சனி, 12 செப்டம்பர், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.59 - 18.60

||18.59|| பகவானின் எச்சரிக்கை:

यदहङ्कारमाश्रित्य न योत्स्य इति मन्यसे ।

मिथ्यैष व्यवसायस्ते प्रकृतिस्तवां नियोक्ष्यति ।। ५९ ।।

யத3ஹங்காரமாச்1ரித்ய ந யோத்ஸ்ய இதி மந்யஸே ।

மித்2யைஷ வ்யவஸாயஸ்தே ப்ரக்ருதிஸ்த்வாம் நியோக்ஷ்யதி ।। 59 ।।


अहङ्कारम् आश्रित्य  அஹங்காரம் ஆச்1ரித்ய  அஹங்காரத்தை அடைந்து        न योत्स्य इति  ந யோத்ஸ்ய இதி  போர் புரிய மாட்டேன் என்று     मन्यसे यत्  மந்யஸே யத்  நினைப்பாயாகில்    ते  தே  உன்னுடைய     एष: व्यवसाय:  ஏஷ: வ்யவஸாய:  இந்த துணிவானது     मिथ्या  மித்2யா  பொய்     प्रकृति  ப்ரக்ருதி  உனது இயல்பு    त्वां  த்வாம்  உன்னை      नियोक्ष्यति  நியோக்ஷ்யதி  தூண்டிவிடும்.


அஹங்காரத்தினால் யுத்தம் செய்ய மாட்டேனென்று நினைப்பாயாகில் உன் துணிவு பொய்யாகும். உன் இயல்பே உன்னை யுத்தத்தில் தள்ளிவிடும்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

நீ அகங்காரதிலகப்பட்டு, "இனிப் போர் புரியேன்" என்ற துணிவு பொய்மைப்பட்டுப் போம். இயற்கை உன்னைப் போரிற் பிணிக்கும்.


விளக்கம்:

அஹங்காரத்தினால் விளையும் கேடு யாது என்பதற்கு விடையாக இந்த சுலோகம் வருகிறது.


=> உளவியல் பார்வை:

அர்ஜுனன் போர் புரியாமல் இருக்க தீர்மானித்தால், அந்த நிலைபாடு பொய்யாகிவிடும் என கிருஷ்ணர் அறிவார். ஏனெனில் அது அவனது இயல்புக்கு விரோதமானது. இப்போது அவன் எடுத்துள்ள முடிவு இயற்கையானதாக இல்லாமல் விருப்பத்தின் அடிப்படையில் அமைந்த ஒன்றாக இருக்கிறது. எனவே இது இயல்பினால் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என்பதால் பொய்யானது — மித்2யா. அஹங்காரத்தினால், கடமையைச் செய்ய மாட்டேன் என்று தவறான முடிவை எடுத்துள்ளாய் என்கிறார் பகவான் — அஹங்காரம் ஆச்1ரித்ய

ஒரு முடிவு உண்மையாக இருக்க வேண்டுமெனில் அது ஒருவனது சுபாவத்துக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். ஆனால் அர்ஜுனனின் தீர்மானம் அப்படிப்பட்டதாக இல்லாததால், போரிலிருந்து விலகுவது எனும் அவனது முடிவு அவனுக்கு உதவியாக இருக்கப் போவதில்லை. ஒருகால் அவன் போர்க்களத்திலிருந்து விலகி, ஒரு சந்யாசி வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் அது பின்னர் அவனுக்கே பிரச்சனையாகிவிடும். ஏன்? ‘உனது இயல்பு உன்னைப் பிணைக்கும் — ப்ரக்ருதி: த்வாம் நியோக்ஷ்யதி’, என கிருஷ்ணர் சொல்கிறார். வருங்காலத்தில் பயத்தின் காரணமாக போர்க்களத்தை விட்டு ஓடியதாக மக்கள் அவனை கேலி செய்வார்கள். கருணையின் பொருட்டு அர்ஜுனன் போரிலிருந்து விலகினான் என்று துரியோதனன் மக்களை நம்ப விடமாட்டான். மாறாக தனது படை அமைப்பை கண்டு பயத்தில் விலகிவிட்டதாக அவன் பெருமை பேசுவான். ஏனென்றால் அவன் அரசை ஆளப் போகிறான், எனவே மக்கள் பாண்டவர்களை ஆதரிக்கக் கூடாது என்பதற்காக உண்மையை மறைப்பான். அர்ஜுனன் வெளியேறினால், போர் நிறுத்தப்படும். துரியோதனன் ஒரு அம்பும் எய்தாமல் வெற்றி பெறுவான். மேலும் துரியோதனன் அர்ஜுனனை ஒரு கோழையாக சித்தரிக்கும் பாங்கு நிச்சயமாக அவனை கோபப்படுத்தும். இதனால் அர்ஜுனன் அதை எதிர்த்துப் போராட வேண்டிய நிலைக்கு மீண்டும் தள்ளப்படுவான். எனவே, போரிடுவதில்லை என்கிற அவனது முடிவு பொய்யாகிவிடும், மித்2யா. அர்ஜுனன் இன்னும் ஒரு பிராமணனின் சுபாவத்தை அடையவில்லை. இயல்பினால் அவன் ஒரு க்ஷத்ரியன் என்பதால் தன்னியல்பே அவனை போரிடத் தூண்டும். உண்மையில் பார்க்கப்போனால் அர்ஜுனன் ஒரு க்ஷத்ரியன் என்பது கடமையினால் மட்டுமல்ல, மனப்பான்மையாலும் அவன் ஒரு போர்வீரனே. எனவே, அந்த மனநிலை அவனை யுத்தத்தில் பிணித்துவிடும். 

