சனி, 15 ஆகஸ்ட், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.52

||18.52|| நிதித்யானத்திற்கானத் தகுதிகளின் தொடர்ச்சி:

विविक्तसेवी लघ्वाशी यतवाक्कायमानस: ।

ध्यानयोगपरो नित्यं वैराग्यं समुपाश्रित: ।। ५२ ।।

விவிக்தஸேவீ லக்4வாசீ1 யதவாக்காயமாநஸ: ।

த்4யாநயோக3பரோ நித்யம் வைராக்3யம் ஸமுபாச்1ரித: ।। 52 ।।


विविक्तसेवी  விவிக்தஸேவீ  தனித்திருப்பவனாய்     लघ्वाशी  லக்4வாசீ1  குறைத்து உண்பவனாய்     यत वाक् काय मानस:  யத வாக் காய மாநஸ:  வாக்கு, உடல், மனதை அடக்கியவனாய்    नित्यं  நித்யம்  எப்பொழுதும்     ध्यान योग पर:  த்4யாந யோக3 பர:  தியான யோகத்தில் விருப்பமுள்ளவனாய்      वैराग्यं  வைராக்3யம்  வைராக்கியத்தை         समुपाश्रित:  ஸமுபாச்1ரித:  அடைந்தவனாய்;


தனித்திருந்து, குறைத்து உண்டு, மனம் மொழி மெய்யை அடக்கி, எப்பொழுதும் தியானயோகத்தில் திளைத்திருந்து, வைராக்கியம் பூண்டவனாய்; 


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

தனி இடங்களை நாடுவோனாய், ஆசைகள் குன்றி வாக்கையும் உடம்பையும் மனத்தையும் வென்று தியான யோகத்தில் ஈடுபட்டு, எப்போதும் பற்றின்மையை நன்கு பற்றியவனாய்,


விளக்கம்:

ப்ரம்ம ஞானத்தில் நிலைபெறுவதற்கானத் தகுதியை பகவான் இங்கு மேலும் தொடர்கிறார்.


=> தனித்திருத்தல்:

விவிக்தஸேவீ’ என்பது தனிமையை எடுத்துக் கொள்ளுதலைக் குறிக்கிறது. மக்கள் நடமாட்டம் இல்லாத, ஆகவே சத்தம் இல்லாத இடம் ‘விவிக்த-தே31’ எனப்படும். அது ஒரு காடாகவோ, ஆற்றின் மணல் கரையாகவோ, மலையாகவோ அல்லது குகையாகவோ இருக்கலாம் என்று சங்கரர் கூறுகிறார். அது ஒரு அமைதியான இடமாக இருக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம். அத்தகைய இடத்தில் வாழும் மனப்பாங்கு கொண்டவன், அதை நடைமுறைப்படுத்துபவன் ‘விவிக்த-ஸேவீ’ எனப்படுகிறான். அவன் எப்போதும் தியானம் மற்றும் ஆத்ம சிந்தனையில் ஈடுபடுபவனாக இருக்கிறான்.

விஷயப் பற்றுடன் கூடிய லெளகிக புத்தியுடைய ஒருவன், பலருடன் சேர்ந்திருந்து காலத்தை கழிக்க விரும்புகிறான். இத்தகையவன் பேச்சுக்கு ஆள் இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்தவன் போல ஆகிறான். ஆனால் ஆத்ம சாதகனோ தனித்திருக்குமளவு அதிக மகிழ்ச்சியை அடைகிறான். புதிதாகத் தனித்திருந்து பழகுபவனுக்கு, மனதை புரிந்துகொள்ளத் தேவையான நேரத்தை இச்சூழல் அளிக்கிறது. எப்படி உணவானது உடலைப் பேணுகிறதோ அதுபோல தனித்திருத்தல் மன பரிபாகத்துக்குப் பயன்படுகிறது. மனிதர்களிடமிருந்து விலகி இருத்தலும், கண் மற்றும் காது வழியாக தேவையற்ற விஷயங்களை உள்ளே போடாமலிருத்தலும் தனிமையை எடுத்துக் கொள்வதை குறிக்கிறது. மனதுக்கு உணவாக நாம் எதை உள்ளே போட்டோமோ, அதுவே தியானத்தின்போது வெளிவருகிறது. எனவே தேவையில்லாத விஷயங்களைப் பேசாமல் கேட்காமல் இருத்தல் தியானத்திற்குச் சிறந்தது. 


