||18.38|| ராஜஸமான சுகம்
विषयेन्द्रियसंयोगाद् यत्तदग्रेऽमृतोपमम् ।
परिणामे विषमिव तत्सुखं राजसं स्मृतम् ।। ३८ ।।
விஷயேந்த்3ரியஸம்யோகா3த்3 யத்தத3க்3ரேऽம்ருதோபமம் ।
பரிணாமே விஷமிவ தத்ஸுக2ம் ராஜஸம் ஸ்ம்ருதம் ।। 38 ।।
विषय इन्द्रिय संयोगात् விஷய இந்த்3ரிய ஸம்யோகா3த் புலனுறுப்பு அதன் பொருளுடன் தொடர்பு கொள்வதால் यत् तत् யத் தத் எந்த ஒன்று अग्रे அக்3ரே முதலில் अमृत उपमम् அம்ருத உபமம் அமிர்தத்திற்கு ஒப்பானது परिणामे பரிணாமே முடிவில் विषम् इव விஷம் இவ விஷம் போன்றது तत् सुखं தத் ஸுக2ம் அந்த சுகமாமது राजसं स्मृतम् ராஜஸம் ஸ்ம்ருதம் ராஜஸமெனச் சொல்லப்படுகிறது.
புலனுறுப்பு அதன் பொருளுடன் தொடர்பு கொள்வதால் முதலில் அமிர்தம் போன்றிருந்து முடிவில் விஷம் போன்றாகும் சுகம் ராஜஸமென்று சொல்லப்படுகிறது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால் தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து விளைவில் நஞ்சு போன்றதாய் முடியும் இன்பம் ராஜச மெனப்படும்.
விளக்கம்:
எப்படிப்பட்ட சுகமானது ராஜஸம் என இந்த சுலோகத்தில் விளக்கப்படுகிறது.
=> புலனின்பம்:
புலனுறுப்புக்கள் அவற்றினுடைய விஷயங்களுடன் தொடர்பு கொள்வதால் கிடைக்கின்ற இன்பம் ராஜஸமானது — விஷய இந்த்3ரிய ஸம்யோகா3த். இந்திரியங்கள் அவற்றின் விஷயங்களாக உள்ள சப்தம், ஸ்பர்ஷம், ரூபம், ரசம் மற்றும் கந்தம் ஆகியவற்றுடன் சேரும்போது இன்பம் உண்டாகிறது. உதாரணமாக அருமையான சுவை, இனிமையான இசை, அழகான உருவம், இனிய தொடுதல் மற்றும் நல்ல வாசனை ஆகியவை கொடுக்கின்ற ஆனந்தம் இங்கு பேசப்படுகிறது. தொடர்பின் காரணமாக உண்டாகிற இந்த சுகம் ‘ஸம்ஸர்ஜ போ4கா3:’ என அழைக்கப்படுகிறது.
அத்தகைய புலன்-பொருள்கள் விரும்பப்படும்போது, ஆரம்பத்தில் அது அமிர்தம் போன்றது — அக்3ரே அம்ருத உபமம், அதாவது அது எளிதானது. மேலும், இந்திரியங்கள் அவற்றின் விருப்பப்பட்ட பொருள்களுடன் தொடர்பு கொள்வதற்கு அந்தக்கரணத்தை தயார்ப்படுத்த வேண்டிய தேவையில்லை. அது முற்றிலும் ஒரு புலனுணர்வு சுகம், ஒரு விலங்குகூட அதை அவ்விதத்தில் அனுபவிக்க முடியும். அது எளிமையானதாகவும் விரும்பத்தக்கதாகவும் இருப்பதால் அது அமிர்தத்தை போன்றது எனக் கூறப்படுகிறது.