ஆகையினால் பகவான் அர்ஜுனனிடம் இவ்விதமாக உரைக்கிறார். இன்றுவரை நீ பெற்றுள்ள பண்பும் பயிற்சியும் க்ஷத்ரிய சுபாவத்துக்கு ஒத்தது. தீமையை எதிர்த்துப் போராடும் பாங்குடையவனாக நீ இருக்கிறாய். தீமை ஓங்கி வளர்வதைப் பார்த்துக் கொண்டு உன்னால் வினையாற்றாமல் இருக்க முடியுமா? தூங்கும்பொழுதும் நம் உடலைக் கொசுக் கடித்தால் நம் கை தானே கொசுவை அடித்து ஓட்டுகிறது. அதுபோல உனது சுபாவமே போருக்கு எழுந்து நிற்கும். அதற்கு மாறாக தீர்மானிப்பது உனது ஆத்ம சக்தியைக் கெடுப்பதாகும். எண்ணமும் செயலும் மாறுபடுவதைவிட ஒரு மனிதனுக்கு கேடு வேறொன்றுமில்லை. தீமையைக் களைந்தாக வேண்டும் என்ற எண்ணம் உன் உள்ளத்தில் கொதித்துக் கொண்டிருக்கிறது. ஆயினும் உடலால் செயல்புரிய மாட்டேன் என்று உன் இயல்புக்கு எதிராக முடிவெடுக்கின்றாய். ரஜோகுணத்தில் உதித்த பயன்படாத அஹங்காரம் அது. அதன் வசப்பட்டு வீணானத் தீர்மானத்தை செய்யாதே. 

இதன் தொடர்ச்சியாக சுபாவத்தை குறித்த ஒரு சாமானிய நியதியை பகவான் அடுத்த சுலோகத்தில் பகர்கிறார். 


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

அஹங்காரம் இருக்கும் வரையில் ஞானமும் முக்தியும் கைகூடா; ஜனன மரணமும் நீங்கா.

————————————————————————————————

||18.60|| பொதுவான நியதியொன்று பகரப்படுகிறது:

स्वभावजेन कौन्तेय निबद्ध: स्वेन कर्मणा ।

कर्तुं नेच्छसि यन्मोहात्करिष्यस्यवशोऽपि तत् ।। ६० ।।   

ஸ்வபா4வஜேந கெளந்தேய நிப3த்34: ஸ்வாந கர்மணா ।

கர்தும் நேச்ச2ஸி யந்மோஹாத்கரிஷ்யஸ்யவசோ1ऽபி தத் ।। 60 ।।


कौन्तेय  கெளந்தேய  குந்தியின் மகனே     मोहात्  மோஹாத்  மோஹத்தினால்      यत्  யத்  எதை     कर्तुं न इच्छसि  கர்தும் ந இச்ச2ஸி   செய்ய விரும்புவதில்லையோ     स्वभावजेन  ஸ்வபா4வஜேந  சுபாவத்தில் பிறந்த     स्वेन कर्मणा  ஸ்வாந கர்மணா  சொந்த கர்மத்தால்      निबद्ध:  நிப3த்34:  கட்டுண்டவனாய்       अवश:  அவச1:  உன் வசமில்லாதவனாய்     तत् अपि  தத் அபி  அதையே      करिष्यसि  கரிஷ்யஸி  செய்வாய்.


குந்தியின் மைந்தா, மோஹத்தால் எதைச் செய்ய மறுக்கிறாயோ, உன் இயல்பில் பிறந்த வினையினால் கட்டுண்டு, உன் வசமிழந்தவனாய், அதையே நீ செய்வாய். 


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

இயற்கையில் தோன்றிய ஸ்வகர்மத்தால் கட்டுண்டிருக்கும் நீ மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும், தன் வசமின்றியேனும் அதைச் செய்யலாவாய்.


விளக்கம்:

அஹங்காரத்தின் வசப்பட்டு தனது சொந்த இயல்பிற்கு எதிராக முடிவெடுக்கும்போது அது எங்கு கொண்டுசென்று விடும் என முந்தைய சுலோகத்தில் பகவான் கூறினார். அதன் தொடர்ச்சியாக ஒருவனது சுபாவத்தின் பொதுவான நியதியை இங்கு பகர்கிறார்.


