||18.5|| கர்மத்தின் தன்மை:
यज्ञदानतप:कर्म न त्याज्यं कार्यमेव तत् ।
यज्ञो दानं तपश्चैव पावनानि मनीषिणाम् ।। ५ ।।
யக்ஞதா3நதப:கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத் ।
யக்ஞோ தா3நம் தபச்1சைவ பாவநாநி மநீஷிணாம் ।। 5 ।।
यज्ञ दान तप: कर्म யக்ஞ தா3ந தப: கர்ம யக்ஞம், தானம், தவம் ஆகிய கர்மம்
न त्याज्यं ந த்யாஜ்யம் துறக்கக் கூடாது तत् தத் அது कार्यम् एव கார்யம் ஏவ செய்யப்பட வேண்டியதே यज्ञ: யக்ஞ: யக்ஞமும் दानं தா3நம் தானமும் तप: च தப: ச தவமுமே मनीषिणाम् மநீஷிணாம் அறிஞர்களுக்கு पावनानि एव பாவநாநி ஏவ தூய்மை தருபவை.
யக்ஞம், தானம், தவம் ஆகிய கர்மங்களைத் துறக்கக் கூடாது. அது செய்யப்பட வேண்டியதே. யக்ஞமும் தானமும் தவமும் அறிஞர்களைத் தூய்மைப்படுத்துகின்றன.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக்கூடாது. அவற்றைச் செய்யவே வேண்டும். வேள்வியும், தானமும், தவமும் அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன.
விளக்கம்:
பகவான் இங்கு தனது கருத்தை நேரடியாக முன்வைக்கிறார். யக்ஞம், தானம், தவம் போன்ற கர்மங்களை கைவிடக் கூடாது — ந த்யாஜ்யம், என்கிறார். மேலும் இக் கர்மங்கள் கண்டிப்பாகச் செய்யப்பட வேண்டும்(கார்யம் ஏவ) என்பது அவரது கருத்தாக உள்ளது. அதற்கான காரணத்தையும் அவர் இங்கு கோடிட்டுக் காட்டுகிறார். ஏனெனில் இத்தகைய கர்மங்கள் மனதை சுத்திகரிக்கும் திறன் கொண்டவைகளாக உள்ளன. இதனால் தியாகம், சந்யாசத்தை விட உயர்ந்தது என்பதாக பகவான் இங்கு கூறுகிறார். இனியொரு கோணத்தில், ஒருகால் ஒருவன் மனத்தூய்மை அடைந்துவிட்டால் அவன் துறக்கலாம் என்கிற கருத்தும் இதில் ஒளிந்துள்ளது. ‘உன்னையும் மற்றவர்களையும் துன்புறுத்த வில்லையெனில் மனமானது தூய்மையடைந்துவிட்டது; அத்தகையவன் புலனடக்கத்தில் தேர்ந்துவிட்டான்’ என சங்கரர் கூறுகிறார்.
=> ஏன் பகவான் சந்யாசத்தை பரிந்துரைப்பதில்லை?
இங்கும் சரி, ஐந்தாவது அத்தியாயத்தில் அர்ஜுனனின் சந்தேகத்திற்கு பதிலளிக்கும்போதும் சரி, பகவான் தியாகமே அதாவது கர்ம-யோகமே சிறந்தது, உகந்தது என்பதாகக் கூறுகிறார். ஏன் அவர் சந்யாசத்தை பரிந்துரைக்கவில்லை?
(1) கர்மம் தூய்மைப்படுத்தும் சாதனம் ஆகும். ஒரு குறிப்பிட்ட மனப்பான்மையுடன் செய்யப்படும் நியத கர்மங்கள், கர்மயோகமாகிறது. அது ஞானமடைவதற்குத் தேவையான அந்த-கரண-சுத்தியை அளிக்கிறது என்பதால் சந்யாசத்தை காட்டிலும் தியாகமே உகந்தது.
