||18.55|| பக்தியோக சாரம்:
भक्त्या मामभिजानाति यावान् यश्चास्मि तत्त्वतः ।
ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तदनन्तरम् ।। ५५ ।।
ப4க்த்யா மாமபி4ஜாநாதி யாவாந் யச்1சாஸ்மி தத்த்வத: ।
ததோ மாம் தத்த்வதோ ஞாத்வா விச1தே தத3நந்தரம் ।। 55 ।।
भक्त्या ப4க்த்யா பக்தியினால் यावान् य: च अस्मि யாவாந் ய: ச அஸ்மி எத்தன்மையனாகவும் யாராகவும் நான் இருக்கிறேன் என்று तत्त्वतः தத்த்வத: உள்ளபடி माम् மாம் என்னை अभिजानाति அபி4ஜாநாதி அறிகிறான் तत: தத: அதன் பிறகு तत्त्वत: தத்த்வத: உள்ளபடி मां ज्ञात्वा மாம் ஞாத்வா என்னை அறிந்து तदनन्तरम् विशते (माम्) தத3நந்தரம் விச1தே (மாம்) விரைவில் (என்னை) அடைகிறான்.
நான் எத்தன்மையன், யார் என்று பக்தியினால் ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான்; உள்ளபடி அறிந்தபின் விரைவில் என்னை அடைகிறான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
யான் எவ்வளவுடையோன், யாவன் என என்னையொருவன் உள்ளபடி பக்தியாலே அறிகிறான். என்னை உள்ளபடி அறிந்துகொண்ட பின்னர் ‘தத்’ (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.
விளக்கம்:
தனக்கும் ஈஷ்வரனுக்கும் இடையிலான ஐக்கியத்தை பற்றிய அறிவினால் உண்டான மேலான பக்தி கொண்டவனாக ஞானி இருக்கிறான் என சென்ற சுலோகத்தில் பார்த்தோம். அந்த அறிவின் சிறப்பம்சம் என்ன என்பதை இங்கு விளக்குகிறார்.
=> பக்தி:
அவன் என்னை பக்தியின் மூலம் அறிகிறான் — ப4க்த்யா மாம் அபி4ஜாநாதி, என்று கிருஷ்ணர் கூறுகிறார். இங்கு பக்தி என்பது ஞானத்தை குறிக்கிறது. அதாவது பரமேஷ்வரனைப் பற்றிய அறிவின் வடிவாக இருக்கின்ற பக்தி; நாம் ஏற்கனவே பார்த்த ஞானியின் பக்தி அது. ‘ஜாநாதி’ எனில் அறிதல். ‘அபி4ஜாநாதி’ எனில் சரியாக, முழுமையாக அறிதலைக் குறிக்கிறது. ஈஷ்வரனை தனது ஆத்மாவாகவே அங்கீகரிக்கின்ற ஞானத்தை குறிக்கிறது. ஞானத்தை தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாத பக்தி(ஜ்ஞாந-லக்ஷணயா ப4க்த்யா), என்கிறார் சங்கரர். அதாவது இது உணர்ச்சி சார்ந்த பக்தி அல்ல; ஞானத்திலிருந்து வேறல்லாத பக்தி; அறிவால் நிறைந்த பக்தி, அறிவே பக்தியாக வெளிப்படும் நிலை.
=> எப்படி அறிகிறான்?
