திங்கள், 29 ஜூன், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.40 - 18.41

||18.40|| உலகிலுள்ள அனைத்தும் முக்குண வடிவம்:

न तदस्ति पृथिव्यां वा दिवि देवेषु वा पुन: ।

सत्त्वं प्रकृतिजैर्मुक्तं यदेभि: स्यात् त्रिभिर्गुणै: ।। ४० ।। 

ந தத3ஸ்தி ப்ருதி2வ்யாம் வா தி3வி தே3வேஷு வா புந: ।

ஸத்த்வம் ப்ரக்ருதிஜைர்முக்தம் யதே3பி4: ஸ்யாத் த்ரிபி4ர்கு3ணை: ।। 40 ।।


प्रकृतिजै:  ப்ரக்ருதிஜை:  பிரக்ருதியிலிருந்து உதித்த     एभि:  ஏபி4:  இந்த     त्रिभि: र्गुणै:  த்ரிபி4: கு3ணை:  மூன்று குணங்களிலிருந்து        यत् मुर्क्तं स्यात्  யத் முக்தம் ஸ்யாத்  எது முக்தியடைந்திருக்கிறதோ     तत् सत्त्वं  தத் ஸத்த்வம்  அந்த உயிர்     पृथिव्यां  ப்ருதி2வ்யாம்  பூவுலகிலோ     वा  வா  அல்லது    पुन:  புந:  மேலும்     दिवि देवेषु  தி3வி தே3வேஷு  தேவலோகத்தில் தேவர்களுக்கு இடையிலோ       न अस्ति  ந அஸ்தி  இல்லை.


பிரக்ருதியிலிருந்து உதித்த இம் முக்குணங்களினின்று விடுதலையடைந்த உயிர் மண்ணுலகில் அல்லது விண்ணுலகில் வானவர்களுக்குள்ளும் இல்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

இயற்கையில் தோன்றும் இம் மூன்று குணங்களினின்றும் விடுபட்ட உயிர் மண்ணுலகத்திலுமில்லை; வானுலத்தில் தேவருள்ளேயுமில்லை.


விளக்கம்:

குண அடிப்படையில் பல்வேறு விஷயங்களின் மூவகை பிரிவுகளைப் பற்றி பேசிய பகவான் இந்த பகுதியை இங்கு முடிவுரை செய்கிறார். உலகிலுள்ள அனைத்தும் முக்குண வடிவமாகவே இருக்கிறது என்கிறார்.


=> குணபேதத்திலிருந்து விடுபட்டவர் எவருமில்லை:

இங்கு ‘ஸத்த்வம்’ எனில் ஒரு உயிரினத்தை, உயிர் வாழும் ஒரு உயிரியைக் குறிக்கிறது. முக்குணங்களிலிருந்து விடுபட்ட எந்தவொரு உயிரும் இல்லை என பகவான் கூறுகிறார். எங்கு? பூமியில், மற்ற உலகங்களில், தேவலோகத்தில் — ப்ருதி2வ்யாம் தி3வி தே3வேஷு. மனிதர்கள் உட்பட பூமியிலுள்ள உயிரினங்கள், சொர்க்கத்திலுள்ள தேவர்கள் என எங்கும் இந்த மூன்று குணத்திலிருந்து விடுபட்ட எந்தவொரு உயிரும் கிடையாது — த்ரிபி4: கு3ணை: முக்தம் ஸ்யாத் ந அஸ்தி. புல் முதல் பிரம்மதேவர் வரை எல்லா உயிர்களும் முக்குண மயமான பிரக்ருதியில் கட்டுண்ட ஆத்மாக்கள் ஆவர். அவர்கள் மக்களாக இருந்தாலும் சரி, தேவர்களாக இருந்தாலும் சரி முக்குணங்களைக் கடக்கும் வரையில் எல்லாரும் பந்தப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். அதாவது பிறப்பும் இறப்பும் அவர்களுக்கு மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. குணவேறுபாடுகளுக்கு ஏற்ப அந்த ஜீவர்களின் பிறப்பு மேலானதாகவோ கீழானதாகவோ அமைகின்றது. அனைத்து ஜீவர்களுள் மிகப் பெரியவர் பிரம்மதேவர். அவர் அடைந்திருப்பது ஒரு பதவியேயன்றி முக்தியல்ல. அதாவது முக்குணங்களில் அவரும் சம்பந்தப்பட்டிருக்கிறார். முக்குணங்களைக் கொண்டல்லாமல் படைப்புத் தொழில் நிகழாது. பிரக்ருதி லயம் என்பது அவர் பெற்றுள்ள பெரிய பதவியாகும். ஆனால் மற்ற ஜீவர்களுக்கு இருப்பது போல பிரம்மாவுக்கு மேலும் பிறப்பு இல்லை. ஒரு கல்பத்தின் முடிவில் அவர் கிரமமுக்தியடைகிறார். அப்பொழுது அவர் முக்குணங்களைக் கடந்தவர் ஆகிறார். 

