வியாழன், 11 ஜூன், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.34 - 18.35

||18.34|| ராஜஸமான உறுதி: 

यया तु धर्मकामार्थान् धृत्या धारयतेऽर्जुन ।

प्रसङ्गेन फलाकाङ्क्षी धृति: सा पार्थ राजसी ।। ३४ ।।

யயா து த4ர்மகாமார்தா2ந் த்4ருத்யா தா4ரயதேऽர்ஜுந ।

ப்ரஸங்கே3ந ப2லாகாங்க்ஷீ த்4ருதி: ஸா பார்த2 ராஜஸீ ।। 34 ।।


पार्थ  பார்த2  பார்த்தா     तु  து  மற்று     यया धृत्या  யயா த்4ருத்யா  எந்த உறுதியினால்

धर्म काम अर्थान्  4ர்ம காம அர்தா2ந்  தர்மம், காமம், அர்த்தம் ஆகியவைகளை

धारयते  தா4ரயதே  காக்கின்றானோ     प्रसङ्गेन  ப்ரஸங்கே3  பெரும் பற்றுதலால்

फलाकाङ्क्षी  2லாகாங்க்ஷீ  பயனை விரும்புபவனாகிறானோ      अर्जुन  அர்ஜுந  அர்ஜுனா      

सा धृति:  ஸா த்4ருதி:  அந்த உறுதியானது      राजसी  ராஜஸீ  ராஜஸீகமானது.


மற்று, எந்த உறுதியினால் அர்ஜுனா, அறம் பொருள் இன்பங்களை ஒருவன் காக்கின்றானோ, பற்றுதலால் பயனை விரும்புகின்றவன் ஆகிறானோ அந்த உறுதியானது பார்த்தா, ராஜஸமானது. 


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

பார்த்தா! பற்றுத லுடையோனாய்ப் பயன்களை விரும்புவோன் அறம் பொருளின்பங் களைப் பேணுவதில் செலுத்தும் உறுதி ராஜச உறுதியாம்.


விளக்கம்:

இங்கு பகவான் ராஜஸமான உறுதியை வரையறுக்கிறார்.


=> ராஜஸ உறுதி:

எந்த உறுதியானது, இன்பத்திற்காகவும்(காம), வாழ்க்கைக்கு தேவைப்படுகிற பொருளை அடையும்பொருட்டும்(அர்தா2ந்) செய்யப்படுகிற புண்ணிய கர்மத்தை(4ர்ம) நோக்கி ஒருவனை செலுத்துகிறதோ அது ராஜஸமானது. தர்மம்(அறம்), அர்த்தம்(பொருள்), காமம்(இன்பம்), மோக்ஷம்(வீடு) எனும் நான்குவகை புருஷார்த்தம் சாஸ்திரத்தில் பேசப்படுகிறது. சாத்விக திருதி மோக்ஷத்தை நாடுகிறது. தர்மம், அர்த்தம், காமம் ஆகியவைகள் பிரபஞ்ச வாழ்க்கையின் முக்கிய பகுதிகளாகிய இவ்வுலக வாழ்க்கைக்கும் சொர்க்க வாழ்க்கைக்கும் உதவுகின்றன. இங்கு பேசப்படும் நபரின் மனம், புலன்கள் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட அனைத்து செயல்பாடுகளும் தர்ம, அர்த்த மற்றும் காம நோக்கம் கொண்டவைகளாகவே இருக்கின்றது. அதிக புண்ணியத்தை எப்படிப் பெறுவது மற்றும் அதை எவ்வாறு எளிதாகப் பெறுவது என திட்டமிடுவதில் தனது நேரத்தை செலவிடுகிறான். அவன் புண்ணியத்தை நாடுவது, மோக்ஷத்திற்கு தேவைப்படுகிற சித்த சுத்தியை கொடுக்கும் என்பதற்காக அல்ல, மாறாக அர்த்த மற்றும் காமத்தை அது கிடைக்கச் செய்யும் என்பதற்காக.   

