||6.2|| சந்யாசத்திற்கும் கர்மயோகத்திற்கும் உள்ள தொடர்பு:
यं सन्न्यासमिति प्राहुर्योगं तं विद्धि पाण्डव ।
न ह्यसन्न्यस्तसङ्कल्पो योगी भवति कश्चन ।। २ ।।
யம் ஸந்ந்யாஸமிதி ப்ராஹுர்யோக3ம் தம் வித்3தி4 பாண்ட3வ ।
ந ஹ்யஸந்ந்யஸ்தஸங்கல்போ யோகீ3 ப4வதி கச்1சந ।। 2 ।।
पाण्डव பாண்ட3வ பாண்டவா यं யம் எதை सन्न्यासम् इति ஸந்ந்யாஸம் இதி சந்யாசம் என்று
प्राहु: ப்ராஹு: சொல்கிறார்களோ तं தம் அதை योगम् யோக3ம் யோகம் என்று विद्धि வித்3தி4 அறிக
हि ஹி ஏனென்றால் असन्न्यस्त सङ्कल्प: அஸந்ந்யஸ்த ஸங்கல்ப: சங்கல்பத்தை துறக்காத
कश्चन கச்1சந யாரும் योगी न भवति யோகீ3 ந ப4வதி யோகியாவதில்லை.
பாண்டவா, எதை சந்யாசம் என்கிறார்களோ, அதையே யோகம் என்று அறிக. ஏனென்றால் சங்கல்பத்தை துறக்காதவன் யோகியாவதில்லை.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
பாண்டவா, எதனை சந்நியாச மென்கிறார்களோ, அதுவே யோகமென்றறி. தன் கோட்பாடுகளைத் துறக்காத எவனும் யோகியாக மாட்டான்.
விளக்கம்:
இதிலும் பகவான் சாமான்ய குணத்தை கூறுவதன் மூலம் குண வ்ருத்தி, அதாவது ஒப்பிட்டுக் கூறுதலை செய்கிறார். சந்யாசிக்கும் கர்மயோகிக்கும் உள்ள பொதுவான குணமாக சங்கல்ப தியாகத்தை கூறுகிறார்.
=> சங்கல்பம்:
கர்மபலனைக் குறித்து மனதில் உண்டாகும் கற்பனைகளையும் எதிர்ப்பார்ப்புகளையும் மீண்டும் மீண்டும் நினைத்தல் சங்கல்பம் எனப்படும். இது பணம் சம்பாதிக்க வேண்டும், தன் குடும்பத்தின் நிலையை உயர்த்த வேண்டும், புண்ணியம் சம்பாதிக்க வேண்டும் முதலிய எல்லா ஆசைகளுக்கும் உத்வேகம் அளிக்கின்றது. ஒவ்வொரு திட்டத்திலும் கிடைக்கப்போகும் பலனைப் பற்றிய எண்ணங்களுக்கு ஒரு முடிவில்லை. ஆசையின் வேகத்தினால் அனந்தகோடி எண்ணங்கள் உதிப்பதால் மனம் சலனமடைகிறது. மன அலைச்சல் இருக்குமளவு ஒருவன் யோகியாக ஆக முடியாது; மனவமைதியை அடைய முடியாது. ஒரு கர்மயோகி அனைத்து சங்கல்பங்களையும் விட்டுவிடுகிறான். ஈஷ்வரார்ப்பண புத்தியுடன் கர்மபலனில் இச்சையில்லாமல் வினையாற்றுவதால் அவன் அச் செயலை செய்யும்போதும், செய்த பின்னும் மன அமைதியுடன் இருக்கிறான்.
ஒரு கர்ம யோகி தனது சங்கல்பத்தை எப்படித் துறக்கிறான்? தர்மாதர்மத்திற்கு எதிரான ராக-த்வேஷங்களை விடுவதன் மூலம் அவன் சங்கல்பத்தைத் துறக்கிறான். அதேசமயம் உண்மையான சந்யாசியான பரமார்த்த-சந்யாசி, அனைத்துவித விருப்பு-வெறுப்புகளையும், அனைத்து கர்மங்கள் மற்றும் செயல்பாடுகளையும் துறக்கிறார். ஞானத்தினால் ‘நான் செய்கிறேன்’ என்ற பாவனையைக் கைவிடுவதன் மூலம் இது செய்யப்படுகிறது.
ஒரு கர்மயோகி பலனைக் குறித்த சங்கல்பத்தைதான் துறந்துள்ளான். ஆனால் கர்மத்தை பற்றிய சங்கல்பத்தை துறக்கவில்லை. ‘நான் கர்த்தா’ என்ற அறிவு அவனிடமுள்ளது. ‘நியுக்த:’ - நான் ஏவப்பட்டுள்ளேன்; இது என்னால் செய்யப்பட வேண்டும் என்ற புத்தி உள்ளது. பலனைத் துறந்து கர்மத்தை மட்டும் ஏன் செய்ய வேண்டும்? சித்த சுத்திக்காகவும், ஸத்வ குணம் வரை உயரவும் இவ்விதம் செய்யப்படுகிறது.
