||18.47|| ஸ்வதர்மம் பற்றிய மேலும் சில கருத்துக்கள்:
श्रेयान् स्वधर्मो विगुण: परधर्मात् स्वनुष्ठितात् ।
स्वभावनियतं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम् ।। ४७ ।।
ச்1ரேயாந் ஸ்வத4ர்மோ விகு3ண: பரத4ர்மாத் ஸ்வநுஷ்டி2தாத் ।
ஸ்வபா4வநியதம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பி3ஷம் ।। 47 ।।
विगुण: விகு3ண: குறையுடன் கூடிய स्वधर्म: ஸ்வத4ர்ம: ஸ்வதர்மமானது सु अनुष्ठितात् ஸு அநுஷ்டி2தாத் நன்கு அனுஷ்டிக்கப்படுகிற परधर्मात् பரத4ர்மாத் பரதர்மத்தைக் காட்டிலும் श्रेयान् ச்1ரேயாந் சிறந்தது स्वभाव नियतं कर्म ஸ்வபா4வ நியதம் கர்ம சுபாவத்திலமைந்த கர்மத்தை कुर्वन् குர்வந் செய்கிறவன் किल्बिषम् கில்பி3ஷம் கேட்டை न आप्नोति ந ஆப்நோதி அடைவதில்லை.
நிறைவாக அனுஷ்டிக்கும் பரதர்மத்தை விடக் குறையுடன் அனுஷ்டிக்கும் ஸ்வதர்மம் சிறந்தது. சுபாவத்திலமைந்த கர்மத்தைச் செய்பவன் கேடு அடையான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும் தனக்குரிய தர்மத்தை குணமின்றி செய்தலும் நன்று. இயற்கையிலேற்பட்ட தொழிலைச் செய்வதனால் ஒருவன் பாவ மடைய மாட்டான்.
விளக்கம்:
=> எது சிறந்தது?
ஸ்வதர்மத்தை குறித்து மேலும் சில கருத்துக்களை பகவான் இங்கு எடுத்துரைக்கிறார். குறையுடன் செய்யப்படுவதாக இருந்தாலும் சுயகர்மமே சிறந்தது — விகு3ண: ஸ்வத4ர்ம: ச்1ரேயாந், என்கிறார். வேறு வர்ண மற்றும் ஆஷ்ரமத்தின் தர்மத்தை நன்றாக செய்வதை விட, தனது ஆஷ்ரம தர்மத்தை குறையுடன் செய்வது மேலானது என்பதை பகவான் இங்கு கூறுகிறார். உதாரணமாக மாணவப்பருவத்தில்(பிரம்மசரிய) இருக்கின்ற ஒருவன் படிப்பதை விட்டுவிட்டு, இல்லறத்தானின்(கிரஹஸ்த) கடமையான தொழில் செய்து பணம் ஈட்டுவதில் ஈடுபடுதல் ஆகாது. கற்கும் காலத்தில் கற்றலே சிறந்தது. அதுபோல, மருத்துவபடிப்பில் தேர்ச்சி பெற்ற ஒருவன், தனக்கு வாக்கு வல்லமை இருக்கிறது என்று வழக்கறிஞனாக மாற முயலலாகாது. விருப்பத்தாலோ அல்லது வெறுப்பினாலோ தூண்டப்பெற்று ஒருவன் தனது தொழிலை மாற்றலாகாது.
=> மனப்பரிபாகம்:
எப்போதும் எதையும் ஒப்பிடுவதுதான் மனித மனத்தின் இயல்பு. தொழில், வீடு, உணவு, உடை எதுவாக இருந்தாலும், எப்போதும் மற்றவருடையது நமக்குள்ளதைவிடச் சிறந்ததாகத் தோன்றும். இந்த குணத்தின் காரணமாக ஒருவன் எந்தத் தொழிலில் இருந்தாலும், இனியொருவன் செய்கின்ற வேறு தொழில் சிறந்த லாபத்தை தருவதாகவும் அதுவே தன்னுடையதை விட மேலானது என்றும் நினைப்பான். இதனால் அத்தொழிலுக்கு மாற முயல்வான். இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற பழமொழி உண்டு. அங்கு சென்று பார்க்கும் பொழுதுதான் அதன் குறைபாடுகள் என்ன என்பது நமக்கு தெரியவரும். ஆனால் இவ்வாறு தொடர்ந்து மாறும்போது எந்தத் துறையிலும் நிபுணத்துவத்தை பெற முடியாது.