நான் எத்தன்மையானவன், எந்த அளவு விரிந்துள்ளேன் என்பதை அவன் அறிகிறான் — யாவாந் அஸ்மி. இது பல்வேறு வகையான உபாதிகளைப் பற்றிய அறிவைக் குறிக்கிறது. மாயையுடன் கூடியுள்ள நான் எப்படி விரிந்துள்ளேன் என்பதை, அதாவது சகுண ப்ரம்மத்தை பற்றிய அறிவைக் குறிக்கிறது. இந்த முழு படைப்பும் பரமேஷ்வரனைத் தவிர வேறில்லை. ஆகாசத்தில் தொடங்கி அனைத்து பூதங்களும், இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் அர்ஜுனன், பீஷ்மர் போன்ற அனைத்து ஜீவ-உபாதிகளும், தாவர வகையில் தொடங்கி விலங்கு வகைகள் வரையிலும் என இந்த முழு பிரபஞ்சமுமாக விரிவடைந்திருப்பது ஈஷ்வரனே எனும் அறிவை அடைந்தவனாக அவன் இருக்கிறான். தனிப்பட்ட(வ்யஷ்டி) மற்றும் ஒட்டுமொத்த(ஸமஷ்டி) நோக்கில் எவ்விதம் தன்னை பகவான் வெளிப்படுத்திக் கொண்டுள்ளார் என முழுமையாக அறிந்தவனாக இருக்கிறான். மேலும், எல்லா உபாதிகளுடன் கூடிய சகுண ப்ரம்மமாக மட்டுமல்லாமல், நாமரூப வரம்புகளிலிருந்து விடுபட்ட நிர்குண ப்ரம்மமாகவும் என்னை உள்ளபடி அவன் அறிகிறான் என்கிறார் பகவான் — ய: ச அஸ்மி தத்த்வத:. ஈஷ்வரனை அனைத்து உபாதிகளிலிருந்தும் முற்றிலும் விடுபட்டவராக, ஸத்யம் ஞாநம் அநந்தம் ப்ரம்மமாக, பதினைந்தாவது அத்தியாயத்தில் பேசப்பட்ட உத்தம-புருஷனாக அவன் அறிகிறான். இருமையற்ற சைதன்னியமாக (அத்3வைதம் சைதன்ய-மாத்ர-ஏகரஸம் மாம் அபி4ஜாநாதி) அறிகிறான் என சங்கரர் பாஷ்யத்தில் விளக்கமளிக்கிறார். இருமையற்றதை எப்படி ஒருவன் அறிய முடியும்? அறிபவன் ஒருவன் இருக்கிறான் என்பதே அங்கு இருமை இருப்பதை காட்டுகிறதே என்கிற சந்தேகம் எழலாம். ஆகவேதான் சங்கரர் இதை மிகத் தெளிவாக இங்கு விளக்குகிறார். இருமையற்ற ப்ரம்மத்தை தனது சொந்த பிரக்ஞையுணர்வாக அவன் உணர்கிறான். பிறக்காதவனாக, வயோதிகம் அடையாதவனாக, மாற்றத்திற்கோ மரணத்திற்கோ உட்படாதவனாக, இரண்டாவது விஷயம் என எதுவும் இல்லாததால் எந்த பயத்திற்கும் உட்படாதவனாக தன்னை அறிகிறான்.
=> இறைவனுள் பிரவேசித்தல்:
அதன் பிறகு(தத3நந்தரம்) என்னை உள்ளபடி அறிந்து(மாம் தத்த்வத: ஞாத்வா) எனக்குள் நுழைகிறான் — மாம் விச1தே, என்கிறார் கிருஷ்ணர். இதுபோன்ற சிக்கலான வாக்கியங்கள் சரியாகப் புரிந்து கொள்ளப்படாவிட்டால் தவறான அர்த்தத்தை கொடுத்துவிடும். இதை ஒரு இடத்திற்குள் பிரவேசிப்பது அல்லது இறைவனின் உடலுக்குள் நுழைவது போன்ற உடல் சார்ந்த அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள கூடாது. இங்கு ‘நுழைகிறான்’ அல்லது ‘பிரவேசிக்கிறான்’ என்பதை அடைகிறான் என்பதாகப் புரிந்துகொள்ளுதல் வேண்டும். பரமேஷ்வரனை தத்துவமாகத் தெளிவாக அறிந்தவுடன், அவன் இனி தன்னை ஒரு தனித்துவமான ஜீவன் என்று பார்ப்பதில்லை. ‘நான்’ மற்றும் ‘ஈஷ்வரன்’ எனும் இருமை அங்கு மறைந்து விடுகிறது. பிரிவுணர்வு கரைந்து, வேறானவனாய் இல்லாதவனாக