||14.18|| குணங்கள் பற்றிய விளக்கத்திற்கான பொதுவான முடிவுரை:
ऊर्ध्वं गच्छन्ति सत्त्वस्था: मध्ये तिष्ठन्ति राजसा: ।
जघन्यगुणवृत्तिस्था अधो गच्छन्ति तामसा: ।। १८ ।।
ஊர்த்4வம் க3ச்ச2ந்தி ஸத்த்வஸ்தா2 மத்4யே திஷ்ட2ந்தி ராஜஸா: ।
ஜக4ந்யகு3ணவ்ருத்திஸ்தா2 அதோ4 க3ச்ச2ந்தி தாமஸா: ।। 18 ।।
सत्त्वस्था: ஸத்த்வஸ்தா2: சத்வகுணத்திலுள்ளவர்கள் ऊर्ध्वं ஊர்த்4வம் மேல்நோக்கி
गच्छन्ति க3ச்ச2ந்தி போகிறார்கள் राजसा: ராஜஸா: ரஜோகுணத்திலுள்ளவர்கள்
मध्ये மத்4யே மத்தியில் तिष्ठन्ति திஷ்ட2ந்தி நிற்கிறார்கள்
जघन्य गुण वृत्तिस्था: ஜக4ந்ய கு3ண வ்ருத்திஸ்தா2: கடையான குணமுடையோர்
तामसा: தாமஸா: தாமஸ குணத்திலிருப்பவர்கள் अध: அத4: கீழ்நோக்கி
गच्छन्ति க3ச்ச2ந்தி செல்லுகின்றனர்.
சத்வகுணத்திலுள்ளவர்கள் மேல்நோக்கிச் செல்லுகின்றனர்; ரஜோகுணத்திலுள்ளவர்கள் இடையில் நிற்கின்றனர்; கடையான குணமாகிய தமோகுணத்திலிருப்போர் கீழிறங்குகின்றனர்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
சத்வ குணத்தில் நிற்போர் மேலேறுகிறார்கள். ரஜோ குணமுடையோர் இடையே நிற்கின்றார்கள். தாமஸர் மிகவும் இழிய குணங்களும் செயல்களுமுடையோராய்க் கீழே செல்வர்.
விளக்கம்:
இதுவரை செய்யப்பட்ட குண விசாரத்திற்கானப் பொதுவான முடிவுரையாக இந்த சுலோகம் அமைகிறது.
=> சத்வகுணம்:
‘ஸத்த்வஸ்தா2:’ எனில் செய்யவேண்டியதைச் செய்து, செய்யக்கூடாததைத் தவிர்த்து, சத்வகுணப் பிரதானமான வாழ்க்கையை வாழ்பவர்கள், சத்வத்தில் நிலைபெற்றவர்கள் ஆவர். அப்படிப்பட்டவர்கள், மரணத்திற்குப் பிறகு அதிக மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய உயர்ந்த லோகங்களில் பிறக்கிறார்கள். மானுடப் பிறப்பெய்தும்போதும் மனவளர்ச்சி மற்றும் பக்குவத்தின் அடிப்படையில் உயர்ந்த இடத்திலும், ஆன்மீக வளர்ச்சிக்கேற்ற மேலான சூழ்நிலையிலும் பிறக்கிறார்கள். இந்த பிறவியில், இங்கு வாழும் இந்த வாழ்க்கையிலும் விவேகம் மற்றும் வைராக்கியம் வாய்க்கப்பெற்று ஒப்பீட்டளவில் அதிக மகிழ்ச்சியை அனுபவிப்பவர்களாகவே இருக்கிறார்கள். இந்த சுலோகத்தில் குறிப்பிடப்படுவது அவர்களின் பிற்கால வாழ்க்கையைத்தான் என்றபோதிலும் அனைத்து நிலைகளிலும் இந்த மேன்மை பொருந்தி வருவதாகவே இருக்கிறது.