ஆகையால் தனது சுயகர்மம் எப்போதும் சிறந்தது — ஸ்வத4ர்ம: ச்1ரேயாந். இது மிகவும் முக்கியமானது ஏனெனில் அர்ஜுனன் இப்போது தனது ஸ்வதர்மத்தை மாற்ற முயல்கிறான். அறம் காத்தலே அவனது தன்னறம். அதன்பொருட்டு தனது உறவினர்களையும் ஆசிரியர்களையும் எதிர்த்து நிற்பது சிரமமாகவும் அசெளகரியமாகவும் இருப்பதால், ‘காட்டில் தவம் செய்வது (பை4க்ஷயம் அபி ஸ்ரேய:) எனக்கு மேல்’ என்று கிருஷ்ணருடன் வாதிடுகிறான். அதற்கு கிருஷ்ணர் ஒரு கடுமையான எச்சரிக்கையை வழங்குகிறார். ஒவ்வொரு தொழிலும், ஒவ்வொரு இடத்திலும் நன்மை, தீமை இரண்டும் இருக்கும். அதிலிருந்து ஓடி விடுவது அதற்கு தீர்வாகாது. குறையுடன் கூடியதாக இருந்தாலும் தன்னறத்தை செய்வதே சிறந்தது — விகு3ண:.
தனது கர்மத்தில் ஒருவன் முழுமையான திறமையுடன் இல்லாவிட்டாலும் கவலை கொள்ளத் தேவையில்லை. காலப்போக்கில் முயற்சியால் அத்தொழிலுக்கானத் திறனும் நுண்ணறிவும் வளர்ந்து கொண்டே இருக்கும். உண்மையில் எந்த துறையிலும் பரிபூரணமானது என்ற ஒன்று இல்லை; முடிவில்லாத மேம்பாட்டுக்கான வாய்ப்பு என்பது எப்போதும் எல்லாத் தொழிலிலும் சாத்தியம். எனவே செய்கிற செயலை முழு ஈடுபாட்டுடன் அனுபவித்து செய்தல் சிறந்தது. எதை விட மேலானது? பிறருடைய கடமையைச் செய்வதை விட மேலானது — பரத4ர்மாத் ச்1ரேயாந்.
ஒரு குறிப்பிட்ட பணி ஒருவனின் மனநிலைக்கு ஏற்ப மற்றொன்றை விட பிடித்ததாக இருக்கலாம். அது இயல்பானது தான். ஆனால் இது நல்லது, இது சரியானதல்ல என்ற மதிப்பீட்டின் அடிப்படையில் மட்டுமே பணியைத் தேர்வு செய்வது என்றும் உதவாது. விருப்பத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, நமக்கு பிடித்ததைத் தேர்வு செய்ய முயலும்போது, ஒருகால் நாம் விரும்பியது கிடைக்காதுபோனால் என்ன செய்யமுடியும்? நமக்கு அமைந்த பணியை விரும்பக் கற்றுக்கொள்வது என்பது, எப்போதும் நமக்கு பிடித்த வேலையைத் தேடிக்கொண்டிருப்பதைக் காட்டிலும் சிறந்தது. ஏனெனில் நமக்கு பிடித்த தொழில் ஒன்றைக் கண்டுபிடித்தாலும், அது விரைவில் நமக்கு சலிப்பை ஏற்படுத்திவிடும் வாய்ப்பும் உள்ளது; பின்னர் வேறு ஒன்றைத் தேடத் தொடங்குவோம். இது இப்படியே தொடர்ந்துகொண்டே இருக்கும். எனவே மனப்பரிபாகத்தை பொருத்தவரை, மற்றொருவரின் கடமையைச் சிறப்பாகச் செய்வதைக் காட்டிலும் குறையுடன் செய்யக்கூடியதாக இருந்தாலும் தனது சொந்தக் கடமையை செய்வதே சிறந்தது — ச்1ரேயாந்.