எனவே பிரக்ருதியான மாயையிலிருந்து தோன்றிய இந்த சத்வ, ரஜஸ் மற்றும் தமஸிலிருந்து முற்றிலும் விடுபட்ட எந்த உயிரும் இல்லை. சங்கரர் இதை உயிரினமாக எடுத்துக்கொள்கிறார், ஆனால் அதை தோன்றியிருக்கின்ற எந்தவொன்றுக்கும் நீட்டித்துப் பார்க்க முடியும். எதுவும் இந்த குணங்களிலிருந்து விடுபடவில்லை. முற்றிலும் தமஸின் வடிவாக இருக்கின்ற பாறையிருந்து சில வேறுபாடுகளுடன் தமஸை பிரதானமாகக் கொண்ட மரம், செடி, பறவை, விலங்கு போன்றவைகளும் இதில் அடக்கம்.

மனிதர்களிடமும் இந்த மூன்று குணங்களில் ஏதேனும் ஒன்று மேலோங்கி இருக்கலாம். இது நமக்கு நான்கு அடிப்படை சாத்தியக்கூறுகளை அளிக்கிறது, ஆனால் அங்கேயும் லட்சக் கணக்கான வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக குணங்களின் பார்வையிலிருந்தும் கர்மத்தின் அடிப்படையிலும் நான்கு பிரிவுகள் உள்ளன — பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன்.


=> அடுத்த பகுதிக்கான சங்கரரின் அறிமுகம்:

குணம் மற்றும் கர்மத்தின் அடிப்படையில் மனிதர்களை நான்கு பிரிவுகளாகப் பகுப்பதை சங்கரர் பின்வருமாறு அறிமுகப்படுத்துகிறார். செயல், அந்தச் செயலுக்கான காரணங்கள் மற்றும் செயலின் விளைவு ஆகியவற்றால் வகைப்படுத்தபடுகிற பிறவிச் சுழற்சியான சம்சாரம் என்பது, பதினைந்தாவது அத்தியாயத்தில் வேர்கள் மேல்நோக்கிய மரத்தின் (ஊர்த்4வமூலம்) உவமையால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார். கர்மத்தின் விளைவினால் ஒரு உடலின் பிறப்பு ஏற்படுகிறது, அதன் காரணமாக மீண்டும் கர்மம் உண்டாகிறது, அந்த கர்மத்திற்கு ஒரு பலன் கிடைக்கிறது, அது மீண்டும் மற்றொரு உடலின் பிறப்பிற்கு வழிவகுக்கிறது. இதுவே சம்சாரம் ஆகும். இந்த சம்சாரத்திலிருந்து விடுபட விரும்பினால், இந்த மூன்று குணங்களிலிருந்தும் விடுபட வேண்டும். ஏனெனில், சம்சாரம் என்பது சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய இந்த மூன்று குணங்களால் ஆனது. அவற்றின் பிடியில் இருக்கும் வரை, சம்சாரத்திலிருந்து விடுபட முடியாது. யாராக இருந்தாலும் ஒன்று சாத்விக கைவிலங்கு எனப்படும் பொன்-விலங்கினாலோ, அல்லது ராஜஸ கைவிலங்கு எனப்படும் வெள்ளி-விலங்கினாலோ, அல்லது தாமஸ கைவிலங்கான இரும்பு-விலங்கினாலோ பிணைக்கப்பட்டிருக்கிறான். மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலம் கைவிலங்கை மாற்ற முடியுமே தவிர சம்சாரத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. உதாரணமாக, மனிதன் ஒருவன் அதிக புண்ணியத்தை ஈட்டி தேவனின் வடிவத்தை அடையலாம். ஆனாலும் தேவனும் முக்குணத்திற்கு உட்பட்டவனே ஆவான். எனவே இந்த மூன்று குணங்களைக் கொண்ட சம்சாரத்திலிருந்து எப்படி விடுதலை பெறுவது என்பது கூறப்பட வேண்டும். இதற்காக, ஒரு புதிய பகுதி தொடங்குகிறது.