=> உள்ளூற உறைந்து கிடப்பது சுபாவம்:

சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய மூன்று குணங்களின் சேர்க்கையால் உருவாகும் ஒருவனின் சுபாவத்திலிருந்து தோன்றுவது ‘ஸ்வபா4வஜ’ என்று அழைக்கப்படுகிறது. வேறுவிதத்தில் சொல்லப்போனால் ஒருவனின் சம்ஸ்காரங்களிலிருந்து தோன்றுகிற செயல்கள் என இதை வரையறுக்கலாம். இதனால் தன்னியல்பில் கட்டுண்டவனாய், தவிர்க்க முடியாதபடி சில செயல்களைச் செய்ய அவன் தள்ளப்படுகிறான் — நிப3த்34. செய்வதற்கு தயாராக இல்லையெனினும் அது அவ்விதமே நடக்கிறது — கர்தும் ந இச்ச2ஸி. தனது இயல்புக்கு ஏற்ற கர்மத்தை ஒருவன் ஏன் செய்ய மறுக்கிறான்? மயக்கத்தின் காரணமாக — மோஹாத். திடீர் உந்துதல், தவறான அனுதாபம், அல்லது குழப்பமான தீர்மானம் போன்றவைகள் மோஹத்தின் வடிவங்கள். அர்ஜுனன் போரை கைவிட விரும்பியதும் இதே காரணத்தினால்தான். கருணை என்பது ஒரு நல்ல குணம்தான். ஆனால் அது இங்கு தவறான இடத்தில் வைக்கப்படுகிறது. ஏனெனில் அநீதி என வரையறுக்கப்படும் அனைத்து குற்றங்களையும் செய்தவன் துரியோதனன். அவனுக்கு இப்போது கருணை தேவையில்லை; அவனை தடுத்து நிறுத்த வேண்டும். உறவினன் என்பதால் தவறாக அவன்மீது அனுதாபம் கொண்டு செயல்பட்டால், அது விவேகமின்மையால் பிறந்த ஒரு செயலே ஆகும் — மோஹாத். உணர்ச்சி வேகத்தால் இப்போது செய்ய விரும்பாத அதே செயலை, பின்னர் நீயே கட்டுப்பாடின்றி செய்ய நேரிடும் — தத் கரிஷ்யஸி அவச1: அபி, என்கிறார் கிருஷ்ணர். மேலும் மனவழுத்தம் குறைந்தபின் இது குறித்து வருந்த நேரிடும், அல்லது பிறர் உன்னை மீண்டும் அதில் ஈடுபடுத்தத் தூண்டுவார்கள். எதுவாயினும், உன் தன்னியல்பு உன்னை முழுவதுமாக ஆட்கொள்ளும்போது, நீ அதற்கேற்ற செயலையே செய்ய வேண்டியிருக்கும். அதிலிருந்து தப்புவதற்கான வழி இல்லை; ஏனெனில் சுபாவத்தை விருப்பத்தால் மாற்ற முடியாது. ஒருவன் தனது விருப்பத்தால் மாற்றத்திற்கு உகந்ததான ஒரு சூழ்நிலையை உருவாக்கலாம். அப்போதுகூட மனநிலையில் மாற்றம் என்பது ஒரே இரவில் நிகந்து விடாது. இங்கு இப்போது அர்ஜுனன் இந்த போர் அனுபவத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் நிற்கிறான். அவன் செய்ய வேண்டியதைச் இப்போது செய்துதான் ஆக வேண்டும். அதை தவிர்ப்பது என்பது அவனது தன்னியல்புக்கு விரோதமானது. இதிலிருந்து, நாம் ஒவ்வொருவரும் நமக்கு உரியதை, நமது இயல்புக்கு விரோதமாக இல்லாததை செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிறர் என்ன செய்கிறார்கள் என்பது நமது செயலுக்கான அளவுகோல் அல்ல.

கர்மத்தை யோகமாக செய்வது எந்த விதத்திலும் மோக்ஷத்திற்கு எதிரானது அல்ல. நாம் ஏற்கனவே பார்த்ததுபோல, ஆத்மாவைப் பற்றிய அறியாமையின் விளைவு என்பதால் கர்மம் இயல்பிலேயே மோக்ஷத்திற்கு எதிரானது. ஏனெனில் சில வரையறுக்கப்பட்ட பலன்களைப் பெறுவதற்காக மட்டுமே கர்மம் செய்யப்பட்டால், அந்த சிறு பலன்களையே அவன் பெறுகிறேன். அது மோக்ஷம் அல்ல, பந்தம் ஆகும். ஆனால் கர்மம் குறிப்பிட்ட பலன்களுக்காக அல்லாமல் மோக்ஷத்திற்காகவென யோகமாக செய்யப்படும் போது, அது மோக்ஷத்திற்கானத் தகுதியை உருவாக்கும். தனது மனநிலையை சாத்விகமானதாக மாற்றக்கூடிய ஒரு தளம் கர்மயோகிக்கு கிடைக்கிறது. தடைகள் இல்லாத அறிவை அடைவதற்கு இது அவசியம். அனைத்து தடைகளையும்(ப்ரதிப3ந்த4) நீக்க, ஈஷ்வரார்பணம் மற்றும் பிரசாதபுத்தியுடன் கூடிய கர்மயோக வாழ்க்கையை அவன் மேற்கொள்ள வேண்டும்.  


