||14.13|| தமோகுண ஆதிக்கத்தின் அறிகுறிகள்:
अप्रकाशोऽप्रवृत्तिश्च प्रमादो मोह एव च ।
तमस्येतानि जायन्ते विवृद्धे कुरुनन्दन ।। १३ ।।
அப்ரகாசோ1ऽப்ரவ்ருத்திச்1ச ப்ரமாதோ3 மோஹ ஏவ ச |
தமஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்3தே4 குருநந்த3ந ।। 13 ।।
कुरुनन्दन குருநந்த3ந குருகுலத்துதித்தவனே अप्रकाश: அப்ரகாச1: விவேகமின்மை
अप्रवृत्ति: च அப்ரவ்ருத்தி: ச முயற்சியின்மையும் प्रमाद: ப்ரமாத3: அஜாக்கிரதை
मोह: एव च மோஹ ஏவ ச மதிமயக்கமுமே एतानि ஏதாநி இவைகள் तमसि विवृद्धे தமஸி விவ்ருத்3தே4 தமோகுணம் தலையெடுக்குமிடத்து जायन्ते ஜாயந்தே உண்டாகின்றன.
குருவம்சத்து வீரா, விவேகமின்மை, முயற்சியின்மை, அஜாக்கிரதை, மதிமயக்கம் — ஆகிய இவைகளே தமோகுண ஆதிக்கத்தால் விளைகின்றன.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
ஒளியின்மை, முயற்சியின்மை, தவறுதல், மயக்கம் இவை தமோ குணம் ஓங்குமிடத்தே பிறப்பன. குருகுலச்செல்வமே!
விளக்கம்:
இந்த சுலோகத்தில் பகவான் தமோகுண ஆதிக்கத்திற்கான அறிகுறிகளைப் பட்டியலிடுகிறார். தமோகுணம் என்பது சத்வத்திற்கும் ரஜஸிற்கும் எதிராக இருக்கும் மனநிலை ஆகும். எனவே சரியான அறிவை உண்டாக்கும் சத்வத்திற்கு எதிரான மனநிலையான விவேகமற்ற தன்மையும்(அப்ரகாச1), தொடர்ந்து செயலில் ஈடுபட வைக்கின்ற ரஜஸிற்கு எதிரானதான செயலற்ற தன்மையும்(அப்ரவ்ருத்தி), தமஸின் பிரதான வெளிப்பாடாக இருக்கிறது. விவேகமின்மை எனில் அறிவற்ற தன்மை, விழிப்புணர்வில்லாத நிலை, எதையும் சரியான விதத்தில் புரிந்து கொள்ளாத தன்மை மற்றும் அனைத்தையும் குழப்பிக் கொள்ளும் மனப்பான்மை. இது மனதின் நிலையைக் குறிக்கிறது. அடுத்ததாக, உடல் ரீதியாக, செய்யவேண்டிய செயலில் ஈடுபடாதிருத்தல் எனும் போக்கு தமஸ் ஆதிக்கத்தில் இருக்கும்போது உண்டாகிறது. எதையும் தொடங்குவது கூட ஒரு பிரச்சனையாகத் தெரிகிறது. காலையில் எழுந்திருக்க முயற்சிக்கும் ஒருவனிடம் அதன் வெளிப்பாடு தெளிவாகத் தெரியும். கடிகார அலாரத்தை இருமுறை தள்ளிவைத்து எழும்ப முயல்வதும், வார இறுதிநாட்களில் உறக்கத்திலிருந்து எழுவதற்கு நமக்குள் நடக்கின்ற போராட்டமும் இதை நன்கு புரியவைக்கும்.
மேலும் தமோகுணத்தில் மேலோங்கியிருக்கும் ஒருவனிடம் ஒரு செயலையும் செய்யாமல் சோம்பித் திரியும் தன்மை தலையெடுப்பதால், அஜாக்கிரதையே வடிவெடுத்தவனாக அவன் மாறுகிறான் — ப்ரமாத3. எந்தச் செயலையும் செய்வதில் அலட்சியமும் கவனக்குறைவும் இருக்கிறபடியால் அவன் தவறுதல் செய்வதற்கு இடம் ஏற்படுகிறது. மதிமயக்கமும் அல்லது திரிவுபட்ட அறிவும் அதன் பயனாக வருகிறது — மோஹ. இதனால் விளைவை உணராத மனநிலை மற்றும் தேவைக்கு அதிகமாக மதிப்பளித்தல் போன்றவை உண்டாகிறது. இதன் காரணமாக சாதனத்தை சாத்யமாக எடுத்துக் கொள்ளுதல் நடக்கிறது.
