சனி, 1 ஆகஸ்ட், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.49

||18.49|| ஞானயோகத்தின் சாரம் தொடங்குகிறது:

असक्तबुद्धि: सर्वत्र जितात्मा विगतस्पृह: ।

नैष्कर्म्यसिद्धिं परमां संन्यासेनाधिगच्छति ।। ४९ ।। 

அஸக்தபு3த்3தி4: ஸர்வத்ர ஜிதாத்மா விக3தஸ்ப்ருஹ: ।

நைஷ்கர்ம்யஸித்3தி4ம் பரமாம் ஸந்ந்யாஸேநாதி43ச்ச2தி ।। 49 ।।


सर्वत्र  ஸர்வத்ர  எங்கும்      असक्त बुद्धि:  அஸக்த பு3த்3தி4:  பற்றற்ற புத்தியுடையவனாய்      

जितात्मा  ஜிதாத்மா  சிந்தையையடக்கியவனாய்       विगत स्पृह:  விக3த ஸ்ப்ருஹ:  ஆசையற்றவனாய்     संन्यासेन  ஸந்ந்யாஸேந  சந்யாசத்தால்      परमां  பரமாம்  மேலான      नैष्कर्म्य सिद्धिं  நைஷ்கர்ம்ய ஸித்3தி4ம்  நைஷ்கர்ம்ய சித்தியை      अधिगच्छति  அதி43ச்ச2தி  அடைகிறான்.


எங்கும் பற்றற்ற புத்தியுடையவனாய், சிந்தையையடக்கியவனாய், ஆசையற்றவனாயிருப்பவன் சந்யாசத்தால் உத்தமமான நைஷ்கர்ம்ய சித்தியை அடைகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

யாங்கணும் வீழ்விலா மதியுடையோனாய், தன்னை வென்று விருப்பந் தவிர்த்து பின்னர்ச் செயலிலாப் பெரிதுயர்ந்த வெற்றியைத் துறவினால் எய்துவான்.


விளக்கம்:

சுலோகம் நாற்பத்தொன்பது முதல் ஐம்பத்திநான்கு வரை ஞானயோகத்தின் சாரம் பேசப்படுகிறது. 


=> பற்றற்ற புத்தியுடையவன்:

ஸக்த’ எனில் பற்றுடைய, ஒன்றில் அதிக ஈடுபாடு கொண்ட என்பது பொருள். எனவே ‘அஸக்த பு3த்3தி4’ என்பது யாருடைய மனதில் பற்று இல்லையோ அவனை அதாவது கர்மயோகியைக் குறிக்கிறது. அவன் எதில் பற்றற்று இருக்கிறான்? அசக்தமான புத்தியுடையவன் விருப்பு-வெறுப்புகளில் பற்றற்றவனாக இருக்கின்றான். இந்த விருப்பு வெறுப்புகளானது ஏதேனும் ஒரு பொருளின் மீதோ அல்லது ஒரு செயலினுடைய பலனின் மீதோ உள்ள ஈடுபாடாகவோ அல்லது வெறுப்பின் வடிவத்திலோ வெளிப்படுகின்றன. ஒரு மனிதன் பொதுவாக தான் விரும்பியதைச் சேகரிப்பதிலும், விரும்பாதவைகளைத் தவிர்ப்பதிலும் முழுமையான அர்ப்பணிப்புடன் இருக்கிறான். வெளிப் பொருட்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன: தனக்குப் பிடித்தவை, தனக்குப் பிடிக்காதவை, மற்றும் தான் அலட்சியமாக இருக்கும் பொருட்கள். பொருட்கள் வெளிப்புறத்தில் இருந்தாலும், விருப்பு வெறுப்புகள் என்பது நம் மனதில் குடிகொண்டுள்ளன. நமது அன்றாடச் செயல்பாடுகள் அனைத்தும் இந்த விருப்பு-வெறுப்பகளை நிறைவேற்றுவதிலேயே முழுமையாகக் கழிகின்றது. இதில் தவறொன்றும் இல்லைதான் எனினும், அவை நிறைவேறாதபோது ஏற்படுகிற தீவிர எதிர்வினையான மனக்கசப்பு, கோபம், விரக்தி, துக்கம் போன்றவையே இங்கு சிக்கலைத் தருகிறது.

அசக்த-புத்தியுடன் இருப்பது என்பது வெறுமனே பற்றின்மையை மட்டும் குறிப்பதல்ல, மாறாக அது நன்கு புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒரு நுட்பமான விஷயமாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட மனப்பான்மையே கர்மயோகம் என்பதால் உண்மையில் அங்கு தனியாக செய்வதற்கென்று எதுவுமில்லை; புரிந்துகொள்வது மட்டுமே அங்கு நிகழுதல் வேண்டும். ஒருவன் அதை எவ்வளவு அதிகமாகப் புரிந்துகொள்கிறானோ அவ்வளவு எளிதாக ஒரு கர்மயோகியின் மனப்பான்மையைப் பெற முடியும். விருப்பு-வெறுப்புகளில் பற்றற்ற புத்தியுடையவனாக இருக்கின்ற கர்மயோகி ஏறக்குறைய மன சமநிலையை அனுபவிக்கிறான் - ஸமத்வம் யோக3 உச்யதே. அதாவது, விருப்பம் ஒன்று நிறைவேறும்போது அவனுக்கு பெருமகிழ்ச்சி ஏற்படுவதில்லை, அல்லது ஏதேனுமொரு விஷயம் நிறைவேறாதபோது மனச்சோர்வோ அல்லது விரக்தியோ ஏற்படுவதில்லை. மேலும் அவன் பற்றிலிருந்து விடுதலையை அடைந்திருப்பதால், விருப்போ அல்லது வெறுப்போ அவனை தர்மத்திற்கு எதிராகச் செயல்பட வைக்கும் அளவுக்கு முக்கியத்துவம் பெறுவதில்லை. தர்மத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயலைத் தேர்வு செய்கிறான். அதாவது செய்ய வேண்டியதை தர்மப்படி செய்கிறான்; செய்யக்கூடாததை இயல்பாகவே அவன் விரும்புவதில்லை.

