செவ்வாய், 23 ஜூன், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.38 - 18.39

||18.38|| ராஜஸமான சுகம்

विषयेन्द्रियसंयोगाद् यत्तदग्रेऽमृतोपमम् ।

परिणामे विषमिव तत्सुखं राजसं स्मृतम् ।। ३८ ।।

விஷயேந்த்3ரியஸம்யோகா3த்3 யத்தத3க்3ரேऽம்ருதோபமம் ।

பரிணாமே விஷமிவ தத்ஸுக2ம் ராஜஸம் ஸ்ம்ருதம் ।। 38 ।।


विषय इन्द्रिय संयोगात्  விஷய இந்த்3ரிய ஸம்யோகா3த்  புலனுறுப்பு அதன் பொருளுடன் தொடர்பு கொள்வதால்    यत् तत्  யத் தத்  எந்த ஒன்று      अग्रे  அக்3ரே  முதலில்      अमृत उपमम्  அம்ருத உபமம்  அமிர்தத்திற்கு ஒப்பானது     परिणामे  பரிணாமே  முடிவில்     विषम् इव விஷம் இவ  விஷம் போன்றது       तत् सुखं  தத் ஸுக2ம்  அந்த சுகமாமது      राजसं स्मृतम्  ராஜஸம் ஸ்ம்ருதம்  ராஜஸமெனச் சொல்லப்படுகிறது.


புலனுறுப்பு அதன் பொருளுடன் தொடர்பு கொள்வதால் முதலில் அமிர்தம் போன்றிருந்து முடிவில் விஷம் போன்றாகும் சுகம் ராஜஸமென்று சொல்லப்படுகிறது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால் தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து விளைவில் நஞ்சு போன்றதாய் முடியும் இன்பம் ராஜச மெனப்படும்.


விளக்கம்:

எப்படிப்பட்ட சுகமானது ராஜஸம் என இந்த சுலோகத்தில் விளக்கப்படுகிறது.


=> புலனின்பம்:

புலனுறுப்புக்கள் அவற்றினுடைய விஷயங்களுடன் தொடர்பு கொள்வதால் கிடைக்கின்ற இன்பம் ராஜஸமானது — விஷய இந்த்3ரிய ஸம்யோகா3த். இந்திரியங்கள் அவற்றின் விஷயங்களாக உள்ள சப்தம், ஸ்பர்ஷம், ரூபம், ரசம் மற்றும் கந்தம் ஆகியவற்றுடன் சேரும்போது இன்பம் உண்டாகிறது. உதாரணமாக அருமையான சுவை, இனிமையான இசை, அழகான உருவம், இனிய தொடுதல் மற்றும் நல்ல வாசனை ஆகியவை கொடுக்கின்ற ஆனந்தம் இங்கு பேசப்படுகிறது. தொடர்பின் காரணமாக உண்டாகிற இந்த சுகம் ‘ஸம்ஸர்ஜ போ4கா3:’ என அழைக்கப்படுகிறது. 

அத்தகைய புலன்-பொருள்கள் விரும்பப்படும்போது, ஆரம்பத்தில் அது அமிர்தம் போன்றது — அக்3ரே அம்ருத உபமம், அதாவது அது எளிதானது. மேலும், இந்திரியங்கள் அவற்றின் விருப்பப்பட்ட பொருள்களுடன் தொடர்பு கொள்வதற்கு அந்தக்கரணத்தை தயார்ப்படுத்த வேண்டிய தேவையில்லை. அது முற்றிலும் ஒரு புலனுணர்வு சுகம், ஒரு விலங்குகூட அதை அவ்விதத்தில் அனுபவிக்க முடியும். அது எளிமையானதாகவும் விரும்பத்தக்கதாகவும் இருப்பதால் அது அமிர்தத்தை போன்றது எனக் கூறப்படுகிறது. 


=> விஷமாதல்:

சில காலத்திற்கு பிறகு மாற்றம் நிகழ்கிறது — பரிணாமே, அது விஷம் போன்றதாக ஆகிறது — விஷம் இவ. அதாவது, இந்த வகையான இன்பம் உடலின் அனுபவிக்கும் திறனையே அழிக்கிறது. இந்த இன்பங்கள் ஒருவனின் வலிமை, அழகு, அறிவு, ஞானம், செல்வம் மற்றும் உற்சாகம் ஆகியவற்றை அழிக்கின்றன என்று சங்கரர் கூறுகிறார் — 3ல-வீர்ய-ரூப-ப்ரக்ஞ- மேதா4-த3ந-உத்ஸாஹ-ஹாநி-ஹேதுவத்.  புலனின்பங்களில் துய்க்கும் ஒருவன் தனது உடல் ஆரோக்கியம் மற்றும் புலனுறுப்புகளின் சக்திகள்(வீர்ய) ஆகிய இரண்டிலும் தனது வலிமையை(3) இழக்கிறான். வயதாகும்போது இவைகளில் இயற்கையான இழப்பு ஏற்படுகிறது என்றாலும் உடலை ஒருவன் துஷ்பிரயோகம் செய்யும்போது அது விரைவுபடுத்தப்படுகிறது. 