மேலும் அதிக பற்றுதலின் காரணமாக அவன் சம்பந்தப்பட்ட பலனை விரும்புகிறான் — ப்ரஸங்கே3ந ப2லாகாங்க்ஷீ. ஒவ்வொரு வாய்ப்பையும் தனக்கு நன்மை தருகிற ஒன்றாக மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறான். போகத்தில் ஆசை கொண்டு சுயநலவாதியாகவும் சந்தர்ப்பவாதியாகவும் செயல்பட்டு, அமைகின்ற சூழலை தனது சொந்த நோக்கங்களுக்கு என உபயோகப்படுத்துகிறான். தர்ம, அர்த்த மற்றும் காமத்தைப் பெறுவதற்கான எந்த வாய்ப்பையும் தவறவிடாத கழுகுப் பார்வை கொண்டவனாக இருக்கிறான்.

கழுகு எவ்வளவு உயரமாகப் பறந்தபோதிலும், அதன் கண்கள் இறந்ததைத் தேடும் பொருட்டு எப்போதும் தரையை நோக்கியே இருக்கும். உயரமாகப் பறப்பதால் அது பூமியில் என்ன நடக்கிறது என்பதைப் பொருட்படுத்தாததுபோல தெரிகிறது. ஆனால் திடீரென்று எங்காவது இறந்த சடலம் தென்படும்போது, அதையே தேடிக்கொண்டிருக்கும் கண்களை உடைய கழுகானது தனது உயரத்திலிருந்து கீழே இறங்குவதைக் காணலாம். ராஜஸ-திருதி உடையவனும் கழுகின் கண்களைக் கொண்டவனாக, வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறான். சாதகமான சூழ்நிலை அமையும்போது, தர்ம, அர்த்த மற்றும் காமம் உள்ளிட்ட பலன்களை அடையவிரும்புகிறான் — 2லாகாங்க்ஷீ. இவைகளிலிருக்கின்ற இந்த அசைக்க முடியாத உறுதிப்பாடு ராஜஸத்திலிருந்து பிறந்தது என்பதால் இது ‘ராஜஸீ’ எனப்படுகிறது. 


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

தாபஜுரத்தால் பிதற்றுகிறவன் சமீபத்தில் குளிர்ந்த ஜலத்தையும் இனிமையான தின்பண்டங்களையும் வைத்திருந்தால் அவன் அத்தண்ணீரை அருந்தாமலும் தின்பண்டங்களை ருசிபார்க்காமலும் இருப்பானா? அதுபோல காமஜுரத்தினால் வாதைப்பட்டுச் சிற்றின்பங்களில் ஆசைவைத்த உலகப்பற்றுள்ளவன் ரூபலாவண்யங்களின் வனப்பினிடையும் செல்வத்தின் கவர்ச்சியின் மத்தியிலும் இருந்தால் அவனால் ஆசையை அடக்கமுடியாது. அவன் பக்திமார்க்கத்தை விட்டுப் புறம்பே போவது நிச்சயம். 

————————————————————————————————

||18.35|| தாமஸமான உறுதி:

यया स्वप्नं भयं शोकं विषादं मदमेव च ।

न विमुञ्चति दुर्मेधा: धृति: सा पार्थ तामसी ।। ३५ ।। 

யயா ஸ்வப்நம் ப4யம் சோ1கம் விஷாத3ம் மத3மேவ ச ।

ந விமுஞ்சதி து3ர்மேதா4: த்4ருதி: ஸா பார்த2 தாமஸீ ।। 35 ।।


पार्थ  பார்த2  பார்த்தா   दुर्मेधा:  து3ர்மேதா4:  புத்தி கெட்டவன்   

यया  யயா  எதனால் (எந்த உறுதியால்)   स्वप्नं  ஸ்வப்நம்  தூக்கத்தையும்    भयं  4யம்  பயத்தையும்     शोकं  சோ1கம்  துயரத்தையும்     विषादं  விஷாத3ம்  மனக் கலக்கத்தையும் 

मदं एव च  மத3ம் ஏவ ச  செருக்கையும்      न विमुञ्चति  ந விமுஞ்சதி  விடுவதில்லையோ     

सा धृति:  ஸா த்4ருதி:  அந்த உறுதியானது     तामसी  தாமஸீ  தாமஸமானது.