=> குறைத்து உண்ணுதல்:

ஆத்ம நிஷ்டைக்காக தியானத்தில் அதிக காலம் ஈடுபடும்போது, ​​நிறைய ஆற்றல் செலவாவதில்லை. ஆகையினால் அவன் குறைந்த உணவு உட்கொள்ளும் ‘லக்4வாசீ1’ — ஆக இருக்கிறான். அவன் அதிகமாக உண்பதில்லை, அதே சமயம் எப்போதும் விரதமும் இருப்பதில்லை. இந்த இரண்டுமே தியானத்திற்கு உகந்தவை அல்ல. அவன் மிதமாக உண்ணுபவனாக இருக்கிறான். தூக்கம் போன்ற தியானத்திற்குத் தடையாக இருக்கும் விஷயங்களைத் தவிர்ப்பதற்காக மிதமாக சாப்பிட வேண்டும் என்று சங்கரர் கூறுகிறார். ஒருகால் அவன் அதிகமாகச் சாப்பிட்டால், செரிமானத்திற்கு அதிக இரத்தம் பயன்படுத்தப்படுகிறது, மனதிற்குப் போதுமான இரத்தம் கிடைப்பதில்லை. எனவே தியான வாழ்க்கை வாழ்பவனுக்குக் குறைந்த அளவு உணவு உட்கொள்வது மிகவும் அவசியம். உடல் ரீதியான வேலை இல்லாதபோது தூங்கும் எண்ணம் ஏற்படும். தியானம் செய்வதற்கு ஒருவனுக்குப் புத்துணர்ச்சியுடனும், தியானத்தில் ஈடுபடும் தன்மையுடனும் கூடிய ஒரு தெளிவான மனம் தேவை. தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்கிறார் வள்ளலார். 


=> மனம், மொழி, மெய்யை அடக்குதல்: 

ஞானநிஷ்டையுடன் கூடிய வாழ்க்கைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன் கட்டாயமாக தனது பேச்சு, கர்மேந்திரியங்கள் மற்றும் மனம் ஆகியவற்றின் மீது ஆதிக்கம் பெற்றிருக்க வேண்டும். அதாவது ‘யத வாக் காய மாநஸ’ - ஆக இருக்க வேண்டும். இந்த கட்டுப்பாடு தொடர்ந்த பயிற்சியால் மட்டுமே சாத்தியமாகும். இத்தகையவனுக்கு கர்மேந்திரியங்களில் வீண் அசைவுகள் மற்றும் விழிப்புணர்வற்ற இயந்திரத்தனமான செயல்கள் இருப்பதில்லை. பௌத்த துறவிகள் இதை கடைப்பிடிப்பதில் மிகவும் விடாமுயற்சியுடன் இருப்பதை பார்க்கமுடியும். தங்களது அனைத்து உறுப்புகளின் அசைவுகளிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். தனது அசைவுகள் குறித்த இந்த விழிப்புணர்வு ஒரு சாதகனுக்கு முக்கியமான ஒழுக்கமாகும்.

மேலும் ஆத்மசாதகன் மிகைப்பட பேசுவதில்லை. பயன்படாத புன்மொழிகள் அவன் வாக்கிலிருந்து வருவதில்லை. ஆத்ம சிந்தனையில் இருப்பவனுக்கு பேச்சிலும் கட்டுப்பாடு அவசியம். அவனே தனிமையான இடத்தில்(விவிக்தஸேவீ) வாழும் தகுதிகொண்டவனாக இருக்கிறான். இல்லையெனில் பேச வேண்டுமென்ற உள்ளார்ந்த அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் தன்னிடமோ, மரங்களிடமோ, மலைகளிடமோ என அவன் பேசத் தொடங்கிவிடுவான். 

அதேபோல, மனமும் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். யோகியின் ஆணைக்கு உட்பட்ட சித்த விருத்திகளே அவனது உள்ளத்தில் எழுகின்றன. மனம் அடங்கியிருப்பதற்கு அதுவொரு அறிகுறியாகும். 