முழு கீதையின் சாராம்சத்தையும் தொகுத்துக் கூற வேண்டும்; மேலும், மோக்ஷ புருஷார்த்தத்தில் ஆர்வம் கொண்டவர்களால் இது பின்பற்றப்பட வேண்டும். இந்த நோக்கத்திற்காகவே பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் என்ற பிரிவுகள் கூறப்பட்டுள்ளன. இந்தப் பிரிவுகள் நிச்சயமாக குணங்களுடன் தொடர்புடையவை, ஆனால் அதே நேரத்தில் இது ஒரு புதிய தலைப்பு ஆகும்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஒருவன் தாழ்ந்த சுபாவத்தோடு நெடுங்காலம் போராடியும் ஆத்ம ஞானத்தின் பொருட்டு இடைவிடாது உழைத்தும் சமாதி நிலையை அடையும்போது அகங்காரம் அடியோடு அகலும். ஆனால் சமாதி நிலையை அடைவது மிகவும் கஷ்டம். முக்குணத்தில் பிறந்த அகங்காரமானது எளிதில் நீங்குவதில்லை. அதனால்தான் நாம் இவ்வுலகில் மறுபடியும் பிறந்து துன்பத்தை அனுபவிக்கிறோம்.

————————————————————————————————

||18.41|| குண அடிப்படையில் நான்கு வர்ணதர்மத்தின் விளக்கம்:

ब्राह्मणक्षत्रियविशां शूद्राणां च परन्तप ।

कर्माणि प्रविभक्तानि स्वभावप्रभवैर्गुणै: ।। ४१ ।।  

ப்3ராஹ்மணக்ஷத்ரியவிசா1ம் சூ1த்3ராணாம் ச பரந்தப ।

கர்மாணி ப்ரவிப4க்தாநி ஸ்வபா4வப்ரப4வைர்கு3ணை: ।। 41 ।।


परन्तप  பரந்தப  எதிரிகளை எரிப்பவனே      ब्राह्मण क्षत्रिय विशां  ப்3ராஹ்மண க்ஷத்ரிய விசா1ம்  பிராம்மண, க்ஷத்ரிய, வைசியர்களுடைய       शूद्राणां च  சூ1த்3ராணாம் ச  சூத்திரர்களுடையவும்      कर्माणि  கர்மாணி  கர்மங்கள்      स्वभाव प्रभवै:  ஸ்வபா4வ ப்ரப4வை:  சுபாவத்திலிருந்து பிறந்த      गुणै:  கு3ணை:  குணங்களுக்கு ஏற்றவாறு       प्रविभक्तानि  ப்ரவிப4க்தாநி  பிரிக்கப்பட்டிருக்கின்றன.


எதிரிகளை எரிப்பவனே, பிராம்மண, க்ஷத்ரிய, வைசிய சூத்திரர்களுடைய கர்மங்கள் அவரவர் இயல்பில் உதித்த குணங்களுக்கு ஏற்பப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

பரந்தபா! பிராம்மணர் க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய தொழில்கள் அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின்படி வகுப்புற்றனவாம்;


விளக்கம்:

பொதுவாக வர்ணம் என்று அழைக்கப்படுகிற பிராம்மண, க்ஷத்ரிய, வைசிய மற்றும் சூத்திரர்களுடைய கர்மங்கள் அல்லது கடமைகள் குறித்த பிரிவுகள் இங்கு பேசப்படுகிறது. இந்த ஒவ்வொரு பிரிவுகளில் இருப்பர்களின் கடமைகள் மற்றவர்களின் கடமைகளிலிருந்து வேறுபட்டவை. இந்த பேதங்கள் அல்லது பிரிவுகள் ஒருவனின் குணங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த குணங்கள் சுபாவத்திலிருந்து, அதாவது ஒருவனுடைய இயல்பிலிருந்து பிறந்தவை — ஸ்வபா4வ ப்ரப4வை: கு3ணை:, என்கிறார் பகவான். சுபாவம் என்பதற்கு ஈஷ்வரனுடைய பிரக்ருதி அல்லது மாயை என விளக்கமளிக்கிறார் சங்கரர். அது முக்குணமாயுள்ளது. குணத்துக்கு தகுந்தபடி கர்மம் வேறுபடுகிறது. கர்மத்திலிருந்து பெறப்படுகிற சம்ஸ்காரத்துக்கு ஏற்றவாறு சுபாவம் மாறுகிறது. எனவே கர்மமும் சுபாவமும் இணைபிரியாதவைகள். ஒருவனின் சுபாவம் எப்படியோ அப்படி வர்ணம் மாறுகிறது. ஆகவே, ஒரு மனிதன் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவன் என்பதை அவனுடைய சுபாவத்திலிருந்தும், அதிலிருந்து உண்டாகிற கர்மத்திலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். சுபாவம் என்பது மிக சூக்ஷமமானது. எளிதில் அதை தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் ஒருவன் செய்கிற கர்மத்திலிருந்து அவனுடைய சுபாவம் எத்தகையது என்பது வெளிப்படுகிறது.