மேலும் செயலின் விளைவுகளிலும் அவன் அசக்தமாகவே இருக்கிறான். அது எதிர்பார்த்தபடி இருந்தாலும், அதற்கு மேல் இருந்தாலும், குறைவாக இருந்தாலும், முழுமையாக எதிர்மாறாக இருந்தாலும், அதை அவன் பிரசாத-புத்தியுடன் ஏற்றுக்கொள்கிறான். விளைவுகள் அவனை ஆட்டிப்படைப்பதில்லை. இந்த பற்றின்மை என்ற மனப்பான்மையானது, செயலில் மட்டும் அல்ல; அனைத்து உறவுகளிலும், அனைத்து சூழ்நிலைகளிலும் பரவிக் காணப்படுகிறது — ஸர்வத்ர. மகன், மனைவி, குடும்பம் போன்றவற்றிலும் அளவுக்கு மீறிய பற்றின்மை இல்லாத நிலை என சங்கரர் அதற்கு உதாரணம் கொடுக்கிறார்.


=> சிந்தையை அடக்கியவன்:

தன்னையே வென்றவன் ‘ஜிதாத்மா’ ஆவான். தனது மனதை அடக்கியதன் விளைவாக தன்னையே வெற்றி கொண்டவன் என்பது இதன் பொருள். இவனுக்கு மனம் என்பது ஒரு கருவியாக செயல்படுகிறது. விருப்பு வெறுப்புகளைக் கட்டுப்பாட்டில் வைத்து, கர்மயோக வாழ்க்கையை வாழ்ந்து அவன் இந்த ஆளுமையைப் பெற்றுள்ளான். பொதுவாக கடலில் அலைகள் தோன்றுவது போல சிந்தையில் ஓயாது எண்ணங்கள் உதிப்பது இயல்பு. திரைகடல் போன்றது உலகத்தவர் உள்ளம். ஆனால் யோகியின் உள்ளமோ தேங்கித் திரையற்ற கடல் போன்றது. 

கர்மயோகியின் வாழ்க்கையை வழிநடத்துவது ராக-த்வேஷங்கள் அல்ல. தர்மத்தை மட்டுமே கொண்டு செயல் செய்யப்படுவதால் அவன் தனது மனதை வென்றுள்ளான். விருப்பு–வெறுப்புகளின் அழுத்தம் இல்லாதபோது மனமானது பிரச்சனையின்றி சமநிலையுடன் இருக்கும். சரியான மனப்பாங்குடன் அவன் வாழ்கிற பிரார்த்தனை மிகுந்த வாழ்க்கை, அவனது எந்தவித உள்ளார்ந்த பிரச்சனைகளையும் சரிசெய்து விடுகிறது. இதனால் எந்த சூழ்நிலையிலும் மனமானது இழுத்துச் செல்லப்படாமல் இருப்பதால், அதனுடைய அடிமையாக அல்லாமல் அதை வென்றவனாக ஜிதாத்மாவாக ஆகிறான்.


=> ஆசையற்றவன்:
தன்னைத்தானே கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்று ஜிதாத்மாவாக இருப்பவன், இயல்பாகவே விதவிதமான பொருட்களின் மீதான ஆசையிலிருந்து விடுபட்டவனாக இருக்கிறான் — விக3த ஸ்ப்ருஹ:. வெளியில் இளைஞர்களிடம் பொதுவாக காணப்படும் ஆசை, அலைச்சல், துடிப்பு, புதுமைத் தேடல் போன்றவை வயது முதிர்ந்த பிறகும் உள்ளுக்குள் தொடரலாம்; ஆனால் கர்மயோகிக்கு அது இருப்பதில்லை.

பொதுவாக ஏதேனுமொரு பொருளைத் துறக்க நேரிடும்பொழுது, அந்தப் பொருளை அடைய வேண்டும் என்ற அழுத்தமும் நீங்கிவிட்டது எனக் கூறவிட முடியாது. சில சமயங்களில், அவற்றை அடைய முடியாததால் அவை கைவிடப்படுகின்றன. தான் விரும்பியதை அடைய முடியாது என்பதை ஏற்றுக்கொண்டவனாக அங்கு அதை ஒருவன் சமரசம் செய்கிறான். ஆனால் இங்கு நாம் விசாரம் செய்துகொண்டிருப்பவனின் மனப்பான்மையான ஆசையிலிருந்து விடுபடுதல் என்பது, அந்த வகையான துறத்தலைக் குறிப்பது அல்ல. தன்னைப்பற்றியும், தனது சொந்த லட்சியங்களின் தன்மையை பற்றியும் ஒரு குறிப்பிட்ட புரிதல் அவனுக்கு இருக்கிறது. ஒன்றை அடைய முடியாத காரணத்தினால் அவன் அதை விடவில்லை; ஆசையற்றவனாய் விட்டதனால் அவனுக்குள் அதை நாடும் அழுத்தம் இருப்பதில்லை. அவன் மனதில் அது குறித்த ஏக்கம், தாபம், துடிப்பு இல்லை. வாழ்க்கையில் நாம் நாடும் பல்வேறு விஷயங்களுக்கும் அதற்கேயுண்டான இயல்பான வரம்புகள் உள்ளன என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளும்போது, அந்த புரிதல் மனதில் ஒரு வைராக்கியத்தை உருவாக்குகிறது. இதனால் பொருட்களின் உண்மையான தன்மை என்னவோ அவைகளை அப்படியே பார்க்கின்ற முதிர்ந்த நோக்கு உண்டாகிறது. இந்த முதிர்ச்சி வந்தவுடன்
ஆசைகளின் துடிப்பானது தானாகவே குறைகிறது. இதனால் அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற உள் அழுத்தமும் மறைகிறது. வெளிப்பொருள்களின் மீதான ஏக்கமற்ற இந்த நிலை அவனை ‘விக3த ஸ்ப்ருஹ’-வாக ஆக்குகிறது.  