அழகிய ரூபத்துடன்(ரூப) இருக்கும் ஒருவன் ஒரு குறிப்பிட்ட இன்பத்தை அனுபவிக்கிறான். மற்றவர்களின் புகழ்மொழிகளிலிருந்து உண்டாகும் சுயமதிப்பிலிருந்து அது உருவாகிறது. ஆனால் அதை தக்கவைத்துக்கொள்ள போராடுவதிலும், இறுதியில் அது முடியாமல் போவதாலும் அந்த இன்பம் இழக்கப்படுகிறது. புலனின்பத் தேடலில் ஈடுபடுகிற ஒருவனுக்கு தர்மம் மற்றும் அதர்மம், ஆத்மா மற்றும் அநாத்மா பற்றி சிந்திக்க நேரம் கிடைப்பதில்லை. எனவே பகுத்தறியும் அறிவு(ப்ரக்ஞ) இழக்கப்படுகிறது. இந்த செயல்பாடுகளினால் ஞாபகசக்தியை(மேதா4) இழக்கிறான். புலனின்பத்தை இலக்காகக் கொண்ட ஒருவனின் செல்வமும்(3) நிச்சயமாக அழிக்கப்படுகிறது. உற்சாகமும்(உத்ஸாஹ) போய்விடுகிறது ஏனெனில் புலன்-விஷயங்களை மீண்டும் அதேபோல் பெற இயலாது. ஒருகால் அதை அப்படியே மீண்டும் பெறுகிற பட்சத்தில், அதற்கு நிறைய முயற்சி செய்ய வேண்டும். மேலும் அப்படி அது பெறப்படும்போது அது ஒருபோதும் முதல் முறை கொடுத்த அதே அனுபவத்தைக் கொடுக்காது. இதனால் அதில் விருப்பமில்லாமல், வேறு எதையாவது தேடி அடைய மனம் யோசிக்கும். இவ்விதம் ஒன்றைப் பெறும்போது அது ஆரம்பத்தில் இன்பமாக அமிர்தம் போல இருக்கும், ஆனால் பின்னர் அது தொலைந்து போகும். தற்காலிகமான இத்தகைய இன்பங்கள் இறுதியில் ஒருவனை விஷம் போன்றதான துயரத்தில் ஆழ்த்துகிறது. புலனின்பத்தை மட்டுமே இன்பம் என அனுபவித்து பழகியவன், எப்படியேனும் அதை அடைய விரும்பி தர்மத்தில் சமரசங்களைச் செய்கிறான். அத்தகைய சமரசங்களின் விளைவு நிச்சயமாக துக்க வடிவத்தில் மட்டுமே இருக்கமுடியும். எனவே இவ்வகை இன்பங்கள், அதர்மமான செயல்களால் பிறக்கும் விரும்பத்தகாத அனுபவங்களுக்கு காரணமாக அமைகின்றன என சங்கரர் இங்கு கூறுகிறார். 


=> உலப்பில்லா ஆனந்தம்:

புலனடக்கம் பழகுதல் ஒன்றே வளர்பிறை போன்று சுகத்தை வளர்ப்பதற்கு உற்ற உபாயம். அம்மனிதன் எவ்வுலகில் எதற்கும் அடிமைப்பட மாட்டான். முடிவில்லாத நிலையான ஆனந்தம் அவன் பெறும் பேறு ஆகும்.

