமான நேரத்தை நமக்கு உருவாக்கிக் கொடுப்பதைக் குறிக்கிறது. அதாவது, சந்யாச ஸ்வீகரணம் = கால ஸ்வீகரணம். இப்படிப்பட்ட சந்யாசம் இரு நிலையில் எடுத்துக் கொள்ளப்படும்.
(1) விவிதி3ஷா ஸந்யாஸம்: அறிந்து கொள்ளும் ஆசையினால் எடுக்கப்படுகிற சந்யாசம் இது — வேதி3தும் இச்சாமி விவிதி3ஷா. சாதக நிலையில் இருக்கின்ற இவர்கள், தனக்கு உண்டான வைராக்கியத்தை வளர்க்கும் பொருட்டும், சித்த சுத்திக்காக மனதை பண்படுத்தும் பொருட்டும், நிலையாமையைப் பற்றிய விவேகத்தை அதிகரிக்கும் பொருட்டும், சுருக்கமாக சொல்லப்போனால் ஞானத்தை அடையும் பொருட்டு இவர்கள் சந்யாசத்தை மேற்கொள்கிறார்கள்.
(2) வித்3வத் ஸந்யாஸம்: இல்லறத்திலேயே தகுதியை அடைந்து, ஞானயோகத்தை மேற்கொண்டு ஞானத்தையும் ஒருவன் அடைந்துவிட்டான். ஆனால் பழைய சம்ஸ்காரத்தினால் அவனால் ஞானத்தில் நிற்க முடியவில்லை. இந்நிலையில் ஞானத்தை ஞானநிஷ்டையாக மாற்ற தேவைப்படுகிற காலத்திற்காக எடுத்துக் கொள்கிற சந்யாசம் வித்3வத் ஸந்யாஸம் ஆகும். யாக்ஞவல்கியர் எடுத்துக் கொண்ட சந்யாசம் இவ்வகையைச் சார்ந்தது.
=> சந்யாசத்தை பற்றிய ஞானிகளின் கருத்து:
காமிய கர்மங்களைத் துறப்பதை சந்யாசம் என்று ஞானிகள் கூறுகிறார்கள் — காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் ஸம்ந்யாஸம் கவயோ விது3:. இதில் ‘கவி’ என்பது சாஸ்திரத்தை அறிந்தவனைக் குறிக்கிறது; சாஸ்திரஞனை, விஷயங்களைத் தெளிவாகக் காணும் ஞானியைக் குறிக்கிறது. அவர்களில் சிலர் காமிய கர்ம மற்றும் நித்ய-நைமித்திக-கர்ம ஆகியவற்றை கைவிடுதலை சந்யாசம் என்று புரிந்துகொள்கிறார்கள். உண்மையான சந்யாசம் என்பது முற்றிலும் அறிவு சார்ந்தது, ஸர்வ-கர்ம-சந்யாசம். கர்மத்தை துறத்தலோடு அதற்கு எந்த தொடர்பும் இல்லை. அது அறிவின் துணையுடன் ‘நான் எந்த செயலையும் செய்வதில்லை’ என்ற தெளிவான புரிதலைக் குறிக்கிறது. இருப்பினும், இங்கே நாம் விவாதிக்கும் சந்யாசம் என்பது ஒரு வாழ்க்கை முறையைக் குறிக்கிறது.
=> தியாகம்:
எல்லா கர்மங்களின் பலனையும் விட்டுவிடுதலை தியாகம் என்று அழைக்கின்றனர் தீர்க்கதரிசிகள் — ஸர்வ கர்ம ப2ல த்யாக3ம் ப்ராஹு: த்யாக3ம் விசக்ஷணா:. நிஷித்த கர்மம் என்பது செய்யப்பட கூடாதது என்பதனால் அது இதன்கீழ் வருவதில்லை. ஒரு குறிப்பிட்ட விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகச் செய்யப்படுகிற காமிய-கர்மமும் இதில் வராது என்றபோதிலும், சில சந்தர்பங்களினால் அது செய்யப்பட்ட பின்னரும் அதன் பலனை துறக்கலாம் அல்லது பகவானின் பிரசாதமாக நிபந்தனையற்று அதை ஏற்றுக் கொள்ளுதலும் இதில் அடங்கும். எனில் முக்கியமாக இங்கு நித்ய-நைமித்திக கர்மங்கள் பேசப்படுகின்றன. அர்த்த(பாதுகாப்பு) மற்றும் காம(போகம்)-த்திற்காக அல்லாமல், அந்த-கரண-சுத்திக்காக மட்டுமே இது செய்யப்படுகிறது. எனவே நித்ய, நைமித்திக மற்றும் காமிய என எல்லாக் கர்மங்களின் பயனை விட்டுவிடுவதே தியாகம் என்கின்றனர் சில ஞானிகள்.
சந்யாசத்திற்கும் தியாகத்திற்கும் உள்ள வித்தியாசத்தை குறித்த அர்ஜுனனின் கேள்விக்கு சுருக்கமாக பகவான் இந்த சுலோகத்தில் பதிலளித்துள்ளார். சந்யாசம் என்பது காமிய கர்மங்களை துறத்தலாகும்; தியாகம் என்பது அனைத்து செயல்களின் பலனையும் துறப்பதாகும். இத்தலைப்பு குறித்த ஒரு சிறு சர்ச்சை உள்ளது. அது என்னவென்று பகவானால் அடுத்த சுலோகத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
சத்வகுணமுள்ளவர்களுக்குக் கர்மங்கள் செய்யவேண்டிய அவசியமில்லை. கர்மங்கள் தாமாகவே அவர்களை விட்டு விலகிவிடுகின்றன. வலிய முயன்றாலும் அவர்களால் கர்மஞ்செய்ய முடியாது. கடவுள் அவர்களைக் கர்மஞ்செய்யவிடமாட்டார். கர்ப்பமாயிருக்கும் மருமகப்பெண், வீட்டு வேலைகளிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக விடுவிக்கப்படுகிறாள்; குழந்தை பிறந்த பிறகு அவள் முழுக் கவனத்தையும் குழந்தையைப் பராமரிப்பதிலேயே செலுத்தும்படி விடப்படுகிறாள். அதேபோல, சத்வகுணமுள்ளவர்களது கர்மங்களையும் பகவான் அகற்றிவிடுகின்றார். ஆனால் சத்வகுணம் வாய்க்கப்பெறாத மக்கள், எல்லா உலகக் கடமைகளையும் கவனிக்க வேண்டும். ஒரு பணக்காரனுடைய வேலையாள்போலத் தன்னைப் பாவித்துக்கொண்டு, வீட்டு அலுவல்களையெல்லாம் கவனிக்க வேண்டும். இதுவே கர்மயோகமெனப்படும். இவ்வித பரித்யாக புத்தியோடு சகல கர்மங்களையும் புரிந்துகொண்டு, பகவந் நாமத்தை உச்சரித்து அவனை தியானம் செய்வதிலேயே கர்ம யோகத்தின் சாரமெல்லாம் அடங்கும்.
---------------------------------------------------------------------------------------------