=> ரஜோகுணம்:
‘ராஜஸா:’, ரஜோகுணம் நிறைந்துள்ளவர்கள் கர்மங்கள் பல செய்கிறார்கள் எனினும் விவேகமின்மையின் காரணமாக அவர்கள் முன்னேற்றமடைவதில்லை. பிற்போக்கிலும் செல்வதில்லை. தங்களுக்கு விவேகம் வரும் வரையில் அவர்கள் நெடுங்காலம் வினையாற்றுவதிலேயே கருத்துடையவர்களாக இருக்கின்றனர். மரணத்திற்குப் பிறகான வாழ்க்கையாக, மனிதர்களின் உலகம் அல்லது அதற்கு இணையான சூழ்நிலையில் பிறக்கிறார்கள். மனமுதிர்ச்சி மற்றும் நற்பண்புகளின் அடிப்படையிலும் அவர்கள் மத்தியிலேயே நிற்கிறார்கள்.
=> தமோகுணம்:
ஆனால் தமோ குணத்தில் ஆழ்ந்தவர்களோ படிப்படியாகக் கீழ்மையையே அடைகிறார்கள். அவர்களுக்கு இங்கு கடையான குணமுடையோர் என்கிற அடைமொழி கொடுக்கப்படுகிறது — ஜக4ந்ய கு3ண வ்ருத்திஸ்தா2:. யாருடைய வாழ்க்கை தமஸால் கட்டுப்படுத்தப்பட்டதோ அவர்கள் மிகவும் தாழ்ந்த, விரும்பத்தகாத நிலைக்குச் செல்கிறார்கள். கவனக்குறைவு, சோம்பல், தூக்கம், அறியாமை, அலட்சியம், செயலின்மை போன்றவை தமோகுணத்தின் வெளிப்பாடு என ஏற்கனவே பார்த்தோம். இப்படிப்பட்டதான வாழ்க்கையை வாழ்பவர்கள் விலங்குகளைப் போலத் தாழ்ந்த பிறவிகளுக்குச் செல்கிறார்கள்.
=> குணாதீதம்:
இந்த சுலோகத்தில் சத்வகுணம் புகழப்பட்டதைப்போல தென்பட்டாலும், ரஜஸ் மற்றும் தமஸை போல சத்வமும் ஒரு பந்தம் என்பதையும் நாம் மனதில் கொள்ளவேண்டும். இந்த குணங்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவது எப்படி?
முந்தைய அத்தியாயத்தில், புருஷ மற்றும் பிரக்ருதியைப் பற்றி விவாதிக்கும் போது, பிறப்பிற்குக் காரணம் குணங்களுடனான தொடர்பு எனக் கூறப்பட்டது. இந்த தொடர்புக்கு காரணம் தவறான அறிவு, மித்யா-ஞானம் ஆகும். இதனால், ஆனந்த சொரூபமான ஆத்மா ‘நான்’ என்பதற்கு பதிலாக, மூன்று குணங்களின் வெளிப்பாடுகளாக உள்ள பலவிதமான அனுபவங்களை ‘நான்’ என எடுத்துக் கொண்டு, ‘நான் மகிழ்கிறேன், துக்கமாக இருக்கிறேன், கோபமாக இருக்கிறேன்’ என எண்ணப்படுகிறது. எதனுடனும் தொடர்பில்லாத(அஸங்க) ஆத்மா, தவறான புரிதலின் காரணமாக, குணங்களின் அனைத்து மாற்றங்களுடனும் தொடர்புடையதாகத் தெரிகிறது.
இவ்விதம் தவறான அறிவின் காரணமாக இந்த குணங்கள் எவ்வாறு ஒருவனுடன் பிணைக்கப்படுகின்றன என்பதை விரிவாக கிருஷ்ணர் விளக்கினார். இப்போது இந்த அடிமைத்தனத்திலிருந்து ஒருவன் தன்னை எவ்வாறு விடுவித்துக்கொள்வது என்பது குறித்து தனது கவனத்தைத் திருப்புகிறார். அதுவே இந்த அத்தியாயத்தின் நோக்கம் ஆகும். குணங்களின் பல்வேறு வகையான வெளிப்பாடுகளைப் புரிந்துகொள்வதும், கீழான குணமான தமஸை அகற்றி சத்வகுணத்தை மேம்படுத்த முயற்சிப்பதும் பயனுள்ளதாக இருந்தாலும், அது மட்டும் போதுமானதா? சத்வகுணத்தில் பிணைக்கப்பட்ட ஒருவனை அப்படியே விட்டுவிடுவதென்பது சாஸ்திரத்தின் நோக்கமல்ல. அதிலிருந்தும் விடுபடுவதற்கான வழியை அவன் தெரிந்திருக்க வேண்டும். இது அடுத்த சுலோகத்தில் எடுத்துரைக்கப்படுகிறது.