பார்த்தா, தூக்கத்தையும், அச்சத்தையும், துயரத்தையும், மனக்கலக்கத்தையும், செருக்கையும் விடாது பிடிக்கும் அறிவிலியின் உறுதியோ தாமஸமானது. 


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

பார்த்தா, உறக்கத்தையும், அச்சத்தையும், துயரத்தையும், ஏக்கத்தையும், மதத்தையும் மாற்றத் திறமையில்லாத மூட உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது.


விளக்கம்:

இங்கு பகவான் தாமஸமான உறுதியை வரையறுக்கிறார். விவேகமின்மையின் காரணமாக உண்டான விபரீத புத்தியினால் தாமஸ உறுதி ஏற்படுகிறது.


=> தாமஸ உறுதி:

மிக உறுதியான தீர்மானத்தினால் அவன் கீழ்கண்ட சில விஷயங்களை எக்காரணத்திற்காகவும் விட்டுக் கொடுப்பதில்லை — ந விமுஞ்சதி.

   (1) அதிக உறக்கம்: என்ன நடந்தாலும், எத்தகைய தேவை ஏற்பட்டாலும் தனது அதிகப்படியான தூக்கத்தை அவன் விடுவதில்லை. இங்கு பகவான் ‘ஸ்வப்நம்’ என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். இது உறக்கத்தை போலவே, பகற் கனவையும் குறிக்கிறது. அதிகம் பகற் கனவை காண்பவனாக, மனோ-ராஜ்ஜியத்தின் கற்பனையில் திளைக்கிறான். அத்தகையவன் விழித்திருக்கும்போது செய்கிற செயலும் தூக்கத்தில் சொப்பனம் காண்பது போல உறுதியற்றது. அவன் புரியும் செயல்கள் உலகுக்கு பயன்படாதவைகளாகின்றன. ஆறாவது அத்தியாயத்தில் அதிகப்படியான உறக்கம் கொள்பவர்களுக்கு யோகம் இல்லை எனப் பார்த்தோம். யோகமே துயரத்தை போக்குகின்றது. ஆனால் இங்கு விவாதிக்கப்படுகிறவன் தாமஸ-திருதியைக் கொண்டவனாதலால் அவனுக்கு யோகம் இல்லை. ஏனென்றால், அவன் விழித்திருக்கும்போது ​​அவனுக்கு எப்போதும் ஏதாவது ஒரு பயம் இருக்கிறது.

   (2) பயம்: ஏதேனுமொரு விஷயத்தில் இருக்கின்ற பயத்தை(4யம்), விடாமல் உறுதியாகப் பிடித்திருக்கும் பான்மை தமோகுண உறுதியை குறிக்கிறது. மரண பயம், பணம் மற்றும் தனது பிற வளங்களை இழக்க நேரிடும் என்ற பயம், பதவி பறிபோய்விடுமோ எனும் பயம், ஏதேனும் தவறு நேர்ந்துவிடுமோ எனும் பயம், நோய் குறித்த பயம் என ஏதேனுமொன்றை உறுதியாகப் பற்றிக் கொண்டிருத்தல் இங்கு பேசப்படுகிறது. அவனால் அந்த பயத்தை கைவிட முடியாது, ஏனெனில் அதை அகற்ற அவன் எந்த முயற்சியும் செய்வதில்லை. தனது அச்சத்தை நீக்க ஏதாவது செய்ய வேண்டும் என முன்வரவும்கூட ஒரு குறிப்பிட்ட வகையான உறுதிப்பாடு தேவை. அது அவனுக்கு இருப்பதில்லை.

   (3) துயரம்: அவனால் சோகத்தை விட முடிவதில்லை — சோ1கம். தனக்கு நெருங்கியவரின் மரணம், எப்போதோ நேர்ந்த அவமானம், தனக்கு ஏற்பட்ட ஏதேனுமொரு இழப்பு, சஞ்சலம், குழப்பம் என ஏதேனுமொன்றை உறுதியாகப் பிடித்துக் கொண்டு துயரப்பட்டுக் கொண்டிருப்பான். அவன் தனது சோகத்தை நீக்குகின்ற எதையும் செய்வதில்லை. நாம் அவனிடம் இரண்டு நிமிடங்கள் பேசினால், அவன் நம்மையும் சோகத்துக்கு உள்ளாக்கிவிடுவான். அவனருகில் செல்லும் யாரையும் பாதிக்குமளவுக்கு சோகம் ஒரு தொற்றாக அவனிடம் இருக்கிறது. அதை அவன் கைவிட மாட்டான் என்பது மட்டுமல்லாமல், அதை நியாயப்படுத்த சில தத்துவங்களையும் அவன் வைத்திருக்கிறான்.