=> கர்மயோகியும் சந்யாசியும்:

சந்யாசி அடையும் அதே நிலையை, கர்மயோகியும் அடைகிறான் — யத் ஸாங்க்2யை: ப்ராப்யதே ஸ்தா2நம் தத் யோகை3ரபி க3ம்யதே, என ஐந்தாவது அத்தியாயத்தில் பகவான் சுட்டிக்காட்டினார். ஒருவனது மனதின் இயல்பை திடீரென்று விருப்பத்தினால் கட்டாயப்படுத்தி மாற்றிவிட முடியாது. அது அவ்வளவு எளிதாக மாறாது. மாற்றவேண்டும் என்கிற அந்த விருப்பமே, இன்னும் வளர வேண்டிய ஒரு உள் உந்துதலின் வெளிப்பாடாகும். அது காலத்தினால் தான் முதிர்ச்சியடையும். ‘நான் ஒரு சந்யாசியாக வேண்டும்’ என்கிற விருப்பத்தால் எழுந்த தீர்மானம் மட்டுமே ஒருவனுக்கு சந்யாசியின் இயல்பை கொடுத்துவிடாது. கர்மயோக வாழ்க்கை இல்லாமல் சந்யாசியின் மனநிலை பெறுவது எளிதல்ல — ஸந்ந்யாஸஸ்து மஹாபா3ஹோ து3:க2மாப்தும் அயோக3த:. ஆகவே அர்ஜுனா, கர்மயோகமே சிறந்தது — கர்மயோகோ3 விசி1ஷ்யதே, என்கிறார் கிருஷ்ணர். எனவே பக்குவப்பட்டு விடுவதென்பது வேறு, மோஹத்தினால் விடுவது வேறு. இரண்டிற்குமிடையேயான வேறுபாட்டை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

வெள்ளைப் பூண்டின் சாறு வைக்கப்பட்டிருந்த பாத்திரம் எத்தனை தரம் கழுவித் துடைக்கப்பட்ட போதிலும் அது நாற்றத்தை கொடுத்துக்கொண்டிருக்கும். அஹங்காரமானது வெகு பிடிவாதமுள்ள அக்ஞானம். எவ்வளவுதான் சிரமப்பட்ட போதிலும் அதை முற்றிலும் போக்குவது முடியாத காரியம்.

————————————————————————————————


சனி, 5 செப்டம்பர், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.57 - 18.58

||18.57|| ஆகையால் அர்ஜுனா நீ வாழவேண்டிய விதமாவது:

चेतसा सर्वकर्माणि मयि सन्न्यस्य मत्पर: ।

बुद्धियोगमुपाश्रित्य मच्चित्त: सततं भव ।। ५७ ।।    

சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பர: ।

பு3த்3தி4யோக3முபாச்1ரித்ய மச்சித்த: ஸததம் ப4வ ।। 57 ।।


चेतसा  சேதஸா  விவேகத்தால்     सर्वकर्माणि  ஸர்வகர்மாணி  அனைத்து கர்மங்களையும்     

मयि सन्न्यस्य  மயி ஸந்ந்யஸ்ய  என்னிடத்து சமர்ப்பித்து     मत्पर:  மத்பர: என்னைக் குறியாகக் கொண்டு       बुद्धियोगम्  பு3த்3தி4யோக3ம்  கர்மயோகத்தை     उपाश्रित्य  உபாச்1ரித்ய  சார்ந்திருந்து      सततं  ஸததம்  எப்பொழுதும்     मच्चित्त:  மச்சித்த:  சித்தத்தை என்பால் வைத்தவனாக       

भव  4  ஆகக்கடவாய்.


விவேகத்தினால் கர்மத்தையெல்லாம் என்பால் ஒப்படைத்து, என்னைக் இலக்காகக் கொண்டு, கர்மயோகத்தைச் சார்ந்திருந்து, எப்பொழுதும் சித்தத்தை என்பால் வைப்பாயாக.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

அறிவினால் செயல்களையெல்லாம் எனக்கெனத் துறந்துவிட்டு, என்னிடத்தே ஈடுபட்டு, புத்தி யோகத்தில் சார்புற்று, எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.


விளக்கம்:

ஆகையால் அர்ஜுனா நீ கர்மயோகத்தை ஏற்று வாழ்க்கையை வழிநடத்துவாயாக என பகவான் இந்த சுலோகத்தில் கூறுகிறார். 


