புதன், 6 மே, 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.22 - 18.23

||18.22|| தாமஸ ஞானம்:

यत्तु कृत्स्नवदेकस्मिन्कार्येसक्तमहैतुकम्

अतत्त्वार्थवदल्पं तत्तामसमुदाहृतम् ।। २२ ।।

யத்து க்ருத்ஸ்நவதே3கஸ்மிந்கார்யேஸக்தமஹைதுகம்

அதத்த்வார்த2வத3ல்பம் தத்தாமஸமுதா3ஹ்ருதம் ।। 22 ।।


तु  து  மற்று     यत्  யத்  எந்த ஞானம்      एकस्मिन्  ஏகஸ்மிந்  ஒரே        कार्ये  கார்யே  காரியத்தை      

कृत्स्नवत्  க்ருத்ஸ்நவத்  முழுதும் என்று      सक्तम  ஸக்தம்  பற்றுவைத்து      

अहैतुकम्  அஹைதுகம்  யுக்திக்குப் பொருந்தாததாய்     

अतत्त्वार्थवत्  அதத்த்வார்த2வத்  உண்மைக்கு ஒவ்வாததாய்       अल्पं   அல்பம்   அற்பமாயுள்ள      

तत्  தத்  அது        तामसम्  தாமஸம்  தாமஸமானதென்று       उदाहृतम्  உதா3ஹ்ருதம்  சொல்லப்பட்டுள்ளது.


ஒரு காரியத்தையே முழுதுமென்று பற்றிக்கொண்டு யுக்திக்குப் பொருந்தாததாயும், உண்மைக்கு ஒவ்வாததாயும், அற்பமாயுமுள்ள ஞானம் எதுவோ அது தாமஸமெனப்படுகிறது


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

காரணங் கருதாமல், யாதேனும் ஒன்ற்றைக் காரியத்தை அனைத்துமாகக் கருதிப் பற்றுத லெய்துவதும், உண்மையிலறியாததும், அற்பத் தன்மையுடையது ஆகிய ஞானம் தாமசமென்று கூறப்படும்.


விளக்கம்:

இந்த சுலோகத்தில் தாமஸ ஞானம் குறித்து கூறப்படுகிறது.


=> தாமஸ ஞானம்:

ஏற்கனவே சொல்லப்பட்ட சாத்விக மற்றும் ராஜஸ ஞானத்திலிருந்து இந்த ஞானம் வேறுபட்டது என்பதை குறிக்கும் விதமாக பகவான்துஎனும் சொல்லைப் பயன்படுத்துகிறார். இங்கே ஒருவன் ஒரு பொருளுக்கு, கார்யே, அதாவது உடல் அல்லது வேறு ஏதேனும் ஒரு விஷயத்திற்கு, அதுவே அனைத்தும் என முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டவனாக இருக்கிறான்க்ருத்ஸ்நவத் ஸக்த. எல்லாமே குறிப்பிட்ட அந்த ஒரு பொருளில் முடிவடைவதுபோல அவனுக்குத் தெரிகிறது, அதற்கு அப்பால் என அவன் எதையும் பார்ப்பதில்லை. ஏனெனில் அனைத்தையும் அவன் உணர்வை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்கிறான். உதாரணமாக, அந்த ஒரு குறிப்பிட்ட பொருளாக உடலை எடுத்துக் கொள்ளலாம். இப்போது தாமஸ அறிவைக் கொண்ட ஒருவனுக்கு உடலைத் தவிர வேறு எதுவும் இல்லை. இந்த உடலுக்கு இருக்கிற பல்வேறு குணங்களைப் போல பிரக்ஞையுணர்வும் ஒரு குணம் என்று அவன் நினைக்கிறான். எனவே அனைத்தும் இந்த உடலில் இருப்பதால், இந்த உடல் மரணித்துவிட்டால் எல்லாம் போய்விட்டதாக எண்ணுகிறான். உடல் பருமனாக இருந்தால், நான் பருமனாக இருக்கிறேன்; உடல் உயரமாக இருந்தால் நான் உயரமாக இருக்கிறேன். இவ்விதம் உடலையே ஆத்மாவாக எடுத்துக் கொள்கிறான். இது சார்வாக மதத்தின் கோட்பாடாகும். அத்தகையவன் தனித்துவமான அம்சங்கள், தனித்துவமான சகுணங்கள், தனித்துவமான கர்மங்கள் மற்றும் தனித்துவமான சுக-துக்க அனுபவங்கள் கொண்ட வெவ்வேறு உயிரினங்களைப் பார்க்கிறான்


=> புல்லறிவாளன்:

வேறு சில சாத்தியக்கூறுகளை சங்கரர் இந்த இடத்தில் குறிப்பிடுகிறார். பக்தனாக இருக்கின்ற ஒருவன், கல் அல்லது மரத்தாலான ஒரு குறிப்பிட்ட வடிவத்தை இறைவனாக வழிபடுவது தாமஸ ஞானம் என்கிறார்

கடவுள் வழிபாட்டுக்கு விக்கிரகம் துணைபுரிகிறது. அந்த விக்கிரகத்தையே கடவுள் என நினைக்கும் அவன், அது சிதைவுபட்டுப்போனால் கடவுள் அழிந்துபோய்விட்டார் என்று நம்புகிறான். ஒரு காரியத்தை முழுதுமென்று பற்றிக் கொண்டிருப்பதற்கு இது ஒரு சான்றாகும். தான் உடலைவிட மேலானவன் என்பதையும், இறைவன் வடிவங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதையும் மந்த புத்தியுள்ள அம்மனிதன் அறிவதில்லை. விக்கிரகமானது இறைவனின் சொரூபத்துக்கு வெறும் புறச் சின்னமாகிறது. இறைவன் அந்த வடிவத்தில் அடங்கியவர் அல்ல. புல்லறிவாளர்களுக்கு இது விளங்குவதில்லை.


=> யுக்திக்குப் பொருந்தாதது:

தமோகுணத்தில் உதித்துள்ள அவ்வறிவை ஆராய்ந்து பார்த்தால் அது யுக்திக்குப் பொருந்தாதது என்பது விளங்கும். இதற்கு உதாரணமாக சங்கரர் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை இங்கு சுட்டிக்காட்டுகிறார். அவர்கள், அனைத்து கர்மங்களிலிருந்தும் ஒருவன் விடுபட உடலானது சுத்திகரிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள். மேலும் ஆத்மாவை உடலிற்கு வேறானதாக பார்க்கும் அவர்கள், அது உடலின் அளவைக் கொண்டிருப்பதாகக் கருதுகிறார்கள். உடலின் அளவு அதிகரிக்கும் போது, ​​ஆத்மா பெரிதாகிக்கொண்டே செல்கிறது என்பது அவர்களது கொள்கை. உடலிலிருந்து ஆத்மா வேறுபட்டது எனக் கூறிவிட்டு, உடலின் அளவை ஆத்மா கொண்டிருப்பதாகக் கூறும் அவர்களது கருத்தில் என்ன தர்க்கம் இருக்கிறது! எந்த காரணமுமற்ற, தர்க்கத்திற்கு பொருந்தாத இதுபோன்ற சிந்தனை தாமஸ பிரதானமானது. யுக்திக்கு அது முற்றிலும் முரண்பட்டதாக இருக்கிறது.


=> அற்பமான பலனைக் கொடுப்பது

மேலும், அத்தகைய அறிவு தத்துவமில்லாததாயும் உண்மைக்கு ஒவ்வாததாயும் இருக்கிறதுஅதத்த்வார்த2வத். அதாவது அதில் எந்த உண்மையும் இல்லை, எனினும் அது உண்மை என்று அவர்களால் கருதப்படுகிறது. இந்த வகையான அறிவை நாம் அறிவு என்றே கூறமுடியாது; ஆனால் அதைப் பின்பற்றுபவர்கள் அதை அறிவு என்று உறுதியாக நம்புகிறார்கள். ஆகையினாலேயே அது தாமஸம் என்று கூறப்படுகிறதுதாமஸம் உதா3ஹ்ருதம்

இந்த தாமஸ அறிவை விவரிக்க பகவான் இனியொரு சொல்லைப்  பயன்படுத்துகிறார்அல்பம். இது எந்த யுக்தியுமின்றி, காரணமுமின்றி இருப்பதால் இது அற்பமானது என்று சங்கரர் கூறுகிறார். அல்லது, அற்பமான பலனைக் கொண்டுள்ளதால் இதை அல்பம் என்று சொல்லலாம். இந்த வகையான அறிவு ஒருவனை எங்கும் வழிநடத்திச் செல்லாது. உதாரணமாக, உடலை ஆத்மா எனக் கூறும்போது அது துயரத்திற்கு மட்டுமே வழிவகுக்கும், ஏனெனில் உடலை பராமரிப்பது என்பது இயலாத காரியம். எப்படியும் அது வயதாகி இறுதியில் இறந்துவிடும். ஆகவே இந்த நம்பிக்கையை வைத்திருக்கும் எவரும் மரண பயத்தை தவிர்க்க இயலாது. எனவேதான், இதுபோன்ற அறிவிலிருந்து ஒருவன் பெறும் பலன் மிகவும் அற்பமானது. மேலும் அவன் உடலுக்கு அப்பால் என எதையும் பார்க்காததால், வரையறைக்கு உட்பட்ட புலனுணர்வை மட்டுமே உள்ளடக்கியதான இந்த அறிவு ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டுவிடுகிறது. அத்தகைய அறிவினால் நன்மை எதுவும் உண்டாவதில்லை ஆகவே இது அற்பமானதென்று கூறப்படுகிறது

