சனி, 5 செப்டம்பர், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.57 - 18.58

||18.57|| ஆகையால் அர்ஜுனா நீ வாழவேண்டிய விதமாவது:

चेतसा सर्वकर्माणि मयि सन्न्यस्य मत्पर: ।

बुद्धियोगमुपाश्रित्य मच्चित्त: सततं भव ।। ५७ ।।    

சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பர: ।

பு3த்3தி4யோக3முபாச்1ரித்ய மச்சித்த: ஸததம் ப4வ ।। 57 ।।


चेतसा  சேதஸா  விவேகத்தால்     सर्वकर्माणि  ஸர்வகர்மாணி  அனைத்து கர்மங்களையும்     

मयि सन्न्यस्य  மயி ஸந்ந்யஸ்ய  என்னிடத்து சமர்ப்பித்து     मत्पर:  மத்பர: என்னைக் குறியாகக் கொண்டு       बुद्धियोगम्  பு3த்3தி4யோக3ம்  கர்மயோகத்தை     उपाश्रित्य  உபாச்1ரித்ய  சார்ந்திருந்து      सततं  ஸததம்  எப்பொழுதும்     मच्चित्त:  மச்சித்த:  சித்தத்தை என்பால் வைத்தவனாக       

भव  4  ஆகக்கடவாய்.


விவேகத்தினால் கர்மத்தையெல்லாம் என்பால் ஒப்படைத்து, என்னைக் இலக்காகக் கொண்டு, கர்மயோகத்தைச் சார்ந்திருந்து, எப்பொழுதும் சித்தத்தை என்பால் வைப்பாயாக.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

அறிவினால் செயல்களையெல்லாம் எனக்கெனத் துறந்துவிட்டு, என்னிடத்தே ஈடுபட்டு, புத்தி யோகத்தில் சார்புற்று, எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.


விளக்கம்:

ஆகையால் அர்ஜுனா நீ கர்மயோகத்தை ஏற்று வாழ்க்கையை வழிநடத்துவாயாக என பகவான் இந்த சுலோகத்தில் கூறுகிறார். 


=> என்னையே சிந்தித்திரு:

எப்பொழுதும் என்னையே சிந்திப்பவனாக இரு — மச்சித்த: ஸததம் ப4, என்று கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அறிவுறுத்துகிறார். சிலருடைய மனதில் எப்போதுமே இறை சிந்தனை இருப்பதில்லை. சிலருக்கு அமாவாசை, சிவராத்திரி, பிரதோஷம், ஏகாதசி போன்ற மாதத்தின் ஒரு சில நாட்களில் உபவாசம் அல்லது பூஜை போன்ற செயல்களின் வழியாக இறை சிந்தனை இருக்கும். வேறு சிலருக்கு வெள்ளி போன்ற வாரத்தில் ஏதேனுமொரு நாள், சிலருக்கு காலை அல்லது மாலை போன்ற குறிப்பிட்ட பிரார்த்தனை நேரங்களில் மட்டும் ஈஷ்வரனை பற்றிய எண்ணம் இருக்கிறது. மற்ற நேரங்களில் இருப்பதில்லை. ஆனால் இங்கு பகவான் அர்ஜுனனிடம் எப்போதும் மனம் என்னில் இருக்கட்டும் எனக் கூறுகிறார். இதன் அர்த்தம் என்ன? இறைவனைத் தவிர வேறு எந்த எண்ணமும் அவனுக்கு இருக்கக்கூடாதா? அவன் எப்போதும் ஈஷ்வரனை நினைத்துக்கொண்டே தன் கடமைகளை எப்படி செய்ய முடியும்? முழுவுலகும் ஈஷ்வரனே எனும் புரிதலால் மட்டுமே இது சாத்தியமாகும். இவ்விதம் உணர்ந்த ஒருவன் எதை செய்யும்போதும் அல்லது எதையும் செய்யாமல் இருக்கிறபோதும் அவன் ஈஷ்வரனை ஒருபோதும் தவறவிடுவதில்லை. ஏனெனில் அவன் பார்க்கும் அனைத்தும் ஈஷ்வரனின் வடிவமே ஆகும்.


=> அனைத்துச் செயலையும் எனக்கர்ப்பணி:

மனதளவில் அனைத்து கர்மங்களையும் எனக்கு அர்ப்பணித்து விட்டு செய் — சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸந்ந்யஸ்ய, என்கிறார் கிருஷ்ணர். இங்கு ‘சேதஸா’ என்பது விவேக புத்தியுடன் கூடிய மனதை குறிக்கிறது. எது சரி மற்றும் எது தவறு என்பதை பிரித்தறியும் திறன் கொண்ட மனம். அந்த அறிவினாலும் பாவனையினாலும் செயலை சமர்ப்பித்தல் இங்கு கூறப்படுகிறது. ஒவ்வொரு செயலுக்கும் இரு வகை பலன் உண்டு எனப் பார்த்துள்ளோம். (1) த்3ருஷ்ட பலன் - உடனே அனுபவிக்கப்படுகிற, கண்ணுக்குப் புலப்படுகிற பலன். (2) அத்3ருஷ்ட பலன் - கண்ணுக்கு புலப்படாத பலன். உதாரணமாக, தானம் செய்யும்போது ஏற்படுகிற திருப்தி என்பது கண்ணுக்கு புலப்படுகிற பலன். மேலும் அதனால் கிடைக்கக்கூடிய புண்ணியம் எனப்படும் ஒரு கண்ணுக்குத் தெரியாத பலனும் உள்ளது, இது பின்னர் விரும்பத்தக்க சூழ்நிலையை கொடுக்கும் ஒன்றாக வெளிப்படும். இவ்விதம் செய்யப்பட வேண்டிய கடமைகள், பூஜை, சடங்குகள் என உடல் மனம் மற்றும் வாக்கினால் செய்யப்படுகிற அனைத்து கர்மங்களையும் பகவானுக்குகாகவென செய்து, அதனால் உண்டாகிற விளைவை அவரின் பிரசாதமாக எடுத்து கொள்ளுதல் வேண்டும். இந்த கருத்து ஒன்பதாவது அத்தியாயம் இருபத்தேழாவது சுலோகத்தில், ‘எதைச் செய்யினும் எனக்கு அர்ப்பணமாகச் செய் — யத் கரோஷி தத் குருஷ்வ மத3ர்பணம், எனக் கூறப்பட்டது. 