=> என்னையே சிந்தித்திரு:

எப்பொழுதும் என்னையே சிந்திப்பவனாக இரு — மச்சித்த: ஸததம் ப4, என்று கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அறிவுறுத்துகிறார். சிலருடைய மனதில் எப்போதுமே இறை சிந்தனை இருப்பதில்லை. சிலருக்கு அமாவாசை, சிவராத்திரி, பிரதோஷம், ஏகாதசி போன்ற மாதத்தின் ஒரு சில நாட்களில் உபவாசம் அல்லது பூஜை போன்ற செயல்களின் வழியாக இறை சிந்தனை இருக்கும். வேறு சிலருக்கு வெள்ளி போன்ற வாரத்தில் ஏதேனுமொரு நாள், சிலருக்கு காலை அல்லது மாலை போன்ற குறிப்பிட்ட பிரார்த்தனை நேரங்களில் மட்டும் ஈஷ்வரனை பற்றிய எண்ணம் இருக்கிறது. மற்ற நேரங்களில் இருப்பதில்லை. ஆனால் இங்கு பகவான் அர்ஜுனனிடம் எப்போதும் மனம் என்னில் இருக்கட்டும் எனக் கூறுகிறார். இதன் அர்த்தம் என்ன? இறைவனைத் தவிர வேறு எந்த எண்ணமும் அவனுக்கு இருக்கக்கூடாதா? அவன் எப்போதும் ஈஷ்வரனை நினைத்துக்கொண்டே தன் கடமைகளை எப்படி செய்ய முடியும்? முழுவுலகும் ஈஷ்வரனே எனும் புரிதலால் மட்டுமே இது சாத்தியமாகும். இவ்விதம் உணர்ந்த ஒருவன் எதை செய்யும்போதும் அல்லது எதையும் செய்யாமல் இருக்கிறபோதும் அவன் ஈஷ்வரனை ஒருபோதும் தவறவிடுவதில்லை. ஏனெனில் அவன் பார்க்கும் அனைத்தும் ஈஷ்வரனின் வடிவமே ஆகும்.


=> அனைத்துச் செயலையும் எனக்கர்ப்பணி:

மனதளவில் அனைத்து கர்மங்களையும் எனக்கு அர்ப்பணித்து விட்டு செய் — சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸந்ந்யஸ்ய, என்கிறார் கிருஷ்ணர். இங்கு ‘சேதஸா’ என்பது விவேக புத்தியுடன் கூடிய மனதை குறிக்கிறது. எது சரி மற்றும் எது தவறு என்பதை பிரித்தறியும் திறன் கொண்ட மனம். அந்த அறிவினாலும் பாவனையினாலும் செயலை சமர்ப்பித்தல் இங்கு கூறப்படுகிறது. ஒவ்வொரு செயலுக்கும் இரு வகை பலன் உண்டு எனப் பார்த்துள்ளோம். (1) த்3ருஷ்ட பலன் - உடனே அனுபவிக்கப்படுகிற, கண்ணுக்குப் புலப்படுகிற பலன். (2) அத்3ருஷ்ட பலன் - கண்ணுக்கு புலப்படாத பலன். உதாரணமாக, தானம் செய்யும்போது ஏற்படுகிற திருப்தி என்பது கண்ணுக்கு புலப்படுகிற பலன். மேலும் அதனால் கிடைக்கக்கூடிய புண்ணியம் எனப்படும் ஒரு கண்ணுக்குத் தெரியாத பலனும் உள்ளது, இது பின்னர் விரும்பத்தக்க சூழ்நிலையை கொடுக்கும் ஒன்றாக வெளிப்படும். இவ்விதம் செய்யப்பட வேண்டிய கடமைகள், பூஜை, சடங்குகள் என உடல் மனம் மற்றும் வாக்கினால் செய்யப்படுகிற அனைத்து கர்மங்களையும் பகவானுக்குகாகவென செய்து, அதனால் உண்டாகிற விளைவை அவரின் பிரசாதமாக எடுத்து கொள்ளுதல் வேண்டும். இந்த கருத்து ஒன்பதாவது அத்தியாயம் இருபத்தேழாவது சுலோகத்தில், ‘எதைச் செய்யினும் எனக்கு அர்ப்பணமாகச் செய் — யத் கரோஷி தத் குருஷ்வ மத3ர்பணம், எனக் கூறப்பட்டது. 


=> என்னையே இலக்காகக் கொள்:

இறுதி இலக்காக என்னையே கொள்வாயாக — மத்பர:, என்கிறார் கிருஷ்ணர். இங்கு பகவானால் விளக்கப்படும் இந்த நபருக்கு ஈஷ்வரனே பிரதானமானவர். சிறிய இலக்குகளையும், அன்றாட பலன்களையும் பெறுவதற்காக அல்லாமல் அவனது ஒரே குறியாகவும், முடிவான இலக்காகவும் இருப்பது பரமேஷ்வரனே. சிறிய பலன்களைப் பெற பகவானின் அருளைப் பயன்படுத்துவதில் தவறேதுமில்லைதான். அப்படிப்பட்டவனையும் பக்தன் எனும் வகைப்பாட்டில், ‘அர்தா2ர்தீ2’ எனும் பெயரில் நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். ஆனால் இங்கு நாம் பேசுவது ஜிக்ஞாசு பக்தனைப் பற்றி. அவனது விருப்பம் ஈஷ்வரனாகவே இருப்பதால் அவனது அடைக்கலமும் ஈஷ்வரனைத் தவிர வேறில்லை. ஆகையினால் இங்கு கிருஷ்ணர், புத்தியோகம் என அழைக்கப்படுகிற கர்மயோக வாழ்க்கையை எடுத்துக் கொள் — பு3த்3தி4யோக3ம் உபாச்1ரித்ய, எனக் கூறுகிறார். 