=> சுபாவம்:

ஸ்வபா4’ என்பதற்கு ‘ஒருவனின் இயல்பு’ என இனியொரு பொருளையும் கூறுகிறார் சங்கரர். ஒருவனது இயல்பே அவனது குறிப்பிட்ட செயல்களுக்கு காரணமாகிறது, மேலும் அந்த இயல்புக்குக் காரணமாக இருப்பது முக்குணங்களின் விகிதாச்சாரமே ஆகும். ஒரு பிராமணனின் இயல்பு சத்வ குணத்தின் ஆதிக்கத்தால் பிறக்கிறது. அதே சமயம் ஒரு க்ஷத்ரியனின் இயல்பு ரஜோ குணத்தின் ஆதிக்கத்தாலும், இரண்டாம் நிலையில் சத்வ குணம் துணையாக இருப்பதாலும் ஏற்படுகிறது. ஒரு வைசியனுக்கும் ரஜோ குணத்தின் ஆதிக்கம் இருக்கும், ஆனால் அவனுக்கு இரண்டாவதாக தமோ குணம் இருக்கிறது. மேலும் ஒரு சூத்திரனுக்குத் தமோ குணத்தின் ஆதிக்கமும், ரஜோ குணம் இரண்டாம் நிலையிலும் இருக்கிறது. இதுவே ஒரு பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், அல்லது சூத்திரன் என்பதற்கான உண்மையான வரையறை ஆகும். இந்த பிரிவுகள் ஒரு நபரின் இயல்பை அடிப்படையாகக் கொண்டது, எனவே இது உலகளாவியது.

பிராமணன் —> சத்வ குணம்.

க்ஷத்ரியன் —>  ரஜோ குணம், சத்வ குணம்.

வைசியன் —> ரஜோ குணம், தமோ குணம்.

சூத்திரன் —> தமோ குணம், ரஜோ குணம்.

இந்த நான்கு வகையான குணபேதம் கொண்ட மனிதர்கள் இல்லாத சமூகம் எது? ஒருவனிடம் சத்வம், ரஜஸ் அல்லது தமஸ் இவற்றில் எது மேலோங்கி இருக்கிறது என்பதை எப்படி அறியமுடியும்? அந்த நபரின் நடத்தை சில அறிகுறிகளைக் காட்டிக் கொடுக்கும். சத்வம் மேலோங்கி இருக்கும்போது அமைதியும் நிதானமும் இருக்கும்; ரஜஸ் மேலோங்கி இருக்கும் இடத்தில் தலைமைப் பண்பு இருக்கும். ரஜஸ் மேலோங்கியும், சத்வம் இரண்டாவதாகவும் உள்ள ஒருவன் இயல்பாகவே ஒரு சிறந்த அமைப்பாளராக இருப்பான். மேலும் சுயநலம், பேராசை போன்றவை இருக்கும் இடத்தில், ரஜஸ் மேலோங்கியும் தமஸ் இரண்டாவதாகவும் இருக்கிறது. குழப்பம், மயக்கம், மந்தநிலை போன்றவை இருக்கும் இடத்தில் தமஸ் மேலோங்கி இருக்கிறது. எனவே ஒருவனின் சுபாவம் அப்படி இருக்க இந்த குணங்களே காரணங்கள். அவைகளே அவர்களை அந்த குறிப்பிட்ட வகையான செயல்களை செய்யத் தூண்டுகின்றன.