அவன் ஆகிறான் எனும் அர்த்தத்தில் இறைவனுக்குள் நுழைகிறான் எனக் கூறப்படுகிறது. பாம்பு-கயிறு உதாரணத்தில், பாம்பு கயிற்றில் பிரவேசிப்பதைப் போல எனக் கூறலாம். அதாவது மங்கிய வெளிச்சத்தில் கயிற்றை பாம்பாகத் தவறாகப் பார்க்கிறோம். ஆனால் அறிவு வந்தவுடன் பாம்பு எங்கும் போகவில்லை, உண்மையில் அது கயிறாகவே ஒடுங்குகிறது. அதுபோல, ஜீவன் என்பது தவறான அறிவால் தோன்றிய தனித்தன்மை ஆகும். உண்மையில் இருப்பது ப்ரம்மம் மட்டுமே. இறைவனைப் பற்றிய இந்த அறிவு வந்தவுடன் ஜீவன் எங்கும் போகவில்லை; ப்ரம்மமாகவே ஒடுக்கத்தை அடைகிறான். இதுவே ‘பிரவேசம்’ ஆகும். ப்ரம்மத்தை ஜீவன் ஒரு வெளிப்புறப் பொருளாக அறியவில்லை, மாறாக தனது சொந்த சைதன்யமே ப்ரம்மம் என்றுணர்கிறான். இதனால் தனித்தன்மை கரைகிறது; இருமை மறைகிறது; ஒரே பரம் ப்ரம்மம் மட்டுமே நிலைக்கிறது. இது இட மாற்றம் அல்ல; அறிவின் மூலம் நிகழும் ஐக்கியம் ஆகும்.
=> இரு செயல்களா?
இங்கு குறிப்பிடப்படும் அறிதலும்(ஞாத்வா) பிரவேசித்தலும்(விச1தே) இரண்டு வெவ்வேறு விஷயங்கள் அல்ல. அதன் பிறகு(தத3நந்தரம்) மற்றும் அறிந்து(ஞாத்வா) எனும் இரு சொற்களும் இங்கு ஈஷ்வரனுடன் ஐக்கியமாவதற்கு தேவையான முன் நிபந்தனைகளை வெளிப்படுத்துவதாக மட்டுமே அமைகின்றது. எனவே இது இரு வெவ்வேறு காலகட்டத்தில் நடைபெறுகின்றன என எடுத்துக் கொள்ளக் கூடாது. ப்ரம்மத்துடன் ஐக்கியம் பெறுவதற்கு முன் நிபந்தனைகள் யாவை? ‘என்னை அறிந்த பிறகு அவன் என்னுள் பிரவேசிக்கிறான்— ஞாத்வா மாம் விச1தே’ என்று கூறப்படுகிறது. உதாரணமாக, ‘சாப்பிட்ட பின், அவன் பசியைத் தணிக்கிறான்’ என்ற வெளிப்பாட்டை எடுத்துக் கொள்வோம். சாப்பிட்ட பின் தனியாக ‘பசியை அடக்க’ அவன் வேறு ஒரு செயல் செய்ய வேண்டியதில்லை. சாப்பிடும் செயலில் பசியடக்கம் தானாகவே நிகழ்ந்துவிடுகிறது. அதேபோல, மரக்கட்டையை வெட்டிய பின், அதை இரண்டு துண்டுகளாக மாற்ற அவன் தனியாக ஒரு செயல் செய்ய வேண்டியதில்லை. வெட்டும் செயலிலேயே அது இரண்டு துண்டுகளாக மாறிவிடுகிறது. வெட்டுதல் முடிவதற்கும், இரண்டு துண்டுகளாக பிரிவதற்கும் இடையில் எந்த நேர இடைவெளியும் இல்லை. அதுபோலத்தான், இங்கு ‘அறிந்த பின் பிரவேசிக்கிறான்’ என்று சொல்வது, அறிதலே பிரவேசிப்பாகும் என்பதைக் குறிக்கிறது. மெய்ப்பொருளை அறியாமல் முழுமையிலிருந்து ஜீவன் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால், அதைப் பற்றிய அறிதல் பிரவேசிப்பதற்கு அவசியமான நிபந்தனையாக ஆகிறது. உண்மையில் அவன் ஒருபோதும் இறைவனிடமிருந்து பிரிந்திருக்கவில்லை; எப்போதும் இறைவனிலிருந்து வேறானவனாக இல்லை. பிரிவுணர்வு என்பது முற்றிலும் கற்பனையானது; அது ஒரு எண்ணம் மட்டுமே. இந்த கற்பனையான பிரிவு இருப்பதால்தான் ‘அறிந்த பின் அவன் இறைவனுடன் ஒன்றாகிறான்’ என்று சொல்ல வேண்டிய அவசியம் உண்டாகிறது. எனவே இங்கு இரண்டு வெவ்வேறு செயல்கள் இல்லை என்பதை சங்கரர் வலியுறுத்துகிறார்.