=> என்னையே இலக்காகக் கொள்:

இறுதி இலக்காக என்னையே கொள்வாயாக — மத்பர:, என்கிறார் கிருஷ்ணர். இங்கு பகவானால் விளக்கப்படும் இந்த நபருக்கு ஈஷ்வரனே பிரதானமானவர். சிறிய இலக்குகளையும், அன்றாட பலன்களையும் பெறுவதற்காக அல்லாமல் அவனது ஒரே குறியாகவும், முடிவான இலக்காகவும் இருப்பது பரமேஷ்வரனே. சிறிய பலன்களைப் பெற பகவானின் அருளைப் பயன்படுத்துவதில் தவறேதுமில்லைதான். அப்படிப்பட்டவனையும் பக்தன் எனும் வகைப்பாட்டில், ‘அர்தா2ர்தீ2’ எனும் பெயரில் நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். ஆனால் இங்கு நாம் பேசுவது ஜிக்ஞாசு பக்தனைப் பற்றி. அவனது விருப்பம் ஈஷ்வரனாகவே இருப்பதால் அவனது அடைக்கலமும் ஈஷ்வரனைத் தவிர வேறில்லை. ஆகையினால் இங்கு கிருஷ்ணர், புத்தியோகம் என அழைக்கப்படுகிற கர்மயோக வாழ்க்கையை எடுத்துக் கொள் — பு3த்3தி4யோக3ம் உபாச்1ரித்ய, எனக் கூறுகிறார். 

கர்மயோகம் என்பது முற்றிலுமாக ஒரு தர்மநெறி சார்ந்த வாழ்க்கையாகும். பக்தியில்லாமல் கர்மயோகம் இல்லை. மனதின் உறுதியான தீர்மானம் என்று புத்தியோகத்தை சங்கரர் விளக்குகிறார். இரண்டாம் அத்தியாயத்தில்(2.41) பார்த்ததுபோல், மோக்ஷமே ஒரே புருஷார்த்தம் என்று தெளிவாக அறிந்தவனது மனம் உறுதியானது — வ்யவஸாயாத்மிகா பு3த்3தி4. இலக்கு தெளிவாக இல்லாதவனின் மனம் சிதறியதாக இருக்கிறது. தெளிவான இலக்கு இல்லையெனில், இலக்குகள் முடிவற்றவைகளாகத் தொடர்கின்றன. மாறாக லட்சியம் தெளிவாக இருந்தால், அவனது ஒரே திட்டம் — ஈஷ்வரனுடனானத் தனது ஐக்கியத்தைப் புரிந்து கொள்ளும் வரையில், அதற்காக தன்னைத் தயார்படுத்திக் கொள்வதாக மட்டுமே இருக்க முடியும். அந்த நோக்கத்திற்காகவே அனைத்தும் செய்யப்படுவதால் அங்கு ஒவ்வொரு செயலும் அர்த்தமுள்ளதாகிறது. எவ்வளவு காலம் ஆனாலும், எத்தனை ஆண்டுகள் எடுத்தாலும், அது ஒரு பொருட்டல்ல. ஏனெனில் தீர்மானமும் அர்ப்பணிப்பும் மோக்ஷமே இலக்கு என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது. அதனால் கர்மம் அனைத்தும் யோகம் ஆகிறது.

இனி, ஒருவனின் மனம் எப்போதும் ஈஷ்வரனில் நிலைபெற்றிருந்தால் என்ன நடக்கிறது? அடுத்த சுலோகத்தில் விடை வருகிறது. 


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பகவானைக் காணும் பாக்கியம் உனக்குக் கிடைத்தால் நீ அவரிடம் என்ன கேட்பாய்? வைத்திய சாலைகள், குளங்கள், பாட சாலைகள், அன்னச் சத்திரங்கள் — இவைகள் வேண்டுமென்று இறைஞ்சுவாயா? இவைகளெல்லாம் நாம் கடவுளைக் காணும் வரையில் உண்மையாகத் தோன்றும். ஆனால் கடவுளை நேருக்கு நேர் கண்டதும் இவையனைத்தும் நிலையில்லாதனவாகக் கனவில் காணப்படுவன போலத் தோன்றும். ஆகையால் அவனிடம் அன்பு வேண்டியும் அறிவு வேண்டியும் பிரார்த்திப்போம். அவனிடம் அன்பு செலுத்துவதால் மனிதத் தன்மையிலிருந்து நாம் தெய்வத் தன்மைக்கு உயர்த்தப்படுவோம். அறிவுக்கும் ஆனந்தத்திற்கும் உறைவிடம் பகவான் என்பதை அந்த அன்பிலிருந்து நாம் அறிவோம். நாம் அவருடைய புதல்வர்கள் என்பதும் அப்பொழுது நமக்கு விளங்கும்.

————————————————————————————————

||18.58|| புத்தியோகத்தால் விளையும் நன்மை யாது? 

मच्चित्त: सर्वदुर्गाणि मत्प्रसादात्तरिष्यसि ।

अथ चेत्त्वमहङ्कारान्न श्रोष्यसि विनङ्क्ष्यसि ।। ५८ ।। 

மச்சித்த: ஸர்வது3ர்கா3ணி மத்ப்ரஸாதா3த்தரிஷ்யஸி ।

அத2 சேத்த்வமஹங்காராந்ந ச்1ரோஷ்யஸி விநங்க்ஷ்யஸி ।। 58 ।।


त्वम्  த்வம்  நீ      मच्चित्त:  மச்சித்த:  சித்தத்தை என்பால் வைத்து       मत्प्रसादात्  மத்ப்ரஸாதா3த்  எனது அனுக்கிரகத்தால்     सर्वदुर्गाणि  ஸர்வது3ர்கா3ணி  எல்லா இடைஞ்சல்களையும்      

तरिष्यसि  தரிஷ்யஸி  தாண்டிச் செல்வாய்      अथ  அத2  அன்றி      अहङ्कारात्  அஹங்காராத்  அஹங்காரத்தால்      न श्रोश्यसि चेत्  ந ச்1ரோஷ்யஸி சேத்  நீ கேளாவிட்டால்      

विनङ्क्ष्यसि  விநங்க்ஷ்யஸி  அழிவடைவாய்.