   (4) கலக்கம்: மனக்கலக்கத்துக்கு இங்கு ‘விஷாத3ம்’ எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது. கீதையின் முதல் அத்தியாயத்தின் தலைப்பு அர்ஜுன விஷாத யோகம் என்பதாகும். அதாவது அர்ஜுனனுக்கு தற்காலிகமாக மனம் கலங்கிற்று. தமோகுணத்தில் உதித்த உறுதியுடையவனுக்கோ மனம் ஓயாத கலக்கத்தில் இருக்கிறது. வாழ்க்கையில் ஏதேனுமொரு சூழ்நிலையில் குழப்பம் உண்டாவது சகஜம்தான். ஆனால் அவனுக்கு எல்லா சூழ்நிலைகளிலும் இதை செய்யலாமா? அதை செய்யலாமா? என்ற சஞ்சலம் இருக்கிறது. அந்த இயல்பை விடாமல் பிடித்துவைத்திருப்பதும் தாமஸத்தையே குறிக்கிறது. 

   (5) செருக்கு: இத்தனை தீய குணங்களுக்கிடையில் தன்னை குறித்துப் பெருமை பாராட்டும் செருக்கு அவனை விட்டு அகலுவதில்லை — மத3ம். மற்றவர்களின் சாதனைகளை துச்சமாகக் காட்டும் அதே நேரத்தில் அவன் தனது சொந்த சாதனைகளை பெரிதாகக் காட்டிக் கொள்கிறான். வீண் தற்பெருமையில் சிக்கிக்கொண்ட அவன், தனது சொந்த தாழ்வு மனப்பான்மையுடன் போராடுவதால் இந்த மேலமை மனநிலையை வெளிப்படுத்துகிறான். இதன் காரணமாக அவன் யாருக்கும் கீழ்ப்படிவதில்லை. இந்த ஆணவம் அவனது அறியாமையின் வெளிப்பாடாகும். 

விவேகமில்லாத காரணத்தினால் அவன் சிந்திக்கும்போது, ​​அவனுடைய எண்ணங்கள் சரியாக இருப்பதில்லை — து3ர்மேதா4. தனது துஷ்டமான புத்தியினால் ஆகாரம், பூஜை, தவம் மற்றும் தானம் போன்றவற்றில் தாமஸமானதையே தேர்ந்தெடுக்கிறான். விபரீத அறிவினால் சிதைந்த சிந்தனை கொண்ட ஒருவனின் இந்த உறுதி, தாமஸ-திருதி என்று அழைக்கப்படுகிறது.


=> உதாரணம்:

தமோகுண உறுதிக்கு தக்க சான்று திருதராஷ்டிர மன்னன் ஆவான். அவன் பிறவியிலேயே பார்வையற்றவனாவான். தெளிந்த அறிவும் நல்ல விவேகமும் இல்லாமைக்கு அவன் பார்வையற்றிருப்பது புறச் சின்னமாகிறது. இந்த அரசனுக்கு ராஜ்ஜியத்தில் பெரும் பற்றுதல் இருந்தது. துரியோதனன் உள்ளிட்ட தன் புதல்வர்களின் கையைவிட்டு அது ஒருவேளை போய்விடுமோ என்ற அச்சம் அவன் உள்ளத்தில் அடிக்கடி உண்டாயிற்று. புதல்வர்கள் புரிந்த தீய செயல்களை அரசன் கேள்வியுற்றுத் துயரத்தை அடைந்தான். என்றாலும் அவர்கள் மீது அவன் தீவிரமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. தனது புகழுக்கே பங்கம் வந்துகொண்டிருந்ததைக் குறித்து அரசன் மனம் கலங்கினான். ஆனால் பீஷ்மர், துரோணர், கிருஷ்ணர் போன்றவர்களின் புத்திமதியைக் கேட்க அவன் தயாராக இல்லை. எப்படியிருந்தாலும் தானே பேரரசன் என்ற செருக்கும் அவனுடைய உள்ளத்தில் நிறைந்திருந்தது. விவேகவில்லாத அவ்வேந்தன் விடாமல் பிடித்துக் கொண்டிருந்த அந்த திருதியானது தமோகுணத்திலிருந்து உதித்தது ஆகும். 