மேலும், அறிந்த பிறகு ‘மோக்ஷம்’ என்கிற வேறொரு பலன் எதுவும் இல்லை. அறிவே மோக்ஷம் ஆகும். ஆனால், அறிவு என்பது மனிதன் நாடும் இலக்காக இருப்பதில்லை. துக்கம் மற்றும் பயத்திலிருந்து விடுபடுவதையே விரும்புகிறான். ஆகையினால் அதுவே அடையப்படவேண்டிய இலக்காக அவனுக்கு இருக்கிறது. அந்த முடிவானது தன்னைப் பற்றிய உண்மையை அறிதலின் வடிவில் கிடைக்கிறது. எனவே மோக்ஷம் என்பது ‘அறிவுக்கு பிறகு — ஞாந அநந்தரம்’ என்று சொல்லப்படுகிறது. இது கால-வரிசையைக் குறிக்கவில்லை. ‘அறிவால் மோக்ஷம் — ஞாநேந மோக்ஷ:’ மற்றும் ‘அறிவின் காரணமாக மோக்ஷம் — ஞாநாத் மோக்ஷ:’. மோக்ஷம் என்பது பெற வேண்டிய முடிவு(ஸாத்4ய); அறிவு என்பது அதைப் பெறும் வழி(ஸாத4ந). ஆனால் இங்கு சாதனமும் சாத்யமும் ஒன்றே. எனவேதான் ‘அதன் பிறகு(தத3நந்தரம்)’ என்பது காலத்தைக் குறிக்கவில்லை, தத்துவ வரிசையை மட்டுமே குறிக்கிறது.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
ஜீவாத்மாவால் பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்க முடியும். அப்போதுதான் ஒருவன் “அவனே நான்” என்று உணர்ந்து சொல்லக்கூடும். ஒரு வீட்டில் நெடுநாளாக வேலை செய்து வந்த வேலைக்காரன் ஒருவன், காலக்கிரமத்தில் அவ்வீட்டார்களுள் ஒருவனாகவே பாவிக்கப்படலாம். வீட்டு எஜமானன் அவனுடைய வேலைத் திறமையைக் கண்டு மகிழ்ந்து, ஒருநாள் அவனைத் தன்னுடைய ஆசனத்தில் உட்காரச் செய்து தன்னைச் சுற்றியுள்ளாவர்களை நோக்கி, “இந்த க்ஷணம் முதல் இவனுக்கும் எனக்கும் யாதொரு வித்தியாசமுமில்லை. நானும் இவனும் ஒன்று. எனது கட்டளைக்குக் கீழ்ப்படிவதைப்போல இவனுடைய கட்டளைக்கும் நீங்கள் கீழ்ப்படியவேண்டும். இல்லாவிட்டால் தண்டிப்பேன்” என்று சொல்லலாம். அப்போது அந்த வேலைக்காரன் சங்கோசத்தினால் இந்தப் புதிய கெளரவத்தைக் காட்டிக்கொள்ளத் தயங்கலாமானாலும், எஜமானன் அவனைக் கட்டாயப்படுத்தி கெளரவ ஸ்தானத்தில் வைப்பான். ஈஷ்வரனை நெடுங்காலம் வழிபட்டு அவனுடன் ஐக்கியமான ஜீவனுடைய நிலைமையும் இப்படிப்பட்டதே. ஈஷ்வரன் தன்னுடைய மஹிமையை இவர்களுக்கு அருளி, இவர்களைத் தனது ஒப்பற்ற ஸ்தானத்துக்கு உயர்த்துகிறான்.