சித்தத்தை என்பால் வைத்து எனதருளால் இடைஞ்சல்களையெல்லாம் தாண்டிச் செல்வாய். அன்றி நீ அஹங்காரத்தால் கேளாவிட்டால் கேடு அடைவாய்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

என்னை சித்தத்தில் கொண்டிருப்போனாய் எல்லாத் தடைகளையும் எனதருளால் கடந்து செல்வாய், அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயெனில் பெரிய நாசத்தை அடைவாய்.


விளக்கம்:

கர்மயோகத்தின் பலனாக ஒருவன் அடைவது என்னவென்று பகவான் இங்கு கூறுகிறார்.


=> இடர்பாடுகளைக் கடப்பாய்:

து3ர்க3’ எனில் கடப்பதற்கு கடினமானது என்று பொருள். ஒரு மலைச்சிகரம் அல்லது கடப்பதற்கு கடினமான ஒரு குறுகிய பாதை ‘து3ர்க3’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு மிகுந்த சிரமத்துடன் மட்டுமே கடக்கக்கூடிய விஷயங்கள் சொல்லப்படுகின்றன. இதனை சம்சாரத்திற்கு காரணம் என சங்கரர் கூறுகிறார். இந்த கர்மங்களே புண்ணிய-பாபத்தை உருவாக்கி, புதிய பிறவிகளுக்குக் காரணமாக அமைகின்றன. ‘நான் செய்கிறேன்’ என்ற அகந்தை(கர்த்ருத்வம்) மற்றும் அறியாமையிலிருந்து(அக்ஞாநம்) இவை பிறக்கின்றன; இவை யாவும் கடப்பதற்கு மிகவும் கடினமானவை. அவித்3யா காம கர்ம — அறியாமை மற்றும் அதன் விளைவாக உண்டாகிற ஆசைகள் மற்றும் அதை அடைய செய்யப்படுகிற செயல்கள் போன்ற தடைகளை கடப்பதென்பது மிகவும் கடினம். ஆனால், கர்மயோக வாழ்க்கையில் உன்னை அர்ப்பணித்துக் கொண்டவன் என்பதால், கடக்க முடியாத இவை அனைத்தையும் நீ எளிதாகக் கடந்து விடுவாய் — ஸர்வது3ர்கா3ணி தரிஷ்யஸி.

உலக அனுபவத்தில் இரு பகுதிகள் உண்டு. ஒன்று புறவுலகம், மற்றது அகவுலகம். தடைகளும் இடைஞல்களும் வெளியுலகிலும் உண்டு; அகவுலகாகிய மனதிலும் உண்டு. புறவுலக இடர்பாடுகளை இக்காலத்து நவீன கண்டுபிடிப்புகளின் துணைகொண்டு அகற்றிவிடலாம். நீரில்லாத இடத்தில் நீர் கொண்டு வருதல், வெப்பம் அதிகமாக இருக்கிற இடத்தில் வெப்பத்தை குறைத்தல், நோய் வரக்கூடிய இடத்தை நோயற்ற இடமாக மாற்றுதல் என அனைத்தும் வெளிக்கருவிகள் கொண்டு சாத்தியபடுத்தலாம். ஆனால் அதனால் மட்டுமே உலகம் இன்பமாக மாறிவிடாது. வெளியுலகைத் திருத்தியமைப்பதைவிட மனதைத் திருத்தியமைக்கத் தெரியாதவனுக்குப் புறவுலகம் எவ்வளவு நல்லதாயிருந்தாலும் அது இன்பம் தராது. புறவுலகம் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் மனதைத் திருத்தியமைத்துக் கொண்டவனுக்கு அது துன்பத்தை கொடுக்காது. இடைஞ்சல்கள் உண்மையில் வெளியுலகிலில்லை; மனிதனுடைய மனநிலையில்தான் இருக்கின்றன. மனதை ஈஷ்வரனிடம் வைத்தவர்களுக்கு உலகம் தரும் இடர்பாடுகளும்கூட ஈசனது செயலாகவே தோன்றும். கர்மயோக வாழ்க்கையின் மூலம் பகவானிடம் சரணடைந்தவனாக கர்மத்தில் ஈடுபடுபவன் அவரது அனுகிரகத்தினால் அத்தகைய இடர்பாடுகளை கடக்கிறான். ஆனால் மனதில் அகந்தை இருப்பவனுக்கு துன்பங்கள் அனைத்தும் அதிலிருந்தே வருகின்றன.  


=> இலக்கிலிருந்து வீழ்வாய்:

‘இப்போது ஒருவேளை நான் சொல்வதை நீ கேட்கவில்லையெனில் — அத2 ந ச்1ரோஷ்யஸி சேத்’ என்று கூறி கிருஷ்ணர் ஒரு எச்சரிக்கையை அளிக்கிறார். சொல்லப்படுவதை கேட்காமல் போவதற்கானக் காரணம் என்னவாக இருக்கக்கூடும்? அஹங்காரம் — அஹங்காராத். ‘எனக்கு எல்லாம் தெரியும், எல்லாவற்றையும் நானே பொறுப்பேற்று நடத்திவிடுவேன், நீங்கள் கூறுவதை நான் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை’ என்று உனது சொந்த அகந்தையினால் நீ நினைக்கலாம். அறியாமையால் பிறந்த அந்த ஆணவத்தினால், நான் உனக்குச் சொல்லிக் கொண்டிருப்பதை நீ புரிந்து கொள்ளாமல் போகலாம். அப்படி இருக்குமானால், நீ கேட்டை அடைவாய் — விநங்க்ஷ்யஸி, என்கிறார் பகவான். அதாவது, நீ எதை விரும்புகிறாயோ அதை உன்னால் சாதிக்க முடியாது; இலக்கிலிருந்து வீழ்ந்துவிடுவாய்; புருஷார்த்தத்திலிருந்து நஷ்டத்தை அடைவாய்.

இரு வகையான பலம் உள்ளது. ஒன்று அஹங்கார பலம், இதை என்னால் செய்து கொள்ள முடியும் என நினைப்பது. இதன் பக்கவிளைவாக உண்டாவது கர்வம் ஆகும். இரண்டாவது வகையில், தன்னால் இதை செய்துவிட இயலாது என்ற அறிவுடன் பகவானிடம் சரணடைந்து அவரின் அனுகிரகத்தினால் உண்டாகிற பலம்; இதில் கர்வம் இல்லை. 