வாழ்வு எனும் பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்தார்கள். முதலில் அவர்கள் பெற்ற உலக விஷயங்களாகிய செல்வம், கல்வி, வாகனம், ஆபரணம் முதலியன அமிர்தத்தைப் போல இன்பம் கொடுத்தது. ஒவ்வொரு செயலுக்கும் எதிர்ச்செயல் என்பது உண்டு. யாரும் அதை தடுக்க முடியாது. வாழ்வு என்பதற்கு எதிர்ச்செயல் மரணம். அது விஷத்துக்கு ஒப்பானது. வாழ்வில் விருப்பங்கொண்டிருந்த தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பின்பு மரணம் எனும் விஷம் வந்தது. அதை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு விருப்பம் வரவில்லை. எனவே அவர்கள் மிக வருந்தினார்கள். எங்கெங்கேயோ ஓடினார்கள்; என்னென்னவோ செய்து பார்த்தார்கள். ஒன்றும் பயன்படவில்லை. முன்பு பெற்ற சுகவாழ்வே இப்பொழுது துன்பம் நிறைந்ததாகத் தென்பட்டது. புலனடக்கமே வடிவெடுத்துள்ள துறவியிடம் ஓடினார்கள். மரணத்தை வென்றவனாகிய அப்பரம புருஷன் தன்னை வந்தடைந்த உயிர்களை மரணத்தினின்று காப்பாற்றினான். ரஜோகுண சுகத்தைத் தவிர்த்து சத்வகுண சுகத்துக்குப் போகவேண்டும். இறுதியாக குணாதீதத்திலுள்ள சுகத்தைப் பெற வேண்டும். 

அடுத்த சுலோகத்தில் தாமஸ சுகம் கூறப்படுகிறது. 

————————————————————————————————

||18.39|| தாமஸமான சுகம்:

यदग्रे चानुबन्धे च सुखं मोहनमात्मन: । 

निद्रालस्यप्रमादोत्थं तत्तामसमुदाहृतम् ।। ३९ ।।

யத3க்3ரே சாநுப3ந்தே4 ச ஸுக3ம் மோஹநமாத்மந: ।

நித்3ராலஸ்யப்ரமாதோ3த்த2ம் தத்தாமஸமுதா3ஹ்ருதம் ।। 39 ।।


यत् सुखं  யத் ஸுக3ம்  எந்த சுகம்      अग्रे च  அக்3ரே ச  துவக்கத்திலும்      अनुबन्धे च  அநுப3ந்தே4  முடிவிலும்    आत्मन: मोहनम्  ஆத்மந: மோஹநம்  தனக்கு மயக்கம் உண்டுபண்ணுகிறதோ     

निद्रा आलस्य प्रमाद उत्थं  நித்3ரா ஆலஸ்ய ப்ரமாத3 உத்த2ம்  உறக்கம், சோம்பல், தடுமாற்றம் இவற்றினின்று பிறக்கும்      तत्  தத்  அது      तामसम्  தாமஸம்  தாமஸமானதென்று      

उदाहृतम्  உதா3ஹ்ருதம்  உரைக்கப்படுகிறது.


துவக்கத்திலும் முடிவிலும் தன்னை மயக்குவதும், தூக்கம் சோம்பல் தடுமாற்றத்தினின்று பிறப்பதுமாகிய சுகம் தாமஸமென்று உரைக்கப்படுகிறது. 


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

தொடக்கத்திலும் இறுதியிலும் ஒருங்கே ஆத்மாவுக்கு மயக்கம் விளைப்பதாய், உறக்கத்தினின்றும் சோம்பரினின்றும் தவறுதலினின்றும் பிறக்கும் இன்பம் தாமசமென்று கருதப்படும்.


விளக்கம்:

தாமஸ சுகம் எது என்பதை இந்த சுலோகத்தில் பகவான் கூறுகிறார்.


=> மன-மயக்கத்தை உண்டாக்கும் இன்பம்:

தொடக்கத்திலும் முடிவிலும் மனதை மோகத்திற்கு, குழப்பத்திற்கு உள்ளாக்குகிற அந்த சுகம் தாமஸம் எனக் கூறப்படுகிறது — ஆத்மந: மோஹநம். ஏதேனுமொரு வகையில் தனக்கு இன்பம் கிடைத்தால் போதுமென்று அறிவிலி ஆர்வத்தோடு அதை நாடுகிறான். அப்படிப்பட்ட மூன்று விஷயங்களை பகவான் இங்கு கோடிட்டுக் காட்டுகிறார் — நித்3ரா ஆலஸ்ய ப்ரமாத3 உத்த2ம்.

(1) நித்3ரா — தூக்கத்தில் ஒருவன் அனுபவிக்கும் இன்பம் தாமஸமானது. உறக்கத்தின்போது ஒருவனுக்கு இன்பம் கிடைத்தாலும் அதை அனுபவிக்க மனம் விழிதிருப்பதில்லை. உறக்கத்தில் சுகம் இல்லையென நாம் கூறவில்லை, ஆனால் அதே நேரத்தில் அது தமஸால், அதாவது முழுமையான அறியாமையால் முழுமையாக மூழ்கடிக்கப்படுகிறது. எனவே இன்பத்தை குறித்த நேர்மறையான அனுபவம் அங்கு இல்லை. உறக்கம் தேவையான ஒன்றுதான், ஆனால் இங்கு இன்பத்திற்காகவென அதிகம் உறங்குகிற ஒருவன் அனுபவிக்கும் சுகம் பேசப்படுகிறது. 