=> மனப்பான்மையில் மாற்றம்:

பிறப்பின் அடிப்படையில் அல்ல, சுபாவத்தின் அடிப்படையிலேயே இந்த வர்ணபேதம் பகவானால் பகரப்படுகிறது. ஒருவன் எந்த சூழ்நிலையில் பிறந்திருந்தாலும், பிராமணனின் குணத்தை அதாவது சத்வ குணப் பிரதானத்தை பெறுவதற்குத் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒருவன் கடமையால் க்ஷத்ரியனாக இருக்கலாம், ஆனால் அவனிடம் ரஜோ குணம் மேலோங்கி இருக்க வேண்டிய அவசியமில்லை. செயலில் போர் வீரனாக இருப்பவன் குணத்தால் ஒரு பிராமணனாக இருக்கலாம். இதைத்தான் கிருஷ்ணர் இங்கு அர்ஜுனனிடம் கூறுகிறார். சரியான மனப்பான்மையுடன் உன் கடமையைச் செய், அப்போது நீ ஒரு பிராமணன் ஆகிறாய்; ஆனால் உன் கடமையை மாற்றுவதால் நீ பிராமணன் ஆகிவிடுவதில்லை. நீ எங்கிருந்தாலும், என்ன செய்துகொண்டிருந்தாலும், அதுவே ஒரு பிராமணனாக ஆவதற்குப் போதுமானது. இட மாற்றமோ அல்லது கடமை மாற்றமோ ஒருவனை மாற்றுவது கிடையாது, மாறாக மனப்பான்மையில் மாற்றம் தேவை. அதுதான் இந்த முழு வாதத்தின் சாராம்சம் ஆகும். அதை நாம் இப்போது காணலாம்.

ஒருவனிடம் சத்வ குணம் மேலோங்கி இருந்தால், அவனுடைய வெளிப்பாடு எப்படி இருக்கும் எனும் கேள்விக்கு கிருஷ்ணர் அடுத்த சுலோகத்தில் பதிலளிக்கிறார்.

————————————————————————————————

செவ்வாய், 23 ஜூன், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.38 - 18.39

||18.38|| ராஜஸமான சுகம்

विषयेन्द्रियसंयोगाद् यत्तदग्रेऽमृतोपमम् ।

परिणामे विषमिव तत्सुखं राजसं स्मृतम् ।। ३८ ।।

விஷயேந்த்3ரியஸம்யோகா3த்3 யத்தத3க்3ரேऽம்ருதோபமம் ।

பரிணாமே விஷமிவ தத்ஸுக2ம் ராஜஸம் ஸ்ம்ருதம் ।। 38 ।।


विषय इन्द्रिय संयोगात्  விஷய இந்த்3ரிய ஸம்யோகா3த்  புலனுறுப்பு அதன் பொருளுடன் தொடர்பு கொள்வதால்    यत् तत्  யத் தத்  எந்த ஒன்று      अग्रे  அக்3ரே  முதலில்      अमृत उपमम्  அம்ருத உபமம்  அமிர்தத்திற்கு ஒப்பானது     परिणामे  பரிணாமே  முடிவில்     विषम् इव விஷம் இவ  விஷம் போன்றது       तत् सुखं  தத் ஸுக2ம்  அந்த சுகமாமது      राजसं स्मृतम्  ராஜஸம் ஸ்ம்ருதம்  ராஜஸமெனச் சொல்லப்படுகிறது.


புலனுறுப்பு அதன் பொருளுடன் தொடர்பு கொள்வதால் முதலில் அமிர்தம் போன்றிருந்து முடிவில் விஷம் போன்றாகும் சுகம் ராஜஸமென்று சொல்லப்படுகிறது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால் தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து விளைவில் நஞ்சு போன்றதாய் முடியும் இன்பம் ராஜச மெனப்படும்.


விளக்கம்:

எப்படிப்பட்ட சுகமானது ராஜஸம் என இந்த சுலோகத்தில் விளக்கப்படுகிறது.


=> புலனின்பம்:

புலனுறுப்புக்கள் அவற்றினுடைய விஷயங்களுடன் தொடர்பு கொள்வதால் கிடைக்கின்ற இன்பம் ராஜஸமானது — விஷய இந்த்3ரிய ஸம்யோகா3த். இந்திரியங்கள் அவற்றின் விஷயங்களாக உள்ள சப்தம், ஸ்பர்ஷம், ரூபம், ரசம் மற்றும் கந்தம் ஆகியவற்றுடன் சேரும்போது இன்பம் உண்டாகிறது. உதாரணமாக அருமையான சுவை, இனிமையான இசை, அழகான உருவம், இனிய தொடுதல் மற்றும் நல்ல வாசனை ஆகியவை கொடுக்கின்ற ஆனந்தம் இங்கு பேசப்படுகிறது. தொடர்பின் காரணமாக உண்டாகிற இந்த சுகம் ‘ஸம்ஸர்ஜ போ4கா3:’ என அழைக்கப்படுகிறது. 