---------------------------------------------------------------------------------------------
||14.19|| சத்வத்திலிருந்து மேலோங்கி வர உபாயம்:
नान्यं गुणेभ्य: कर्तारं यदा द्रष्टानुपश्यति ।
गुणेभ्यश्च परं वेत्ति मद्भावं सोऽधिगच्छति ।। १९ ।।
நாந்யம் கு3ணேப்4ய: கர்தாரம் யதா3 த்3ரஷ்டாநுபச்1யதி ।
கு3ணேப்4யச்1ச பரம் வேத்தி மத்3பா4வம் ஸோऽதி4க3ச்ச2தி ।। 19 ।।
यदा யதா3 எப்பொழுது द्रष्टा த்3ரஷ்டா காண்போன்(ஜீவன்)
गुणेभ्य: கு3ணேப்4ய: குணங்களுக்கு अन्यं कर्तारं அந்யம் கர்தாரம் அன்னியமான கர்த்தாவை
न अनुपश्यति ந அநுபச்1யதி பார்ப்பதில்லையோ गुणेभ्य: च परं கு3ணேப்4ய ச பரம் பரம் குணங்களுக்கு மேலானதையும் वेत्ति வேத்தி அறிகிறானோ (तदा ததா3 அப்பொழுது)
स: ஸ: அவன் मद्भावं மத்3பா4வம் என் சொரூபத்தை
अधिगच्छति அதி4க3ச்ச2தி அடைகிறான்.
ஜீவன் எப்பொழுது குணங்களுக்கு வேறான கர்த்தாவைக் காண்பதில்லையோ, குணங்களுக்கு மேலாகப் பரம்பொருளைக் காண்கிறானோ, அப்பொழுது அவன் ப்ரம்ம சொரூபத்தை அடைகிறான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
குணங்களைத் தவிர வேறு கர்த்தா இல்லையென்பதைக் கண்டு குணங்களுக்கு மேலுள்ள பொருளையும் ஜீவன் அறிவானாயின் என் இயல்பை அறிவான்.
விளக்கம்:
சத்வத்தை கடந்து செல்லும் உபாயத்தை பகவான் இந்த சுலோகத்தில் அளிக்கிறார்.
=> எதைப் பார்க்கிறான்?
‘பச்1யதி’ எனில் ‘பார்க்கிறான்’. அதன் முன்னொட்டான ‘அநு’ எனும் சொல், அவன் தெளிவாகப் பார்க்கிறான் என்பதைக் குறிக்கின்றது, அதாவது சாஸ்திரத்திற்கு ஏற்பவும் குரு கற்பித்தபடியும் தெளிவாகப் பார்த்தலைக் குறிக்கின்றது. அப்படி அவன் எதைப் பார்க்கிறான்? குணத்திற்கு வேறாக ஒரு கர்த்தா இல்லை — கு3ணேப்4ய: அந்யம் கர்தாரம் ந அநுபச்1யதி, என்பதை பார்க்கிறான். மூன்று குணங்களும் பிரக்ருதியான மாயையின் சொரூபமாதலால் இக்குணங்களுக்குப் புறம்பாகக் கர்மத்துக்கு கர்த்தா என யாருமில்லை. அதாவது, ஆத்மா கர்த்தா அல்ல, முக்குணங்களே கர்த்தாக்களாகின்றன.
மூன்று குணங்களாகவே மாயை உள்ளது. இது பரிணாமத்தை அடைவது அல்லது வெளித்தோற்றத்திற்கு வருவதை நாம் சிருஷ்டி என்றழைக்கிறோம். மாயை மாறாத ப்ரம்மத்தை சார்ந்துள்ளது. இந்த சிருஷ்டியில் ஜடம், செயல் மற்றும் அறிவு ஆகியவற்றை நாம் அனுபவிக்கின்றோம். காரியமான இந்த சிருஷ்டியில் மூன்று குணங்களைப் பார்க்கமுடிவதால் இதனுடைய மூலகாரணமாகவுள்ள மாயையும் முக்குணமுடையதாகத் தான் இருக்கவேண்டும். இனி, மாயையின் மாற்றத்தை இரண்டாகப் பிரிக்கலாம்:
(1) மனமும் உடலும் (2) விஷயங்கள்(உலகம்).