(2) ஆலஸ்ய — சோம்பலினால் தோன்றுகிற சுகம் தாமஸம் ஆகும். செயல் செய்வதற்கான எந்த முயற்சியும் செய்யாதபோது, அதிலிருந்து உண்டாகும் கஷ்டத்திலிருந்து அவன் விடுபடுகிறான். கஷ்டத்தை தவிர்த்ததை இன்பம் என தனது மன-மயக்கத்தால் அவன் எண்ணுகிறான்.

(3) ப்ரமாத3 — அலட்சியம் மற்றும் கவனக்குறைவினால் தோன்றுகிற இன்பம் தாமஸ-சுகம் ஆகிறது. இதை நாடுபவர்கள் ‘விதி’ எனும் தத்துவத்தில் நம்பிக்கை மற்றும் விருப்பம் கொண்டவர்களாக தங்களை காட்டிக் கொள்கிறார்கள். எது வேண்டுமானாலும் நடக்கட்டும், ராமன் ஆண்டாலும் சரி, ராவணன் ஆண்டாலும் சரி, தர்மம் இருந்தாலும் சரி, அதர்மம் இருந்தாலும் சரி என எது குறித்தும் கவனம் கொள்ளாதவர்களாக அலட்சியமாக இருப்பது இவர்களுக்கு ஒருவகை இன்பத்தை அளிக்கிறது. செய்ய வேண்டியதை செய்யாமல் இருப்பது ஒருவனுக்கு சுகத்தை கொடுக்கிறது எனில் அது நிச்சயமாக தாமஸ சுகம் ஆகும். செய்யப்பட வேண்டிய ஒரு குறிப்பிட்ட காரியம் நம்மால் செய்ய இயலாமல் போவது அல்லது செய்யத் தகுதி இல்லாமல் ஆவது போன்றவை முற்றிலும் வேறு விஷயம். ஆனால் ஒருவனால் அதை செய்ய முடியும் எனும்போதும் மன மயக்கத்தினால் அங்கு அலட்சியமாக ​​அதைப் பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல் இருக்கிறான். அதைச் செய்வதன் கஷ்டத்தை தவிர்த்து அதில் கிடைக்கும் சுகத்தில் அவன் துய்க்கிறான். இப்படிப்பட்ட இன்பம் தாமஸ ​​சுகம் ஆகும்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஒட்டகம் முட்செடியை பெருவிருப்பத்தோடு தின்கிறது. முள் தைத்து அதன் உதடெல்லாம் ரத்தம் சொட்டினாலும் அது முள்ளைத் தின்பதை நிறுத்துவதில்லை. விஷய சுகத்தை நாடுபவர் போக்கு அத்தகையது.

————————————————————————————————

புதன், 17 ஜூன், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.36 - 18.37

||18.36|| மூன்று விதமான சுகம்:

सुखं त्विदानीं त्रिविधं शृणु मे भरतर्षभ ।

अभ्यासाद्रमते यत्र दु:खान्तं च निगच्छति ।। ३६ ।।

ஸுக2ம் த்விதா3நீம் த்ரிவித4ம் ச்1ருணு மே ப4ரதர்ஷப4

அப்4யாஸாத்3ரமதே யத்ர து3:கா2ந்தம் ச நிக3ச்ச2தி ।। 36 ।।


भरतर्षभ  4ரதர்ஷப4  பரதகுலக் காளையே     यत्र  யத்ர  எதில்    अभ्यासात्  அப்4யாஸாத்  பயிற்சியால்     रमते  ரமதே  இன்பமடைகின்றானோ       दु:खान्तं च  து3:கா2ந்தம் ச  துக்கத்தின் முடிவையும்     निगच्छति  நிக3ச்ச2தி  அடைகிறானோ      त्रिविधं सुखं तु  த்ரிவித4ம் ஸுக2ம் து  மூன்று விதமான சுகத்தையும்     मे  மே என்னிடம்     इदानीं  இதா3நீம்  இப்பொழுது      शृणु  ச்1ருணு  கேள்.


ஒருவன் எச்சுகத்தைப் பயிற்சியால் துய்த்துத் துன்பத்தின் முடிவையடைகிறானோ, அதன் மூவிதப் பாகுபாட்டையும் இப்பொழுது என்னிடம் கேளாய், பரதகுலக் காளையே. 