மேலும் உறக்கம்(நித்3ரா), சோம்பல்(ஆலஸ்யம்), மந்தபுத்தி(மாந்த்3யம்) ஆகியவையும் தமோகுணம் மேலோங்கும்போது உண்டாகின்றன.
=> குணத்தை தாண்டும் உபாயம்:
குணத்தைக் குறித்த அடுத்த தலைப்பிற்குச் செல்வதற்கு முன், ஒரு குணத்திலிருந்து இனியொரு குணத்திற்கு செல்வதற்கான உபாயத்தை பற்றி சிறிது விசாரம் செய்யலாம். ஒவ்வொரு குணத்திற்கும் அதற்கேயுண்டான சில நன்மைகள் இருந்தபோதிலும், இவைகளனைத்தும் தோஷத்துடன் கூடியதாகவே இருக்கின்றன. எனவே குணாதீதன்(குணத்தை கடந்தவன்) எனும் இலக்கை நோக்கிச் செல்லும் பயணத்தில், குணத்தை தாண்டிச் செல்லும் வழி குறித்த அறிவு முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு மனிதனும் சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்கிற இந்த முக்குணங்களின் கலவைதான் எனினும் ஒருவன் பொதுவாக எந்த குணத்தில் அதிகநேரம் இருக்கிறான் என்பதைப் பொருத்து அவன் சாத்விகமானவனா? ராஜஸமானவனா? அல்லது தாமஸமானவனா? என்பதை நிர்ணயம் செய்கிறோம். மேலும் தாமஸமானவன் நேரடியாக சாத்விகமானவனாக மாறுவது கடினம். எனவே முதலில் ராஜஸத்தை அடைந்து பின் சாத்விகத்தை அடையும் வழியைக் கையாளவேண்டும். இனி, தாமஸ பிரதானமான ஒருவன் ராஜஸத்தை அடையும் வழியைக் காணலாம்.
=> தமஸிலிருந்து ரஜஸ்:
தமஸினுடைய தோஷத்தைக் காட்டிலும் ரஜஸின் தோஷம் மேலானது. அதுமட்டுமில்லாமல் இங்கு நமது இலக்கை அடைவதற்கான ரஜோகுணத்தைத் தான் நாம் எடுத்துக் கொள்ளப்போகிறோம். அதென்ன இலக்கிற்கான ரஜோகுணம்? ரஜோகுணத்தை இரண்டாகப் பிரிக்கலாம்:
(1) ரஜஸின் பின் தமஸ் இருப்பது/தமஸை ஆதாரமாகக் கொண்ட ரஜஸ். இதில் செயலானது பற்றுடன் செய்யப்படுகிறது. இதனால் கர்மமானது புண்ணிய-பாபத்தைக் கொடுத்து பந்தப்படுத்துகிறது.
(2) ரஜஸின் பின் சத்வம் இருப்பது/சத்வத்தை ஆதாரமாகக் கொண்ட ரஜஸ். இது சரியான பாவனையில் செயலில் ஈடுபடுதலைக் குறிக்கிறது. அதாவது, இதில் கர்மயோகமாக செயல் செய்யப்படுவதால் மனத்தூய்மை உண்டாகிறது. எனவே தமஸிலிருந்து வெளிவர உதவும் பொதுவான உபாயமாக கர்மயோகம் திகழ்கிறது. சத்வத்தைப் பின்புலமாகக் கொண்ட இந்த ரஜஸ் ஞானயோகப் பாதைக்கு தேவையானது ஆகும்.
=> பொதுவான வழிகள்:
இங்கு சில குறிப்பிட்ட தமோகுண வெளிப்பாட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் வழிகளைக் காணலாம். முதலில் சோம்பல்(ஆலஸ்யம்) அல்லது உறக்கத்தை(நித்3ரா) எடுத்துக் கொள்ளலாம். இது இரு விதத்தில் உண்டாகிறது.