————————————————————————————————

வெள்ளி, 5 ஜூன், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.32 - 18.33

||18.32|| தாமஸமான புத்தி:

अधर्मं धर्ममिति या मन्यते तमसावृता ।

सर्वार्थान् विपरीतांश्च बुद्धि: सा पार्थ तामसी ।। ३२ ।।

அத4ர்மம் த4ர்மமிதி யா மந்யதே தமஸாவ்ருதா ।

ஸர்வார்தா2ந் விபரீதாம்ச்1ச புத்3தி4: ஸா பார்த2 தாமஸீ ।।32 ।।


पार्थ  பார்த2  பார்த்தா      तमसा आवृता  தமஸா ஆவ்ருதா  அக்ஞான இருளால் மூடப்பெற்று      

अधर्मं 4ர்மம்  அதர்மத்தை      धर्मम् इति  4ர்மம் இதி  தர்மம் என்று

सर्व-अर्थान् च  ஸர்வ-அர்தா2ந் ச எல்லா விஷயங்களையும்     विपरीतान्  விபரீதாந்  விபரீதமாகவும்    

या  யா  எது      मन्यते  மந்யதே  நினைக்கிறதோ      

सा बुद्धि:  ஸா புத்3தி4:  அந்த புத்தியானது      तामसी  தாமஸீ  தாமஸமானது.


பார்த்தா, அக்ஞான இருளால் மூடப்பெற்ற எந்த அறிவானது அதர்மத்தை தர்மமாகவும், விஷயங்களையெல்லாம் விபரீதமாகவும் நினைக்கிறதோ அது தாமஸமானது. 


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

பார்த்தா! இருளால் கவரப்பட்டதாய், அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும் எல்லாப் பொருள்களையும் நேருக்கு மாறாகக் காண்பதும் ஆகிய புத்தி தாமச புத்தியாம்.


விளக்கம்:

சென்ற சுலோகத்தில் சொல்லப்பட்ட ராஜஸ புத்தி உடையவர்களுக்கு, தெரியும் ஆனால் சரியாகத் தெரியாது; அதாவது அரைகுறையாகப் புரிந்து கொள்ளப்பட்ட அறிவு அங்கு பேசப்பட்டது. அவனுக்கு விழுமியங்களைப் பற்றித் தெரிந்திருக்கலாம்; ஆனால் அதன் மதிப்பு தெரியாது. உண்மையைப் பேசுவதன் மதிப்பு முழுமையாகத் தெரியாமலிருப்பதால் அவன் அதை சமரசம் செய்கிறான். ஆனால் இந்த சுலோகத்தில் விவாதிக்கப்படுபவன் விஷயங்களை நேர்மாறாக அறிகிறான். அனைத்தையும் தவறாகப் புரிந்து கொள்கிறான். அவன் அதர்மத்தை தர்மம் என்று வாதிடுகிறான். ‘இந்த விஷயங்களைச் செய்யாவிட்டால் இந்த உலகில் வாழ முடியாது; ஆக்ரோஷமாக நீ இதைச் செய்’ என்று கூறுகிறான். அதர்மம் என்பது அவனுக்கு ஒரு நல்லொழுக்கமாகவே தெரிகிறது. ‘பொய் சொல்ல வேண்டும். இப்படி உலக ஞானம் இல்லாமல் இருந்தால் எப்படி? விவேகத்துடன் பொய் சொல்’ என்று மற்றவர்களுக்கு கற்பிக்கிறான். இவ்விதம் அதர்மமான செயல்களை தர்மமாக புரிந்துகொள்ளும் புத்தி தாமஸமானது — தாமஸீ. செய்யக்கூடாதது செய்யப்படுகிறது; முறையற்றது சரியானதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