=> விஷமாதல்:
சில காலத்திற்கு பிறகு மாற்றம் நிகழ்கிறது — பரிணாமே, அது விஷம் போன்றதாக ஆகிறது — விஷம் இவ. அதாவது, இந்த வகையான இன்பம் உடலின் அனுபவிக்கும் திறனையே அழிக்கிறது. இந்த இன்பங்கள் ஒருவனின் வலிமை, அழகு, அறிவு, ஞானம், செல்வம் மற்றும் உற்சாகம் ஆகியவற்றை அழிக்கின்றன என்று சங்கரர் கூறுகிறார் — ப3ல-வீர்ய-ரூப-ப்ரக்ஞ- மேதா4-த3ந-உத்ஸாஹ-ஹாநி-ஹேதுவத். புலனின்பங்களில் துய்க்கும் ஒருவன் தனது உடல் ஆரோக்கியம் மற்றும் புலனுறுப்புகளின் சக்திகள்(வீர்ய) ஆகிய இரண்டிலும் தனது வலிமையை(ப3ல) இழக்கிறான். வயதாகும்போது இவைகளில் இயற்கையான இழப்பு ஏற்படுகிறது என்றாலும் உடலை ஒருவன் துஷ்பிரயோகம் செய்யும்போது அது விரைவுபடுத்தப்படுகிறது.
அழகிய ரூபத்துடன்(ரூப) இருக்கும் ஒருவன் ஒரு குறிப்பிட்ட இன்பத்தை அனுபவிக்கிறான். மற்றவர்களின் புகழ்மொழிகளிலிருந்து உண்டாகும் சுயமதிப்பிலிருந்து அது உருவாகிறது. ஆனால் அதை தக்கவைத்துக்கொள்ள போராடுவதிலும், இறுதியில் அது முடியாமல் போவதாலும் அந்த இன்பம் இழக்கப்படுகிறது. புலனின்பத் தேடலில் ஈடுபடுகிற ஒருவனுக்கு தர்மம் மற்றும் அதர்மம், ஆத்மா மற்றும் அநாத்மா பற்றி சிந்திக்க நேரம் கிடைப்பதில்லை. எனவே பகுத்தறியும் அறிவு(ப்ரக்ஞ) இழக்கப்படுகிறது. இந்த செயல்பாடுகளினால் ஞாபகசக்தியை(மேதா4) இழக்கிறான். புலனின்பத்தை இலக்காகக் கொண்ட ஒருவனின் செல்வமும்(த3ந) நிச்சயமாக அழிக்கப்படுகிறது. உற்சாகமும்(உத்ஸாஹ) போய்விடுகிறது ஏனெனில் புலன்-விஷயங்களை மீண்டும் அதேபோல் பெற இயலாது. ஒருகால் அதை அப்படியே மீண்டும் பெறுகிற பட்சத்தில், அதற்கு நிறைய முயற்சி செய்ய வேண்டும். மேலும் அப்படி அது பெறப்படும்போது அது ஒருபோதும் முதல் முறை கொடுத்த அதே அனுபவத்தைக் கொடுக்காது. இதனால் அதில் விருப்பமில்லாமல், வேறு எதையாவது தேடி அடைய மனம் யோசிக்கும். இவ்விதம் ஒன்றைப் பெறும்போது அது ஆரம்பத்தில் இன்பமாக அமிர்தம் போல இருக்கும், ஆனால் பின்னர் அது தொலைந்து போகும். தற்காலிகமான இத்தகைய இன்பங்கள் இறுதியில் ஒருவனை விஷம் போன்றதான துயரத்தில் ஆழ்த்துகிறது. புலனின்பத்தை மட்டுமே இன்பம் என அனுபவித்து பழகியவன், எப்படியேனும் அதை அடைய விரும்பி தர்மத்தில் சமரசங்களைச் செய்கிறான். அத்தகைய சமரசங்களின் விளைவு நிச்சயமாக துக்க வடிவத்தில் மட்டுமே இருக்கமுடியும். எனவே இவ்வகை இன்பங்கள், அதர்மமான செயல்களால் பிறக்கும் விரும்பத்தகாத அனுபவங்களுக்கு காரணமாக அமைகின்றன என சங்கரர் இங்கு கூறுகிறார்.
=> உலப்பில்லா ஆனந்தம்:
புலனடக்கம் பழகுதல் ஒன்றே வளர்பிறை போன்று சுகத்தை வளர்ப்பதற்கு உற்ற உபாயம். அம்மனிதன் எவ்வுலகில் எதற்கும் அடிமைப்பட மாட்டான். முடிவில்லாத நிலையான ஆனந்தம் அவன் பெறும் பேறு ஆகும்.
