||14.9|| மூன்று குணங்களும் தொகுத்து மீண்டும் பகரப்படுகின்றன:
सत्त्वं सुखे सञ्जयति रज: कर्मणि भारत ।
ज्ञानमावृत्य तु तम: प्रमादे सञ्जयत्युत ।। ९ ।।
ஸத்த்வம் ஸுகே2 ஸஞ்ஜயதி ரஜ: கர்மணி பா4ரத ।
ஜ்ஞாநமாவ்ருத்ய து தம: ப்ரமாதே3 ஸஞ்ஜயத்யுத ।। 9 ।।
भारत பா4ரத பாரதா सत्त्वं ஸத்த்வம் சத்வகுணம் सुखे ஸுகே2 சுகத்தில்
सञ्जयति ஸஞ்ஜயதி இணைக்கிறது रज: ரஜ: ரஜோகுணம் कर्मणि கர்மணி கர்மத்திலும் उत உத மேலும் तम: तु தம: து தமோகுணமோ ज्ञानम् ஜ்ஞாநம் ஞானத்தை
आवृत्य ஆவ்ருத்ய மறைத்து प्रमादे ப்ரமாதே3 கவனமின்மையில்
सञ्जयत्यति ஸஞ்ஜயதி இணைக்கிறது.
சத்வகுணம் சுகத்தில் கட்டுகிறது, ரஜோகுணம் கர்மத்தில்; தமோகுணமோ, பாரதா, ஞானத்தை மறைத்து கவனமின்மையில் பிணைக்கிறது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
சத்வம் இன்பத்திலே பற்றுதல் விளைவிக்கிறது. பாரதா, ரஜோகுணம் செய்கையில் பற்றுறுத்துகிறது. தமோ குணம் ஞானத்தைச் சூழ்ந்து (ஜீவனை) மயக்கத்தில் பிணிக்கிறது.
விளக்கம்:
இந்த சுலோகத்தில் பகவான் மூன்று குணங்களையும் தொகுத்து, அவைகளின் பந்தப்படுத்தும் முறை(ப2ந்த4ன ப்ரகார) குறித்த தலைப்பை முடிக்கிறார்.
=> முடிவுரை:
சத்வகுணம் ஒருவனை சுகத்தைத் தேடுவதில் தூண்டுவதன் மூலமும், சுகத்தைக் கொடுப்பதன் மூலமும் பிணைக்கிறது. ரஜஸ் ஒருவனை செயலில் பந்தப்படுத்துகிறது. இந்த சுலோகத்தில் தமோகுணம் கூடுதல் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஏனெனில் இது ஒருவனின் சத்வகுணத்திலிருந்து பிறக்கும் பகுத்தறியும் திறனை மூடி இருளில் தள்ளிவிடுகிறது. இதனால் அவன் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாமல், அலட்சியமான வாழ்க்கைக்கு அவனை ஒப்புக்கொடுக்கிறான்.
ஒரு மனிதன் எதில் பற்று வைத்திருக்கிறானோ அதிலிருந்து அவனிடத்து எக்குணம் தலையெடுத்திருக்கிறது என்பது விளங்குகிறது. விதவிதமான இன்பங்களை அனுபவிக்க வேண்டுமென்று விரும்புபவனிடம் சத்வகுணம் மேலோங்கி இருக்கிறது. ஒன்றன்பின் ஒன்றாக பலவிதமான செயல்களில் ஈடுபட ஆசைப்படுபவனிடத்து ரஜோகுணம் ஓங்கியிருக்கிறது. மேகம் சூரியனை மறைப்பதைப் போல தமோகுணம் ஞானத்தை மறைக்கிறது. தனக்குள்ள கடமைகளைச் செய்யாமல் விடுவதால், தமோகுண வ்ருத்தியுடையவனுக்குக் கவலையேதும் உண்டாவதில்லை. காலத்தை வீணாகக் கழிப்பது, பொருள் விரயமாவது ஆகியவைகளைக் குறித்தும் அவன் வருந்துவதில்லை. ஜடம்போல அவன் செயலற்று கிடக்கிறான்.