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

பாரதக் காளையே! இப்போது மூன்று விதமாகிய இன்பங்களைச் சொல்லுகிறேன், கேள். எதனிலே ஒருவன் பயிலப் பயில உவகை மிகுதியுறப் பெறுவானோ, எதனில் துக்க நாச மெய்துவானோ,


விளக்கம்:

சுலோகம் முப்பத்தியேழு முதல் முப்பத்தொன்பது வரை மூன்று வகையான சுகம் குறித்து பகவான் பேச இருக்கிறார். அதற்கான அறிமுக சுலோகம் இது.

இங்கு அர்ஜுனன் ‘4ரதர்ஷப4’, பரதகுலக் காளையே, பரத குடும்பத்தில் மிகவும் உயர்ந்தவனே என பகவானால் அழைக்கப்படுகிறான். ‘து’ என்ற சொல், ஒரு புதிய தலைப்பு தொடங்கப்படுகிறது என்பதைக் குறிக்கிறது. ‘இப்பொழுது நான் சொல்வதைக் கேள்’ எனக் கூறி கிருஷ்ணர் அர்ஜுனனின் கவனத்தை ஈர்க்கிறார் — இதா3நீம் மே ச்1ருணு. மூன்று விதமான சுகத்தை குறித்து என்னிடமிருந்து கேள் என்கிறார் — த்ரிவித4ம் ஸுக2ம்.

=> சுகப்பிராப்தி:

ஒவ்வொரு மனிதனும் இயல்பாகவே சுகத்துக்காக ஏங்குகிறான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மகிழ்ச்சிக்கான நமது ஏக்கம் என்பது ஒரு கற்றறிந்த ஆசை அல்ல, அது ஒரு உள்ளுணர்வு ஆசை. இங்கே கிருஷ்ணர் சொல்வது என்னவென்றால், எல்லோரும் சுகத்தை விரும்புகிறார்கள்; ஆனால் மனிதர்களுக்கு எந்த வகையான சுகத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது குறித்து ஒரு தேர்வு உள்ளது. உதாரணமாக, உணவை பொருத்தவரை அனைவரும் உணவருந்த வேண்டும், அதில் வேறு வழியில்லை. ஆனால் எந்த வகையான உணவு, சைவம், அசைவம், மேலும் அதிலும் பலவகைகள் இருப்பதால் அங்கே ஒரு தேர்வு தேவைப்படுகிறது. அதேபோல ஒருவனுக்கு சுகத்தை தேர்ந்தெடுப்பதைப் பொறுத்தவரை வேறு வழியில்லை. சுகத்தின் மீது எல்லோருக்கும் விருப்பம் உள்ளது. ஆனால் அதன் வகையைப் பொறுத்தவரை ஒரு தேர்வு உள்ளது. புத்தியுள்ள ஒருவன் சரியான வகையைத் தேர்ந்தெடுக்கிறான்.


=> பயிற்சி:

ஆகையால் அர்ஜுனா நீ கேள், இங்கே ஒரு உண்மை இருக்கிறது, என்கிறார் கிருஷ்ணர். அது என்ன? எந்தவொரு வகையான இன்பத்தை அனுபவிக்கவும் ஒருவன் தனது மனதைப் பயிற்றுவிக்க முடியும்; அது தொடர் பயிற்சியின் மூலம் அவன் வளர்க்கும் ரசனையிலிருந்து வரும் ஒன்று. ஒரு குறிப்பிட்ட வகை உணவின் மீது ஒருவன் பயிற்சியின் மூலம் சுவைக்கான ரசனையை வளர்த்துக் கொள்ளமுடியும். உதாரணமாக, முதலில் சப்பாத்தி பிடிக்காமல் போகலாம். ஆனால் உடல் ஆரோக்கியத்திற்காக என்று அதை சாப்பிட்டு பழகி, பின் மெதுவாக ஒரு ரசனையை உருவாக்கிக் கொண்டு அதை சுவைக்கத் தொடங்கலாம். நல்ல அல்லது கெட்ட பழக்கம், உணவு, உடை, இசை, விளையாட்டு என எதை எடுத்துக் கொண்டாலும் முதலில் நாம் வெறுத்ததை பிறகு பயிற்சியின் மூலம் பிடித்தமானதாக மாற்ற முடியும். அதுபோலவே பயிற்சியின் மூலம் சாத்விக, ராஜஸ அல்லது தாமஸ சுகத்தை அனுபவிக்க கற்றுக் கொள்ளலாம். எனவே மனதை பயிற்றுவிக்க முடியும் என்றால், ஏன் நமது மனதை நல்ல சுகத்துக்காகப் பயிற்றுவிக்கக் கூடாது? 