=> தியானத்தை விரும்புதல்:

அத்தகையவன் முழுமையாகத் தன்னை தியானத்தில் அர்ப்பணித்துக் கொண்டவனாக இருக்கிறான் — த்4யாந யோக3 பர. இந்த கூட்டுச்சொல்லிற்கு இரு வழிகளில் விளக்கமளிக்கலாம்.

(1) தியானம் நிறைந்த வாழ்க்கையை, தியானயோகத்தையே முக்கியமாகக் கொண்டவனாக இருப்பவன் ‘த்4யாந யோக3 பர’ என்று அழைக்கப்படுகிறான்.

(2) தியானம் என்பது ஆத்மாவின் இயல்பு பற்றிய சிந்தனை என்றும், யோகம் என்பது ஆத்மாவை மட்டுமே கவனத்தின் ஒரே குவியமாக ஆக்குவது என்றும் சங்கரர் கூறுகிறார். வேதாந்த சாஸ்திரத்தின் உதவியால் புரிந்துகொண்ட வார்த்தைகளை மனதில் நிலைநிறுத்தி, அவற்றின் அர்த்தத்தை ‘நான்’ என்று உணருதல் இங்கு பேசப்படுகிறது. உதாரணமாக, இந்த அனைத்தும் ஆத்மா — ஆத்மா இத3ம் ஸர்வம், இந்த ஆத்மா முழுமையானது — அயம் ஆத்மா பூர்ண:, ஆத்மா தூய்மையானது — ஆத்மா சு1த்34:, ஆத்மா எப்போதும் முக்தன் — ஆத்மா நித்ய முக்த:, ஆத்மா எல்லையற்ற பரப்ரம்மம் — ஆத்மா பரம் ப்3ரஹ்ம. இந்த 1ப்33-அநுவித்34-ஸவிகல்ப-சமாதி4, தியானம் என்று அழைக்கப்படுகிறது. முழு வேதாந்த சாஸ்திரமும் ஆத்மாவைப் பற்றியே பேசுகிறது. அதன் பார்வைக்கு ஒருவனின் மனதை அர்ப்பணிப்பது தியானம் ஆகிறது. அந்த சிந்தனையில் ஆழ்ந்து போவது யோகம் ஆகிறது. ஆத்ம தத்துவத்தையே நினைத்து கொண்டிருத்தல் தியானம், மனதை மீண்டும் மீண்டும் அந்த புள்ளிக்குக் கொண்டு வருதலில் இருக்கின்ற அர்ப்பணிப்பு அல்லது மன ஒருமுகப்பாடு யோகம் ஆகும்.

பகவான் இங்கு எப்பொழுதும் எனப் பொருள்படுகிற ‘நித்யம்’ எனும் சொல்லை இதற்கு அடைமொழியாகக் கொடுக்கிறார். இவ்வகையான வாழ்க்கைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சாதகன் வேறு எந்த முக்கியமான செயலையும் செய்வதில்லை. அதாவது தியானயோகம் மட்டுமே அவனது முக்கிய அர்ப்பணிப்பாக உள்ளது. எல்லா நேரங்களிலும் ஆத்ம சிந்தனையில் இருக்கிறான். உலக வியவகாரம் செய்வது சாதாரண மனிதனுக்கு எவ்வளவு இயல்பானதோ ஆத்ம சாதகனுக்கு தியானம் செய்வது அவ்வளவு இயல்பானது.


=> வைராக்கியத்தை அடைதல்:

வைராக்3யம்’ எனில் பற்றின்மை. இம்மையிலும் மறுமையிலும் உள்ள விஷய இன்பங்களில் பற்று வைக்காதிருப்பது யோகத்துக்கு உற்ற உபாயம் ஆகிறது. விருப்பு-வெறுப்புகளின் பிடியிலிருந்து விடுபட்ட இந்த வைராக்கிய நிலை இருக்கும்போது மட்டுமே மேற்கூறியவைகள் அனைத்தும் சாத்தியமாகும். தெரிந்த மற்றும் தெரியாத சூழ்நிலைகள் மற்றும் பொருள்கள் மட்டுமல்லாமல் சொர்க்கமும்கூட அவனுக்கு எந்தவித ஈர்ப்பையும் ஏற்படுத்துவதில்லை. அந்த மனநிலையே வைராக்கியம் என்று அழைக்கப்படுகிறது. அது இல்லாமல், ஒருவன் அமைதியான இடத்தில் தங்கி, தியானயோகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும், அவனது மனம் நிலைத்திருக்காது. ஆனால் இந்த வகையான வைராக்கியத்தை அடைந்த சாதகன், ஆத்ம-தியானம் செய்வதைத் தவிர வேறென்ன அவனால் செய்துவிட முடியும்!