=> கர்மயோகத்தின் பலன்: 

எல்லாவற்றிலும் பற்றற்ற புத்தியுடன் இருப்பது, மனதை வென்றவனாக இருப்பது, ஆசைகளற்றவனாக இருப்பது ஆகிய இந்த குணாதிசயங்கள் அனைத்தும் கர்மயோகத்தின் விளைவுகளாகும். இவற்றை அடையும் ஒருவன் நைஷ்கர்மிய சித்தியை, கர்மத்திலிருந்து விடுதலையை அடைகிறான் — நைஷ்கர்ம்ய ஸித்3தி4ம் அதி43ச்ச2தி. கர்மங்களைத் துறப்பதனால் அல்ல, மாறாக சரியான மனப்பான்மையுடன் கர்மங்களைச் செய்வதன் மூலமே அவன் இறுதியில் நைஷ்கர்மிய சித்தியைப் பெறுகிறான் என்பதை இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் கர்மயோகமே அவனுக்கு நைஷ்கர்மிய சித்தியை நேரடியாக அளிப்பதில்லை. உண்மையில் அது கர்மத்திலிருந்து விடுபட்ட நிலையை அடைவதற்கானத் தகுதியை அவனுக்கு அளிக்கிறது. மனதைத் தயாராக்கி, அறிவைப் பெறும் நிலைக்கு அவனை அழைத்துச் செல்கிறது. இனி அவனுக்கு ஆத்ம ஞானத்தைப் பெற எந்த தடையும் இல்லை. ஆசிரியர் சொல்லும் உபதேசம் அவனுக்குள் எத்தடையுமின்றி பிரதிபலிக்கிறது. அவன் தன்னை குரு வெளிப்படுத்தும் அதே ஆத்மாவாகவே கண்டறிகிறான். அத்தகையவன் நைஷ்கர்மிய சித்தியை அடைகிறான். 


=> நைஷ்கர்மிய சித்தி என்றால் என்ன? 

நைஷ்கர்ம்ய ஸித்3தி4’ எனில் ‘கர்மம் இல்லாத நிலை’, கர்மத்திலிருந்து விடுபட்ட நிலை என்று பொருள். யாரிடமிருந்து அனைத்து கர்மங்களும் நீங்கிவிட்டனவோ, அவனே அந்த நிலையை அடைந்தவன் என்கிறார் சங்கரர். அவனிடமிருந்து எல்லா கர்மங்களும் நீங்கிவிட்டன, அவனுக்கு இனி கர்மம் எதுவும் இல்லை. எப்படி? அது கர்மத்தை வெறுமனே விட்டுவிடுவதால் கிடைப்பதல்ல; ஆத்மா கர்மமற்றது, ஒருபோதும் எந்த செயலையும் செய்யாது என்பதைத் தெளிவாக அறிந்ததால் கிடைக்கும் நிலை. அவன் தன்னை எந்த மாற்றத்திற்கும் உட்படாத, செயலற்ற பரப்ரம்மமாகத் தெளிவாக அறியும்போது, அவன் செய்திருந்த வேதகர்மங்கள், லெளகிக கர்மங்கள், கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால கர்மங்கள் அனைத்தும் அந்த ஞானத்தின் ஒளியில் நீங்கிவிடுகின்றன. ஆத்மா எந்தக் காலத்திலும் எந்தச் செயலையும் செய்வதில்லை. இதை அறிந்தவன் ‘நிஷ்கர்மா’ என்று அழைக்கப்படுகிறான், அவனது அந்த நிலை ‘நைஷ்கர்ம்ய’, அதாவது செயலற்ற நிலை ஆகும். இது ஒருவனை முழுமையாக விடுவிப்பதால் இது ஒரு சாதனை — ஸித்3தி4. இவ்வாறான செயலற்ற நிலையை அடைவதே நைஷ்கர்மிய சித்தி என்றழைக்கப்படுகிறது. இதற்கு சங்கரர் மோக்ஷம் என்கிற இரண்டாவது பொருளையும் கொடுக்கிறார்.

இந்த சுலோகத்தில் நைஷ்கர்மிய சித்தி என்ற சொல், உத்தமமானது அல்லது மேலானது எனும் பொருளைத் தருகிற ‘பரமாம்’ என்ற அடைமொழியுடன் கொடுக்கப்பட்டுள்ளது. ஏன்? சொர்க்கத்தை அடைதல் எனும் சாதனையோ அல்லது நல்ல கர்மவினையின் காரணமாக இகலோகத்தில் பெறப்பட்ட பதவி, பெயர், புகழ் போன்ற சாதனையோ ஒரு ஜீவனை எப்போதும் பிணைப்பு கைதியாகவே வைத்துள்ளது. தற்செயலாக அவ்வப்போது கிடைக்கின்ற இதுபோன்ற சிறு சிறு மகிழ்ச்சியை எதிர்பார்த்துக் கழிப்பதைச் சாதனை வாழ்க்கை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் நைஷ்கர்மிய சித்தி எனும் சாதனையோ ஒருவனின் சொந்த பூரணத்துவத்தின் பொக்கிஷமாக இருப்பது; எனவே யாராலும் அதை பறிக்க முடியாது. ஆத்மாவை மையமாகக் கொண்ட இந்த விடுதலை என்பது எதிர்காலத்தில் அல்ல; இங்கு இப்போதே இருப்பது ஆகும். எனவே இது மேலானது.


=> நைஷ்கர்மியத்தை எப்படி அடைவது?