(2) இது அர்ஜுனன் போன்ற அதிகாரிகளுக்கானப் பொதுவான உபதேசம் ஆகும். இதிலிருந்து விதிவிலக்கானவர்களுக்கு இது பொருந்தாது, அல்லது அவர்கள் சந்யாசத்தை எடுத்துக் கொள்ளலாம்.
(3) பொய்யொழுக்கம் உடையவன்(மித்2யாசார:) ஆகிவிடக் கூடாது என்பதற்காக இவ்விதம் சொல்லுகிறார். வெளித்தோற்றத்தில் சந்யாசத்தை எடுத்துக் கொண்டு, கர்மேந்திரியங்களை அடக்கி, ஆனால் மனதால் இந்திரிய விஷயங்களை எண்ணிக் கொண்டிருப்பவன் மித்யாசாரன் என சுலோகம் 3.6-ல் பகவான் கூறினார். தகுதியில்லாமல் எடுக்கப்படுகிற சந்யாசம் இந் நிலைக்கு தள்ளிவிடும்.
(4) மனப்பக்குவம் அடைந்தவர்கள் கர்மத்தில் இருந்தாலும் அது கேடு விளைவிக்காது. மாறாக, பக்குவம் அடையாமல் கர்மத்தை விடுதல் என்பது ஆபத்தானது; கேட்டை விளைவிக்கக் கூடியது.
=> கர்ம பிரயோஜனம்:
பட்டுப்புழுவானது தனக்கென்று கூடு கட்டுகிறது. பிறகு அது கட்டிய கூட்டினுள் அதுவே அடைபட்டுப் போகிறது. சிறைவாசம் செய்வது போல நெடுநாள் அதில் அடங்கிக் கிடக்கிறது. தன்னை பந்தப்படுத்தும் செயலை அது தனக்குத்தானே செய்துகொள்கிறது. அவ்விதம் தன்னை அடைத்து கொள்வதில் அதற்கு பயன் ஒன்று உண்டு. புழுவாக இருந்தது, அழகிய பட்டுப்பூச்சியாக மாறுகிறது. இனி வெளிச்சத்தையும், காற்றையும், வெட்ட வெளியையும் காண அது வெளியே வந்தாக வேண்டும். அதற்காக அது தான் கட்டிய கூட்டை தானே உடைத்துத் தள்ளுகிறது. முதலில் கூட்டைக் கட்டுவது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் பின்பு அதை உடைப்பதில் இருக்கிறது. மனிதனுக்கு காமிய கர்மங்களெல்லாம் கூடு கட்டுதற்கு ஒப்பானவை. காமிய கர்மங்களின் வாயிலாக உலக வாழ்க்கையின் தரத்தை மனிதன் கற்றுக் கொள்கிறான். அவனைப் பக்குவப்படுத்துவதற்கு அது உதவுகிறது. பக்குவம் அடையும்போது அவனுக்கு விரக்தி வருகிறது; அதாவது பற்று நீங்குகிறது. இவ்வுலக வாழ்வைக் கடந்து பரம்பொருளை அறிய வேண்டுமென்ற எண்ணம் உதிக்கிறது. அதன் பிறகு அவன் செய்கிற செயல்கள் யக்ஞமாகவும், தானமாகவும், தவமாகவும் மாறியமைகின்றன. பட்டுப்பூச்சி கூட்டை உடைத்தல் என்கிற செயலைச் செய்கிறது. ஆத்ம சாதகனிடத்தில் அதற்கு நிகரான செயல் யக்ஞம், தானம், தவம் ஆகியவைகளில் அடங்கியிருக்கிறது. ஆகையினால் எல்லா மனிதர்களும் வேள்வி, தானம், தவம் முதலியவைகளைச் செய்ய வேண்டும். அவைகள் உலகுக்கு நன்மையைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அதை குறிப்பிட்ட மனப்பாங்குடன் செய்யும் அறிஞர்களுக்கு அது மனத்தூய்மைக்கான சாதனமாகவும் ஆகிறது.