(1) மற்றும் (2), இரண்டும் மாயைதான் என்றபோதிலும் மனமானது அதனுடைய நுண்ணியதன்மையின் காரணமாக ப்ரம்மத்தின் சைத்தன்யத்தைப் பிரதிபலிக்கின்றது. இதனால் மனதுக்கும் உடலுக்கும் உணர்வு வருவதனால், அனுபவிப்பவன்(மனம்&உடல்) மற்றும் அனுபவிக்கப்படும் பொருள்(உலகம்) என்கிற பிளவு வந்துவிடுகிறது. எனவே உண்மையில் மனதின் ரூபத்தில் உள்ள மாயையானது, உலகின் ரூபத்தில் உள்ள மாயையுடன் விவகாரம் செய்துகொண்டுள்ளது. குணம் குணத்துடன் விவகாரம் செய்கின்றது. இதை பகவான் 3.28-ல், குணங்கள் குணங்களிடத்தில் இருக்கின்றது — கு3ணா: கு3ணேஷு வர்தந்தே, எனக் கூறினார். எனவே உண்மையில் இங்கு எந்தப் பிளவும் இல்லை. உதாரணமாக கனவுலகத்தை எடுத்துக் கொள்ளலாம். கனவுலகமும் கனவிலுள்ள ‘நான்’ என்பவனும் உண்மையில் மனதினுடைய எண்ணங்களே ஆகும். ‘கனவிலுள்ள சமையலறை’ எனும் எண்ணத்துடன், ‘கனவிலுள்ள நான்’ எனும் எண்ணம் ‘சமையல்’ எனும் விவகாரத்தைச் செய்கிறது. பிளவைப் போலத் தோன்றிக்கொண்டிருக்கும் இவைகளுக்கு, விழித்திருக்கும் ‘நான்’ ஆதாரமாக ஆகிறான். இனி, ஈஷ்வரனுடைய கனவிற்கான மனம் இந்த மாயை. இந்த மாயையே அனுபவிப்பவனாகவும்(எழுவாய்) மற்றும் அனுபவிக்கப்படும் பொருளாகவும்(செயப்படுபொருள்) பிரிந்து தங்களுக்குள் விவகாரத்தைச் செய்து கொண்டுள்ளது. எனவே குணம் தான் கர்த்தா மற்றும் போக்தா. குணத்திற்கு வேறாக ஒரு கர்த்தா இல்லை. இதில் ‘நான்’ என்பவன் இந்த குணத்திற்கு வேறானவன்; மாயைக்கு வேறானவன்.
=> எப்போது பார்க்கிறான்?
‘இந்த உண்மையை எப்போது ஒருவன் தெளிவாகப் பார்க்கிறானோ’ என்கிறார் பகவான். இங்கு ‘எப்போது’ என்பதைக் குறிக்கும் ‘யதா3’ எனும் சொல், ஒரு குறிப்பிட்ட நிகழ்வு நடக்கின்ற நேரத்தைக் குறிக்கவில்லை. ‘ஞானமுள்ளவனாகப் பார்ப்பவன்’, அதாவது ஆத்மஞானி என இதை சங்கரர் தெளிவுபடுத்துகிறார். ‘குரு மற்றும் சாஸ்திரத்தின் உதவியுடன் ஆத்ம-சாதனையை முடித்து, அந்த அறிவுடன் உண்மையைப் பார்க்கின்ற ஆத்மஞானி எப்போது இவ்விதம் பார்க்கிறானோ’ என்பது பொருள். எந்த செயலையும் செய்யாத அகர்த்தாவான ஆத்மா நான் எனும் தனதியல்பை முழுமையாக அறிந்தவன், குணங்களைத் தவிர வேறான கர்த்தா இல்லை என்பதை தெளிவாகப் பார்க்கிறான். இப்படிப்பட்டவனையே ‘தத்த்வவித்’, அதாவது தத்துவத்தை அறிந்தவன் என சுலோகம் 3.28-ல் பகவான் கூறியிருந்தார்.