அத்தகைய புலன்-பொருள்கள் விரும்பப்படும்போது, ஆரம்பத்தில் அது அமிர்தம் போன்றது — அக்3ரே அம்ருத உபமம், அதாவது அது எளிதானது. மேலும், இந்திரியங்கள் அவற்றின் விருப்பப்பட்ட பொருள்களுடன் தொடர்பு கொள்வதற்கு அந்தக்கரணத்தை தயார்ப்படுத்த வேண்டிய தேவையில்லை. அது முற்றிலும் ஒரு புலனுணர்வு சுகம், ஒரு விலங்குகூட அதை அவ்விதத்தில் அனுபவிக்க முடியும். அது எளிமையானதாகவும் விரும்பத்தக்கதாகவும் இருப்பதால் அது அமிர்தத்தை போன்றது எனக் கூறப்படுகிறது. 


=> விஷமாதல்:

சில காலத்திற்கு பிறகு மாற்றம் நிகழ்கிறது — பரிணாமே, அது விஷம் போன்றதாக ஆகிறது — விஷம் இவ. அதாவது, இந்த வகையான இன்பம் உடலின் அனுபவிக்கும் திறனையே அழிக்கிறது. இந்த இன்பங்கள் ஒருவனின் வலிமை, அழகு, அறிவு, ஞானம், செல்வம் மற்றும் உற்சாகம் ஆகியவற்றை அழிக்கின்றன என்று சங்கரர் கூறுகிறார் — 3ல-வீர்ய-ரூப-ப்ரக்ஞ- மேதா4-த3ந-உத்ஸாஹ-ஹாநி-ஹேதுவத்.  புலனின்பங்களில் துய்க்கும் ஒருவன் தனது உடல் ஆரோக்கியம் மற்றும் புலனுறுப்புகளின் சக்திகள்(வீர்ய) ஆகிய இரண்டிலும் தனது வலிமையை(3) இழக்கிறான். வயதாகும்போது இவைகளில் இயற்கையான இழப்பு ஏற்படுகிறது என்றாலும் உடலை ஒருவன் துஷ்பிரயோகம் செய்யும்போது அது விரைவுபடுத்தப்படுகிறது. 

அழகிய ரூபத்துடன்(ரூப) இருக்கும் ஒருவன் ஒரு குறிப்பிட்ட இன்பத்தை அனுபவிக்கிறான். மற்றவர்களின் புகழ்மொழிகளிலிருந்து உண்டாகும் சுயமதிப்பிலிருந்து அது உருவாகிறது. ஆனால் அதை தக்கவைத்துக்கொள்ள போராடுவதிலும், இறுதியில் அது முடியாமல் போவதாலும் அந்த இன்பம் இழக்கப்படுகிறது. புலனின்பத் தேடலில் ஈடுபடுகிற ஒருவனுக்கு தர்மம் மற்றும் அதர்மம், ஆத்மா மற்றும் அநாத்மா பற்றி சிந்திக்க நேரம் கிடைப்பதில்லை. எனவே பகுத்தறியும் அறிவு(ப்ரக்ஞ) இழக்கப்படுகிறது. இந்த செயல்பாடுகளினால் ஞாபகசக்தியை(மேதா4) இழக்கிறான். புலனின்பத்தை இலக்காகக் கொண்ட ஒருவனின் செல்வமும்(3) நிச்சயமாக அழிக்கப்படுகிறது. உற்சாகமும்(உத்ஸாஹ) போய்விடுகிறது ஏனெனில் புலன்-விஷயங்களை மீண்டும் அதேபோல் பெற இயலாது. ஒருகால் அதை அப்படியே மீண்டும் பெறுகிற பட்சத்தில், அதற்கு நிறைய முயற்சி செய்ய வேண்டும். மேலும் அப்படி அது பெறப்படும்போது அது ஒருபோதும் முதல் முறை கொடுத்த அதே அனுபவத்தைக் கொடுக்காது. இதனால் அதில் விருப்பமில்லாமல், வேறு எதையாவது தேடி அடைய மனம் யோசிக்கும். இவ்விதம் ஒன்றைப் பெறும்போது அது ஆரம்பத்தில் இன்பமாக அமிர்தம் போல இருக்கும், ஆனால் பின்னர் அது தொலைந்து போகும். தற்காலிகமான இத்தகைய இன்பங்கள் இறுதியில் ஒருவனை விஷம் போன்றதான துயரத்தில் ஆழ்த்துகிறது. புலனின்பத்தை மட்டுமே இன்பம் என அனுபவித்து பழகியவன், எப்படியேனும் அதை அடைய விரும்பி தர்மத்தில் சமரசங்களைச் செய்கிறான். அத்தகைய சமரசங்களின் விளைவு நிச்சயமாக துக்க வடிவத்தில் மட்டுமே இருக்கமுடியும். எனவே இவ்வகை இன்பங்கள், அதர்மமான செயல்களால் பிறக்கும் விரும்பத்தகாத அனுபவங்களுக்கு காரணமாக அமைகின்றன என சங்கரர் இங்கு கூறுகிறார். 