மேலும், எல்லா விஷயங்களையும் அவன் விபரீதமாகப் புரிந்துகொள்கிறான். உலகில் அறியப்பட வேண்டிய அனைத்துப் பொருட்களும், விஷயங்களும் (ஸர்வ-அர்தா2ந்), அவை என்ன என்பதற்கு நேர்மாறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன — விபரீதாந். அதாவது அவற்றுக்கு கொடுக்கப்பட வேண்டிய மதிப்பை விட அதிக மதிப்பு தரப்படுகிறது. ஏன் அனைத்தும் இப்படி தலைகீழாகப் புரிந்துகொள்ளப்படுகிறது? ஏனென்றால் மனம் மந்தமான தன்மை அல்லது அறியாமையால் மூடப்பட்டிருக்கிறது — தமஸா ஆவ்ருதா.


=> தாமஸமானவனின் நடத்தை:

நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் நினைப்பது விபரீத புத்தி. மந்தமான புத்தியுடைய மாணவன் ஒருவன் பள்ளிக்கு ஒழுங்காகப் போவதில்லை; துஷ்டப் பிள்ளைகளுடன் கூடி ஊர்சுற்றி காலத்தை வீணே கழிக்கிறான். அவனுக்கு பள்ளிகூடம் செல்வது கெட்டதாகத் தோன்றுகிறது. கூடா நட்பு கொள்வதை நன்மையானதென்று எண்ணுகிறான். மக்களில் பலருக்கு கடவுள் வழிபாடு, பாரமார்த்திக விஷய ஆராய்ச்சி போன்றவைகள் மனக்கசப்பை உண்டாக்குகிறது. வேதாந்த விசாரம் செய்தற்கு இப்பொழுது அவசரம் ஒன்றுமில்லை. கிழவனாகும்போது அதை பார்த்துக்கொள்ளலாம் என்று சாக்குச் சொல்லுகின்றனர். ஊரார் விஷயங்களைப் பற்றி வீண்பேச்சுப் பேசுவது, அவர்களிடத்துள்ள குணத்தைக் குற்றமாகவும், குற்றத்தைக் குணமாகவும் எடுத்துக் கொள்ளுதல் போன்றவை தமோகுணப் பிரதானமாக இருப்பவர்களுக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் நல்ல விளையாட்டுகளை அவர்கள் விளையாட மாட்டார்கள். சூதாடுதல் போன்றவற்றில் வீண்காலம் கழிப்பார்கள். இலவசமாக உணவு கிடைக்கக்கூடிய இடங்களில் அவர்கள் அழைப்பின்றியே வந்து கூடிக் கலந்துகொள்வார்கள். 

=> முக்குண விசாரத்தின் நோக்கம்:

சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என மூன்று வகையான அந்த-கரணங்கள் இங்கு பேசப்பட்டன. ஆனால் அவை நிரந்தரமாக அக்குணத்தில் மட்டுமே இருக்கின்றன எனப் புரிந்து கொள்ளக்கூடாது. எனவே அதை முயற்சியின் மூலம் மாற்றமுடியும். தாமஸ புத்தி உள்ளவனை முதலில் ராஜஸ நிலைக்கு கொண்டு வர வேண்டும். சோம்பேறியாக இருக்கின்ற தாமஸகாரனுக்கு அதிக வேலை கொடுத்தல், விளையாட்டில் ஈடுபட வைத்தல், ஓடுதல் அல்லது ஒரு குறிப்பிட்ட கிலோமீட்டர் நடத்தல் என சுறுசுறுப்புடன் செயல்பட வைத்தல் வேண்டும். கொஞ்சம் கல்வி, கொஞ்சம் ஒழுக்கம் கொண்டுவரப்படும்போது தமஸ் சென்றுவிடும். அதன் பின்னர் சத்வத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்தலாம். ஏற்கனவே பார்த்ததுபோல, சரியான உணவுமுறை, கர்ம-யோக வாழ்க்கை, நல்லொழுக்கங்களைக் கடைப்பிடிப்பதில் தீவிரம், சேவை முதலியவை ஒருவனுக்கு சாத்விக புத்தியைக் கொடுக்கும். இந்த வகையான பாகுபாடுகள் என்பது மற்றவர்களை மதிப்பீடு செய்வதற்காக அல்ல, மாறாக ரஜஸ் என்றால் என்ன, தமஸ் என்றால் என்ன, சத்வம் என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொள்வதற்காகவே இங்கு சொல்லப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் இந்த மூன்று குணங்களின் கலவையாகவே இருக்கிறோம். இங்கும் அங்கும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். ஒருவரிடம் பிரச்சனை இருக்கிறது எனில் அங்கு மாற்றத்திற்கான வாய்ப்பு இருக்கிறது என்பது பொருள். எவ்விதத்தில் மாற்றத்தை அடையவேண்டுமென்ற அறிவு இதன்மூலம் கொடுக்கப்படுகிறது. 