இப்படிப்பட்ட விடுதலையை ஒருவன் எப்படி அடைவது? ஸந்ந்யாஸேந — சந்யாசத்தினால் என்கிறார் பகவான். இங்கு சந்யாசம் என்பது ஞான-கர்ம-சந்யாசம், அதாவது அறிவினால் அனைத்து கர்மங்களையும் துறத்தலைக் குறிக்கிறது. ஆத்மா எப்போதும் அனைத்து கர்மங்களிலிருந்தும் விடுபட்டது என அறிவதன் மூலமே அவன் அனைத்து கர்மங்களிலிருந்தும் விடுபடுகிறான். ஆகையினால் செயலற்ற-நிலையான நைஷ்கர்ம்யம் என்பதை, எந்தச் செயலையும் செய்யாமல் வெறுமனே மந்தமாக இருப்பது என்று கருதக்கூடாது. அது முற்றிலும் அறிவின் வடிவிலானது; நான் யார் என அறிவதே நைஷ்கர்ம்ய-சித்தி என்று அழைக்கப்படுகிறது. இங்கு சந்யாசத்தின் பொருளைப் புரிந்துகொள்ள, ‘ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்ய ஆஸ்தே ஸுக2ம்  … நைவ குர்வந்ந காரயந் —  எல்லாக் கர்மங்களையும் அறிவினால் விட்டுவிட்டு ஒன்றும் செய்யாதவனாகவும் செய்விக்காதவனாகவும் சுகமாக வீற்றிருக்கிறான்’, எனும் சுலோகத்தை  5.13-லிருந்து சங்கரர் மேற்கோள்காட்டுகிறார். எனவே அவன் எந்தக் கர்மத்தையும் வெளிப்படையாகத் துறப்பதில்லை; செயல் எதுவும் தன்னால் நிகழவில்லை என்பதை அறிந்ததாலேயே கர்மத்திலிருந்து அவன் விடுபடுகிறான். எனவே இங்கு ‘ஸந்ந்யாஸேந’ என்பதை ‘ஞாநயோகே3’ என எடுத்துக்கொள்ளலாம். ஞானயோகம் எனில் சிரவணம், மநநம் மற்றும் நிதித்யாசனத்தை குறிக்கிறது. ஞானயோகத்தின் மூலம் ஆத்மா என்றுமே செயலற்றது, ‘அந்த ஆத்மாவாக நான் இருக்கிறேன்’ என புரிந்துகொள்ளும்போது நைஷ்கர்மிய சித்தி அடையப்படுகிறது. இதுவே ஒருவன் அடையக்கூடிய மேலான இலக்கு ஆகும்.

————————————————————————————————


சனி, 25 ஜூலை, 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.47 - 18.48

||18.47|| ஸ்வதர்மம் பற்றிய மேலும் சில கருத்துக்கள்:

श्रेयान् स्वधर्मो विगुण: परधर्मात् स्वनुष्ठितात् ।

स्वभावनियतं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम् ।। ४७ ।।

ச்1ரேயாந் ஸ்வத4ர்மோ விகு3ண: பரத4ர்மாத் ஸ்வநுஷ்டி2தாத் ।

ஸ்வபா4வநியதம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பி3ஷம் ।। 47 ।।


विगुण:  விகு3ண:  குறையுடன் கூடிய     स्वधर्म:  ஸ்வத4ர்ம:  ஸ்வதர்மமானது    सु अनुष्ठितात्  ஸு அநுஷ்டி2தாத்  நன்கு அனுஷ்டிக்கப்படுகிற     परधर्मात्  பரத4ர்மாத்  பரதர்மத்தைக் காட்டிலும்     श्रेयान्  ச்1ரேயாந்  சிறந்தது      स्वभाव नियतं कर्म  ஸ்வபா4 நியதம் கர்ம  சுபாவத்திலமைந்த கர்மத்தை      कुर्वन्  குர்வந்  செய்கிறவன்      किल्बिषम्  கில்பி3ஷம்  கேட்டை    न आप्नोति   ந ஆப்நோதி  அடைவதில்லை.  


நிறைவாக அனுஷ்டிக்கும் பரதர்மத்தை விடக் குறையுடன் அனுஷ்டிக்கும் ஸ்வதர்மம் சிறந்தது. சுபாவத்திலமைந்த கர்மத்தைச் செய்பவன் கேடு அடையான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும் தனக்குரிய தர்மத்தை குணமின்றி செய்தலும் நன்று. இயற்கையிலேற்பட்ட தொழிலைச் செய்வதனால் ஒருவன் பாவ மடைய மாட்டான்.


விளக்கம்:

=> எது சிறந்தது?

ஸ்வதர்மத்தை குறித்து மேலும் சில கருத்துக்களை பகவான் இங்கு எடுத்துரைக்கிறார். குறையுடன் செய்யப்படுவதாக இருந்தாலும் சுயகர்மமே சிறந்தது — விகு3ண: ஸ்வத4ர்ம: ச்1ரேயாந், என்கிறார். வேறு வர்ண மற்றும் ஆஷ்ரமத்தின் தர்மத்தை நன்றாக செய்வதை விட, தனது ஆஷ்ரம தர்மத்தை குறையுடன் செய்வது மேலானது என்பதை பகவான் இங்கு கூறுகிறார். உதாரணமாக மாணவப்பருவத்தில்(பிரம்மசரிய) இருக்கின்ற ஒருவன் படிப்பதை விட்டுவிட்டு, இல்லறத்தானின்(கிரஹஸ்த) கடமையான தொழில் செய்து பணம் ஈட்டுவதில் ஈடுபடுதல் ஆகாது. கற்கும் காலத்தில் கற்றலே சிறந்தது. அதுபோல, மருத்துவபடிப்பில் தேர்ச்சி பெற்ற ஒருவன், தனக்கு வாக்கு வல்லமை இருக்கிறது என்று வழக்கறிஞனாக மாற முயலலாகாது. விருப்பத்தாலோ அல்லது வெறுப்பினாலோ தூண்டப்பெற்று ஒருவன் தனது தொழிலை மாற்றலாகாது.