————————————————————————————————
||18.56|| செயல் ரூபமான பக்தி:
सर्वकर्माण्यपि सदा कुर्वाणो मद्व्यपाश्रय: ।
मत्प्रसादादवाप्नोति शाश्वतं पदमव्ययम् ।। ५६ ।।
ஸர்வகர்மாண்யபி ஸதா3 குர்வாணோ மத்3வ்யபாச்1ரய: ।
மத்ப்ரஸாதா3த3வாப்நோதி சா1ச்1வதம் பத3மவ்யயம் ।। 56 ।।
सदा ஸதா3 எப்பொழுதும் सर्वकर्माणि ஸர்வகர்மாணி எல்லாக் கர்மங்களையும் कुर्वाण: अपि குர்வாண: அபி செய்தபோதிலும் मद्व्यपाश्रय: மத்3வ்யபாச்1ரய: என்னை சரணடைகிறவன் मत्प्रसादात् மத்ப்ரஸாதா3த் எனது அனுக்கிரகத்தினால் शाश्वतं சா1ச்1வதம் நித்தியமாயிருப்பதும் अव्ययम् அவ்யயம் அழியாததும் ஆகிய पदम् பத3ம் பதத்தை अवाप्नोति அவாப்நோதி அடைகிறான்.
எப்பொழுதும் எல்லாக் கர்மங்களையும் செய்தபோதிலும் என்னை சரணடைகிறவன் எனதருளால் நித்தியமாயிருப்பதும் அழியாததுமாகிய பதமடைகிறான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
எல்லாத் தொழில்களையும் எப்போதும் செய்து கொண்டிருந்தாலும், என்னையே சார்பாகக் கொண்டோன் எனதருளால் அழிவற்ற நித்திய பதவியை எய்துகிறான்.
விளக்கம்:
மேற்கூறப்பட்ட ஞானத்திற்கு மனதை தயார்படுத்துகிற கர்மயோகம் இந்த சுலோகத்தில் புகழப்படுகிறது.
=> கர்மயோகி:
கர்மயோகம் என்பது செயல் ரூபமான பக்தி ஆகும். இத்தகைய பக்தி செலுத்தும் கர்மயோகியும் இறுதி இலக்கான ஞான நிஷ்டையை பெறுகிறான். அனைத்து செயல்களையும் துறந்து, பிரார்த்தனை மற்றும் தியானம் நிறைந்த வாழ்க்கையை வாழும் சந்யாசி அடைகின்ற அதே இலக்கு ஒரு கர்மயோகியினாலும் அடையப்படுகிறது. ‘கர்மயோக வாழ்க்கை வாழாதவனுக்கு துறவு என்பது மிகவும் கடினம் — ஸந்ந்யாஸ: து மஹாபா3ஹோ து3:க2ம் ஆப்தும் அயோக3த:, என பகவான் ஐந்தாவது அத்தியாயத்தில்(5.6) கூறினார். இங்கும் பகவான் அதை வலியுறுத்துகிறார்.