ஆகவேதான் பகவான் அர்ஜுனனிடம் ஒருகால் அஹங்கார பலத்தினால் நீ என்னை புரிந்து கொள்ளவில்லையெனில், நீ தேடுகின்ற அந்த நன்மைகள்(ச்1ரேயஸ்) உனக்கு மறுக்கப்படும், ஏனெனில் நீ அதற்குத் தயாராக இல்லை. சந்யாசத்திற்குத் தயாராகாமல் கர்மத்தை கைவிடும்போது, நீ ஒரு சந்யாசியாகவும் இருக்கமாட்டாய்; கர்மயோகியாகவும் இருக்கமாட்டாய். எனவே, நீ தேடும் அந்த இலக்கை அடைய முடியாது என்கிற அர்த்தத்தில் நீ அழிவடைவாய் எனக் கூறப்படுகிறது. அர்ஜுனன் தன்னை சரியாகப் புரிந்துகொண்டானா என்பதை உறுதிப்படுத்தவே கிருஷ்ணர் இதை சொல்லுகிறார். ஏனெனில் பின்னர் சுலோகம் அறுபத்திமூன்றில் (18.63), அவனுக்குப் பிடித்ததை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முழு சுதந்திரத்தை அர்ஜுனனுக்கு அவர் வழங்கப் போகிறார் — யதா2 இச்சஸி ததா2 குரு. ஆகையினால், இப்போது தான் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டோம் என்பதை அவர் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்.

தான் செய்யவேண்டிய இந்த கடமை இப்போது மகிழ்ச்சி தருவதாக இல்லை என நினைத்து அர்ஜுனன் அதை கைவிட்டால், பிறகு இதைவிடவும் விரும்பத்தகாத ஒரு செயலை அவன் செய்ய வேண்டியிருக்கும் என்று கிருஷ்ணர் கூறுகிறார். ஏனெனில் அவனது இயல்பு அவனை அவ்வாறு செய்யத் தூண்டும். போர்களத்திலிருந்து ஓடிவிட்டதற்காக மக்கள் அவனை நிந்திக்கும்போது, அவனது சுபாவத்தினால் அவன் மிகுந்த கோபமடைந்து அவர்களுடன் சண்டையிடுவான். ஏனெனில் எவராலும் தனது இயல்பை முழுமையாகக் கைவிட முடியாது. எனவேதான் அர்ஜுனனின் மனநிலை கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருந்தது. அவனுக்கு அறிவு இருந்தது உண்மைதான் எனினும், இப்போது பகவான் அர்ஜுனனிடம் சொல்வதிலிருந்தும், அந்த அறிவில் சில தடைகள் இருந்ததை நாம் புரிந்து கொள்கிறோம். அவை சரி செய்யப்பட வேண்டியவை.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

என்னதான் முயன்றாலும் ஈஷ்வரனுடைய கிருபை மட்டும் இல்லாது போனால் உனக்கு ஒன்றும் லபிக்காது. நீ ஈஷ்வரனை அடையமாட்டாய். ஆனால் இந்தக் கிருபை எளிதில் கிடைத்துவிடும் என்று நம்பாதே. உனது ஹிருதயத்திலிருந்து அஹங்காரம் முழுவதும் நீங்க வேண்டும். ‘நான் கர்த்தா’ என்ற எண்ணம் உன் மனதிலிருந்தால் நீ ஒருபோதும் ஈஷ்வரனைக் காணமாட்டாய். ‘நானே கர்த்தா’ வென்று எவன் நினைக்கின்றானோ அவன் உள்ளத்தில் ஈஷ்வரன் ஒருபோதும் தோன்றுவதில்லை.

————————————————————————————————

சனி, 29 ஆகஸ்ட், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.55 - 18.56

||18.55|| பக்தியோக சாரம்:

भक्त्या मामभिजानाति यावान् यश्चास्मि तत्त्वतः ।

ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तदनन्तरम् ।। ५५ ।।  

4க்த்யா மாமபி4ஜாநாதி யாவாந் யச்1சாஸ்மி தத்த்வத: ।

ததோ மாம் தத்த்வதோ ஞாத்வா விச1தே தத3நந்தரம் ।। 55 ।। 


भक्त्या  4க்த்யா  பக்தியினால்      यावान् य: च अस्मि  யாவாந் ய: ச அஸ்மி  எத்தன்மையனாகவும் யாராகவும் நான் இருக்கிறேன் என்று      तत्त्वतः தத்த்வத:  உள்ளபடி      माम्  மாம்  என்னை     अभिजानाति  அபி4ஜாநாதி  அறிகிறான்     तत:  தத:  அதன் பிறகு      तत्त्वत:  தத்த்வத:  உள்ளபடி         मां ज्ञात्वा  மாம் ஞாத்வா  என்னை அறிந்து       तदनन्तरम् विशते (माम्)  தத3நந்தரம் விச1தே (மாம்)  விரைவில் (என்னை) அடைகிறான்.


நான் எத்தன்மையன், யார் என்று பக்தியினால் ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான்; உள்ளபடி அறிந்தபின் விரைவில் என்னை அடைகிறான். 


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

யான் எவ்வளவுடையோன், யாவன் என என்னையொருவன் உள்ளபடி பக்தியாலே அறிகிறான். என்னை உள்ளபடி அறிந்துகொண்ட பின்னர் ‘தத்’ (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.


விளக்கம்:

தனக்கும் ஈஷ்வரனுக்கும் இடையிலான ஐக்கியத்தை பற்றிய அறிவினால் உண்டான மேலான பக்தி கொண்டவனாக ஞானி இருக்கிறான் என சென்ற சுலோகத்தில் பார்த்தோம். அந்த அறிவின் சிறப்பம்சம் என்ன என்பதை இங்கு விளக்குகிறார்.