அந்த ஸத்வ குணத்தில் அவன் தனக்கு உண்மையில் எந்தக் கடமையும், கர்மமும் இல்லை என்பதைப் புரிகிறான். பொதுவாக மக்கள் தங்களை கடமைக்கு உட்பட்டவர்களாக எண்ணி மோஹத்தில் இருக்கின்றனர். இது என்று நீங்குகிறதோ, ஆத்மஞான அறிவில் நிலைபெறுவதன் மூலம் எந்தவித குற்ற உணர்ச்சியுமில்லாமல் மனதினால் கடமையைத் துறக்க முடிகிறதோ அக்கணமே அவன் கடமையற்றவன் ஆகின்றான். தாமஸ குணத்திலிருந்து வரும் சோம்பலினால் செயல் செய்யாதிருப்பதை இங்கு குழப்பிக் கொள்ளக் கூடாது. இது ஸத்வ குணத்திலிருந்து வந்த அறிவின் பலனாக கிடைக்கும் முக்தி என்பதை சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
—---------------------------------------------------------------------------------------------------------------------------
||6.3||
आरुरुक्षोर्मुनेर्योगं कर्म कारणमुच्यते ।
योगारूढस्य तस्यैव शम: कारणमुच्यते ।। ३ ।।
ஆருருக்ஷோர்முநேர்யோக3ம் கர்ம காரணமுச்யதே ।
யோகா3ரூட4ஸ்ய தஸ்யைவ ச1ம: காரணமுச்யதே ।। 3 ।।
योगम् யோக3ம் தியான யோகத்தை आरुरुक्षो: ஆருருக்ஷோ: அடைய விரும்புகிற मुने: முநே: முனிவனுக்கு कर्म கர்ம கர்மம் कारणम् उच्यते காரணம் உச்யதே சாதனமாக சொல்லப்படுகிறது
योग आरूढस्य யோக3 ஆரூட4ஸ்ய தியான யோகத்தை அடைந்த तस्य एव தஸ்ய ஏவ அவனுக்கே
शम: ச1ம: செயலின்மை कारणम् उच्यते காரணம் உச்யதே சாதனமாக சொல்லப்படுகிறது.
தியான யோகத்தில் முன்னேற விரும்புகிற முனிவனுக்கு கர்மம் உபாயமாகிறது. தியான யோக சித்தியடைந்தவனுக்கோ செயலற்றிருப்பது உபாயமாகிறது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
யோக நிலையில் ஏற விரும்பும் யோகிக்குத் தொழிலே கருவியாகக் கூறப்படுகிறது. அந்நிலையில் ஏறியபின் அவனுக்கு சாந்தம் கருவியாகிறது.
விளக்கம்:
முதலிரண்டு சுலோகங்களில் பகவான், கர்மயோகத்தை தியான யோகத்திற்கான பஹிரங்க சாதனமாகக் குறிப்பிட்டார். அதை இங்கு மீண்டும் உறுதிப்படுத்தி, கர்மயோகத்தின் எல்லையை வரையறுகிறார். அதாவது கர்மயோகம் என்பது ஞானயோகத்திற்குச் செல்லும் பாலமாக அமைந்தபோதிலும், கர்மம் எதுவரை செய்யப்பட வேண்டும் என்பதை விளக்குகிறார். அதற்கு, ஒரு சாதகனின் இரு நிலையை இங்கு குறிப்பிடுகிறார்.
(1) ஆருருக்ஷு: — அடைய விரும்புபவன்; மேல் அமர விரும்புபவன். யாரொருவன் அடுத்த படிக்குச் செல்ல விரும்புகிறானோ அவன் ஆருருக்ஷு.
(2) யோகாரூட: — அடைந்தவன். ‘ஆரூட:’ எனில் அமர்ந்தவன் என்பது பொருள். ஆகவே யோக ஆரூட: என்பது யோகத்தில் அமர்ந்தவன்; தியானத்தில் சித்தியடைந்தவனைக் குறிக்கிறது.
ஆருருக்ஷுவுக்கு கர்மயோகமும், அதேசமயம் யோகாரூடனுக்கு கர்மத்தைத் துறத்தலும் சாதனமாகச் சொல்லப்படுகிறது. தியானம் செய்வதில் விருப்பம் கொண்டிருக்குமளவு ஒருவன் முனிவனாகிறான். எனினும் மனம் குவிந்து தியானம் அமைவதில்லை. அத்தகைய யோகி நிஷ்காமிய கர்மத்தை ஊக்கத்துடன் செய்யவேண்டும். அதனால் மனம் தெளிவடைகிறது. தெளிந்த மனதில் தியான சித்தி தானாக அமைகிறது.