---------------------------------------------------------------------------------------------
||18.6|| கர்மயோகத்தின் சாரம்:
एतान्यपि तु कर्माणि सङ्गं त्यक्त्वा फलानि च ।
कर्तव्यानीति मे पार्थ निश्चितं मतमुत्तमम् ।। ६ ।।
ஏதாந்யபி து கர்மாணி சங்க3ம் த்யக்த்வா ப2லாநி ச ।
கர்தவ்யாநீதி மே பார்த2 நிச்1சிதம் மதமுத்தமம் ।। 6 ।।
पार्थ பார்த2 பார்த்தா एतानि कर्माणि अपि तु ஏதாநி கர்மாணி அபி து இக்கர்மங்கள் அனைத்தும் கூட सङ्गं சங்க3ம் பற்றுதலையும் फलानि च ப2லாநி ச பலனையும்
त्यक्त्वा த்யக்த்வா துறந்து कर्तव्यानि கர்தவ்யாநி செய்ய வேண்டியவைகள்
इति இதி என்பது मे மே என்னுடைய निश्चितं நிச்1சிதம் நிச்சயமான
उत्तमम् உத்தமம் உத்தமமான मतम् மதம் கொள்கை.
பார்த்தா, பற்றுதலையும் பலனையும் துறந்தே இக்கர்மங்கள் யாவும் செய்யப்பட வேண்டும் என்பது எனது நிச்சயமான உத்தமமான கொள்கை.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
ஆனால், பார்த்தா! இச்செயல்களைக்கூட ஒட்டின்றியும், பயன்களை வேண்டாமலும் செய்ய வேண்டும் என்பது என் உத்தமமான நிச்சயக் கொள்கை.
விளக்கம்:
முன் சுலோகத்தில் கூறப்பட்ட கர்மங்கள் என்ன மனப்பான்மையுடன் செய்யப்பட வேண்டும் என்பதை பகவான் இங்கு தன்னுடைய நிச்சயமான கொள்கையெனக் கூறி முன்வைக்கிறார். வேறு விதத்தில் சொல்லப்போனால் கர்மயோகத்தின் சாரத்தை இங்கு நமக்கு அளிக்கிறார்.
=> பற்றும் பலனும்:
யக்ஞம், தானம் மற்றும் தவம் ஆகிய இம்மூன்றும் நித்ய-நைமித்திக கர்மங்கள் ஆகும். தானம் என்பது தினசரி கர்மமாகவோ அல்லது நைமித்திக-கர்மமாகவோ இருக்கலாம். இவை மூன்றும் ஒருவனை தூய்மைப்படுத்தும் தகுதியை உடையவைகள், ஆனால் அதில் ஒரு விஷயத்தை நாம் நன்கு கவனிக்க வேண்டும். இந்த கர்மங்களை(ஏதாநி கர்மாணி) மனத்தூய்மையைக் கொடுக்கின்ற சாதனமாக மாற்ற, அவைகள் ஒரு குறிப்பிட்ட மனப்பான்மையுடன் செய்யப்பட வேண்டும். அஹங்காரத்தின் மீதான பற்றுதலைக் கைவிட வேண்டும் — சங்க3ம் த்யக்த்வா. ‘அவைகள் செய்யப்பட வேண்டும் — கர்தவ்யாநி’ என்கிற மனப்பான்மை இருத்தல் வேண்டும். இந்த செயல்கள் நான் செய்வதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளன; ஆகவே என்னால் அது செய்யப்பட்டாக வேண்டும் என்கிற முழு ஈடுபாட்டுடன் செய்தல் இங்கு பேசப்படுகிறது. ஒரு கர்த்தாவாக அவனது பாங்கு இவ்விதம் இருத்தல் வேண்டும், அதாவது பற்றற்று செயல் செய்ய வேண்டும். எனில் ஒரு போக்தாவாக அவன் எப்படி செயல்பட வேண்டும்? பலனையும் துறக்க வேண்டும் — ப2லாநி ச த்யக்த்வா. யக்ஞம், தானம், தவம் போன்ற எந்தவொரு புண்ணிய செயலுக்கும் சொர்க்கம் முதலிய பலன்கள் உண்டு. ஆனால் நான் சில புண்ணியங்களைச் சம்பாதிப்பேன் அல்லது நான் சொர்க்கத்தைப் பெறுவேன் போன்ற எண்ணங்கள் பிண்ணனியில் இல்லையென்றால் அவன் பலனைத் துறந்தவனாகிறான். அச்செயல்களின் மீதான உரிமையைத் துறக்கிற தன்மையும் அல்லது கிடைக்கின்ற எந்தவொரு பலனையும் இறைவனின் பிரசாதமாக ஏற்றுக் கொள்கிற பிரசாத புத்தியும் இருக்கும்போது அச்செயல் மனத்தூய்மைக்கான வழிமுறைகளாக ஆகின்றன.