=> கேடில்லை:
எனவே சுபாவத்திலமைந்த கர்மத்தை செய் — ஸ்வபா4வ நியதம் கர்ம. ஒருவனது குடும்பத் தொழில், அல்லது சொந்த இயல்பு, விருப்பம், மனப்பாங்கு ஆகியவற்றுக்கு ஏற்ற தொழிலை ஆரம்பத்திலேயே தேர்ந்தெடுத்து, பின் அதில் முழுமையாக, மன மகிழ்ச்சியுடன் ஈடுபடுதல் வேண்டும். இவ்விதம் செயல்படும்போது கேடு உண்டாகாது — குர்வந் ந ஆப்நோதி கில்பி3ஷம், என்கிறார் பகவான். ஒருவரின் இயல்புக்கும் மனப்பாங்குக்கும் ஏற்ப விதிக்கப்பட்ட கடமையைச் செய்தால், எந்தவிதமான பாபமும் சேராது. ஏனெனில், தன்னுடைய குணங்களின் அமைப்புக்கு ஏற்ப செயல்படும்போது மனத்திற்குள் எந்த முரண்பாடும் உருவாகாது. இது ஒரு உளவியல் உண்மை. தன் இயல்புக்கு எதிராகச் செயல்படும்போது, அது தன்னுடைய உண்மையான தன்மைக்கு ஒவ்வாத செயல் என்பதால், உள்ளார்ந்த முரண்பாடுகள் உருவாகின்றன; அவை ஒருவனின் மன பரிபாகத்திற்கு எவ்வகையிலும் துணைபுரிவதில்லை. எனவே தனது தன்னறத்தைச் சரியாக செய்யும் ஒருவன் கேட்டை அடைவதில்லை.
அர்ஜுனன் போர்வீரன்; போர்களத்தில் போரிடுதல் அவனது அறம். அதில் இனியொரு உயிரை கொல்ல நேரிடலாம். அர்ஜுனனின் அறத்தைப் போல, சில சமயங்களில் சிலரது தன்னறமானது ஹிம்சையை உள்ளடக்கியதாக இருக்கும். பொதுவாக ஹிம்சை ஆரோக்கியமற்றது, பாபத்தை தரக்கூடியது என்று கருதப்பட்டாலும், சில பணிகளில் அது அத்தொழிலின் ஒரு பகுதியாக ஆகிவிடுகிறது. உதாரணமாக, ராணுவம் அல்லது காவல்துறை போன்ற பணிகளை எடுத்துக்கொள்ளலாம். சட்ட ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறையினர் சில நேரங்களில் லத்தியை பயன்படுத்த வேண்டியிருக்கும். நாட்டை பாதுகாக்க ராணுவ வீரர்கள் எதிரிகளை அழிக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற வேலைகளில் ஹிம்சையை தவிர்க்க முடியாது. ஆனால் அந்த ஹிம்சை தனிப்பட்ட காரணத்திற்காக அல்ல; அது தர்மத்தை நிலைநிறுத்துவதற்காகச் செய்யப்படும் கடமையின் ஒரு பகுதி ஆகும் — த4ர்ம ரக்ஷணம். இப்படிப்பட்ட கடமையால் உண்டாக்கப்படும் ஹிம்சை பாபத்தை உருவாக்காது. தன்னறத்திலமைந்த கர்மத்தைச் செய்பவன் கேட்டை அடைவதில்லை — கில்பி3ஷம் ந ஆப்நோதி.