வாழ்வு எனும் பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்தார்கள். முதலில் அவர்கள் பெற்ற உலக விஷயங்களாகிய செல்வம், கல்வி, வாகனம், ஆபரணம் முதலியன அமிர்தத்தைப் போல இன்பம் கொடுத்தது. ஒவ்வொரு செயலுக்கும் எதிர்ச்செயல் என்பது உண்டு. யாரும் அதை தடுக்க முடியாது. வாழ்வு என்பதற்கு எதிர்ச்செயல் மரணம். அது விஷத்துக்கு ஒப்பானது. வாழ்வில் விருப்பங்கொண்டிருந்த தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பின்பு மரணம் எனும் விஷம் வந்தது. அதை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு விருப்பம் வரவில்லை. எனவே அவர்கள் மிக வருந்தினார்கள். எங்கெங்கேயோ ஓடினார்கள்; என்னென்னவோ செய்து பார்த்தார்கள். ஒன்றும் பயன்படவில்லை. முன்பு பெற்ற சுகவாழ்வே இப்பொழுது துன்பம் நிறைந்ததாகத் தென்பட்டது. புலனடக்கமே வடிவெடுத்துள்ள துறவியிடம் ஓடினார்கள். மரணத்தை வென்றவனாகிய அப்பரம புருஷன் தன்னை வந்தடைந்த உயிர்களை மரணத்தினின்று காப்பாற்றினான். ரஜோகுண சுகத்தைத் தவிர்த்து சத்வகுண சுகத்துக்குப் போகவேண்டும். இறுதியாக குணாதீதத்திலுள்ள சுகத்தைப் பெற வேண்டும்.
அடுத்த சுலோகத்தில் தாமஸ சுகம் கூறப்படுகிறது.
————————————————————————————————
||18.39|| தாமஸமான சுகம்:
यदग्रे चानुबन्धे च सुखं मोहनमात्मन: ।
निद्रालस्यप्रमादोत्थं तत्तामसमुदाहृतम् ।। ३९ ।।
யத3க்3ரே சாநுப3ந்தே4 ச ஸுக3ம் மோஹநமாத்மந: ।
நித்3ராலஸ்யப்ரமாதோ3த்த2ம் தத்தாமஸமுதா3ஹ்ருதம் ।। 39 ।।
यत् सुखं யத் ஸுக3ம் எந்த சுகம் अग्रे च அக்3ரே ச துவக்கத்திலும் अनुबन्धे च அநுப3ந்தே4 ச முடிவிலும் आत्मन: मोहनम् ஆத்மந: மோஹநம் தனக்கு மயக்கம் உண்டுபண்ணுகிறதோ
निद्रा आलस्य प्रमाद उत्थं நித்3ரா ஆலஸ்ய ப்ரமாத3 உத்த2ம் உறக்கம், சோம்பல், தடுமாற்றம் இவற்றினின்று பிறக்கும் तत् தத் அது तामसम् தாமஸம் தாமஸமானதென்று
उदाहृतम् உதா3ஹ்ருதம் உரைக்கப்படுகிறது.
துவக்கத்திலும் முடிவிலும் தன்னை மயக்குவதும், தூக்கம் சோம்பல் தடுமாற்றத்தினின்று பிறப்பதுமாகிய சுகம் தாமஸமென்று உரைக்கப்படுகிறது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
தொடக்கத்திலும் இறுதியிலும் ஒருங்கே ஆத்மாவுக்கு மயக்கம் விளைப்பதாய், உறக்கத்தினின்றும் சோம்பரினின்றும் தவறுதலினின்றும் பிறக்கும் இன்பம் தாமசமென்று கருதப்படும்.
விளக்கம்:
தாமஸ சுகம் எது என்பதை இந்த சுலோகத்தில் பகவான் கூறுகிறார்.