எந்த சுகத்தைப் தொடர் பயிற்சியினால் துய்த்துப் பழகி துன்பத்தின் முடிவை அடைகிறானோ அது மூன்று விதமானது — அப்4யாஸாத் ரமதே து3:கா2ந்தம் நிக3ச்ச2தி, என்கிறார் பகவான். மூன்றுவித சுகங்களின் வழியாகவும் துன்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் எனில் இந்த மூன்று சுகங்களுக்கும் என்ன வித்தியாசம்? அதை இனிவரும் சுலோகங்களில் கிருஷ்ணர் வரையறுக்கிறார்.

————————————————————————————————

||18.37|| சாத்விகமான சுகம்:

यत्तदग्रे विषमिव परिणामेऽमृतोपमम् ।

तत्सुखं सात्त्विकं प्रोक्तमात्मबुद्धिप्रसादजम् ।। ३७ ।।

யத்தத3க்3ரே விஷமிவ பரிணாமேऽம்ருதோபமம் ।।

தத்ஸுக2ம் ஸாத்த்விகம் ப்ரோக்தமாத்மபு3த்3தி4ப்ரஸாத3ஜம் ।। 37 ।।


यत् तत्  யத் தத்  எந்த ஒன்று     अग्रे  அக்3ரே  முதலில்     विषम् इव  விஷம் இவ  விஷம்போல     परिणामे  பரிணாமே  முடிவில்      अमृत उपमम्  அம்ருத உபமம்  அமிர்தத்துக்கு ஒப்பானது    

आत्म बुद्धि प्रसादजम्  ஆத்ம பு3த்3தி4 ப்ரஸாத3ஜம்  ஆத்மாவில் நிலைபெற்ற புத்தியின் தெளிவிலே தோன்றுகிற    तत् सुखं  தத் ஸுக2ம்  அந்த சுகமானது      सात्त्विकं प्रोक्तं  ஸாத்த்விகம் ப்ரோக்தம்  சாத்விகமென்று பகரப்படுகிறது. 


எது முதலில் விஷம் போலவும் முடிவில் அமிர்தத்துக்கு ஒப்பானதுமாகிறதோ அந்த சுகம் சாத்விகமாம். ஆத்ம நிஷ்டையில் தெளிவடைந்த புத்தியில் அது தோன்றுகிறது. 


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

எது தொடக்கத்தில் விஷத்தை யொத்ததாய் விளைவில் அமிர்த மொப்ப மாறுவதோ, அந்த இன்பமே சாத்விகமாகும்; அஃது தன் மதியின் விளக்கத்திலே பிறப்பது.


விளக்கம்:

இந்த சுலோகத்தில் பகவான் சாத்விக சுகம் எத்தகையது என விளக்கமளிக்கிறார். அதை அவர் தூய ஆன்மிக சுகம் என்று வரையறுக்கிறார். அதாவது ஆன்மிக வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவன் பெறக்கூடிய ஆனந்தம் சாத்விக சுகம் ஆகும். அந்த பயணத்தின் முடிவில் அல்ல, ஒருவன் பயணிக்கும்போதுகூட அதில் ஒரு சுகம் உள்ளது. கர்ம-யோகத்தின் மட்டத்திலிருந்தே ஒரு சுகம் கிடைக்கிறது; அடுத்ததாக உபாசனையிலும், நற்பண்புகளை அடையும்போதும் அதில் ஆனந்தம் உள்ளது. இதில் அழகு என்னவென்றால், இந்த வகையான சுகம் வெளிவிஷயங்களிலிருந்து அல்லாமல், உள்ளிருந்து வருகிறது. 


=> முதலில் விஷம்:

சாத்விகமான சுகம் ஆரம்பத்தில் விஷம் போன்றது என கூறப்படுகிறது — அக்3ரே விஷம் இவ. இங்கு ‘விஷம்’ என்பது விரும்பத்தக்கதாக இல்லாமல் இருப்பதை, கடினமாக இருப்பதைக் குறிக்கிறது. 