தனக்கு வாய்ந்த கர்மத்தையே விடாது செய்வதால் ஸ்திர புத்தி ஏற்படுகிறது. ஸ்திரமான புத்தியில்லாதவன் யோகியாக முடியாது. அப்படியெனில் துன்பம் நிறைந்த போர்க்களத்துக்கென்று தன்னை தயார்படுத்திக் கொண்டவன், அதை வேண்டாமென்று விலக்கிவிட்டுத் தூய்மை திகழ்கிற தவச் செயலில் ஈடுபடலாகாதா என்ற சந்தேகம் எழலாம். அதற்கான விடை அடுத்த சுலோகத்தில் வருகிறது.
————————————————————————————————
||18.48|| தன்னறத்தை பற்றிய கருத்தை மேலும் தொடர்கிறார்:
सहजं कर्म कौन्तेय सदोषमपि न त्यजेत् ।
सर्वारम्भा हि दोषेण धूमेनाग्निरिवावृता: ।। ४८ ।।
ஸஹஜம் கர்ம கெளந்தேய ஸதோ3ஷமபி ந த்யஜேத் ।
ஸர்வாரம்பா4 ஹி தோ3ஷேண தூ4மேநாக்3நிரிவாவ்ருதா: ।। 48 ।।
कौन्तेय கெளந்தேய குந்தியின் மைந்தா सदोषम् अपि ஸதோ3ஷம் அபி தோஷத்துடன் கூடியது எனினும் सहजं कर्म ஸஹஜம் கர்ம சுபாவமாக தோன்றிய கர்மத்தை न त्यजेत् ந த்யஜேத் ஒருவன் துறக்கலாகாது हि ஹி ஏனென்றால் अग्नि: धूमेन इव அக்3நி: தூ4மேந இவ நெருப்பு புகையால் சூழ்ந்திருப்பது போன்று सर्व आरम्भा: ஸர்வ ஆரம்பா4: எல்லாக் கர்மங்களும்
दोषेण தோ3ஷேண தோஷத்தால் आवृता: ஆவ்ருதா: சூழப்பட்டுள்ளன.
குந்தியின் மைந்தா, தோஷத்துடன் கூடியதெனினும் சுபாவமாக தோன்றிய கர்மத்தை விட்டுவிடலாகாது. ஏனென்றால் தீயைப் புகை சூழ்வது போன்று எல்லாக் கர்மங்களும் தோஷத்தால் சூழப்பட்டுள்ளது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
குந்தி மகனே! இயல்பான தொழில் குறையுடையதாயினும் அதைக் கைவிடலாகாது. தீயைப் புகை சூழ்ந்திருப்பது போல் எல்லாத் தொழில்களையும் குறைகள் சூழ்ந்தே நிற்கின்றன.
விளக்கம்:
முந்தைய சுலோகத்தில் சொல்லப்பட்ட கருத்தை மேலும் தொடர்கிறார். விருப்பு வெறுப்பில்லாமல் நடுநிலையில் நின்று ஆராய்பவனுக்கு இந்த பேருண்மை விளங்கும். அதாவது குறைபாடு இல்லாத கர்மம் என்பது இந்த பிரபஞ்சத்தில் எங்குமில்லை. சுவாசிக்கின்றோம், அதனால் காற்றிலுள்ள நுண்ணுயிர்கள் மடிகின்றன. உணவு உண்கிறோம், மற்றொருவருக்கு அவ்வுணவு இல்லாமல் போகின்றது. புலன்களை ஒடுக்கித் தவம் புரிகிறோம், பிறர் உழைப்பால் வளர்ந்த நம் உடல் பிறருக்கு உழையாது போகிறது. ஆக, தீங்கு இல்லாத கர்மம் இயற்கையில் இல்லை. தேகம் தாங்கியுள்ள ஒவ்வொருவனும் ஏதேனும் ஒரு கர்மம் செய்தே ஆகவேண்டும். ஆகையால் தன் இயல்புக்கு ஒத்த கர்மம் எதுவோ அதைச் செய்வது முறை.