=> சரணாகதி அடைந்தவன்:
‘அபி’ எனும் வார்த்தையை ‘ஸர்வகர்மாணி’ என்ற வார்த்தையுடன் சேர்த்து ‘அனைத்து கர்மங்களிலும்’ என பயன்படுத்தப்பட்டிருப்பது, செய்ய வேண்டிய செயல்கள் (விஹித கர்ம) மட்டுமல்ல, செய்யக்கூடாதவைகளையும்(ப்ரதிஷித்3த4 கர்ம) குறிக்கிறது என்று சங்கரர் கூறுகிறார். இதனால் கர்மயோகியானவன் தடை செய்யப்பட்ட கர்மங்களையும் செய்யலாம் என்பதாகப் பொருள் கொள்ளக்கூடாது, அது சங்கரரின் கருத்தல்ல. இந்த வெளிப்பாடு பின்வரும் இரு முக்கிய விஷயங்களைக் குறிக்கிறது:
(1) எது சரி மற்றும் எது தவறு என்பது சூழ்நிலைகள் சார்ந்தவை. பொதுவாக தவறானதாகக் கருதப்படும் செயல்கள், சில நேரங்களில் சூழ்நிலை காரணமாக தவிர்க்க முடியாதவைகள் ஆகலாம். அத்தகைய சூழலில், ஒரு கர்மயோகி அந்தச் செயலை ஈஷ்வரனின் ஆணை என ஏற்று, அதை ஈஷ்வரார்ப்பண-புத்தியுடன் செய்கிறான். அதனால் அவனுக்கு பாபம் ஏற்படாது.
(2) சில நேரங்களில், எறும்பை மிதித்தல் போன்ற சிறு உயிர்களுக்கு தெரியாமல் சேதம் செய்கிற சில தவறுகள் நம்மை அறியாமல் நிகழ்ந்து விடுகின்றன. ஈஷ்வர-அர்ப்பணிப்புடன், மத்3வ்யபாச்1ரய, அனைத்து கர்மங்களையும் செய்கிற இந்த கர்மயோகி, அத்தகைய செயல்களிலும்கூட பாபத்தை அடைவதில்லை.
ஈஷ்வர அருளால் அவன் அந்த இறுதி இலக்கை அடைகிறான். கர்மயோகம் என்பது பிரார்த்தனை மற்றும் பிரார்த்தனை மனப்பான்மை கொண்டதொரு வாழ்க்கைமுறை ஆகும். இங்கு சரணாகதி என்பது தர்மம் என்பது ஈஷ்வரனே என அங்கீகரித்து அதன்படி நடத்தலைக் குறிக்கிறது. அதுமட்டுமே ஆத்ம சாதகனுக்குத் தேவையான மனபரிபாகத்தைக் கொடுக்கிறது. அதைத்தான் இங்கு பகவான், என்னை சரணடைகிறவன் — மத்3வ்யபாச்1ரய, என மிகத் தெளிவாகக் கூறுகிறார். ஒரு கர்மயோகிக்கு இறைவன் தர்மத்திலிருந்து வேறானவராக இல்லை என்பதால் அவன் தனது விருப்பு-வெறுப்புகளால் தர்மத்தை மறந்து விடுவதில்லை. அதாவது தனது செயலைத் தேர்வு செய்யும் போது,
* ஈஷ்வரனை தர்மத்தின் வடிவத்தில் இருப்பராக,
* தனது செயலை கண்காணிப்பராக(கர்மாத்4யக்ஷ),
* கர்மபலனை எதிர்கொள்ளும் நேரத்தில், ஈஷ்வரனை பலனை கொடுப்பவராக(கர்மபல2தா3தா), அறிகிறான். மேலும் அந்த பலனை பிரசாதமாக ஏற்றுக் கொள்கிறான்.