=> மன-மயக்கத்தை உண்டாக்கும் இன்பம்:
தொடக்கத்திலும் முடிவிலும் மனதை மோகத்திற்கு, குழப்பத்திற்கு உள்ளாக்குகிற அந்த சுகம் தாமஸம் எனக் கூறப்படுகிறது — ஆத்மந: மோஹநம். ஏதேனுமொரு வகையில் தனக்கு இன்பம் கிடைத்தால் போதுமென்று அறிவிலி ஆர்வத்தோடு அதை நாடுகிறான். அப்படிப்பட்ட மூன்று விஷயங்களை பகவான் இங்கு கோடிட்டுக் காட்டுகிறார் — நித்3ரா ஆலஸ்ய ப்ரமாத3 உத்த2ம்.
(1) நித்3ரா — தூக்கத்தில் ஒருவன் அனுபவிக்கும் இன்பம் தாமஸமானது. உறக்கத்தின்போது ஒருவனுக்கு இன்பம் கிடைத்தாலும் அதை அனுபவிக்க மனம் விழிதிருப்பதில்லை. உறக்கத்தில் சுகம் இல்லையென நாம் கூறவில்லை, ஆனால் அதே நேரத்தில் அது தமஸால், அதாவது முழுமையான அறியாமையால் முழுமையாக மூழ்கடிக்கப்படுகிறது. எனவே இன்பத்தை குறித்த நேர்மறையான அனுபவம் அங்கு இல்லை. உறக்கம் தேவையான ஒன்றுதான், ஆனால் இங்கு இன்பத்திற்காகவென அதிகம் உறங்குகிற ஒருவன் அனுபவிக்கும் சுகம் பேசப்படுகிறது.
(2) ஆலஸ்ய — சோம்பலினால் தோன்றுகிற சுகம் தாமஸம் ஆகும். செயல் செய்வதற்கான எந்த முயற்சியும் செய்யாதபோது, அதிலிருந்து உண்டாகும் கஷ்டத்திலிருந்து அவன் விடுபடுகிறான். கஷ்டத்தை தவிர்த்ததை இன்பம் என தனது மன-மயக்கத்தால் அவன் எண்ணுகிறான்.
(3) ப்ரமாத3 — அலட்சியம் மற்றும் கவனக்குறைவினால் தோன்றுகிற இன்பம் தாமஸ-சுகம் ஆகிறது. இதை நாடுபவர்கள் ‘விதி’ எனும் தத்துவத்தில் நம்பிக்கை மற்றும் விருப்பம் கொண்டவர்களாக தங்களை காட்டிக் கொள்கிறார்கள். எது வேண்டுமானாலும் நடக்கட்டும், ராமன் ஆண்டாலும் சரி, ராவணன் ஆண்டாலும் சரி, தர்மம் இருந்தாலும் சரி, அதர்மம் இருந்தாலும் சரி என எது குறித்தும் கவனம் கொள்ளாதவர்களாக அலட்சியமாக இருப்பது இவர்களுக்கு ஒருவகை இன்பத்தை அளிக்கிறது. செய்ய வேண்டியதை செய்யாமல் இருப்பது ஒருவனுக்கு சுகத்தை கொடுக்கிறது எனில் அது நிச்சயமாக தாமஸ சுகம் ஆகும். செய்யப்பட வேண்டிய ஒரு குறிப்பிட்ட காரியம் நம்மால் செய்ய இயலாமல் போவது அல்லது செய்யத் தகுதி இல்லாமல் ஆவது போன்றவை முற்றிலும் வேறு விஷயம். ஆனால் ஒருவனால் அதை செய்ய முடியும் எனும்போதும் மன மயக்கத்தினால் அங்கு அலட்சியமாக அதைப் பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல் இருக்கிறான். அதைச் செய்வதன் கஷ்டத்தை தவிர்த்து அதில் கிடைக்கும் சுகத்தில் அவன் துய்க்கிறான். இப்படிப்பட்ட இன்பம் தாமஸ சுகம் ஆகும்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
ஒட்டகம் முட்செடியை பெருவிருப்பத்தோடு தின்கிறது. முள் தைத்து அதன் உதடெல்லாம் ரத்தம் சொட்டினாலும் அது முள்ளைத் தின்பதை நிறுத்துவதில்லை. விஷய சுகத்தை நாடுபவர் போக்கு அத்தகையது.
————————————————————————————————