(1) அதிக உழைப்பினால் வருவது. இந்த சிக்கலை தீர்ப்பதற்கு உடலுக்கு தேவையான ஓய்வும், சரியான அளவு உழைப்பும் உபாயமாக அமைகிறது.
(2) பழக்கங்களினால் வருகிற சோம்பல். இதை பின்வரும் வழிகளில் கையாளலாம்:
* ஐந்து நிமிட சுவாசப் பயிற்சி செய்தல். மெதுவாக சுவாசத்தை உள்ளிழுத்து, சில நொடிகள் கழித்து, மெதுவாக சுவாசத்தை வெளிவிடுதல், மீண்டும் ஓரிரு நொடிகள் கழித்து சுவாசத்தை உள்ளிழுத்தல். இது விழிப்புணர்வுடன் செய்யப்படும்போது சோம்பலை அல்லது உறக்கத்தை நீக்கும்.
* குளித்தல் அல்லது உடலின் நகர்வை கோரும் ஏதேனும் செயலில் ஈடுபடுதல்.
* பாதி வயிறு மட்டுமே உணவை எடுத்துக் கொள்ளுதல்.
* தனக்கு ஆர்வத்தை அளிக்கின்ற அல்லது செய்யப் பிடிக்கின்ற செயலை தூக்கம் வரும்போது செய்தல்.
* வீட்டையோ, அறையையோ அல்லது அலமாரியையோ என ஏதேனுமொரு விதத்தில் தூய்மைபடுத்துதலில் ஈடுபடுதல்.
இவ்வழிகளைப் பின்பற்றி சோம்பலை வெல்லலாம். அடுத்ததாக கவனக்குறைவு(ப்ரமாத3) எனும் தமோகுண வெளிப்பாட்டிற்கு, அதற்கான விளைவுகளை எண்ணிப் பார்த்தல் எனும் உபாயம் சிறந்த வழியாக உள்ளது.
=> ரஜஸிலிருந்து சத்வம்:
ரஜஸிலிருந்து விடுதலையடைய சத்வத்தை நாட வேண்டும். அதற்கு ரஜஸின் காரியங்களுக்கு எதிரான செயலில் ஈடுபடவேண்டும். இது ‘ப்ரதிபக்ஷ பா4வநா’ என்றழைக்கப்படும். உதாரணமாக கீழ்கண்ட சில ரஜோகுண வெளிப்பாட்டிற்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைக் காணலாம்:
(1) லோபம்(கஞ்சத்தனம்) -> தானம்
(2) விக்ஷேபம் -> தியானம், உபாசனம், ஜபம், பாராயணம்
(3) பிரவ்ருத்தி(செயலில் ஈடுபட்டுக் கொண்டேயிருத்தல்) -> பொறுப்பை விட்டுப் பழகுதல்(நிவ்ருத்தி)
அடுத்ததாக, சத்வத்திலிருந்து குணாதீதன் எனும் நிலைக்கு செல்ல ஞானயோகம் பின்பற்றப்படுகிறது. இவ்விதம் குணாதீதனாகின்ற பயணத்தில், தமோகுணத்தை நீக்குவதன் மூலம் தன்னை தூய்மைப்படுத்தி, ரஜோகுணத்திலிருந்து சத்வத்திற்கு செல்வதன் மூலம் தன்னை உறுதிப்படுத்தி ஒருவன் ஞானயோகப் பயணத்தை மேற்கொள்கிறான்.
---------------------------------------------------------------------------------------------
||14.14|| குணத்தின் அடிப்படையில் மறுபிறப்பு:
यदा सत्त्वे प्रवृद्धे तु प्रलयं याति देहभृत् ।
तदोत्तमविदां लोकानमलान् प्रतिपद्यते ।। १४ ।।
யதா3 ஸத்த்வே ப்ரவ்ருத்3தே4 து ப்ரலயம் யாதி தே3ஹப்4ருத் ।
ததோ3த்தமவிதா3ம் லோகாநமலாந்ப்ரதிபத்3யதே ।। 14 ।।
यदा तु யதா3 து எப்பொழுது सत्त्वे प्रवृद्धे ஸத்த்வே ப்ரவ்ருத்3தே4 சத்வகுணம் ஓங்கியிருக்கும்பொழுது देहभृत् தே3ஹப்4ருத் தேகத்தை எடுத்தவன்(ஜீவன்)
प्रलयं याति ப்ரலயம் யாதி மரணத்தை அடைகிறானோ तदा ததா3 அப்பொழுது
उत्तमविदां உத்தமவிதா3ம் மேலான தத்துவத்தை அறிந்தவர்களுடைய
अमलान् लोकान् அமலாந் லோகாந் மாசற்ற லோகங்களை प्रतिपद्यते ப்ரதிபத்3யதே அடைகிறான்.