=> தன்னறம்:
‘ஸஹஜம் கர்ம’ என்பது சுபாவமாகத் தோன்றி நம்மிடமுள்ள கர்மத்தை, அதாவது ஒருவனது தன்னறத்தைக் குறிக்கிறது. பிறக்கும்போதே அவனுடன் வந்த கர்மம் அது. சுபாவத்தையோ அல்லது குடும்பத்தின் மரபு வழி வந்ததையோ அடிப்படையாகக் கொண்டு ஒருவன் தனது கர்மத்தை தேர்ந்தெடுத்து இருக்கலாம் — எதுவாக இருந்தாலும், கர்மம் என்பது அவனுடன் பிறந்ததே. ஏனெனில் ஒருவனது சுபாவம் அவன் பிறக்கும்போதே தோன்றியது என்பதால், அதன் அடிப்படையில் அமைகின்ற கர்மமும் பிறக்கும்போதே உண்டானது ஆகும். முன்பு நாம் பார்த்த ‘ஸ்வபா4வஜம்’ என்பதும் இதே பொருளில் கூறப்பட்டதுதான். இத்தகைய கர்மம் குறைபாடுடன் கூடியதாக இருந்தாலும் அதை கைவிடக்கூடாது — ஸதோ3ஷம் அபி ந த்யஜேத், என்கிறார் கிருஷ்ணர்.
முக்குணங்களுடன் கூடியதாக இருப்பதால் எந்தவொரு கர்மமும் இயல்பாகவே குறைபாடுடையதுதான் — ஸதோ3ஷம். ஆகவே அது எப்போதும் ஏதோ ஒன்றாக ஆக முயலுகிற இந்த சம்சார வாழ்க்கையைத் தொடரச் செய்கிறது. மேலும், எந்த கர்மத்தினாலும் மோக்ஷத்தைப் பெற முடியாது என்பதால் அனைத்து கர்மங்களும் குறைபாடுடையவைகளே.
=> கர்மத்திலுள்ள குறைபாடு என்ன?
புண்ணியமோ அல்லது பாபமோ எந்தவொரு கர்மமும் கர்மபலனை உருவாக்குகிறது. இது நமது அடிப்படை பிரச்சனையான சம்சார வாழ்க்கைக்கு தீர்வாகாது. ஈட்டப்படுவது இனிமையான சூழ்நிலையைத் தருகிற புண்ணியமாகவே இருந்தாலும் அது அனுபவித்து முடிக்கப்பட வேண்டியது; அவை மோக்ஷத்துக்கு ஒருவனை கொண்டு செல்லாது. புண்ணியத்தை ஒரு தங்கத்தாலான கைச்சிறை எனலாம்; அதுவும் நம்மை பிணைக்கவே செய்கிறது. கர்மம் பிணைக்கிறது என்பதற்காக அதை துறப்பதால் ஒருவன் கர்மத்திலிருந்து விடுபட முடியுமா எனில் முடியாது. கர்மத்தை விடுதல் நைஷ்கர்ம்யம் ஆகாது, அறியாமையை விடும்போதே ஒருவன் விடுதலையை அடைகிறான். தன்னைப் பற்றிய அறியாமை என்பது தன்னறிவினால் நீங்குகிறது. தன்னறிவை அடைவதற்கு மனத்தூய்மை அடிப்படைத் தகுதியாக ஆகிறது. சரியான மனப்பாங்குடன் தன்னறத்தை செய்யும்போது ஒருவன் வெற்றியை, மனத்தூய்மையை அடைகிறான் — ஸ்வகர்மணா அப்4யர்ச்ய ஸித்3தி4ம் விந்த3தி, என சுலோகம் நாற்பத்தியாறில் பகவான் கூறினார். அதாவது ஸ்வதர்மத்தை ஈஷ்வர ஆராதனையாகச் செய்யும்போது, விருப்பு-வெறுப்புகளின் பிடியிலிருந்து ஒருவன் விடுபடுகிறான். எனவே சித்த-சுத்திக்கு கர்மத்தை தவிர வேறு மார்க்கம் இல்லை. அறிவினால் மட்டுமே மனத்தூய்மை ஏற்படாது. வைராக்கியம், மன அமைதியுடன் இருத்தல், நற்பண்புகளுடன் இருத்தல் போன்றவை மனத்தூய்மைக்கான அளவுகோலாக இருக்கின்றன. எனவேதான் பகவான் இயல்பாகவே குறைபாடுடையதாக இருந்தாலும் உனது தன்னறத்தை கைவிடாதே என்கிறார்.