கர்மயோகம் என்பது முற்றிலுமாக ஒரு தர்மநெறி சார்ந்த வாழ்க்கையாகும். பக்தியில்லாமல் கர்மயோகம் இல்லை. மனதின் உறுதியான தீர்மானம் என்று புத்தியோகத்தை சங்கரர் விளக்குகிறார். இரண்டாம் அத்தியாயத்தில்(2.41) பார்த்ததுபோல், மோக்ஷமே ஒரே புருஷார்த்தம் என்று தெளிவாக அறிந்தவனது மனம் உறுதியானது — வ்யவஸாயாத்மிகா பு3த்3தி4. இலக்கு தெளிவாக இல்லாதவனின் மனம் சிதறியதாக இருக்கிறது. தெளிவான இலக்கு இல்லையெனில், இலக்குகள் முடிவற்றவைகளாகத் தொடர்கின்றன. மாறாக லட்சியம் தெளிவாக இருந்தால், அவனது ஒரே திட்டம் — ஈஷ்வரனுடனானத் தனது ஐக்கியத்தைப் புரிந்து கொள்ளும் வரையில், அதற்காக தன்னைத் தயார்படுத்திக் கொள்வதாக மட்டுமே இருக்க முடியும். அந்த நோக்கத்திற்காகவே அனைத்தும் செய்யப்படுவதால் அங்கு ஒவ்வொரு செயலும் அர்த்தமுள்ளதாகிறது. எவ்வளவு காலம் ஆனாலும், எத்தனை ஆண்டுகள் எடுத்தாலும், அது ஒரு பொருட்டல்ல. ஏனெனில் தீர்மானமும் அர்ப்பணிப்பும் மோக்ஷமே இலக்கு என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது. அதனால் கர்மம் அனைத்தும் யோகம் ஆகிறது.

இனி, ஒருவனின் மனம் எப்போதும் ஈஷ்வரனில் நிலைபெற்றிருந்தால் என்ன நடக்கிறது? அடுத்த சுலோகத்தில் விடை வருகிறது. 


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பகவானைக் காணும் பாக்கியம் உனக்குக் கிடைத்தால் நீ அவரிடம் என்ன கேட்பாய்? வைத்திய சாலைகள், குளங்கள், பாட சாலைகள், அன்னச் சத்திரங்கள் — இவைகள் வேண்டுமென்று இறைஞ்சுவாயா? இவைகளெல்லாம் நாம் கடவுளைக் காணும் வரையில் உண்மையாகத் தோன்றும். ஆனால் கடவுளை நேருக்கு நேர் கண்டதும் இவையனைத்தும் நிலையில்லாதனவாகக் கனவில் காணப்படுவன போலத் தோன்றும். ஆகையால் அவனிடம் அன்பு வேண்டியும் அறிவு வேண்டியும் பிரார்த்திப்போம். அவனிடம் அன்பு செலுத்துவதால் மனிதத் தன்மையிலிருந்து நாம் தெய்வத் தன்மைக்கு உயர்த்தப்படுவோம். அறிவுக்கும் ஆனந்தத்திற்கும் உறைவிடம் பகவான் என்பதை அந்த அன்பிலிருந்து நாம் அறிவோம். நாம் அவருடைய புதல்வர்கள் என்பதும் அப்பொழுது நமக்கு விளங்கும்.

————————————————————————————————

||18.58|| புத்தியோகத்தால் விளையும் நன்மை யாது? 

मच्चित्त: सर्वदुर्गाणि मत्प्रसादात्तरिष्यसि ।

अथ चेत्त्वमहङ्कारान्न श्रोष्यसि विनङ्क्ष्यसि ।। ५८ ।। 

மச்சித்த: ஸர்வது3ர்கா3ணி மத்ப்ரஸாதா3த்தரிஷ்யஸி ।

அத2 சேத்த்வமஹங்காராந்ந ச்1ரோஷ்யஸி விநங்க்ஷ்யஸி ।। 58 ।।


त्वम्  த்வம்  நீ      मच्चित्त:  மச்சித்த:  சித்தத்தை என்பால் வைத்து       मत्प्रसादात्  மத்ப்ரஸாதா3த்  எனது அனுக்கிரகத்தால்     सर्वदुर्गाणि  ஸர்வது3ர்கா3ணி  எல்லா இடைஞ்சல்களையும்      

तरिष्यसि  தரிஷ்யஸி  தாண்டிச் செல்வாய்      अथ  அத2  அன்றி      अहङ्कारात्  அஹங்காராத்  அஹங்காரத்தால்      न श्रोश्यसि चेत्  ந ச்1ரோஷ்யஸி சேத்  நீ கேளாவிட்டால்      

विनङ्क्ष्यसि  விநங்க்ஷ்யஸி  அழிவடைவாய்.