=> மனப்பரிபாகம்:

எப்போதும் எதையும் ஒப்பிடுவதுதான் மனித மனத்தின் இயல்பு. தொழில், வீடு, உணவு, உடை எதுவாக இருந்தாலும், எப்போதும் மற்றவருடையது நமக்குள்ளதைவிடச் சிறந்ததாகத் தோன்றும். இந்த குணத்தின் காரணமாக ஒருவன் எந்தத் தொழிலில் இருந்தாலும், இனியொருவன் செய்கின்ற வேறு தொழில் சிறந்த லாபத்தை தருவதாகவும் அதுவே தன்னுடையதை விட மேலானது என்றும் நினைப்பான். இதனால் அத்தொழிலுக்கு மாற முயல்வான். இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற பழமொழி உண்டு. அங்கு சென்று பார்க்கும் பொழுதுதான் அதன் குறைபாடுகள் என்ன என்பது நமக்கு தெரியவரும். ஆனால் இவ்வாறு தொடர்ந்து மாறும்போது எந்தத் துறையிலும் நிபுணத்துவத்தை பெற முடியாது.

ஆகையால் தனது சுயகர்மம் எப்போதும் சிறந்தது — ஸ்வத4ர்ம: ச்1ரேயாந். இது மிகவும் முக்கியமானது ஏனெனில் அர்ஜுனன் இப்போது தனது ஸ்வதர்மத்தை மாற்ற முயல்கிறான். அறம் காத்தலே அவனது தன்னறம். அதன்பொருட்டு தனது உறவினர்களையும் ஆசிரியர்களையும் எதிர்த்து நிற்பது சிரமமாகவும் அசெளகரியமாகவும் இருப்பதால், ‘காட்டில் தவம் செய்வது (பை4க்ஷயம் அபி ஸ்ரேய:) எனக்கு மேல்’ என்று கிருஷ்ணருடன் வாதிடுகிறான். அதற்கு கிருஷ்ணர் ஒரு கடுமையான எச்சரிக்கையை வழங்குகிறார். ஒவ்வொரு தொழிலும், ஒவ்வொரு இடத்திலும் நன்மை, தீமை இரண்டும் இருக்கும். அதிலிருந்து ஓடி விடுவது அதற்கு தீர்வாகாது. குறையுடன் கூடியதாக இருந்தாலும் தன்னறத்தை செய்வதே சிறந்தது — விகு3ண:

தனது கர்மத்தில் ஒருவன் முழுமையான திறமையுடன் இல்லாவிட்டாலும் கவலை கொள்ளத் தேவையில்லை. காலப்போக்கில் முயற்சியால் அத்தொழிலுக்கானத் திறனும் நுண்ணறிவும் வளர்ந்து கொண்டே இருக்கும். உண்மையில் எந்த துறையிலும் பரிபூரணமானது என்ற ஒன்று இல்லை; முடிவில்லாத மேம்பாட்டுக்கான வாய்ப்பு என்பது எப்போதும் எல்லாத் தொழிலிலும் சாத்தியம். எனவே செய்கிற செயலை முழு ஈடுபாட்டுடன் அனுபவித்து செய்தல் சிறந்தது. எதை விட மேலானது? பிறருடைய கடமையைச் செய்வதை விட மேலானது — பரத4ர்மாத் ச்1ரேயாந்

ஒரு குறிப்பிட்ட பணி ஒருவனின் மனநிலைக்கு ஏற்ப மற்றொன்றை விட பிடித்ததாக இருக்கலாம். அது இயல்பானது தான். ஆனால் இது நல்லது, இது சரியானதல்ல என்ற மதிப்பீட்டின் அடிப்படையில் மட்டுமே பணியைத் தேர்வு செய்வது என்றும் உதவாது. விருப்பத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, நமக்கு பிடித்ததைத் தேர்வு செய்ய முயலும்போது, ஒருகால் நாம் விரும்பியது கிடைக்காதுபோனால் என்ன செய்யமுடியும்? நமக்கு அமைந்த பணியை விரும்பக் கற்றுக்கொள்வது என்பது, எப்போதும் நமக்கு பிடித்த வேலையைத் தேடிக்கொண்டிருப்பதைக் காட்டிலும் சிறந்தது. ஏனெனில் நமக்கு பிடித்த தொழில் ஒன்றைக் கண்டுபிடித்தாலும், அது விரைவில் நமக்கு சலிப்பை ஏற்படுத்திவிடும் வாய்ப்பும் உள்ளது; பின்னர் வேறு ஒன்றைத் தேடத் தொடங்குவோம். இது இப்படியே தொடர்ந்துகொண்டே இருக்கும். எனவே மனப்பரிபாகத்தை பொருத்தவரை, மற்றொருவரின் கடமையைச் சிறப்பாகச் செய்வதைக் காட்டிலும் குறையுடன் செய்யக்கூடியதாக இருந்தாலும் தனது சொந்தக் கடமையை செய்வதே சிறந்தது — ச்1ரேயாந்.


=> கேடில்லை:

எனவே சுபாவத்திலமைந்த கர்மத்தை செய் — ஸ்வபா4வ நியதம் கர்ம. ஒருவனது குடும்பத் தொழில், அல்லது சொந்த இயல்பு, விருப்பம், மனப்பாங்கு ஆகியவற்றுக்கு ஏற்ற தொழிலை ஆரம்பத்திலேயே தேர்ந்தெடுத்து, பின் அதில் முழுமையாக, மன மகிழ்ச்சியுடன் ஈடுபடுதல் வேண்டும். இவ்விதம் செயல்படும்போது கேடு உண்டாகாது — குர்வந் ந ஆப்நோதி கில்பி3ஷம், என்கிறார் பகவான். ஒருவரின் இயல்புக்கும் மனப்பாங்குக்கும் ஏற்ப விதிக்கப்பட்ட கடமையைச் செய்தால், எந்தவிதமான பாபமும் சேராது. ஏனெனில், தன்னுடைய குணங்களின் அமைப்புக்கு ஏற்ப செயல்படும்போது மனத்திற்குள் எந்த முரண்பாடும் உருவாகாது. இது ஒரு உளவியல் உண்மை. தன் இயல்புக்கு எதிராகச் செயல்படும்போது, அது தன்னுடைய உண்மையான தன்மைக்கு ஒவ்வாத செயல் என்பதால், உள்ளார்ந்த முரண்பாடுகள் உருவாகின்றன; அவை ஒருவனின் மன பரிபாகத்திற்கு எவ்வகையிலும் துணைபுரிவதில்லை. எனவே தனது தன்னறத்தைச் சரியாக செய்யும் ஒருவன் கேட்டை அடைவதில்லை. 