செய்யக்கூடாதவற்றை நிச்சயமாக கைவிட வேண்டும்.
ஆனால் செய்யப்பட வேண்டிய கடமைகளை ஒருவன் எதன்பொருட்டும் கைவிடக் கூடாது. அது விடப்படும்போது அதற்கு பதிலாக அவன் வேறு ஏதேனுமொன்றை செய்வான்; அப்போது அது விடப்பட்ட கர்மத்திற்கு சமமான அல்லது அதையும் விட அதிக குறைபாடுடையதாக இருக்கலாம். மேலும் ஞானி அல்லது அக்ஞானி யாராக இருப்பினும் கர்மத்தை முழுவதுமாகக் கைவிட முடியாது, அது சாத்தியமில்லை. அக்ஞானியால் எந்த செயலையும் செய்யாமல் இருக்க முடியாது. கடமைக்காகச் செய்வது அல்லது இன்பத்திற்காகச் செய்வது, குறையுடையது அல்லது இன்னும் அதிக குறையுடையது எனும் விதமாக அவன் ஏதேனுமொரு செயலில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருப்பான்.
ஞானியும்கூட உடல் ரீதியாக கர்மத்தை கைவிடுவதில்லை. ‘நான் செய்கிறேன்’ எனும் கர்த்ருத்துவ புத்தியையே அவன் அறிவின் மூலம் கைவிடுகிறான். ஒரு ஞானி சந்யாசியாக ஆனாலும் அவன் பிக்ஷை எடுக்கவேண்டும். அதுவும்கூட ஒரு கர்மமே ஆகும். எனவே யாராலும் உடல் ரீதியாக அனைத்து கர்மத்தையும் முழுவதும் கைவிட முடியாது. ஞானம் என்பது கர்மத்தை விடுவதனால் கிடைப்பதல்ல, அது பிரமாணத்தினால்(அறிவை தருகிற கருவியினால்) மட்டுமே கிடைக்கிறது. எனவே சுபாவத்தை பொருத்து உனது மனப்பக்குவத்திற்கு தகுந்தாற்போல ஒரு சூழ்நிலையை உருவாக்கியதன் விளைவாக அமையப்பெற்ற உனது கடமைகளை, அது தோஷத்துடன் கூடியதாக இருந்தாலும் நீ துறக்கக் கூடாது — ந த்யஜேத்.
=> ஏன் தன்னறத்தை கைவிடக்கூடாது?
ஏனெனில் நெருப்பானது புகையினால் மூடப்படுவது போல, எல்லா கர்மங்களும் தோஷத்தினால் மூடப்பட்டுள்ளது — அக்3நி: தூ4மேந இவ ஸர்வ ஆரம்பா4: தோ3ஷேண ஆவ்ருதா:. எந்தவொரு தொடக்கமும் ஒரு செயலாகக் கருதப்படுவதால், ‘தொடக்கம்’ என்கிற அர்த்தத்தை தருகிற ‘ஆரம்ப4’ எனும் சொல் கர்மத்திற்கான ஒரு பெயர்ச்சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. எப்படி நெருப்புள்ள இடத்தில் புகையானது இயல்பாக இணைந்திருக்கிறதோ, அதுபோல எந்தவொரு செயலுடனும் குறைபாடு இயல்பாகவே இணைந்துள்ளது. புகை என்பது இங்கு ஒரு பொருத்தமான உதாரணம், ஏனெனில் அதை ஊதி அகற்ற முடியும்.