இத்தகைய மனப்பான்மை உடையவனே ‘மத்3வ்யபாச்1ரய’ என்றழைக்கப்படுகிறான். ஈஷ்வரனுக்காகக் கர்மம் செய்பவன் ஈஷ்வரனை நினைக்கிறான்; தன்னை நினைப்பதில்லை. ஈஷ்வர நினைவில் தன்னை மறந்திருப்பவன் சரணடைந்தவன் ஆகிறான். கடலைச் சென்று அடையும்வரையில் நதிக்கு தனித்தன்மை இருக்கிறது; தனிச் செயலும் இருக்கிறது. கடலினுள் நுழைந்த பிறகு நதி என்ற பெயர் போய்விடுகிறது. கடலில் இருக்கிற நீரோட்டத்தில் நதியும் கலந்துகொள்ளலாம். ஆயினும் அச்செயல் யாவும் கடலினுடையது; நதியினுடையதாகாது. ஈஷ்வரனிடம் அடைக்கலம் புகுந்த ஜீவனின் நிலை அத்தகையது. உடல் எனும் வடிவம் இருக்கிறது எனினும் அதனுள் இருக்கிற உணர்ச்சி முற்றிலும் இறையுடன் கலந்திருக்கும் உயர்நிலையான பரபோதமாகும். அந்த உடலில் நிகழ்கின்ற செயல்கள் எல்லாம் ஈசன் செயலேயாகும்.
=> அழியாத பதமடைகிறான்:
ஈஷ்வரனின் பிரசாதத்தினால் அவன் நித்தியமான அழியாத பதத்தை அடைகிறான். ‘எனதருளால் அவன் முடிவற்றதான ஒரு முடிவை அடைகிறான் — சா1ச்1வதம் அவ்யயம் பத3ம் அவாப்நோதி’, என்கிறார் கிருஷ்ணர். இதுவே மோக்ஷம் ஆகும். இறையருளை அவன் எவ்வாறு பெறுகிறான்? ஈஷ்வரனை சரணடைந்ததினால் அவன் மனத்தூய்மையை(அந்த-கரண-சுத்3தி4) பெறுகிறான். அதன் காரணமாக மனத்தில் மகிழ்ச்சி, தெளிவு மற்றும் அமைதி கிடைக்கிறது. இதுதான் பிரசாதம் எனப்படுகிறது. அதன்பிறகு, தெளிவான அறிவுக்கு தேவையான சரியான உபதேசம் கிடைக்கிறது. ஈஷ்வரனின் அருள் இல்லாமல்,
* சரியான குருவை அவனால் கண்டுகொள்ள இயலாது,
* சாஸ்திரத்தை அணுக முடியாது,
* உடலும் மனமும் ஆன்மிக நாட்டத்திற்கு ஏற்றதாக இருக்காது,
* சுற்றியுள்ள வெளிப்புற சூழ்நிலைகளும் சாதகமாக இருக்காது.
இவை அனைத்தும் ஈஷ்வர பிரசாதத்தால் மட்டுமே சாத்தியம். நுட்பமாக பகுப்பாய்வு செய்து பார்க்கும்போது, முழு ஆன்மிக பயணமே ஈஷ்வர பிரசாதத்தை தவிர வேறொன்றுமில்லை என்பதை புரிந்து கொள்ளமுடியும்.
காலப்போக்கில், கர்மயோகியும் சந்யாசியைப் போலவே அதே ஞானநிஷ்டையைப் பெறுகிறான். கர்மயோகியும் முமுக்ஷுதான் ஏனெனில் அவன் சொர்க்கத்திற்காகவோ அல்லது வேறு ஏதேனும் இகலோக விஷயங்களுக்காகவோ எந்த செயலையும் செய்யவில்லை. மனப்பரிபாகத்திற்காகவென மட்டுமே அவன் கர்மத்தைச் செய்கிறான். எனவே சாஸ்திரத்தின் உட்பொருளை கற்று அவன் நிச்சயமாக மோக்ஷத்தைப் பெறுவான்.
ஆகையால், கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கர்மயோக மனப்பான்மையுடன் தனது கடமையைச் செய்யச் சொல்லுகிறார்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
கர்மம் செய்தலே வாழ்க்கையின் முடிவன்று; அது ஒரு மார்க்கமே. பற்றுதலற்றுச் செய்யப்படுமானால் அது வாழ்க்கையின் முடிவான லட்சியமாகிய இறைவனிடம் அழைத்துச் செல்லுகிறது. மார்க்கத்தையே முடிவென்று மருள்கொள்ளவேண்டாம். ஓர் ஊருக்குச் செல்லும் வழி ஊராகிவிடாது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்.
————————————————————————————————