————————————————————————————————


சனி, 8 ஆகஸ்ட், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.50 - 18.51

||18.50|| இனிவருகிற உபதேசத்தை அறிமுகப்படுத்தும் பிரதிக்ஞா சுலோகம்:

सिद्धिं प्राप्तो यथा ब्रह्म तथाप्नोति निबोध मे ।

समासेनैव कौन्तेय निष्ठा ज्ञानस्य या परा ।। ५० ।। 

ஸித்3தி4ம் ப்ராப்தோ யதா2 ப்3ரஹ்ம ததா2ப்நோதி நிபோ34 மே ।

ஸமாஸேநைவ கெளந்தேய நிஷ்டா2 ஞாநஸ்ய யா பரா ।। 50 ।।


कौन्तेय  கெளந்தேய  குந்தியின் மகனே     सिद्धिं प्राप्त:  ஸித்3தி4ம் ப்ராப்த:  சித்தியை அடைந்தவன்     यथा  யதா2  எப்படி     ज्ञानस्य या परा निष्ठा  ஞாநஸ்ய யா பரா நிஷ்டா2  ஞானத்தின் மேலாம் வடிவாகிய     ब्रह्म  ப்3ரஹ்ம  ப்ரம்மத்தை     आप्नोति  ஆப்நோதி  அடைகிறானோ      

तथा  ததா2  அவ்வகையை     समासेन एव  ஸமாஸேந ஏவ  சுருக்கமாக     

मे निबोध  மே நிபோ34  என்னிடம் அறிந்துகொள்.


குந்தியின் மகனே, சித்தியடைந்தவன் ஞானத்தின் உயர்நிலையாகிய ப்ரம்மத்தை எப்படி அடைகிறான் என்பதைச் சுருக்கமாக என்னிடம் அறிந்துகொள். 


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

சித்தி யடைந்தவன் எங்ஙனம் பிரம்மத்தில் கலப்பதாகிய மிகச் சிறந்த ஞான நிலை யெய்துவானென்பதைக் கூறுகிறேன், கேள்.


விளக்கம்:

இந்த சுலோகத்தில் பகவான் ஞானயோகத்திற்கானத் தகுதியை அடைந்தவன் எவ்விதத்தில் ப்ரம்மத்தை அடைகின்றான் என்பதை இனி கூறப்போகிறேன் என்கிற உறுதிமொழியை(பிரதிக்ஞை) அளிக்கிறார்.


=> சித்தி:

சித்தியடைதல் எனில் பக்குவப்படுதல் என்று பொருள். உண்மையில் பக்குவப்படுத்துதல் என்பது இயற்கையின் இடையறாத செயலாக இருக்கிறது. உற்று நோக்கும்போது சேதனம், அசேதனம் என எல்லாப் பொருள்களும் ஓயாமல் பண்பட்டுக்கொண்டு வருகின்றன என்பதை பார்க்க முடியும். பூமியின் ஆழத்தில் புதையுண்டு கிடக்கிற அடுப்புக்கரியானது நாளடைவில் வைரமாக மாறி பளபளக்கிறது. அத்தகைய பக்குவத்தை அடைவதற்கு அது எத்தனை ஆயிரம் ஆண்டுகள் எடுத்துக்கொண்டது என்பதை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. சுவை நிறைந்த ஆப்பிள் பழமொன்றை உண்டு மகிழ்கிறோம். சித்தியின் பொருட்டு ஆப்பிள் செடி எடுத்துக்கொண்ட முயற்சியை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. வெயிலும், மழையும், பனியும், நீரும், நிலமும், காற்றும் அதனுடைய பக்குவத்திற்கு துணைபுரிந்திருக்கின்றன. ஒவ்வோர் உயிரும் அதனதன் நிலையில் சித்தியடைய முயன்று வருகிறது. 