இவ்விதம் ஏக ஆத்மாவாகப் பார்க்கின்ற அத்வைத ஞானம் சாத்விகம் என்றும், உடலுக்கு அப்பாற்பட்டது என ஏற்றுக்கொண்டாலும் பல ஆத்மாக்கள் இருப்பதாக எண்ணுகின்ற அறிவு ராஜஸம் என்றும், இந்த உடல்தான் ஆத்மா, உடலுக்கு வேறாக ஆத்மா என எதுவுமில்லை என்கிற கொள்கையை கொண்ட அறிவு தாமஸம் என்றும் கூறப்படுகிறது

இனி, கர்மத்தின் மூன்று வகைகள் குறித்த விளக்கம் வர இருக்கிறது

---------------------------------------------------------------------------------------------

||18.23|| சாத்விக கர்மம்:

नियतं सङ्गरहितमरागद्वेषत: कृतम्

अफलप्रेप्सुना कर्म यत्तत्सात्त्विकमुच्यते ।। २३ ।। 

நியதம் சங்கரஹிதமராக3த்3வேஷத: க்ருதம்

அப2லப்ரேப்ஸுநா கர்ம யத்தத்ஸாத்த்விகமுச்யதே ।। 23 ।।


अफलप्रेप्सुना  அப2லப்ரேப்ஸுநா  பயனில் விருப்பமில்லாதவனால்    

सङ्ग-रहितम्  சங்க-ரஹிதம்  பற்று இல்லாமல்    अराग द्वेषत:  அராக3 த்3வேஷத:  விருப்பு வெறுப்பின்றி      

नियतं  நியதம்  நியமிக்கப்பட்டுள்ள    यत् कर्म  யத் கர்ம  எந்த கர்மம்      कृतम्  க்ருதம்  செய்யப்படுகிறதோ     

तत्  தத்  அது      सात्त्विकम्  ஸாத்த்விகம்  சாத்விகம் என்று      उच्यते  உச்யதே  உரைக்கப்படுகிறது.


பயனில் விருப்பமில்லாதவனால், பற்று இல்லாமல், விருப்பு வெறுப்பின்றி, நியமிக்கப்பட்டுள்ள எந்த கர்மம் செய்யப்படுகிறதோ அது சாத்விகம் என்று உரைக்கப்படுகிறது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பயன்களை வேண்டாதா நொருவன் பற்றுதலின்றி, விருப்பு வெறுப்பின்றிச் செய்யும் விதி தழுவிய செய்கை சாத்விக மெனப்படும்.


விளக்கம்:

சுலோகம் இருபத்திமூன்று முதல் இருபத்தைந்து வரை மூன்று வகையான கர்மம் குறித்து பகவான் விளக்கமளிக்கிறார். முதலில் சாத்விகம்-கர்ம விவரிக்கப்படுகிறது


=> நியமிக்கப்பட்ட கர்மம்:

ஒருவனுக்கு நியமிக்கப்பட்ட கர்மம் எதுவோ அது நியதம் கர்ம ஆகும்நியதம். பொதுவாக இச்சொல் வேதத்தால் விதிக்கப்படுகிற நித்ய-நைமித்திக-கர்மத்தைக் குறிக்கிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் செய்யப்பட வேண்டிய எந்தவொரு கடமையும் நியதம் கர்ம அல்லது நித்ய கர்மம் ஆகும். இது ஒருவனது மனபரிபாகத்துக்கு ஏற்றபடி மாறுகிறது. உதாரணமாக, கணிதத்தில் கூட்டல் கழித்தல் போடுவது புதிதாகப் பள்ளியில் சேர்ந்திருக்கும் சிறுவன் ஒருவனுக்கு நித்ய கர்மமாகும். உயர்நிலை பள்ளியில் படிக்கிற மாணவன் அத்தகைய கணக்கை போடுவது நித்ய கர்மமாகும். அவனது வகுப்புக்கேற்ற மேலான கணக்குகளை அவன் போட வேண்டும். அதுபோல அவரவரின் பக்குவத்திற்கு ஏற்றபடி சமுதாயத்தில் அனைவருக்கும் கடமையுண்டு. அறப்போர் புரிந்து தீமையைக் களைந்து நலத்தைக் காப்பாற்றுவது அர்ஜுனனின் நியமிக்கப்பட்ட கர்மமாகும். அதுபோல நம் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கேற்ற கடமையுண்டு. அது அவனுக்குரிய நியத கர்மமாகிறது


=> விருப்பு-வெறுப்பின்றி செய்யப்படுவது:

சத்வகுண பிரதானமுடைய மனதை கொண்ட ஒருவனால் செய்யப்படுகிற கர்மம், சாத்விகம்-கர்ம ஆகும். அதை விளக்குவதற்கு கர்ம-யோகத்தின் வரையறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பற்றுதல் இல்லாமல் செய்யப்படும் எந்த செயலும் சாத்விகம் ஆகும்சங்க-ரஹிதம். ‘நான் இதைச் செய்கிறேன்என்கிற கர்த்ருத்துவ புத்தியில்லையாதலால், பற்றற்றவன் தன்னை எந்த கர்மத்துக்கும் கர்த்தாவென்று எண்ணுவதில்லை. இறைவனின் வெறும் கருவிநான்எனும் பாவனையுடன் செய்யப்படுகிற அந்த செயல் சாத்விகம்-கர்ம ஆகும்

மேலும் விருப்பு வெறுப்புகளால் தூண்டப்படாமல் செய்யப்படும் செயல் சாத்விகம்-கர்ம ஆகும். பொதுவாக எந்தவொரு செயல் செய்யப்படும்போது அது விருப்பு அல்லது வெறுப்பின் ஒரு அங்கத்தை தன்னகத்தே கொண்டிருக்கும். ஏனெனில் யாரும் பலனை எதிர்பார்க்காமல் ஒரு செயலைச் செய்ய முடியாது. ஆனால் ராக-த்வேஷத்தின் பிடியில் இல்லாமல் கடமைகளில் ஈடுபடுதல் சாத்விகமானது ஆகும்அராக3 த்3வேஷத: க்ருதம் கர்ம.


=> விளைவுகளில் விருப்பமில்லாதவன்:

மதம் சம்மந்தப்பட்ட வைதிக கர்மங்களோ அல்லது உலகியல் தொடர்பான லெளகிக கர்மங்களோ எதுவாக இருப்பினும் மக்கள் அதை ஒரு குறிப்பிட்ட பயனை எதிர்ப்பார்த்துச் செய்கிறார்கள். நேரடியான பலன் அல்லது குறைந்தபட்சம் புண்ணியத்தைச் சேர்த்து சொர்க்கம் அல்லது பின்நாட்களில் மேம்பட்ட சூழ்நிலைகளை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கர்மங்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் இங்கு பேசப்படுகிற இந்த சாத்விகம்-கர்ம என்பது அந்த வகையான பலனை விரும்பாத ஒருவனால் செய்யப்படுகிறதுஅப2லப்ரேப்ஸுநா. அவன் ஒரு கர்ம-யோகியாதலால், மோக்ஷத்தை அடையும்பொருட்டு தனது மனதை தூய்மைப்படுத்துவதற்காகவும்(அந்த-கரண-சு1த்3த்4யர்த2ம்) இறையருளைப் பெறுவதற்காகவும்(ஈச்1வர-ப்ரீத்யர்த2ம்) மட்டுமே அவன் செயல் செய்கிறான். இவ்விதம் பலனை விரும்பாத ஒருவனால் செய்யப்படும் கர்மம் அப2-ப்ரேப்ஸுநா க்ருதம் கர்ம, சாத்விகம்-கர்ம என்று அழைக்கப்படுகிறது

சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் என்றால் என்ன என்பதை நாம் எவ்வளவு நன்றாகப் புரிந்துகொள்கிறோமோ, அந்த அளவுக்கு கர்மத்தை புரிந்துகொள்வதில் அதிக நுணுக்கம் கிடைக்கிறது. நாம் அதிக விழிப்புணர்வுடன் செயல்படுவோம். அதனால்தான் சாஸ்திரம் இந்தப் பிரிவுகளைக் காட்டிக் கொடுக்கிறது. உணர்வு, அறிவு, துறவு, உணவு, தானம் போன்ற அன்றாடத்தில் இயைந்த பல்வேறு விஷயங்களை இந்த மூன்று குணங்களின் அடிப்படையில் எந்த அளவு புரிந்துகொள்கிறோமோ, அந்த அளவு நமது செயலும் நுண்மையானதாக மாறும். சாத்விகமான கர்மத்தின் வரையறையைப் பார்த்தோம்.

இனி, பகவான் ராஜஸம் கர்ம எது என்பதை அடுத்த சுலோகத்தில் கூறுகிறார்.   


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

சாத்விக இயல்புடையவன் செய்யும் ஆத்ம சாதனங்களை ஆடம்பரமாக மற்றவர்களிடம் காட்டிக்கொள்வதில்லை. கூடிய வரையில் தனியாக அவன் அவைகளைச் செய்து முடிக்கிறான். இரவில் மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்பொழுது அவன் கொசு வலைக்குள் உட்கார்ந்துகொண்டு அமைதியாகத் தியானம் செய்கிறான்.

————————————————————————————————