தேகமெடுத்துள்ளவன் சத்வகுணம் ஓங்கியிருக்கும்பொழுது மரணமடைவானாயின் உத்தமர்களுடைய நல்லுலகங்களை அடைவான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
சத்வம் ஓங்கி நிற்கையிலே சரீரி இறப்பானாயின், மாசற்றவனாகிய உத்தம ஞானிகளின் உலகங்களை அடைகிறான்.
விளக்கம்:
குணம் மேலோங்குவதற்கும் மறுபிறப்புக்கும் சம்பந்தம் உண்டா என்பதற்கு விடையாக இந்த இரண்டு சுலோகங்கள் வருகின்றன. எவனொருவனும் குணத்தின் அடிப்படையில்தான் கர்மத்தில் ஈடுபடுகிறான். எனவே அதனடிப்படையில் அவனது கதி அதாவது இறந்தபின் அவன் அடையும் நிலை அமைகிறது.
‘தே3ஹப்4ருத்’ எனில் தேகத்தை எடுத்தவன், ஜீவன். உடலை விடும்பொழுது உள்ளத்தில் என்ன எண்ணம் நிலைத்திருக்கிறதோ அதற்கு ஏற்ப மறுபிறப்பு அமைகிறது. ஒருவனது வாழ்க்கை பெரும்பாலும் சாத்விகமாக இருந்திருந்தால், மரணத்தின்போதும் சத்வமே பிரதானமாக இருக்கிறது. இறக்கும் தருவாயில் அவனது காதுக்குள் ‘நாராயணா’ என கூறப்பட்டாலும், அவனது சத்வ பிரதான வாழ்க்கையே அவனுக்குள் தெய்வச் சிந்தனையை உருவாக்கும். இல்லையெனில், அது தனக்கு கடனை திருப்பியளிக்க வேண்டிய நாராயணனை ஞாபகப்படுத்திவிடும். எனவே எவ்வகையான சிந்தனை அல்லது குணம் ஒருவனது வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தியதோ அதுவே இறுதியிலும் மேலோங்கும். எனவேதான் இந்த சுலோகம் சாத்விக வாழ்க்கையை வாழ்ந்த ஒருவனைக் குறித்துப் பேசுகிறது. சத்வகுணம் ஓங்கியிருக்கும்பொழுது மரணமடைபவன் உத்தமர்கள் உலகங்களை அடைகிறான் — ஸத்த்வே ப்ரவ்ருத்3தே4 ப்ரலயம் யாதி உத்தமவிதா3ம் லோகாந் ப்ரதிபத்3யதே, என்கிறார் பகவான். இத்தகைய உலகங்கள் மாசற்றதாக, சொர்க்கம் முதலிய துக்கமற்ற லோகங்களாக இருக்கின்றன என்பதை ‘அமலாந்’ எனும் அடைமொழி குறிக்கின்றது. இங்கு ‘உத்தமவிதா3ம்’ என்பதை உத்தமர்களைச் சார்ந்த லோகம், பிரம்மதேவர் அல்லது ஹிரண்யகர்பன் ஆகிய மஹத் தத்துவத்தை அறிந்தவர்களுடைய உலகம் என எடுத்துக் கொள்ளலாம். அல்லது, மறுபிறப்பின்போது இந்த பூலோகத்திலேயே அன்பையும் அறிவையும் கொடுக்கின்ற சூழலில் நல்ல உத்தமமான பெற்றோர்களுக்குப் பிறக்கிறான் எனவும் கொள்ளலாம். இதனால் ஞானயோகப் பாதையில் அவனது முயற்சியைத் தொடர்வதற்கான துவக்கம் எளிதாக அமையப்பெறுகிறது.
---------------------------------------------------------------------------------------------