=> உலப்பில்லா ஆனந்தம்:

புலனடக்கம் பழகுதல் ஒன்றே வளர்பிறை போன்று சுகத்தை வளர்ப்பதற்கு உற்ற உபாயம். அம்மனிதன் எவ்வுலகில் எதற்கும் அடிமைப்பட மாட்டான். முடிவில்லாத நிலையான ஆனந்தம் அவன் பெறும் பேறு ஆகும்.

வாழ்வு எனும் பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்தார்கள். முதலில் அவர்கள் பெற்ற உலக விஷயங்களாகிய செல்வம், கல்வி, வாகனம், ஆபரணம் முதலியன அமிர்தத்தைப் போல இன்பம் கொடுத்தது. ஒவ்வொரு செயலுக்கும் எதிர்ச்செயல் என்பது உண்டு. யாரும் அதை தடுக்க முடியாது. வாழ்வு என்பதற்கு எதிர்ச்செயல் மரணம். அது விஷத்துக்கு ஒப்பானது. வாழ்வில் விருப்பங்கொண்டிருந்த தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பின்பு மரணம் எனும் விஷம் வந்தது. அதை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு விருப்பம் வரவில்லை. எனவே அவர்கள் மிக வருந்தினார்கள். எங்கெங்கேயோ ஓடினார்கள்; என்னென்னவோ செய்து பார்த்தார்கள். ஒன்றும் பயன்படவில்லை. முன்பு பெற்ற சுகவாழ்வே இப்பொழுது துன்பம் நிறைந்ததாகத் தென்பட்டது. புலனடக்கமே வடிவெடுத்துள்ள துறவியிடம் ஓடினார்கள். மரணத்தை வென்றவனாகிய அப்பரம புருஷன் தன்னை வந்தடைந்த உயிர்களை மரணத்தினின்று காப்பாற்றினான். ரஜோகுண சுகத்தைத் தவிர்த்து சத்வகுண சுகத்துக்குப் போகவேண்டும். இறுதியாக குணாதீதத்திலுள்ள சுகத்தைப் பெற வேண்டும். 

அடுத்த சுலோகத்தில் தாமஸ சுகம் கூறப்படுகிறது. 

————————————————————————————————

||18.39|| தாமஸமான சுகம்:

यदग्रे चानुबन्धे च सुखं मोहनमात्मन: । 

निद्रालस्यप्रमादोत्थं तत्तामसमुदाहृतम् ।। ३९ ।।

யத3க்3ரே சாநுப3ந்தே4 ச ஸுக3ம் மோஹநமாத்மந: ।

நித்3ராலஸ்யப்ரமாதோ3த்த2ம் தத்தாமஸமுதா3ஹ்ருதம் ।। 39 ।।


यत् सुखं  யத் ஸுக3ம்  எந்த சுகம்      अग्रे च  அக்3ரே ச  துவக்கத்திலும்      अनुबन्धे च  அநுப3ந்தே4  முடிவிலும்    आत्मन: मोहनम्  ஆத்மந: மோஹநம்  தனக்கு மயக்கம் உண்டுபண்ணுகிறதோ     

निद्रा आलस्य प्रमाद उत्थं  நித்3ரா ஆலஸ்ய ப்ரமாத3 உத்த2ம்  உறக்கம், சோம்பல், தடுமாற்றம் இவற்றினின்று பிறக்கும்      तत्  தத்  அது      तामसम्  தாமஸம்  தாமஸமானதென்று      

उदाहृतम्  உதா3ஹ்ருதம்  உரைக்கப்படுகிறது.


துவக்கத்திலும் முடிவிலும் தன்னை மயக்குவதும், தூக்கம் சோம்பல் தடுமாற்றத்தினின்று பிறப்பதுமாகிய சுகம் தாமஸமென்று உரைக்கப்படுகிறது. 


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

தொடக்கத்திலும் இறுதியிலும் ஒருங்கே ஆத்மாவுக்கு மயக்கம் விளைப்பதாய், உறக்கத்தினின்றும் சோம்பரினின்றும் தவறுதலினின்றும் பிறக்கும் இன்பம் தாமசமென்று கருதப்படும்.