இங்கு ‘த்3ரஷ்டா’ என்பவன் தனது சுயத்தின் இயல்பை மிகவும் தெளிவாக அறிந்தவன் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டிய முக்கியமான விஷயமாகும். இல்லையெனில், குணங்கள் அனைத்தையும் செய்வதாக இருந்தாலும், அவைகளுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக ஒருவன் கருதுவானாகில் அப்போதும் அவன் செயல்களால் பாதிக்கப்படப் போகிறான். உதாரணமாக, குற்றவாளியான மகனையுடைய ஒரு தந்தையானவன், தனது மகன்தான் அந்த குற்றத்தைச் செய்தான் என்று தெரிந்தபோதிலும், தன்னை அதனுடன் தொடர்புபடுத்திக் கொண்டு மிகவும் பாதிப்பிற்குள்ளாகிறான். அதுபோல சுயம் மற்றும் குணங்களின் செயல்பாடுகள் விஷயத்தில் இதுபோன்ற தவறான சிந்தனையைத் தவிர்ப்பதற்காக பகவான், ‘யதா3 கு3ணேப்4ய ச பரம் வேத்தி’ எனக் கூறுகிறார். அதாவது, தன்னை குணத்திற்கு மேலானவனாக எப்போது ஒருவன் அறிகிறானோ, அவன் குணங்களினால் பாதிக்கப்படுவதில்லை. நான் உடலிலிருந்து வேறானவனாக இருக்கிறேன் என அறிபவன், குணங்கள் செயல்பட்ட போதிலும் அவைகளின் செயல்பாடுகளால் பாதிக்கப்படுவதில்லை. எல்லாவற்றிற்கும் இடமளிக்கும் ஆகாசம், அதில் என்ன நடந்தபோதிலும் களங்கப்படுவதில்லை. அதுபோல குணங்களின் இருப்புக்கு ஆதாரமானவனாகத் தன்னை அறிபவன் அந்த குணங்களினால் பாதிப்படைவதில்லை, என்கிறார் சங்கரர். அவன் எந்தச் செயலையும் செய்யாதவனாக எப்போதும் சாக்ஷி வடிவில் இருக்கிறான்.
=> அவனடையும் பலன்:
அடுத்ததாக பகவான் இத்தகையவன் அடையும் பலனை எடுத்துரைக்கிறார். அவன் என்னுடைய சொரூபத்தை அடைகிறான் — ஸ: மத்3பா4வம் அதி4க3ச்ச2தி, என்கிறார். அதாவது ஈஷ்வர-இயல்பை, ப்ரம்ம சொரூபத்தை அடைகிறான். அனைத்திற்கும் காரணமானவனாக, அதே நேரத்தில் அனைத்தையும் கடந்தவனாக ‘நான்’ இருக்கின்றேன், எனும் பகவானின் இயல்பை அடைகிறான். இனி அவன் ஈஷ்வரனிடமிருந்து வேறானவன் அல்ல. அப்போது, ‘தத் த்வம் அஸி - நீ அதுவாகவே இருக்கிறாய்’ எனும் வாக்கியம் அவனுக்கு முழு மெய்மையாக ஆகிறது. அதை உட்கிரஹித்து தன்மயமாக ஆக்கியதன் காரணமாக, ‘எனது இருப்பினாலேயே கர்த்தா இருக்கிறது ஆனால் நான் கர்த்தா(செயல் செய்பவன்) அல்ல’ என்பதை உறுதியாக அறிந்ததன் காரணமாக, அவனால் ‘நான் அதுவாகவே இருக்கிறேன்’ என்று சொல்ல முடிகிறது. இதை தெளிவாகப் புரிந்துகொள்ளும் ஒருவன் இறைவனுடன் ஒன்றாகிறான்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
மனிதனுடைய ஹிருதயத்தில் ஈஷ்வரன் தோற்றமடைவதன் அடையாளங்கள் யாவை? அருணோதயத்தின்போது தோன்றும் பிரகாசம் சூரியனுடைய உதயத்தைத் தெரிவிக்கின்றது. அதுபோல, ஈஷ்வரன் உள்ளத்தில் உதயமாவதற்கு முன்னால், சுயநலம் கருத்தாத்தன்மை, பரிசுத்தம், சன்மார்க்கம் ஆகிய குணங்கள் உண்டாகின்றன.
---------------------------------------------------------------------------------------------