=> பக்தி: 

அவன் என்னை பக்தியின் மூலம் அறிகிறான் — 4க்த்யா மாம் அபி4ஜாநாதி, என்று கிருஷ்ணர் கூறுகிறார். இங்கு பக்தி என்பது ஞானத்தை குறிக்கிறது. அதாவது பரமேஷ்வரனைப் பற்றிய அறிவின் வடிவாக இருக்கின்ற பக்தி; நாம் ஏற்கனவே பார்த்த ஞானியின் பக்தி அது. ‘ஜாநாதி’ எனில் அறிதல். ‘அபி4ஜாநாதி’ எனில் சரியாக, முழுமையாக அறிதலைக் குறிக்கிறது. ஈஷ்வரனை தனது ஆத்மாவாகவே அங்கீகரிக்கின்ற ஞானத்தை குறிக்கிறது. ஞானத்தை தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாத பக்தி(ஜ்ஞாந-லக்ஷணயா ப4க்த்யா), என்கிறார் சங்கரர். அதாவது இது உணர்ச்சி சார்ந்த பக்தி அல்ல; ஞானத்திலிருந்து வேறல்லாத பக்தி; அறிவால் நிறைந்த பக்தி, அறிவே பக்தியாக வெளிப்படும் நிலை.


=> எப்படி அறிகிறான்?

நான் எத்தன்மையானவன், எந்த அளவு விரிந்துள்ளேன் என்பதை அவன் அறிகிறான் — யாவாந் அஸ்மி. இது பல்வேறு வகையான உபாதிகளைப் பற்றிய அறிவைக் குறிக்கிறது. மாயையுடன் கூடியுள்ள நான் எப்படி விரிந்துள்ளேன் என்பதை, அதாவது சகுண ப்ரம்மத்தை பற்றிய அறிவைக் குறிக்கிறது. இந்த முழு படைப்பும் பரமேஷ்வரனைத் தவிர வேறில்லை. ஆகாசத்தில் தொடங்கி அனைத்து பூதங்களும், இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் அர்ஜுனன், பீஷ்மர் போன்ற அனைத்து ஜீவ-உபாதிகளும், தாவர வகையில் தொடங்கி விலங்கு வகைகள் வரையிலும் என இந்த முழு பிரபஞ்சமுமாக விரிவடைந்திருப்பது ஈஷ்வரனே எனும் அறிவை அடைந்தவனாக அவன் இருக்கிறான். தனிப்பட்ட(வ்யஷ்டி) மற்றும் ஒட்டுமொத்த(ஸமஷ்டி) நோக்கில் எவ்விதம் தன்னை பகவான் வெளிப்படுத்திக் கொண்டுள்ளார் என முழுமையாக அறிந்தவனாக இருக்கிறான். மேலும், எல்லா உபாதிகளுடன் கூடிய சகுண ப்ரம்மமாக மட்டுமல்லாமல், நாமரூப வரம்புகளிலிருந்து விடுபட்ட நிர்குண ப்ரம்மமாகவும் என்னை உள்ளபடி அவன் அறிகிறான் என்கிறார் பகவான் — ய: ச அஸ்மி தத்த்வத:. ஈஷ்வரனை அனைத்து உபாதிகளிலிருந்தும் முற்றிலும் விடுபட்டவராக, ஸத்யம் ஞாநம் அநந்தம் ப்ரம்மமாக, பதினைந்தாவது அத்தியாயத்தில் பேசப்பட்ட உத்தம-புருஷனாக அவன் அறிகிறான். இருமையற்ற சைதன்னியமாக (அத்3வைதம் சைதன்ய-மாத்ர-ஏகரஸம் மாம் அபி4ஜாநாதி) அறிகிறான் என சங்கரர் பாஷ்யத்தில் விளக்கமளிக்கிறார். இருமையற்றதை எப்படி ஒருவன் அறிய முடியும்? அறிபவன் ஒருவன் இருக்கிறான் என்பதே அங்கு இருமை இருப்பதை காட்டுகிறதே என்கிற சந்தேகம் எழலாம். ஆகவேதான் சங்கரர் இதை மிகத் தெளிவாக இங்கு விளக்குகிறார். இருமையற்ற ப்ரம்மத்தை தனது சொந்த பிரக்ஞையுணர்வாக அவன் உணர்கிறான். பிறக்காதவனாக, வயோதிகம் அடையாதவனாக, மாற்றத்திற்கோ மரணத்திற்கோ உட்படாதவனாக, இரண்டாவது விஷயம் என எதுவும் இல்லாததால் எந்த பயத்திற்கும் உட்படாதவனாக தன்னை அறிகிறான்.


=> இறைவனுள் பிரவேசித்தல்:

அதன் பிறகு(தத3நந்தரம்) என்னை உள்ளபடி அறிந்து(மாம் தத்த்வத: ஞாத்வா) எனக்குள் நுழைகிறான் — மாம் விச1தே, என்கிறார் கிருஷ்ணர். இதுபோன்ற சிக்கலான வாக்கியங்கள் சரியாகப் புரிந்து கொள்ளப்படாவிட்டால் தவறான அர்த்தத்தை கொடுத்துவிடும். இதை ஒரு இடத்திற்குள் பிரவேசிப்பது அல்லது இறைவனின் உடலுக்குள் நுழைவது போன்ற உடல் சார்ந்த அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள கூடாது. இங்கு ‘நுழைகிறான்’ அல்லது ‘பிரவேசிக்கிறான்’ என்பதை அடைகிறான் என்பதாகப் புரிந்துகொள்ளுதல் வேண்டும். பரமேஷ்வரனை தத்துவமாகத் தெளிவாக அறிந்தவுடன், அவன் இனி தன்னை ஒரு தனித்துவமான ஜீவன் என்று பார்ப்பதில்லை. ‘நான்’ மற்றும் ‘ஈஷ்வரன்’ எனும் இருமை அங்கு மறைந்து விடுகிறது. பிரிவுணர்வு கரைந்து, வேறானவனாய் இல்லாதவனாக அவன் ஆகிறான் எனும் அர்த்தத்தில் இறைவனுக்குள் நுழைகிறான் எனக் கூறப்படுகிறது. பாம்பு-கயிறு உதாரணத்தில், பாம்பு கயிற்றில் பிரவேசிப்பதைப் போல எனக் கூறலாம். அதாவது மங்கிய வெளிச்சத்தில் கயிற்றை பாம்பாகத் தவறாகப் பார்க்கிறோம். ஆனால் அறிவு வந்தவுடன் பாம்பு எங்கும் போகவில்லை, உண்மையில் அது கயிறாகவே ஒடுங்குகிறது. அதுபோல, ஜீவன் என்பது தவறான அறிவால் தோன்றிய தனித்தன்மை ஆகும். உண்மையில் இருப்பது ப்ரம்மம் மட்டுமே. இறைவனைப் பற்றிய இந்த அறிவு வந்தவுடன் ஜீவன் எங்கும் போகவில்லை; ப்ரம்மமாகவே ஒடுக்கத்தை அடைகிறான். இதுவே ‘பிரவேசம்’ ஆகும். ப்ரம்மத்தை ஜீவன் ஒரு வெளிப்புறப் பொருளாக அறியவில்லை, மாறாக தனது சொந்த சைதன்யமே ப்ரம்மம் என்றுணர்கிறான். இதனால் தனித்தன்மை கரைகிறது; இருமை மறைகிறது; ஒரே பரம் ப்ரம்மம் மட்டுமே நிலைக்கிறது. இது இட மாற்றம் அல்ல; அறிவின் மூலம் நிகழும் ஐக்கியம் ஆகும்.  