இது எனது கருத்து — மே மதம், என்கிறார் பகவான். தெளிவற்று மேலோட்டமானதான கோட்பாடு அல்ல இது என்பதை குறிக்கும் விதமாக இரு அடைமொழிகளுடன் இதை முன்வைக்கிறார். எனது நிச்சயமான உத்தமமான கருத்து — மே நிச்1சிதம் உத்தமம் மதம். இந்த கர்மங்கள் அந்த-கரண-சுத்திக்கு காரணமாகின்றன என்பதால் அவைகள் விடப்படக் கூடாது; கண்டிப்பாக செய்யப்பட வேண்டும். இங்கு துறக்கப்பட வேண்டியது அச்செயலின் மீதான பற்றுதலும் பலனுமே அன்றி அச்செயல் அல்ல.
=> சரியற்ற பொருள்விளக்கம்:
சிலர் ‘ஏதாநி கர்மாணி’ என்பதை காமிய கர்மங்கள் என எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் அது தவறு என்பதாக சங்கரர் விமர்சித்து, அது யக்ஞம், தானம் மற்றும் தவம் உள்ளிட்ட நித்ய கர்மங்களையே குறிக்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறார். இக் கர்மங்களைச் செய்பவனுக்கு கர்மபலனில் ஆர்வமிருக்கும்போது அவன் புண்ணியத்தை பெறுகிறானே தவிர அந்த-கரண-சுத்தியை அல்ல. ராகம் மற்றும் துவேஷத்தினால் தூண்டப்பட்ட அவனது இந்த கர்மம் எப்படி அவனை ராக3-த்3வேஷ பிடியிலிருந்து விடுவிக்கும்? ஒருகால் அவனது காமிய கர்மங்கள் அவன் எதிர்பார்த்த சுகத்தை அளித்ததாக வைத்துக் கொள்வோம். அப்போது அதே சுகத்தை மீண்டும் பெற அவன் அச்செயலை திரும்பவும் செய்ய விழைகிறான். அல்லது, ஆசையுடன் செய்யப்பட்ட கர்மம் சுகத்தை உருவாக்கவில்லை எனில் அதன்மீது வெறுப்பு உண்டாகி, அதை மீண்டும் முயற்சிக்கக்கூட முடியாதவளவு வேதனையை அடைகிறான். வெறுப்பு என்பதும் ஒரு வகையான விருப்பமே ஆகும். ‘அது எனக்கு வேண்டாம்’ என விரும்புதலே துவேஷம் ஆகும். எனவே விருப்பு-வெறுப்பினால் தூண்டப்பட்டு செய்யப்படுகிற எந்தவொரு செயலும் விருப்பு-வெறுப்பையே உண்டாக்கும். எனவேதான் யக்ஞம், தானம் மற்றும் தவம் போன்ற கர்மங்களிலும் பலனின் மீதுள்ள ஆசையைத் துறக்கும்போது மட்டுமே அது மனத்தூய்மைக்கு காரணமாகின்றன.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
ஈஷ்வரனை அடைய விரும்புவோரும் ஸாதன மார்க்கத்தில் அபிவிருத்தியைக் கோருவோரும் ஆசையாகிய வலையில் விழாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் ஒருபோதும் பரிபூரணர்களாகார்.
---------------------------------------------------------------------------------------------