அர்ஜுனன் போர்வீரன்; போர்களத்தில் போரிடுதல் அவனது அறம். அதில் இனியொரு உயிரை கொல்ல நேரிடலாம். அர்ஜுனனின் அறத்தைப் போல, சில சமயங்களில் சிலரது தன்னறமானது ஹிம்சையை உள்ளடக்கியதாக இருக்கும். பொதுவாக ஹிம்சை ஆரோக்கியமற்றது, பாபத்தை தரக்கூடியது என்று கருதப்பட்டாலும், சில பணிகளில் அது அத்தொழிலின் ஒரு பகுதியாக ஆகிவிடுகிறது. உதாரணமாக, ராணுவம் அல்லது காவல்துறை போன்ற பணிகளை எடுத்துக்கொள்ளலாம். சட்ட ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறையினர் சில நேரங்களில் லத்தியை பயன்படுத்த வேண்டியிருக்கும். நாட்டை பாதுகாக்க ராணுவ வீரர்கள் எதிரிகளை அழிக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற வேலைகளில் ஹிம்சையை தவிர்க்க முடியாது. ஆனால் அந்த ஹிம்சை தனிப்பட்ட காரணத்திற்காக அல்ல; அது தர்மத்தை நிலைநிறுத்துவதற்காகச் செய்யப்படும் கடமையின் ஒரு பகுதி ஆகும் — 4ர்ம ரக்ஷணம். இப்படிப்பட்ட கடமையால் உண்டாக்கப்படும் ஹிம்சை பாபத்தை உருவாக்காது. தன்னறத்திலமைந்த கர்மத்தைச் செய்பவன் கேட்டை அடைவதில்லை — கில்பி3ஷம் ந ஆப்நோதி.

தனக்கு வாய்ந்த கர்மத்தையே விடாது செய்வதால் ஸ்திர புத்தி ஏற்படுகிறது. ஸ்திரமான புத்தியில்லாதவன் யோகியாக முடியாது. அப்படியெனில் துன்பம் நிறைந்த போர்க்களத்துக்கென்று தன்னை தயார்படுத்திக் கொண்டவன், அதை வேண்டாமென்று விலக்கிவிட்டுத் தூய்மை திகழ்கிற தவச் செயலில் ஈடுபடலாகாதா என்ற சந்தேகம் எழலாம். அதற்கான விடை அடுத்த சுலோகத்தில் வருகிறது. 

————————————————————————————————

||18.48|| தன்னறத்தை பற்றிய கருத்தை மேலும் தொடர்கிறார்:

सहजं कर्म कौन्तेय सदोषमपि न त्यजेत् ।

सर्वारम्भा हि दोषेण धूमेनाग्निरिवावृता: ।। ४८ ।।

ஸஹஜம் கர்ம கெளந்தேய ஸதோ3ஷமபி ந த்யஜேத் ।

ஸர்வாரம்பா4 ஹி தோ3ஷேண தூ4மேநாக்3நிரிவாவ்ருதா: ।। 48 ।।


कौन्तेय  கெளந்தேய  குந்தியின் மைந்தா    सदोषम् अपि  ஸதோ3ஷம் அபி  தோஷத்துடன் கூடியது எனினும்     सहजं कर्म   ஸஹஜம் கர்ம  சுபாவமாக தோன்றிய கர்மத்தை     न त्यजेत्  ந த்யஜேத்  ஒருவன் துறக்கலாகாது     हि  ஹி  ஏனென்றால்     अग्नि: धूमेन इव  அக்3நி: தூ4மேந இவ  நெருப்பு புகையால் சூழ்ந்திருப்பது போன்று     सर्व आरम्भा:  ஸர்வ ஆரம்பா4:  எல்லாக் கர்மங்களும்

दोषेण  தோ3ஷேண  தோஷத்தால்     आवृता:  ஆவ்ருதா:  சூழப்பட்டுள்ளன.     


 குந்தியின் மைந்தா, தோஷத்துடன் கூடியதெனினும் சுபாவமாக தோன்றிய கர்மத்தை விட்டுவிடலாகாது. ஏனென்றால் தீயைப் புகை சூழ்வது போன்று எல்லாக் கர்மங்களும் தோஷத்தால் சூழப்பட்டுள்ளது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

குந்தி மகனே! இயல்பான தொழில் குறையுடையதாயினும் அதைக் கைவிடலாகாது. தீயைப் புகை சூழ்ந்திருப்பது போல் எல்லாத் தொழில்களையும் குறைகள் சூழ்ந்தே நிற்கின்றன.


விளக்கம்:

முந்தைய சுலோகத்தில் சொல்லப்பட்ட கருத்தை மேலும் தொடர்கிறார். விருப்பு வெறுப்பில்லாமல் நடுநிலையில் நின்று ஆராய்பவனுக்கு இந்த பேருண்மை விளங்கும். அதாவது குறைபாடு இல்லாத கர்மம் என்பது இந்த பிரபஞ்சத்தில் எங்குமில்லை. சுவாசிக்கின்றோம், அதனால் காற்றிலுள்ள நுண்ணுயிர்கள் மடிகின்றன. உணவு உண்கிறோம், மற்றொருவருக்கு அவ்வுணவு இல்லாமல் போகின்றது. புலன்களை ஒடுக்கித் தவம் புரிகிறோம், பிறர் உழைப்பால் வளர்ந்த நம் உடல் பிறருக்கு உழையாது போகிறது. ஆக, தீங்கு இல்லாத கர்மம் இயற்கையில் இல்லை. தேகம் தாங்கியுள்ள ஒவ்வொருவனும் ஏதேனும் ஒரு கர்மம் செய்தே ஆகவேண்டும். ஆகையால் தன் இயல்புக்கு ஒத்த கர்மம் எதுவோ அதைச் செய்வது முறை. 