=> இரு செயல்களா?

இங்கு குறிப்பிடப்படும் அறிதலும்(ஞாத்வா) பிரவேசித்தலும்(விச1தே) இரண்டு வெவ்வேறு விஷயங்கள் அல்ல. அதன் பிறகு(தத3நந்தரம்) மற்றும் அறிந்து(ஞாத்வா) எனும் இரு சொற்களும் இங்கு ஈஷ்வரனுடன் ஐக்கியமாவதற்கு தேவையான முன் நிபந்தனைகளை வெளிப்படுத்துவதாக மட்டுமே அமைகின்றது. எனவே இது இரு வெவ்வேறு காலகட்டத்தில் நடைபெறுகின்றன என எடுத்துக் கொள்ளக் கூடாது. ப்ரம்மத்துடன் ஐக்கியம் பெறுவதற்கு முன் நிபந்தனைகள் யாவை? ‘என்னை அறிந்த பிறகு அவன் என்னுள் பிரவேசிக்கிறான்— ஞாத்வா மாம் விச1தே’ என்று கூறப்படுகிறது. உதாரணமாக, ‘சாப்பிட்ட பின், அவன் பசியைத் தணிக்கிறான்’ என்ற வெளிப்பாட்டை எடுத்துக் கொள்வோம். சாப்பிட்ட பின் தனியாக ‘பசியை அடக்க’ அவன் வேறு ஒரு செயல் செய்ய வேண்டியதில்லை. சாப்பிடும் செயலில் பசியடக்கம் தானாகவே நிகழ்ந்துவிடுகிறது. அதேபோல, மரக்கட்டையை வெட்டிய பின், அதை இரண்டு துண்டுகளாக மாற்ற அவன் தனியாக ஒரு செயல் செய்ய வேண்டியதில்லை. வெட்டும் செயலிலேயே அது இரண்டு துண்டுகளாக மாறிவிடுகிறது. வெட்டுதல் முடிவதற்கும், இரண்டு துண்டுகளாக பிரிவதற்கும் இடையில் எந்த நேர இடைவெளியும் இல்லை. அதுபோலத்தான், இங்கு ‘அறிந்த பின் பிரவேசிக்கிறான்’ என்று சொல்வது, அறிதலே பிரவேசிப்பாகும் என்பதைக் குறிக்கிறது. மெய்ப்பொருளை அறியாமல் முழுமையிலிருந்து ஜீவன் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால், அதைப் பற்றிய அறிதல் பிரவேசிப்பதற்கு அவசியமான நிபந்தனையாக ஆகிறது. உண்மையில் அவன் ஒருபோதும் இறைவனிடமிருந்து பிரிந்திருக்கவில்லை; எப்போதும் இறைவனிலிருந்து வேறானவனாக இல்லை. பிரிவுணர்வு என்பது முற்றிலும் கற்பனையானது; அது ஒரு எண்ணம் மட்டுமே. இந்த கற்பனையான பிரிவு இருப்பதால்தான் ‘அறிந்த பின் அவன் இறைவனுடன் ஒன்றாகிறான்’ என்று சொல்ல வேண்டிய அவசியம் உண்டாகிறது. எனவே இங்கு இரண்டு வெவ்வேறு செயல்கள் இல்லை என்பதை சங்கரர் வலியுறுத்துகிறார். 


  மேலும், அறிந்த பிறகு ‘மோக்ஷம்’ என்கிற வேறொரு பலன் எதுவும் இல்லை. அறிவே மோக்ஷம் ஆகும். ஆனால், அறிவு என்பது மனிதன் நாடும் இலக்காக இருப்பதில்லை. துக்கம் மற்றும் பயத்திலிருந்து விடுபடுவதையே விரும்புகிறான். ஆகையினால் அதுவே அடையப்படவேண்டிய இலக்காக அவனுக்கு இருக்கிறது. அந்த முடிவானது தன்னைப் பற்றிய உண்மையை அறிதலின் வடிவில் கிடைக்கிறது. எனவே மோக்ஷம் என்பது ‘அறிவுக்கு பிறகு — ஞாந அநந்தரம்’ என்று சொல்லப்படுகிறது. இது கால-வரிசையைக் குறிக்கவில்லை. ‘அறிவால் மோக்ஷம் — ஞாநேந மோக்ஷ:’ மற்றும் ‘அறிவின் காரணமாக மோக்ஷம் — ஞாநாத் மோக்ஷ:’. மோக்ஷம் என்பது பெற வேண்டிய முடிவு(ஸாத்4); அறிவு என்பது அதைப் பெறும் வழி(ஸாத4). ஆனால் இங்கு சாதனமும் சாத்யமும் ஒன்றே. எனவேதான் ‘அதன் பிறகு(தத3நந்தரம்)’ என்பது காலத்தைக் குறிக்கவில்லை, தத்துவ வரிசையை மட்டுமே குறிக்கிறது. 