மோக்ஷம் எனப்படும் சுய-அறிவை ஒருவன் தேடத் தொடங்கும்போது, ​​அவன் தன்னைத்தானே அணுகத் தொடங்குவதால் அங்கு அவன் முதலில் சிரமப்படுகிறான். தனது தேடலைத் தொடங்குவதற்கு முன்பு, அவன் ஏதாவது ஒன்றைச் செய்து மேலோட்டமான சில திருப்தியை அடைந்தான். உண்மையான பிரச்சினைகளை கவனிக்காமல் பல்வேறு விஷயங்களால் மூழ்கடிக்கப்பட்டிருந்ததனால், ​​மனநிறைவைத் தேடத் தூண்டும் வலியை அவன் கண்டிருக்கவில்லை. இப்போது கவனத்தை தன் பக்கம் திருப்பும்போது, ​​முன் ஒருபோதும் சிந்திக்காத துக்கங்களும், நினைத்திருக்காத எண்ணங்களும் முன்னிலையில் வருகின்றன. தனது தீய குணங்கள் பார்வைக்குத் தெரிய தொடங்குகின்றன. ஆரம்பத்தில் இது விஷம் போன்றது, ஏனென்றால் அதை சரியாக புரிந்து கொள்வதற்கு வைராக்கியம், மன முதிர்ச்சி, பற்றற்ற தன்மை, புறநிலைத்தன்மை மற்றும் தன் மனதைப் புரிந்துகொள்வது போன்றவை தேவைப்படுகின்றன. மேலும் இவை அனைத்தையும் சரியாகக் கையாளுவதற்கு கடந்த காலத்தை கைவிட வேண்டும். இவை அனைத்தும் சாதாரணமானவைகள் அல்ல. இவற்றிற்கு நிறைய சுயதேடல் தேவைப்படுகிறது என்பதால் இது எளிதானதும் அல்ல. இது ஒரு கடினமான செயல்முறை. எனவே ஆரம்ப காலகட்டத்தில் ஆன்மிக நாட்டம் என்பது வலியால் நிறைந்துள்ளது. அந்த வேதனை, இங்கு மோசமான சுவை கொண்டதும் அழிக்கக்கூடியதுமான விஷத்திற்கு ஒப்பிடப்படுகிறது. விஷத்தை யாரும் எடுத்துக் கொள்ள விரும்புவதில்லை. ஆனால் நற்பண்புகளை அடைதல், ஞானம், பற்றற்ற தன்மை மற்றும் அடைந்த ஞானத்தில் நிலைத்திருக்கும் திறனைப் பெற தொடக்கத்தில் நிறைய பயிற்சியும் முயற்சியும் தேவை. பழகும்வரை அது மிக கடினமானதாக இருக்கிறது. வைராக்கியத்தினால், பொறுமையினால், நற்பண்புகளினால், ஞானத்தினால் மற்றும் நிதித்யாசனத் தியானத்தினால் இந்த நிலையை கடக்கும்போது என்ன நடக்கிறது? 


 => பின்னர் அமிர்தம்:

முடிவில், அதாவது மேற்சொன்ன மாற்றம் ஏற்படும்போது, பரிணாமே, ஒரு சுகம் உண்டாகிறது. புரிதல், பற்றின்மை போன்றவற்றினால் உண்டாகும் மனமுதிர்ச்சியிலிருந்து பிறக்கும் ஒரு சுகம் இருக்கிறது என்று சங்கரர் இங்கு விளக்கமளிக்கிறார். அந்த சுகம் சாத்விகமானது, மேலும் அது அமிர்தத்தை போன்றது — அம்ருத உபமம். அமிர்தத்தை போன்று இனிமையானது, பேரின்பத்தை அளிக்கவல்லது. சொர்க்கத்துடன் தொடர்புடைய ஒன்றாக கருதப்படுகிற இந்த அமிர்தம் என்பது நாம் நேரடியாக அனுபவித்திராத, ஆனால் சாஸ்திரத்தில் மட்டுமே கேள்விப்பட்டிருக்கிற ஒரு திரவியம். புராணங்களில் அமிர்தம் பற்றி நிறைய விளக்கங்கள் உள்ளன, அங்கு அது ஒரு வகையான பால் என கூறப்படுகிறது. அதில் சிறிதளவு எடுத்துக் கொண்டாலும், ஒருவன் அழியாதவனாக ஆகிறான். இதன் பொருளை அப்படியே நேரடியாக எடுத்துக்கொண்டால், அந்த அமிர்தம் கண்டிப்பாக ஞானமாக மட்டுமே இருக்க முடியும்!