=> தன்னறம்: 

ஸஹஜம் கர்ம’ என்பது சுபாவமாகத் தோன்றி நம்மிடமுள்ள கர்மத்தை, அதாவது ஒருவனது தன்னறத்தைக் குறிக்கிறது. பிறக்கும்போதே அவனுடன் வந்த கர்மம் அது. சுபாவத்தையோ அல்லது குடும்பத்தின் மரபு வழி வந்ததையோ அடிப்படையாகக் கொண்டு ஒருவன் தனது கர்மத்தை தேர்ந்தெடுத்து இருக்கலாம் — எதுவாக இருந்தாலும், கர்மம் என்பது அவனுடன் பிறந்ததே. ஏனெனில் ஒருவனது சுபாவம் அவன் பிறக்கும்போதே தோன்றியது என்பதால், அதன் அடிப்படையில் அமைகின்ற கர்மமும் பிறக்கும்போதே உண்டானது ஆகும். முன்பு நாம் பார்த்த ‘ஸ்வபா4வஜம்’ என்பதும் இதே பொருளில் கூறப்பட்டதுதான். இத்தகைய கர்மம் குறைபாடுடன் கூடியதாக இருந்தாலும் அதை கைவிடக்கூடாது — ஸதோ3ஷம் அபி ந த்யஜேத், என்கிறார் கிருஷ்ணர். 

முக்குணங்களுடன் கூடியதாக இருப்பதால் எந்தவொரு கர்மமும் இயல்பாகவே குறைபாடுடையதுதான் — ஸதோ3ஷம். ஆகவே அது எப்போதும் ஏதோ ஒன்றாக ஆக முயலுகிற இந்த சம்சார வாழ்க்கையைத் தொடரச் செய்கிறது. மேலும், எந்த கர்மத்தினாலும் மோக்ஷத்தைப் பெற முடியாது என்பதால் அனைத்து கர்மங்களும் குறைபாடுடையவைகளே.


=> கர்மத்திலுள்ள குறைபாடு என்ன?

புண்ணியமோ அல்லது பாபமோ எந்தவொரு கர்மமும் கர்மபலனை உருவாக்குகிறது. இது நமது அடிப்படை பிரச்சனையான சம்சார வாழ்க்கைக்கு தீர்வாகாது. ஈட்டப்படுவது இனிமையான சூழ்நிலையைத் தருகிற புண்ணியமாகவே இருந்தாலும் அது அனுபவித்து முடிக்கப்பட வேண்டியது; அவை மோக்ஷத்துக்கு ஒருவனை கொண்டு செல்லாது. புண்ணியத்தை ஒரு தங்கத்தாலான கைச்சிறை எனலாம்; அதுவும் நம்மை பிணைக்கவே செய்கிறது. கர்மம் பிணைக்கிறது என்பதற்காக அதை துறப்பதால் ஒருவன் கர்மத்திலிருந்து விடுபட முடியுமா எனில் முடியாது. கர்மத்தை விடுதல் நைஷ்கர்ம்யம் ஆகாது, அறியாமையை விடும்போதே ஒருவன் விடுதலையை அடைகிறான். தன்னைப் பற்றிய அறியாமை என்பது தன்னறிவினால் நீங்குகிறது. தன்னறிவை அடைவதற்கு மனத்தூய்மை அடிப்படைத் தகுதியாக ஆகிறது. சரியான மனப்பாங்குடன் தன்னறத்தை செய்யும்போது ஒருவன் வெற்றியை, மனத்தூய்மையை அடைகிறான் — ஸ்வகர்மணா அப்4யர்ச்ய ஸித்3தி4ம் விந்த3தி, என சுலோகம் நாற்பத்தியாறில் பகவான் கூறினார். அதாவது ஸ்வதர்மத்தை ஈஷ்வர ஆராதனையாகச் செய்யும்போது, விருப்பு-வெறுப்புகளின் பிடியிலிருந்து ஒருவன் விடுபடுகிறான். எனவே சித்த-சுத்திக்கு கர்மத்தை தவிர வேறு மார்க்கம் இல்லை. அறிவினால் மட்டுமே மனத்தூய்மை ஏற்படாது. வைராக்கியம், மன அமைதியுடன் இருத்தல், நற்பண்புகளுடன் இருத்தல் போன்றவை மனத்தூய்மைக்கான அளவுகோலாக இருக்கின்றன. எனவேதான் பகவான் இயல்பாகவே குறைபாடுடையதாக இருந்தாலும் உனது தன்னறத்தை கைவிடாதே என்கிறார். 

செய்யக்கூடாதவற்றை நிச்சயமாக கைவிட வேண்டும்.
ஆனால் செய்யப்பட வேண்டிய கடமைகளை ஒருவன் எதன்பொருட்டும் கைவிடக் கூடாது. அது விடப்படும்போது அதற்கு பதிலாக அவன் வேறு ஏதேனுமொன்றை செய்வான்; அப்போது அது விடப்பட்ட கர்மத்திற்கு சமமான அல்லது அதையும் விட அதிக குறைபாடுடையதாக இருக்கலாம். மேலும் ஞானி அல்லது அக்ஞானி யாராக இருப்பினும் கர்மத்தை முழுவதுமாகக் கைவிட முடியாது, அது சாத்தியமில்லை. அக்ஞானியால் எந்த செயலையும் செய்யாமல் இருக்க முடியாது. கடமைக்காகச் செய்வது அல்லது இன்பத்திற்காகச் செய்வது,  குறையுடையது அல்லது இன்னும் அதிக குறையுடையது எனும் விதமாக அவன் ஏதேனுமொரு செயலில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருப்பான். 