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஜீவாத்மாவால் பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்க முடியும். அப்போதுதான் ஒருவன் “அவனே நான்” என்று உணர்ந்து சொல்லக்கூடும். ஒரு வீட்டில் நெடுநாளாக வேலை செய்து வந்த வேலைக்காரன் ஒருவன், காலக்கிரமத்தில் அவ்வீட்டார்களுள் ஒருவனாகவே பாவிக்கப்படலாம். வீட்டு எஜமானன் அவனுடைய வேலைத் திறமையைக் கண்டு மகிழ்ந்து, ஒருநாள் அவனைத் தன்னுடைய ஆசனத்தில் உட்காரச் செய்து தன்னைச் சுற்றியுள்ளாவர்களை நோக்கி, “இந்த க்ஷணம் முதல் இவனுக்கும் எனக்கும் யாதொரு வித்தியாசமுமில்லை. நானும் இவனும் ஒன்று. எனது கட்டளைக்குக் கீழ்ப்படிவதைப்போல இவனுடைய கட்டளைக்கும் நீங்கள் கீழ்ப்படியவேண்டும். இல்லாவிட்டால் தண்டிப்பேன்” என்று சொல்லலாம். அப்போது அந்த வேலைக்காரன் சங்கோசத்தினால் இந்தப் புதிய கெளரவத்தைக் காட்டிக்கொள்ளத் தயங்கலாமானாலும், எஜமானன் அவனைக் கட்டாயப்படுத்தி கெளரவ ஸ்தானத்தில் வைப்பான். ஈஷ்வரனை நெடுங்காலம் வழிபட்டு அவனுடன் ஐக்கியமான ஜீவனுடைய நிலைமையும் இப்படிப்பட்டதே. ஈஷ்வரன் தன்னுடைய மஹிமையை இவர்களுக்கு அருளி, இவர்களைத் தனது ஒப்பற்ற ஸ்தானத்துக்கு உயர்த்துகிறான்.

————————————————————————————————

||18.56|| செயல் ரூபமான பக்தி:

सर्वकर्माण्यपि सदा कुर्वाणो मद्व्यपाश्रय: ।

मत्प्रसादादवाप्नोति शाश्वतं पदमव्ययम् ।। ५६ ।। 

ஸர்வகர்மாண்யபி ஸதா3 குர்வாணோ மத்3வ்யபாச்1ரய: ।

மத்ப்ரஸாதா33வாப்நோதி சா1ச்1வதம் பத3மவ்யயம் ।। 56 ।।


सदा  ஸதா3  எப்பொழுதும்     सर्वकर्माणि  ஸர்வகர்மாணி  எல்லாக் கர்மங்களையும்    कुर्वाण: अपि  குர்வாண: அபி  செய்தபோதிலும்        मद्व्यपाश्रय:  மத்3வ்யபாச்1ரய:  என்னை சரணடைகிறவன்       मत्प्रसादात्  மத்ப்ரஸாதா3த்  எனது அனுக்கிரகத்தினால்     शाश्वतं  சா1ச்1வதம்  நித்தியமாயிருப்பதும்     अव्ययम्  அவ்யயம்  அழியாததும் ஆகிய      पदम्   பத3ம்  பதத்தை     अवाप्नोति  அவாப்நோதி  அடைகிறான்.


எப்பொழுதும் எல்லாக் கர்மங்களையும் செய்தபோதிலும் என்னை சரணடைகிறவன் எனதருளால் நித்தியமாயிருப்பதும் அழியாததுமாகிய பதமடைகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

எல்லாத் தொழில்களையும் எப்போதும் செய்து கொண்டிருந்தாலும், என்னையே சார்பாகக் கொண்டோன் எனதருளால் அழிவற்ற நித்திய பதவியை எய்துகிறான்.


விளக்கம்:

மேற்கூறப்பட்ட ஞானத்திற்கு மனதை தயார்படுத்துகிற கர்மயோகம் இந்த சுலோகத்தில் புகழப்படுகிறது. 


=> கர்மயோகி:

கர்மயோகம் என்பது செயல் ரூபமான பக்தி ஆகும். இத்தகைய பக்தி செலுத்தும் கர்மயோகியும் இறுதி இலக்கான ஞான நிஷ்டையை பெறுகிறான். அனைத்து செயல்களையும் துறந்து, பிரார்த்தனை மற்றும் தியானம் நிறைந்த வாழ்க்கையை வாழும் சந்யாசி அடைகின்ற அதே இலக்கு ஒரு கர்மயோகியினாலும் அடையப்படுகிறது. ‘கர்மயோக வாழ்க்கை வாழாதவனுக்கு துறவு என்பது மிகவும் கடினம் — ஸந்ந்யாஸ: து மஹாபா3ஹோ து3:க2ம் ஆப்தும் அயோக3த:, என பகவான் ஐந்தாவது அத்தியாயத்தில்(5.6) கூறினார். இங்கும் பகவான் அதை வலியுறுத்துகிறார். 


=> சரணாகதி அடைந்தவன்:

அபி’ எனும் வார்த்தையை ‘ஸர்வகர்மாணி’ என்ற வார்த்தையுடன் சேர்த்து ‘அனைத்து கர்மங்களிலும்’ என பயன்படுத்தப்பட்டிருப்பது, செய்ய வேண்டிய செயல்கள் (விஹித கர்ம) மட்டுமல்ல, செய்யக்கூடாதவைகளையும்(ப்ரதிஷித்34 கர்ம) குறிக்கிறது என்று சங்கரர் கூறுகிறார். இதனால் கர்மயோகியானவன் தடை செய்யப்பட்ட கர்மங்களையும் செய்யலாம் என்பதாகப் பொருள் கொள்ளக்கூடாது, அது சங்கரரின் கருத்தல்ல. இந்த வெளிப்பாடு பின்வரும் இரு முக்கிய விஷயங்களைக் குறிக்கிறது:

   (1) எது சரி மற்றும் எது தவறு என்பது சூழ்நிலைகள் சார்ந்தவை. பொதுவாக தவறானதாகக் கருதப்படும் செயல்கள், சில நேரங்களில் சூழ்நிலை காரணமாக தவிர்க்க முடியாதவைகள் ஆகலாம். அத்தகைய சூழலில், ஒரு கர்மயோகி அந்தச் செயலை ஈஷ்வரனின் ஆணை என ஏற்று, அதை ஈஷ்வரார்ப்பண-புத்தியுடன் செய்கிறான். அதனால் அவனுக்கு பாபம் ஏற்படாது.

   (2) சில நேரங்களில், எறும்பை மிதித்தல் போன்ற சிறு உயிர்களுக்கு தெரியாமல் சேதம் செய்கிற சில தவறுகள் நம்மை அறியாமல் நிகழ்ந்து விடுகின்றன. ஈஷ்வர-அர்ப்பணிப்புடன், மத்3வ்யபாச்1ரய, அனைத்து கர்மங்களையும் செய்கிற இந்த கர்மயோகி, அத்தகைய செயல்களிலும்கூட பாபத்தை அடைவதில்லை. 