சித்தத்தை என்பால் வைத்து எனதருளால் இடைஞ்சல்களையெல்லாம் தாண்டிச் செல்வாய். அன்றி நீ அஹங்காரத்தால் கேளாவிட்டால் கேடு அடைவாய்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

என்னை சித்தத்தில் கொண்டிருப்போனாய் எல்லாத் தடைகளையும் எனதருளால் கடந்து செல்வாய், அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயெனில் பெரிய நாசத்தை அடைவாய்.


விளக்கம்:

கர்மயோகத்தின் பலனாக ஒருவன் அடைவது என்னவென்று பகவான் இங்கு கூறுகிறார்.


=> இடர்பாடுகளைக் கடப்பாய்:

து3ர்க3’ எனில் கடப்பதற்கு கடினமானது என்று பொருள். ஒரு மலைச்சிகரம் அல்லது கடப்பதற்கு கடினமான ஒரு குறுகிய பாதை ‘து3ர்க3’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு மிகுந்த சிரமத்துடன் மட்டுமே கடக்கக்கூடிய விஷயங்கள் சொல்லப்படுகின்றன. இதனை சம்சாரத்திற்கு காரணம் என சங்கரர் கூறுகிறார். இந்த கர்மங்களே புண்ணிய-பாபத்தை உருவாக்கி, புதிய பிறவிகளுக்குக் காரணமாக அமைகின்றன. ‘நான் செய்கிறேன்’ என்ற அகந்தை(கர்த்ருத்வம்) மற்றும் அறியாமையிலிருந்து(அக்ஞாநம்) இவை பிறக்கின்றன; இவை யாவும் கடப்பதற்கு மிகவும் கடினமானவை. அவித்3யா காம கர்ம — அறியாமை மற்றும் அதன் விளைவாக உண்டாகிற ஆசைகள் மற்றும் அதை அடைய செய்யப்படுகிற செயல்கள் போன்ற தடைகளை கடப்பதென்பது மிகவும் கடினம். ஆனால், கர்மயோக வாழ்க்கையில் உன்னை அர்ப்பணித்துக் கொண்டவன் என்பதால், கடக்க முடியாத இவை அனைத்தையும் நீ எளிதாகக் கடந்து விடுவாய் — ஸர்வது3ர்கா3ணி தரிஷ்யஸி.

உலக அனுபவத்தில் இரு பகுதிகள் உண்டு. ஒன்று புறவுலகம், மற்றது அகவுலகம். தடைகளும் இடைஞல்களும் வெளியுலகிலும் உண்டு; அகவுலகாகிய மனதிலும் உண்டு. புறவுலக இடர்பாடுகளை இக்காலத்து நவீன கண்டுபிடிப்புகளின் துணைகொண்டு அகற்றிவிடலாம். நீரில்லாத இடத்தில் நீர் கொண்டு வருதல், வெப்பம் அதிகமாக இருக்கிற இடத்தில் வெப்பத்தை குறைத்தல், நோய் வரக்கூடிய இடத்தை நோயற்ற இடமாக மாற்றுதல் என அனைத்தும் வெளிக்கருவிகள் கொண்டு சாத்தியபடுத்தலாம். ஆனால் அதனால் மட்டுமே உலகம் இன்பமாக மாறிவிடாது. வெளியுலகைத் திருத்தியமைப்பதைவிட மனதைத் திருத்தியமைக்கத் தெரியாதவனுக்குப் புறவுலகம் எவ்வளவு நல்லதாயிருந்தாலும் அது இன்பம் தராது. புறவுலகம் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் மனதைத் திருத்தியமைத்துக் கொண்டவனுக்கு அது துன்பத்தை கொடுக்காது. இடைஞ்சல்கள் உண்மையில் வெளியுலகிலில்லை; மனிதனுடைய மனநிலையில்தான் இருக்கின்றன. மனதை ஈஷ்வரனிடம் வைத்தவர்களுக்கு உலகம் தரும் இடர்பாடுகளும்கூட ஈசனது செயலாகவே தோன்றும். கர்மயோக வாழ்க்கையின் மூலம் பகவானிடம் சரணடைந்தவனாக கர்மத்தில் ஈடுபடுபவன் அவரது அனுகிரகத்தினால் அத்தகைய இடர்பாடுகளை கடக்கிறான். ஆனால் மனதில் அகந்தை இருப்பவனுக்கு துன்பங்கள் அனைத்தும் அதிலிருந்தே வருகின்றன.  