=> தெளிவான புத்தியில் தோன்றுவது:

இந்த சாத்விகம் சுகம் அமிர்தத்திற்கு ஒப்பானது, ஏனென்றால் அது ஒருவனை அழியாதவனாக ஆக்குகிறது. மேலும் அது ஆத்ம நிஷ்டையில் தெளிவடைந்த புத்தியிலிருந்து தோன்றுவது — ஆத்ம பு3த்3தி4 ப்ரஸாத3ஜம், என்கிறார் கிருஷ்ணர். எனவே இந்த ஆனந்தமானது காலத்திலிருந்து விடுபட்டது. ஒரு பொருளிலிருந்து தோன்றும்போது அது நிச்சயமாக காலப்போக்கில் மறைந்துவிடும். ‘ஆத்ம பு3த்3தி4’ என்பது ஆத்மாவைப் பற்றிய அறிவை கொண்ட மனதைக் குறிக்கிறது. அத்தகைய மனதில் ஒரு தூய்மை, தெளிவு, அமைதி உள்ளது — ப்ரஸாத3. மனதினுடைய அந்த தெளிவு என்பது கீழே உள்ள மணலையும் வெவ்வேறு வண்ணங்களைக் கொண்ட அனைத்து கூழாங்கற்களையும் பார்க்க முடிகிற தூய அமைதியான நீரைப் போன்றது. மேலும் அது பாயும் தண்ணீரைப் போல அதன் பாதையில் என்ன வந்தாலும் எதையும் எதிர்க்காமல் அதன் வழியைக் கண்டுபிடித்து முன்னேறுகிறது. வழியில் ஒரு பெரிய கல் இருந்தால் தண்ணீர் அதைச் சுற்றி செல்கிறது; ஒரு பெரிய பள்ளத்தாக்கு இருந்தால், அது அதை நிரப்பி முன்னேறுகிறது. அது எங்கும் சிக்கிக் கொள்ளாமலும், முன்னால் இருப்பதைப் பற்றி கவலைப்படாமலும் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கிறது. அதுபோல தூய்மையை அடைந்த மனமானது, தான் உட்பட எதையும் எதிர்ப்பதில்லை. ‘எதுவாக இருந்தாலும் பரவாயில்லை; அது அப்படியே இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையைக் கொண்டதாக அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறது. ஆத்ம-அறிவு கொண்ட புத்தியின் தெளிவினால் உண்டாகிற இந்த சுகமானது எந்தவொரு பொருளையோ அல்லது மனதின் குறிப்பிட்ட ஒரு நிலையையோ சார்ந்தது அல்ல. அந்த ஆத்ம-ஞானமே தேவையான அனைத்தையும் கவனித்துக் கொள்கிறது. ஆகவேதான் ஆரம்பத்தில் அது விஷம் போன்றதாகவும், பின்னர் அந்தகரணத்தில் தேவையான மாற்றம் ஏற்பட்ட பிறகு அது அமிர்தம் போன்றும் இருக்கிறது. மனதின் அடிப்படையில் அந்த சுகம் சாத்விகம் என்று அழைக்கப்படுகிறது ஏனெனில் சத்வ-குணத்தின் ஆதிக்கத்தில் இருக்கின்ற மனதில் அது உண்டாகிறது. 

எனவே ‘ஆத்ம பு3த்3தி4 ப்ரஸாத3ஜம்’ என்பதை கீழ்வரும் இரு வகையில் பொருள்படுத்தலாம்:

(1) தனது புத்தியினுடைய(ஸ்வ-பு3த்3தி4) அமைதியின் அல்லது தூய்மையின் விளைவாக உற்பத்தியாகும் சுகம் சாத்விகம். மாறாக ராஜஸ மற்றும் தாமஸ சுகமானது பொருளில், வெளி சூழலிலிருந்து கிடைக்கிறது. ஆனால் நற்பண்புகளின் விளைவாக வருகிற இந்த சாத்விக சுகத்திற்கு நம் மனமே காரணம் ஆகையால் அது நம்மையே சார்ந்திருக்கிறது. மனம் மென்மையாக இருந்தால்தான் சாத்விக சுகம் புரியும்; அதை அனுபவிக்க முடியும். மனதை அந்த அளவு சூக்ஷமமாக்குவதில்தான் அந்த கடினம் உள்ளது. 

(2) பரமாத்மா பற்றிய அறிவிலிருந்து வருகிற சுகம் சாத்விகம், அதாவது ஞானியினுடைய சுகம் சாத்விகம் ஆகும். 

எனில் ஞானியின் சாத்விக சுகத்திற்கும் நற்பண்புகளைக் கொண்ட சாதகனின் சுகத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? முக்குணங்களையும் கடந்த ஞானிக்கு சாத்விக சுகத்திலும்கூட வைராக்கியம் இருக்கும். ஆனால் அக்ஞானிக்கு அதில் வைராக்கியம் இருக்காது, அவன் சாத்விக குணத்தில் பந்தப்பட்டவனாக இருக்கிறான். 

இனி அடுத்த சுலோகத்தில் ராஜஸ சுகம் விளக்கப்படுகிறது.

————————————————————————————————