ஈஷ்வர அருளால் அவன் அந்த இறுதி இலக்கை அடைகிறான். கர்மயோகம் என்பது பிரார்த்தனை மற்றும் பிரார்த்தனை மனப்பான்மை கொண்டதொரு வாழ்க்கைமுறை ஆகும். இங்கு சரணாகதி என்பது தர்மம் என்பது ஈஷ்வரனே என அங்கீகரித்து அதன்படி நடத்தலைக் குறிக்கிறது. அதுமட்டுமே ஆத்ம சாதகனுக்குத் தேவையான மனபரிபாகத்தைக் கொடுக்கிறது. அதைத்தான் இங்கு பகவான், என்னை சரணடைகிறவன் — மத்3வ்யபாச்1ரய, என மிகத் தெளிவாகக் கூறுகிறார். ஒரு கர்மயோகிக்கு இறைவன் தர்மத்திலிருந்து வேறானவராக இல்லை என்பதால் அவன் தனது விருப்பு-வெறுப்புகளால் தர்மத்தை மறந்து விடுவதில்லை. அதாவது தனது செயலைத் தேர்வு செய்யும் போது, ​​

  * ஈஷ்வரனை தர்மத்தின் வடிவத்தில் இருப்பராக,

  * தனது செயலை கண்காணிப்பராக(கர்மாத்4யக்ஷ), 

  * கர்மபலனை எதிர்கொள்ளும் நேரத்தில், ஈஷ்வரனை பலனை கொடுப்பவராக(கர்மபல2தா3தா), அறிகிறான். மேலும் அந்த பலனை பிரசாதமாக ஏற்றுக் கொள்கிறான். 

இத்தகைய மனப்பான்மை உடையவனே ‘மத்3வ்யபாச்1ரய’ என்றழைக்கப்படுகிறான். ஈஷ்வரனுக்காகக் கர்மம் செய்பவன் ஈஷ்வரனை நினைக்கிறான்; தன்னை நினைப்பதில்லை. ஈஷ்வர நினைவில் தன்னை மறந்திருப்பவன் சரணடைந்தவன் ஆகிறான். கடலைச் சென்று அடையும்வரையில் நதிக்கு தனித்தன்மை இருக்கிறது; தனிச் செயலும் இருக்கிறது. கடலினுள் நுழைந்த பிறகு நதி என்ற பெயர் போய்விடுகிறது. கடலில் இருக்கிற நீரோட்டத்தில் நதியும் கலந்துகொள்ளலாம். ஆயினும் அச்செயல் யாவும் கடலினுடையது; நதியினுடையதாகாது. ஈஷ்வரனிடம் அடைக்கலம் புகுந்த ஜீவனின் நிலை அத்தகையது. உடல் எனும் வடிவம் இருக்கிறது எனினும் அதனுள் இருக்கிற உணர்ச்சி முற்றிலும் இறையுடன் கலந்திருக்கும் உயர்நிலையான பரபோதமாகும். அந்த உடலில் நிகழ்கின்ற செயல்கள் எல்லாம் ஈசன் செயலேயாகும். 


=> அழியாத பதமடைகிறான்:

ஈஷ்வரனின் பிரசாதத்தினால் அவன் நித்தியமான அழியாத பதத்தை அடைகிறான். ‘எனதருளால் அவன் முடிவற்றதான ஒரு முடிவை அடைகிறான் — சா1ச்1வதம் அவ்யயம் பத3ம் அவாப்நோதி’, என்கிறார் கிருஷ்ணர். இதுவே மோக்ஷம் ஆகும். இறையருளை அவன் எவ்வாறு பெறுகிறான்? ஈஷ்வரனை சரணடைந்ததினால் அவன் மனத்தூய்மையை(அந்த-கரண-சுத்3தி4) பெறுகிறான். அதன் காரணமாக மனத்தில் மகிழ்ச்சி, தெளிவு மற்றும் அமைதி கிடைக்கிறது. இதுதான் பிரசாதம் எனப்படுகிறது. அதன்பிறகு, தெளிவான அறிவுக்கு தேவையான சரியான உபதேசம் கிடைக்கிறது. ஈஷ்வரனின் அருள் இல்லாமல், 

  * சரியான குருவை அவனால் கண்டுகொள்ள இயலாது, 

  * சாஸ்திரத்தை அணுக முடியாது, 

  * உடலும் மனமும் ஆன்மிக நாட்டத்திற்கு ஏற்றதாக இருக்காது,

  * சுற்றியுள்ள வெளிப்புற சூழ்நிலைகளும் சாதகமாக இருக்காது.

இவை அனைத்தும் ஈஷ்வர பிரசாதத்தால் மட்டுமே சாத்தியம். நுட்பமாக பகுப்பாய்வு செய்து பார்க்கும்போது, முழு ஆன்மிக பயணமே ஈஷ்வர பிரசாதத்தை தவிர வேறொன்றுமில்லை என்பதை புரிந்து கொள்ளமுடியும். 

காலப்போக்கில், கர்மயோகியும் சந்யாசியைப் போலவே அதே ஞானநிஷ்டையைப் பெறுகிறான். கர்மயோகியும் முமுக்ஷுதான் ஏனெனில் அவன் சொர்க்கத்திற்காகவோ அல்லது வேறு ஏதேனும் இகலோக விஷயங்களுக்காகவோ எந்த செயலையும் செய்யவில்லை. மனப்பரிபாகத்திற்காகவென மட்டுமே அவன் கர்மத்தைச் செய்கிறான். எனவே சாஸ்திரத்தின் உட்பொருளை கற்று அவன் நிச்சயமாக மோக்ஷத்தைப் பெறுவான். 

ஆகையால், கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கர்மயோக மனப்பான்மையுடன் தனது கடமையைச் செய்யச் சொல்லுகிறார்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

கர்மம் செய்தலே வாழ்க்கையின் முடிவன்று; அது ஒரு மார்க்கமே. பற்றுதலற்றுச் செய்யப்படுமானால் அது வாழ்க்கையின் முடிவான லட்சியமாகிய இறைவனிடம் அழைத்துச் செல்லுகிறது. மார்க்கத்தையே முடிவென்று மருள்கொள்ளவேண்டாம். ஓர் ஊருக்குச் செல்லும் வழி ஊராகிவிடாது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்.

————————————————————————————————