அனைத்து உயிர்களின் முயற்சிகளுக்கிடையில் மனிதனது முயற்சி மிக மேலானது. ஏனெனில் மற்றவைகளின் சித்தி ஸ்தூல வடிவானது; மேலும் ஸ்தூல வடிவத்தோடு அழிந்தும் போகிறது. ஆனால் மனிதனின் சித்தி என்பது மனத்தகத்தில் அமைகிறது. ஒரு மனிதனை போல இனியொரு மனிதன் இருப்பதில்லை. எத்தனை மனிதர்களோ அத்தனைவித மனபரிபாகம் உண்டு எனலாம். 


=> மனத்தூய்மை: 

எனவே இங்கு ‘ஸித்3தி4’ என்பது பக்குவப்படுதலை, மனதை தயாராக்குதலை, அந்தக்கரண-சுத்தியைக் குறிக்கிறது. அறிவைப் பெறுவதற்கானத் தகுதி நிலைக்கு உடல் மற்றும் புலன்கள் வருவது என சங்கரர் இதற்கு விளக்கமளிக்கிறார். இந்த அத்தியாயத்தின் நாற்பத்தி ஆறாவது சுலோகத்தில் சொல்லப்பட்டது போல, சித்தி என்பது தன்னறத்தை செவ்வனே செய்வதன்மூலமாக ஈஷ்வரனை வழிபாடு செய்ததினால் கிடைத்த இறையருளின் பலன் ஆகும் — ஸ்வகர்மணா தமப்4யர்ச்ய ஸித்3தி4ம் விந்த3தி மாநவ:. நாம் எப்போதும் பல்வேறு விஷயங்களுக்கு அருள் வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் மனம், உடல், புலன்கள் நமக்கு தேவையான நேரத்தில் நமக்குக் கிடைப்பதாக இருப்பது மட்டுமே உண்மையான அருளாக இருக்க முடியும். இங்கு மனதின் தூய்மை மட்டுமல்ல; உடலின் ஒத்துழைப்பும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.

இப்படிப்பட்ட மனத்தூய்மை எனும் சித்தியை பெற்றவன், பின்னர் எதை சாதிக்கப் போகிறான்? ஞானத்தின் வடிவிலான ப்ரம்மத்தை அடைகின்றான் — ப்3ரஹ்ம ஆப்நோதி. கர்மயோகத்தின் மூலம் மனதை ஒழுங்குப்படுத்தியவனுக்கு பரஞானத்தை பெறுதலும் பரத்தை அடைதலும் எளிதில் கைகூடுகின்றன. ஆனால் அதை அவன் எப்படி அடைகிறான்? மனத் தூய்மை என்கிற சித்தியை அனுபவித்தாலும், தன்னை ஒரு கர்த்தாவாக, அதாவது செயல் செய்பவனாகக் கருதும் இந்த கர்மயோகி, ப்ரம்ம ஞானத்தை அடையும் வழி என்ன? ‘அதை என்னிடமிருந்து தெரிந்துகொள் — மே நிபோ34’ என்கிறார் கிருஷ்ணர். எனில் அவர் மேலும் பதினேழு அத்தியாயங்களுக்கு உபதேசத்தை நீட்டிக்கப் போகிறாரா எனில் இல்லை. அவர் அதைச் சுருக்கமாக விளக்க இருக்கிறார் — ஸமாஸேந. இதற்கு முன் அவரால் கூறப்பட்ட அனைத்தும் ஒரு சாராம்ச வடிவில் வழங்கப்படப் போகிறது. ஆகவே அர்ஜுனன் அதை தன் மனதில் வைத்துக்கொண்டு, எது செய்யப்பட வேண்டுமோ அதைச் செவ்வனே செய்ய முடியும்.