விளக்கம்:

தாமஸ சுகம் எது என்பதை இந்த சுலோகத்தில் பகவான் கூறுகிறார்.


=> மன-மயக்கத்தை உண்டாக்கும் இன்பம்:

தொடக்கத்திலும் முடிவிலும் மனதை மோகத்திற்கு, குழப்பத்திற்கு உள்ளாக்குகிற அந்த சுகம் தாமஸம் எனக் கூறப்படுகிறது — ஆத்மந: மோஹநம். ஏதேனுமொரு வகையில் தனக்கு இன்பம் கிடைத்தால் போதுமென்று அறிவிலி ஆர்வத்தோடு அதை நாடுகிறான். அப்படிப்பட்ட மூன்று விஷயங்களை பகவான் இங்கு கோடிட்டுக் காட்டுகிறார் — நித்3ரா ஆலஸ்ய ப்ரமாத3 உத்த2ம்.

(1) நித்3ரா — தூக்கத்தில் ஒருவன் அனுபவிக்கும் இன்பம் தாமஸமானது. உறக்கத்தின்போது ஒருவனுக்கு இன்பம் கிடைத்தாலும் அதை அனுபவிக்க மனம் விழிதிருப்பதில்லை. உறக்கத்தில் சுகம் இல்லையென நாம் கூறவில்லை, ஆனால் அதே நேரத்தில் அது தமஸால், அதாவது முழுமையான அறியாமையால் முழுமையாக மூழ்கடிக்கப்படுகிறது. எனவே இன்பத்தை குறித்த நேர்மறையான அனுபவம் அங்கு இல்லை. உறக்கம் தேவையான ஒன்றுதான், ஆனால் இங்கு இன்பத்திற்காகவென அதிகம் உறங்குகிற ஒருவன் அனுபவிக்கும் சுகம் பேசப்படுகிறது. 

(2) ஆலஸ்ய — சோம்பலினால் தோன்றுகிற சுகம் தாமஸம் ஆகும். செயல் செய்வதற்கான எந்த முயற்சியும் செய்யாதபோது, அதிலிருந்து உண்டாகும் கஷ்டத்திலிருந்து அவன் விடுபடுகிறான். கஷ்டத்தை தவிர்த்ததை இன்பம் என தனது மன-மயக்கத்தால் அவன் எண்ணுகிறான்.

(3) ப்ரமாத3 — அலட்சியம் மற்றும் கவனக்குறைவினால் தோன்றுகிற இன்பம் தாமஸ-சுகம் ஆகிறது. இதை நாடுபவர்கள் ‘விதி’ எனும் தத்துவத்தில் நம்பிக்கை மற்றும் விருப்பம் கொண்டவர்களாக தங்களை காட்டிக் கொள்கிறார்கள். எது வேண்டுமானாலும் நடக்கட்டும், ராமன் ஆண்டாலும் சரி, ராவணன் ஆண்டாலும் சரி, தர்மம் இருந்தாலும் சரி, அதர்மம் இருந்தாலும் சரி என எது குறித்தும் கவனம் கொள்ளாதவர்களாக அலட்சியமாக இருப்பது இவர்களுக்கு ஒருவகை இன்பத்தை அளிக்கிறது. செய்ய வேண்டியதை செய்யாமல் இருப்பது ஒருவனுக்கு சுகத்தை கொடுக்கிறது எனில் அது நிச்சயமாக தாமஸ சுகம் ஆகும். செய்யப்பட வேண்டிய ஒரு குறிப்பிட்ட காரியம் நம்மால் செய்ய இயலாமல் போவது அல்லது செய்யத் தகுதி இல்லாமல் ஆவது போன்றவை முற்றிலும் வேறு விஷயம். ஆனால் ஒருவனால் அதை செய்ய முடியும் எனும்போதும் மன மயக்கத்தினால் அங்கு அலட்சியமாக ​​அதைப் பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல் இருக்கிறான். அதைச் செய்வதன் கஷ்டத்தை தவிர்த்து அதில் கிடைக்கும் சுகத்தில் அவன் துய்க்கிறான். இப்படிப்பட்ட இன்பம் தாமஸ ​​சுகம் ஆகும்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஒட்டகம் முட்செடியை பெருவிருப்பத்தோடு தின்கிறது. முள் தைத்து அதன் உதடெல்லாம் ரத்தம் சொட்டினாலும் அது முள்ளைத் தின்பதை நிறுத்துவதில்லை. விஷய சுகத்தை நாடுபவர் போக்கு அத்தகையது.

————————————————————————————————