————————————————————————————————

||18.33|| சாத்விக உறுதி:

धृत्या यया धारयते मन:प्राणेन्द्रियक्रिया: ।

योगेनाव्यभिचारिण्या धृति: सा पार्थ सात्त्विकी ।। ३३ ।।

த்4ருத்யா யயா தா4ரயதே மந: ப்ராணேந்த்ரியக்ரியா: ।

யோகே3நாவ்யபி4சாரிண்யா த்4ருதி: ஸா பார்த2 ஸாத்த்விகீ ।। 33 ।।


पार्थ  பார்த2  பார்த்தா     योगेन  யோகே3  ஒருமை மனதைக்கொண்டு       

अव्यभिचारिण्या यया धृत्या  அவ்யபி4சாரிண்யா யயா த்4ருத்யா  பிறழாத எந்த உறுதியால்    

मन: प्राण इन्द्रिय क्रिया:  மந: ப்ராண இந்த்ரிய க்ரியா:  மனம் பிராணன் இந்திரியங்களின் செயல்கள்

धारयते  தா4ரயதே  (ஒருவன்) காக்கின்றானோ     सा धृति:  ஸா த்4ருதி:  அந்த உறுதியானது      सात्त्विकी  ஸாத்த்விகீ  சாத்விகமானது.


பார்த்தா, யோகத்தைக்கொண்டு பிறழாத எந்த உறுதியால் மனம்-பிராணன் - இந்திரியங்களின் செயல்களை ஒருவன் காக்கின்றானோ அந்த உறுதி சாத்விகமானது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

மனம், உயிர், புலன்கள் இவற்றின் செயல்களைப் பிறழ்ச்சியில்லாத யோகத்துடன் தரிக்க வல்லதாகிய மன உறுதியே சாத்விகமாவது, பார்த்தா!


விளக்கம்:

சுலோகம் முப்பத்திமூன்று முதல் முப்பத்தைந்து வரை மூன்று வகையான உறுதிப்பாடு விளக்கப்படுகிறது. முதலில் சாத்விக திருதி.


=> பிறழாத உறுதி:

த்4ருதி’ என்னும் சொல் உறுதி என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மனதினுள் அமைகின்ற திட்பம் என்பதும் அதுவே. அறிவும் ஆற்றலும் ஒன்றுபட்ட அந்தக்கரணத்தின் நிலை திருதி என்பதாகிறது. சாத்விகமான திருதி என்பது நிலையானது, மாற்றத்திற்கு உட்பட்டது அல்ல. தடைகள் வரும்போதும் அச்செயலில் உறுதியாக இருப்பதைக் குறிக்கிறது — அவ்யபி4சாரிண்யா த்4ருத்யா. அசைக்க முடியாத உறுதியுடன், மனதின் செயல்கள், உடலியல் செயல்பாடுகள், இந்திரியங்களின் செயல்களை ஒருவன் நிலைநிறுத்துகிறான் — மந: ப்ராண இந்த்ரிய க்ரியா: தா4ரயதே. அதாவது இவைகளின் செயல்பாடுகளை சில எல்லைகளுக்குள் வைத்து ஒழுங்குபடுத்தியவனாக அவன் இருக்கிறான். அந்த எல்லைகள் தர்மமான வாழ்க்கை முறையைக் குறிக்கின்றது. இதை செய்வதற்கு ஒருவித உறுதிப்பாடு தேவை, அது சாத்விக உறுதி எனப்படுகிறது. ஆன்மிகம், தர்மம், நற்பண்புகளுடன் இருத்தல் முதலிய சாத்விகமான சாதனங்களில் இருக்கின்ற உறுதி சாத்விகமானது.  ஏனெனில் தர்மத்திற்கு எதிரான விஷயங்களை செய்யும் போக்கு மனிதனுக்கு மிகவும் இயல்பானது — ஸ்வாபா4விக. அதுபோல, சரியான புரிதல் இருக்கும்போது சரியானதை செய்யும் போக்கும் இயல்பானதே ஆகும் — ஸ்வாபா4விக. ஆரம்ப காலகட்டத்தில் குழந்தைகள் சமுதாயத்தில் அப்பாவித்தனமாக வளரும்போது, ​​மனிதனின் அடிப்படை இயல்புக்கு எதிரான சில போக்குகளை இயல்பாக தனக்குள் எடுத்துக்கொள்கின்றன. சிறிது காலத்திற்குப் பிறகு, அவை இயற்கையானவைபோல தோன்றவும் செய்கின்றன. ஆனால் எது சரி எனும் அறிவானது ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே கொடுக்கப்பட்டுள்ளது. அதுவே உலகளாவிய ஒழுக்கமுறையாகவும் பேசப்படுகிறது. 

எனவே, தர்மத்தை பின்பற்ற வைக்கும் இயற்கையான ஒன்று, மற்றும் அதர்மத்தை பின்தொடர வைக்கும் மற்றொன்று என எப்போதும் இரு போக்குகள் ஒன்றுக்கொன்று போரிட்டுக் கொண்டே இருக்கிறது. உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து புராண இலக்கியங்களிலும், சரி மற்றும் தவறை முன்வைத்து தெய்வங்களுக்கும் அசுரர்களுக்கும் இடையேயான போர் பேசப்படுகிறது. எனவே தர்மத்தின் எல்லைக்குள் இருப்பதா அல்லது அவற்றைக் கடப்பதா என்கிற மோதலை அனைவரும் எதிர்கொள்கிறார்கள். அந்நிலையில் தர்மத்தின் எல்லைக்குள் இருப்பதற்கான உறுதி ஆரம்பத்தில் மிக அவசியமாகிறது. சரியானது மற்றும் முறையற்றது குறித்த ஒருவனின் புரிதலிலிருந்து பிறக்கின்ற இந்த உறுதியும், ஒழுக்கங்கள் மற்றும் அணுகுமுறை குறித்து மன ஒருமுகப்பாட்டுடன் செய்கிற பயிற்சியும்(யோகே3) அவனை தர்மத்தின் எல்லைக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதில் கர்ம-யோகமும் தியானமும் அடங்கும். திருதி படைத்த யோகியின் மனதும், பிராணனும், இந்திரியங்களும் திருத்தமாகவும் அழுத்தமாகவும் வேலைசெய்ய வல்லவைகளாகின்றன. இந்த செயல்களெல்லாம் பரமாத்மாவினுடைய சேவைக்கென்றே ஒப்படைக்கப்படுகின்றன. அதாவது மனதில் உண்டாகிற உணர்ச்சியும், பிராணன் உயிர்பிடித்திருப்பதும், கர்மேந்திரியங்களும் ஞானேந்திரியங்களும் அதனதன் வேலைகளைச் செய்வதும் ஆகிய இவையெல்லாம் விதவிதமான ஈஷ்வர வழிபாடுகளாகின்றன. காந்த ஊசி எப்போதும் வடதிசையையே நோக்கி நிற்பது போல யோகியின் திருதி எப்பொழுதும் பரமாத்மாவுக்கென்றே ஒப்படைக்கப்பட்டதாகிறது. அந்த உறுதிப்பாடு சாத்விகமானது, அது மனிதனை மேலோனாக ஆக்குகிறது. 

முமுக்ஷுத்வம், பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவை சாத்விகமான உறுதிக்கு உபாயம் ஆகின்றன.

————————————————————————————————