=> இலக்கிலிருந்து வீழ்வாய்:

‘இப்போது ஒருவேளை நான் சொல்வதை நீ கேட்கவில்லையெனில் — அத2 ந ச்1ரோஷ்யஸி சேத்’ என்று கூறி கிருஷ்ணர் ஒரு எச்சரிக்கையை அளிக்கிறார். சொல்லப்படுவதை கேட்காமல் போவதற்கானக் காரணம் என்னவாக இருக்கக்கூடும்? அஹங்காரம் — அஹங்காராத். ‘எனக்கு எல்லாம் தெரியும், எல்லாவற்றையும் நானே பொறுப்பேற்று நடத்திவிடுவேன், நீங்கள் கூறுவதை நான் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை’ என்று உனது சொந்த அகந்தையினால் நீ நினைக்கலாம். அறியாமையால் பிறந்த அந்த ஆணவத்தினால், நான் உனக்குச் சொல்லிக் கொண்டிருப்பதை நீ புரிந்து கொள்ளாமல் போகலாம். அப்படி இருக்குமானால், நீ கேட்டை அடைவாய் — விநங்க்ஷ்யஸி, என்கிறார் பகவான். அதாவது, நீ எதை விரும்புகிறாயோ அதை உன்னால் சாதிக்க முடியாது; இலக்கிலிருந்து வீழ்ந்துவிடுவாய்; புருஷார்த்தத்திலிருந்து நஷ்டத்தை அடைவாய்.

இரு வகையான பலம் உள்ளது. ஒன்று அஹங்கார பலம், இதை என்னால் செய்து கொள்ள முடியும் என நினைப்பது. இதன் பக்கவிளைவாக உண்டாவது கர்வம் ஆகும். இரண்டாவது வகையில், தன்னால் இதை செய்துவிட இயலாது என்ற அறிவுடன் பகவானிடம் சரணடைந்து அவரின் அனுகிரகத்தினால் உண்டாகிற பலம்; இதில் கர்வம் இல்லை. 

ஆகவேதான் பகவான் அர்ஜுனனிடம் ஒருகால் அஹங்கார பலத்தினால் நீ என்னை புரிந்து கொள்ளவில்லையெனில், நீ தேடுகின்ற அந்த நன்மைகள்(ச்1ரேயஸ்) உனக்கு மறுக்கப்படும், ஏனெனில் நீ அதற்குத் தயாராக இல்லை. சந்யாசத்திற்குத் தயாராகாமல் கர்மத்தை கைவிடும்போது, நீ ஒரு சந்யாசியாகவும் இருக்கமாட்டாய்; கர்மயோகியாகவும் இருக்கமாட்டாய். எனவே, நீ தேடும் அந்த இலக்கை அடைய முடியாது என்கிற அர்த்தத்தில் நீ அழிவடைவாய் எனக் கூறப்படுகிறது. அர்ஜுனன் தன்னை சரியாகப் புரிந்துகொண்டானா என்பதை உறுதிப்படுத்தவே கிருஷ்ணர் இதை சொல்லுகிறார். ஏனெனில் பின்னர் சுலோகம் அறுபத்திமூன்றில் (18.63), அவனுக்குப் பிடித்ததை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முழு சுதந்திரத்தை அர்ஜுனனுக்கு அவர் வழங்கப் போகிறார் — யதா2 இச்சஸி ததா2 குரு. ஆகையினால், இப்போது தான் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டோம் என்பதை அவர் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்.

தான் செய்யவேண்டிய இந்த கடமை இப்போது மகிழ்ச்சி தருவதாக இல்லை என நினைத்து அர்ஜுனன் அதை கைவிட்டால், பிறகு இதைவிடவும் விரும்பத்தகாத ஒரு செயலை அவன் செய்ய வேண்டியிருக்கும் என்று கிருஷ்ணர் கூறுகிறார். ஏனெனில் அவனது இயல்பு அவனை அவ்வாறு செய்யத் தூண்டும். போர்களத்திலிருந்து ஓடிவிட்டதற்காக மக்கள் அவனை நிந்திக்கும்போது, அவனது சுபாவத்தினால் அவன் மிகுந்த கோபமடைந்து அவர்களுடன் சண்டையிடுவான். ஏனெனில் எவராலும் தனது இயல்பை முழுமையாகக் கைவிட முடியாது. எனவேதான் அர்ஜுனனின் மனநிலை கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருந்தது. அவனுக்கு அறிவு இருந்தது உண்மைதான் எனினும், இப்போது பகவான் அர்ஜுனனிடம் சொல்வதிலிருந்தும், அந்த அறிவில் சில தடைகள் இருந்ததை நாம் புரிந்து கொள்கிறோம். அவை சரி செய்யப்பட வேண்டியவை.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

என்னதான் முயன்றாலும் ஈஷ்வரனுடைய கிருபை மட்டும் இல்லாது போனால் உனக்கு ஒன்றும் லபிக்காது. நீ ஈஷ்வரனை அடையமாட்டாய். ஆனால் இந்தக் கிருபை எளிதில் கிடைத்துவிடும் என்று நம்பாதே. உனது ஹிருதயத்திலிருந்து அஹங்காரம் முழுவதும் நீங்க வேண்டும். ‘நான் கர்த்தா’ என்ற எண்ணம் உன் மனதிலிருந்தால் நீ ஒருபோதும் ஈஷ்வரனைக் காணமாட்டாய். ‘நானே கர்த்தா’ வென்று எவன் நினைக்கின்றானோ அவன் உள்ளத்தில் ஈஷ்வரன் ஒருபோதும் தோன்றுவதில்லை.

————————————————————————————————