ஞானியும்கூட உடல் ரீதியாக கர்மத்தை கைவிடுவதில்லை. ‘நான் செய்கிறேன்’ எனும் கர்த்ருத்துவ புத்தியையே அவன் அறிவின் மூலம் கைவிடுகிறான். ஒரு ஞானி சந்யாசியாக ஆனாலும் அவன் பிக்ஷை எடுக்கவேண்டும். அதுவும்கூட ஒரு கர்மமே ஆகும். எனவே யாராலும் உடல் ரீதியாக அனைத்து கர்மத்தையும் முழுவதும் கைவிட முடியாது. ஞானம் என்பது கர்மத்தை விடுவதனால் கிடைப்பதல்ல, அது பிரமாணத்தினால்(அறிவை தருகிற கருவியினால்) மட்டுமே கிடைக்கிறது. எனவே சுபாவத்தை பொருத்து உனது மனப்பக்குவத்திற்கு தகுந்தாற்போல ஒரு சூழ்நிலையை உருவாக்கியதன் விளைவாக அமையப்பெற்ற உனது கடமைகளை, அது தோஷத்துடன் கூடியதாக இருந்தாலும் நீ துறக்கக் கூடாது — ந த்யஜேத்.  


=> ஏன் தன்னறத்தை கைவிடக்கூடாது?

ஏனெனில் நெருப்பானது புகையினால் மூடப்படுவது போல, எல்லா கர்மங்களும் தோஷத்தினால் மூடப்பட்டுள்ளது — அக்3நி: தூ4மேந இவ ஸர்வ ஆரம்பா4: தோ3ஷேண ஆவ்ருதா:. எந்தவொரு தொடக்கமும் ஒரு செயலாகக் கருதப்படுவதால், ‘தொடக்கம்’  என்கிற அர்த்தத்தை தருகிற ‘ஆரம்ப4’ எனும் சொல் கர்மத்திற்கான ஒரு பெயர்ச்சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. எப்படி நெருப்புள்ள இடத்தில் புகையானது இயல்பாக இணைந்திருக்கிறதோ, அதுபோல எந்தவொரு செயலுடனும் குறைபாடு இயல்பாகவே இணைந்துள்ளது. புகை என்பது இங்கு ஒரு பொருத்தமான உதாரணம், ஏனெனில் அதை ஊதி அகற்ற முடியும். 

யாகசாலையில் ஆகுதிகளை ஏற்பதற்கான உகந்த நெருப்பு என்பது புகையில்லாமல் தெளிவாக எரியும் ஜ்வாலையே ஆகும். ஆனால் பால் போன்ற சில அர்ப்பணங்கள் அக்னியை ஈரமாக்கி புகையை எழச் செய்கின்றன. அதனால் நெருப்பு புகையத் தொடங்கி கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. ஆனால் அங்கு செய்ய வேண்டியதெல்லாம், அந்தப் புகையை விசிறி அகற்றுவதுதான்; அப்போது உடனே நெருப்பு மீண்டும் தோன்றும். அதேபோல கர்மயோகத்தின் மூலம், கண்ணீரை வரவழைக்கும் கர்மத்தில் உள்ள குறையை ஒருவனால் நீக்கிக் கொள்ளமுடியும். இதனால் கர்மத்தின் எந்தப் பலனும் அவனை தொந்தரவு செய்வதில்லை. ஏனெனில் அவனிடம் பலனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் சரியான மனப்பான்மை, அதாவது பிரசாத-புத்தி உள்ளது. மேலும் ஒரு செயலைத் தேர்ந்தெடுப்பதில் கர்மயோகி தர்மத்தின்படி நடப்பதால் தேவையற்ற முரண்பாடுகளையும் அவன் தவிர்க்கிறான். சமைப்பவனோ, பூஜிப்பவனோ அல்லது சுத்தம் செய்பவனோ யாராக இருந்தாலும் தார்மீக ஒழுங்கான தர்மத்தை பின்பற்றுவது என்பது அனைவருக்கும் ஒன்றுதான். இயல்புக்கும் சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல தன்னறம் மாறுபடலாம், ஆனால் தர்மம் மாறுவதில்லை. எனவே செய்யப்பட வேண்டிய செயலை ஒருபோதும் கைவிடக்கூடாது — ந த்யஜேத்.

கர்மத்தில் இருக்கின்ற உள்ளார்ந்த குறைபாட்டை கர்மயோகத்தின் மூலம் ஓரளவு நீக்கலாம். பின்னர், உண்மையில் நான் செய்பவன் அல்ல; எனக்கு கர்மம் என்பதே இல்லை என்பதை அறிவதன் மூலம் கர்மத்தை முழுமையாகக் கைவிடலாம். இதுவே நைஷ்கர்ம்யம் எனப்படுகிறது. எரிபொருளை அகற்றி நெருப்பை அணைப்பதே புகையை முழுவதுமாக நீக்குவதற்கான ஒரே வழி ஆகும். ‘நான் செய்பவன் அல்ல - அகர்த்தா’ என்ற அறிவின் மூலம் இங்கு நெருப்பிற்கு அளிக்கப்பட்ட எரிபொருள் முற்றிலும் அகற்றப்படுகிறது. இங்குள்ள எரிபொருள் என்பது அறியாமை ஆகும்; அந்த அறியாமை ஞானம் என்ற நெருப்பில் எரிக்கப்படும்போது, ​​அதன் பக்க விளைவுகளான காமமும் கர்மமும் கூட முற்றிலும் எரிக்கப்படுகின்றன. ஞானம் என்ற நெருப்பு கர்த்தாவை, அதாவது செய்பவன் எனும் பான்மையை எரிப்பதால் அனைத்து கர்மங்களும் இயல்பாகவே எரிந்து விடுகின்றன.

தனக்கு அமைந்த கர்மத்தை எப்படிச் செய்வது என்பது இனி விளக்கப்படுகிறது.

————————————————————————————————