தியானத்திற்கான முக்கிய சாதனமாக கர்மயோகமே இருக்கமுடியும், ஏனெனில் இங்குதான் மனதில் உருவாகும் பிரச்சனைகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து அதை களைய முடியும். எவை காரணங்கள் என விசாரிக்கும்போது ராக-த்வேஷங்கள் அதற்கு விடையாக வருகின்றன. ஆகவே விருப்பு மற்றும் வெறுப்பின் பிடியிலிருந்து மனதை விடுவிக்க ஒருவனுக்கு கர்மயோகம் சிறந்த வழிமுறையாகிறது. தியானம் அல்லது நிதித்யாசனத்தில் ஈடுபட மனமானது தயார் நிலையில் இருக்கவேண்டும். இது கர்மயோக வாழ்க்கையை வாழ்வதன் மூலம் அடையப்படுகிறது.
=> கர்மயோகத்தினால் கிடைக்கும் தகுதிகள்:
மந்தமான வைராக்கியம் மற்றும் முமுக்ஷுத்வத்துடன் கூடிய ஒரு சாதகன் கர்மயோகத்தை தொடங்குகிறான். இந்த வாழ்க்கை முறையினால் அவனது மந்தமான வைராக்கியம் தீவிரமானதாக மாறுகிறது. முமுக்ஷுத்வம், அதாவது முக்திக்கான ஆசையும் இதனால் தீவிரமடைகிறது. இவ்விதம் அவன் ஆருருக்ஷுவிலிருந்து யோகாரூடனாக மாறுகிறான். நிதித்யாசனத்திற்கான சரியான மனநிலையை அடைந்து அவன் யோக-ஆரூடனாகின்றான். அப்போதுதான் ச1ம, சந்யாசம், அனைத்து செயல்களையும் துறத்தல், நடைபெறுகிறது.
கர்மயோகமே ஒருவனை முழுமையாக யோகாரூடனாக மாற்றிவிடாது. கர்மயோக வாழ்க்கை வாழ்வதன் மூலம் அவன் முதலில் ஆழ்ந்து சிந்திக்கும் திறனை மேம்படுத்துகிறான். நித்திய மற்றும் அநித்திய பொருட்களைப் பற்றிய சிந்தனையும் அதன் விளைவாக உறுதிபெறும் வைராக்கியமும் ஒருவனை யோகாரூடனாக மாற்றும். இதிலிருந்து, ஞானத்தினால் மட்டுமே சாத்தியப்படும் செயலின்மைக்கானத் தகுதியை வளர்த்துக் கொள்கிறான்.
=> முழுமையான துறவு:
இங்கு ‘ச1ம’ என்றால் முழுவதுமாக விலகுதலை, அனைத்து செயல்களையும் துறத்தலைக் குறிக்கிறது. இது அறிவால் மட்டுமே நிகழும் என்பதால் உண்மையில் ஞானமே சாதனமாகிறது. இதிலிருந்து, இங்கு மோட்சத்தைப் பெறுவதற்கான சாதனமான ஞானம், துறத்தலுடன்(சந்யாசத்துடன்) சமப்படுத்தப்படுகிறது. எனவேதான் இந்த சுலோகத்தில் ஒரு ஞானி ‘யோக-ஆரூட’ என்றழைக்கப்படுகிறான்.
கர்மயோகத்தினால் ஒருவன் யோகாரூடன் ஆவதில்லை; அறிவினால் அது நடக்கிறது. எனவே, ஞானியாவதற்கான நேரடிச் சாதனமாக சந்யாசம் கூறப்படும்போது அது உண்மையில் ஞானத்தையே குறிக்கிறது. ‘ஞானத்தினால் மட்டுமே செயலின்மையை அடையமுடியுமே தவிர இதில் வேறு வழியில்லை’ என சங்கரர் தனது பாஷ்யத்தில் மிகத் தெளிவான விளக்கத்தை அளித்தும், இக்கருத்தை சிலர் தவறாகவே புரிந்து கொள்கின்றனர்.
யோகாரூடன் அனைத்து கர்மங்களையும் முழுமையாகத் துறக்க வேண்டும். இது வெறுமனே அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் விலகுவதை குறிக்கவில்லை. ‘நான் செயல் செய்பவன் அல்ல; அகர்த்தா’ என்ற ஆத்மஞானத்தின் மூலமே இது சாத்தியப்படும். இதுவே முழுமையாக துறத்தலை, நிவ்ருத்தியை, விடுதலையைக் கொடுக்கிறது.
—---------------------------------------------------------------------------------------------------------------------------