=> பரத்தை அடைதல்:

ப்3ரஹ்ம ப்ராப்தி’ என்பது என்ன? ப்ரம்மத்தை பற்றிய அறிவை அடைதலே ப்ரம்மத்தை அடைதல் ஆகும். ப்ரம்ம ஞானத்தின் இறுதி இலக்கு அல்லது உச்சகட்ட பலன் என்பது ப்ரம்மத்தை அடைதல் — ஞாநஸ்ய பரா நிஷ்டா2. பொதுவாக இவ்வுலகில் எத்துறையைப் பற்றிய அறிவை எடுத்துக்கொண்டாலும் அந்த அறிவுத் தேடலுக்கு ஒரு முடிவு என்பது இருப்பதில்லை. முன்பு அறிந்ததை விட கொஞ்சம் அதிகமாக அறிகிறோம்; அதே நேரத்தில், இன்னும் நமக்கு எவ்வளவு தெரியவில்லை என்பதையும் அதனுடன் சேர்த்து அறிகிறோம். அதாவது முன்பு ‘தெரியாததைத் தெரியாது’ என்று கூறியிருப்போம்; இப்போது ‘எவ்வளவு தெரியவில்லை’ என்பதைப் பற்றிய ஒரு புரிதல் வந்திருக்கும் அவ்வளவே. ஆனால் ஆத்ம-அறிவு அப்படிப்பட்டதல்ல. ஆத்மா பகுதிகளற்றது; குணங்களற்றது; எப்போதும் மாறாமல் இருப்பது. எனவே ஆத்ம-அறிவில் மட்டுமே முழுமையான அறிவு சாத்தியம் என்பதால் அதுவே மிக உயர்ந்தது — பரா. இப்படிப்பட்ட அறிவை எந்த வரிசையில் பெற வேண்டும் என்பதை பகவான் இனி கூறப்போகிறார். அதற்காக அர்ஜுனனின் கவனத்தை ஈர்த்து, ‘என்னிடம் இருந்து கற்றுக்கொள் - நிபோ34 மே’ என்கிறார்.

————————————————————————————————

||18.51|| ஞானயோகத்தின் சாராம்சம் தொடங்குகிறது:

बुद्ध्या विशुद्धया युक्तो धृत्यात्मानं नियम्य च ।

शब्दादीन्विषयांस्त्यक्त्वा रागद्वेषौ व्युदस्य च ।। ५१ ।।

பு3த்3த்4யா விசு1த்34யா யுக்தோ த்4ருத்யாத்மாநம் நியம்ய ச ।

1ப்3தா3தீ3ந்விஷயாம்ஸ்த்யக்த்வா ராக3த்3வேஷெள வ்யுத3ஸ்ய ச ।। 51 ।।


विशुद्धया बुद्ध्या युक्त:  விசு1த்34யா பு3த்3த்4யா யுக்த:  பரிசுத்தமான புத்தியுடன் கூடியவன்      

धृत्या  த்4ருத்யா  உறுதியுடன்     आत्मानं  ஆத்மாநம்  உடலையும் உள்ளத்தையும்     नियम्य  நியம்ய ச  அடக்கியும்     शब्दादीन् विषयान्  1ப்3தா3தீ3ந் விஷயாந்  சப்தம் முதலிய இந்திரிய விஷயங்களை      त्यक्त्वा  த்யக்த்வா  துறந்தும்      रागद्वेषौ  ராக3த்3வேஷெள  விருப்பு வெறுப்புகளை     व्युदस्य च  வ்யுத3ஸ்ய ச  விட்டொழித்தும்;


தூய்மையான புத்தியுடையவன் உறுதியுடன் தன்னையடக்கியும், சப்தம் முதலிய இந்திரிய விஷயங்களைத் துறந்தும், விருப்பு வெறுப்பை விட்டொழித்தும்;


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

தூய்மை பெற்ற புத்தியுடையவனாய், உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி, ஒலி முதலிய விஷயங்களைத் துறந்து, விருப்பு வெறுப்புகளை எறிந்துவிட்டு,


விளக்கம்:

சுலோகம் ஐம்பத்தொன்று முதல் ஐம்பத்தைந்து வரை ஞானயோகத்தின் சாரம் கூறப்படுகிறது. ப்ரம்மத்தை பற்றிய அறிவை அடைதலே ப்ரம்மத்தை அடைதல் எனப் பார்த்தோம். சிரவணம் மற்றும் மனனத்தின் மூலம் ப்ரம்மத்தை பற்றிய அறிவை அடைந்து, நிதித்யாசனத்தின் மூலம் அந்த அறிவில் நிஷ்டை அடைதல் ஞானயோகம் ஆகும். நிதித்யாசனத்தை மேற்கொள்ள அல்லது ப்ரம்ம ஞானமானது அதனுடைய பலனை அளிக்க, சில பத்தியங்கள் தேவை. அவைகள் இங்கு கூறப்பட்டுள்ளன. இங்கு கூறப்பட்டுள்ள அனைத்தையும் பின்பற்றுபவன் ப்ரம்மமாக ‘ஆவதற்கு’, ப்ரம்ம ஞானத்தில் நிலைபெறுவதற்குத் தகுதி அடைகிறான். கீதை முழுவதும் சொல்லப்பட்ட பல்வேறு தகுதிகள் இந்த மூன்று சுலோகங்களில் ஒன்றாகத் தொகுக்கப்பட்டுள்ளன.


=> பரிசுத்தமான புத்தி:

விசு1த்34யா பு3த்3த்4யா யுக்த:’ என்பது சுத்தமான புத்தியில் பொருந்தியவனை, தெளிவான மனதைக் கொண்டவனைக் குறிக்கிறது. அவன் ஆத்ம நிச்சயத்தை செய்த புத்தியை, அறியாமை மோஹம் போன்ற இருள் நீக்கப்பட்ட புத்தியை கொண்டவனாக இருக்கிறான். நீண்ட காலமாக கர்மயோக வாழ்க்கை வாழ்ந்த ஒருவனுக்கு இத்தகைய தெளிவான மனம் வாய்க்கிறது. இதனால் வாழ்க்கையில் தான் எதை நாடுகிறோம் என்பதில் அவனுக்கு எந்தக் குழப்பமும் இருப்பதில்லை. தான் விரும்புவது என்ன என்பதில் அவன் மிகவும் தெளிவாக இருப்பதால், விஷயங்களுக்கு அதற்கு அல்லாத மதிப்பை அளித்து, தவறான நாட்டங்களால் ஈர்க்கப்பட்டு வழிதவறிப் போக வாய்ப்பில்லை. ‘விசு1த்34யா’ என்கிற சொல்லில் இருக்கின்ற ‘வி’ எனும் முன்னொட்டு சந்தேகமில்லாத புத்தியை குறிக்கிறது — விசே1ஷேந ஸம்ச1யம் விநா. அறியாமை(சு1த்34யா) நீங்கிய புத்தி என்பது சிரவணத்தை முடித்தவன் என்பதையும், சந்தேகமில்லாத(விசு1த்34யா) புத்தி என்பது மனனத்தை முடித்தவன் என்பதையும் காட்டுகிறது. 

பரிசுத்தமான புத்தி என்பது தூய கண்ணாடியைப் போன்றது. நீலக் கண்ணாடியில் மஞ்சள் நிற வஸ்துவைப் பார்க்கும்போது அது பச்சை நிறமுடையது போலத் தென்படும். நிறமில்லாத தூய கண்ணாடியில் பார்த்தால் மஞ்சள் மஞ்சளாகவே தோன்றும். அதுபோல புத்தியில் இருக்கின்ற அசுத்தம் அதை அழுக்குப்படுத்தி, அறிகிற விஷயங்களை குற்றமுடையதாகக் காட்டுகிறது. சுத்தியடைந்த புத்தியானது ஐயமும் திரிவும் நீங்கப் பெற்றதாக இருக்கிறது. 


=> உறுதியுடன் தன்னை அடக்குதல்:

த்4ருதி’ எனில் சரியான மனப்பாங்குடன் கொண்ட உறுதியான தீர்மானத்தைக் குறிக்கிறது. இந்த இடத்தில் ‘ஆத்மா’ என்பது உடல்-மனம்-புலன்களின் தொகுப்பைக் குறிக்கிறது. ‘நியம்ய’ எனில் ஆதிக்கம் செலுத்துதல் ஆகும். உறுதியுடன் உடலையும் உள்ளத்தையும் அடக்கி ஆளுதல் இங்கு பேசப்படுகிறது. வேதாந்தத்தில் இது ‘1’ மற்றும் ‘3’ என்று அழைக்கப்படும். புலனடக்கம் மற்றும் மனவடக்கத்தில் உறுதியுடன் இருத்தல், அதாவது அது தனது சுபாவமாக ஆகும் வரை விடாது இருத்தல் கூறப்படுகிறது. ஒருவனிடம் சரியான பகுத்தறிவும், அந்த விவேகத்தின் அடிப்படையில் செயல்படுகிற திறனும் இல்லாவிட்டால், உடலைப் பராமரிப்பதும், மனம் மற்றும் புலன்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அவற்றைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பதும் மட்டுமே முழுநேரச் செயலாக ஆகிவிடுகிறது. வாழ்க்கையின் நோக்கம் என்பது மனதின் ஆசைகளைத் திருப்திப்படுத்துவது அல்ல என்பதை உணர்ந்து, மோக்ஷத்திற்கானத் தனது தேடலில் உறுதியுடன் இருப்பவனுக்கு, உடல்-மனம்-புலன்கள் ஆகியவை அவனது தேடலுக்கான ஒரு கருவியாக மாறுகிறது. இது தியானத்திற்கும், வாழ்க்கை முறைக்கும் பொருந்தும். சாத்விகமான உறுதியுடன் மனதை நெறிப்படுத்தி அதன் மீது ஆளுமையை செலுத்துபவன் ப்ரம்மத்தில் நிலைபெறுகிறான்.  


=> இந்திரிய விஷயங்களைத் துறத்தல்: 

1ப்3தா3தீ3ந் விஷயாந் த்யக்த்வா’ எனில் சப்தம் முதலிய விஷயங்களை விட்டுவிடுதல். இங்கு ‘முதலிய’ என்கிற பொருளில் வந்துள்ள ‘ஆதீ3ந்’ என்பது, மற்ற புலன்-விஷயங்களும் சேர்த்து எடுத்துகொள்ளப்பட வேண்டும் என்பதை குறிக்கிறது. அதாவது ஒலி, தொடுதல், சுவை, வடிவம் மற்றும் மணம் ஆகிய ஐந்து புலனின்ப பொருள்களும் இதில் அடங்கும் — 1ப்33-ஸ்பர்ச1-ரூப-ரஸ-க3ந்த4. இங்கு அவைகளைத் துறத்தல்(த்யக்த்வா) என்பது முழுமையாகக் கைவிடுதலைக் குறிக்கவில்லை. அவைகள் இலக்குகளாகக் கருதப்பட்டு தேடப்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. உதாரணமாக உணவைக் கைவிடுதல் மரணத்திற்கு வழிவகுக்கும். ஆனால் ஞான நிஷ்டையை இலக்காகக் கொண்ட ஆத்ம சாதகன், தனது இலக்கை அடைவதற்கு உடலை சரியாகப் பராமரிக்க வேண்டும். எனவே, உடலைப் பராமரிப்பதற்குத் தேவையானவற்றைத் தவிர, மற்ற எல்லாத் தேடல்களையும் அவன் கைவிடுகிறான் என்று சங்கரர் இங்கே குறிப்பிடுகிறார். 


=> விருப்பு-வெறுப்புகளை நீக்குதல்:

ராக3த்3வேஷெள வ்யுத3ஸ்ய’ எனில் விருப்பு வெறுப்புகளை விட்டொழித்தல் ஆகும். மிகைப்பட்ட பொருள்களை ஆத்ம சாதகன் தனக்கென்று வைத்துக்கொள்வதில்லை. உடல் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவுப் பொருள், உடை முதலியவற்றைத் தவிர வேறு ஆடம்பரமான பொருள்களை அவனிடத்துக் காணமுடியாது. மேலும் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருளிலும்கூட அவன் விருப்போ அல்லது வெறுப்போ கொள்வதில்லை. தேவையற்றவை என அவனால் விடப்பட்ட பொருளின் மீதுள்ள மதிப்பையும் அவன் முற்றிலுமாக விட்டுவிடுகிறான். அடக்கமும் எளிய வாழ்வும் வடிவெடுத்தவனாக ஆகிறான். அவனது முழுவாழ்க்கையும் ஞான நிஷ்டைகாகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 

————————————————————————————————