யாகசாலையில் ஆகுதிகளை ஏற்பதற்கான உகந்த நெருப்பு என்பது புகையில்லாமல் தெளிவாக எரியும் ஜ்வாலையே ஆகும். ஆனால் பால் போன்ற சில அர்ப்பணங்கள் அக்னியை ஈரமாக்கி புகையை எழச் செய்கின்றன. அதனால் நெருப்பு புகையத் தொடங்கி கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. ஆனால் அங்கு செய்ய வேண்டியதெல்லாம், அந்தப் புகையை விசிறி அகற்றுவதுதான்; அப்போது உடனே நெருப்பு மீண்டும் தோன்றும். அதேபோல கர்மயோகத்தின் மூலம், கண்ணீரை வரவழைக்கும் கர்மத்தில் உள்ள குறையை ஒருவனால் நீக்கிக் கொள்ளமுடியும். இதனால் கர்மத்தின் எந்தப் பலனும் அவனை தொந்தரவு செய்வதில்லை. ஏனெனில் அவனிடம் பலனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் சரியான மனப்பான்மை, அதாவது பிரசாத-புத்தி உள்ளது. மேலும் ஒரு செயலைத் தேர்ந்தெடுப்பதில் கர்மயோகி தர்மத்தின்படி நடப்பதால் தேவையற்ற முரண்பாடுகளையும் அவன் தவிர்க்கிறான். சமைப்பவனோ, பூஜிப்பவனோ அல்லது சுத்தம் செய்பவனோ யாராக இருந்தாலும் தார்மீக ஒழுங்கான தர்மத்தை பின்பற்றுவது என்பது அனைவருக்கும் ஒன்றுதான். இயல்புக்கும் சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல தன்னறம் மாறுபடலாம், ஆனால் தர்மம் மாறுவதில்லை. எனவே செய்யப்பட வேண்டிய செயலை ஒருபோதும் கைவிடக்கூடாது — ந த்யஜேத்.
கர்மத்தில் இருக்கின்ற உள்ளார்ந்த குறைபாட்டை கர்மயோகத்தின் மூலம் ஓரளவு நீக்கலாம். பின்னர், உண்மையில் நான் செய்பவன் அல்ல; எனக்கு கர்மம் என்பதே இல்லை என்பதை அறிவதன் மூலம் கர்மத்தை முழுமையாகக் கைவிடலாம். இதுவே நைஷ்கர்ம்யம் எனப்படுகிறது. எரிபொருளை அகற்றி நெருப்பை அணைப்பதே புகையை முழுவதுமாக நீக்குவதற்கான ஒரே வழி ஆகும். ‘நான் செய்பவன் அல்ல - அகர்த்தா’ என்ற அறிவின் மூலம் இங்கு நெருப்பிற்கு அளிக்கப்பட்ட எரிபொருள் முற்றிலும் அகற்றப்படுகிறது. இங்குள்ள எரிபொருள் என்பது அறியாமை ஆகும்; அந்த அறியாமை ஞானம் என்ற நெருப்பில் எரிக்கப்படும்போது, அதன் பக்க விளைவுகளான காமமும் கர்மமும் கூட முற்றிலும் எரிக்கப்படுகின்றன. ஞானம் என்ற நெருப்பு கர்த்தாவை, அதாவது செய்பவன் எனும் பான்மையை எரிப்பதால் அனைத்து கர்மங்களும் இயல்பாகவே எரிந்து விடுகின்றன.
தனக்கு அமைந்த கர்மத்தை எப்படிச் செய்வது என்பது இனி விளக்கப்படுகிறது.
————————————————————————————————