ஒவ்வொரு மனிதனும் இந்த மூன்று குணங்களின் கலவைதான் எனினும், ஒரு குறிப்பிட்ட குணத்தின் வெளிப்பாடு எதனால் நடக்கிறது? ஏனெனில், மற்ற இரண்டை விட ஒன்று மேலோங்கி நிற்கிறது. இவ்வகையாக ஏதேனுமொன்றின் ஆதிக்கம் எப்போதாவதோ அல்லது அடிக்கடியோ, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நிகழலாம். அதைப்பொருத்து அவன் சாத்விகமானவனாகவோ அல்லது ராஜஸமானவனாகவோ அல்லது தாமஸமானவனாகவோ ஆகிறான். எனவே இக்குணங்களின் ஆதிக்கம் எப்படி நடைபெறுகிறது என்பதற்கான விடை அடுத்த சுலோகத்தில் வருகிறது.
---------------------------------------------------------------------------------------------
||14.10|| குணங்களின் ஆதிக்கம்:
रजस्तमश्चाभिभूय सत्त्वं भवति भारत ।
रज: सत्त्वं तमश्चैव तम: सत्त्वं रजस्तथा ।। १० ।।
ரஜஸ்தமச்1சாபி4பூ4ய ஸத்த்வம் ப4வதி பா4ரத ।
ரஜ: ஸத்த்வம் தமச்1சைவ தம: ஸத்த்வம் ரஜஸ்ததா2 ।। 10 ।।
भारत பா4ரத பாரதா सत्त्वं ஸத்த்வம் சத்வ குணமானது
रज: तम: च ரஜ: தம: ச ரஜஸையும் தமஸையும் अभिभूय அபி4பூ4ய அடக்கி
भवति ப4வதி மேலெழுகிறது रज: ரஜ: ரஜோ குணமானது
सत्त्वं तम: च एव ஸத்த்வம் தம: ச ஏவ சத்வத்தையும் தமஸையும் तथा ததா2 அங்ஙனமே
तम: தம: தமோ குணமானது सत्त्वं रज: ஸத்த்வம் ரஜ: சத்வத்தையும் ரஜஸையும் அடக்குகிறது.
சத்வம் ரஜஸையும் தமஸையும் அடக்கி மேலெழுகிறது; ரஜஸ் சத்வத்தையும் தமஸையும் ஆளுகிறது; அங்ஙனமே தமஸ் சத்வத்தையும் ரஜஸையும் அடக்குகிறது, அர்ஜுனா.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
பாரதா (சில வேளை) ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் அடக்கி சத்வம் இயல்கிறது. (சிலவேளை) சத்வத்தையும் தமோ குணத்தையும் அடக்கி ரஜோ குணம் நிற்கிறது; அங்ஙனமே சத்வத்தையும் ரஜோ குணத்தையும் அடக்கித் தமஸ் மிஞ்சுகிறது.
விளக்கம்:
இந்த சுலோகத்தில் பகவான் குணங்களின் ஆதிக்கம்(குண ஆதி3க்யம்) குறித்த விளக்கத்தை அளிக்கிறார். ‘ப4வதி’ எனும் சொல்லுக்கு சங்கரர் இருவித பொருள்கொடுக்கிறார்: உத்3ப4வதி - அது எழுகிறது; வர்த3தே - அது அதிகரிக்கிறது. அதாவது, அந்த குறிப்பிட்ட குணம் எழுகிறது அல்லது அதிகரிக்கிறது. தேகம் எடுத்துள்ள ஒவ்வொருவனிடமும் மூன்று குணங்களும் இருக்கின்றன. அவைகளுள் ஒருகுணம் முன்னணிக்கு வரும்பொழுது மற்ற இரண்டும் பின்னுக்கு போய்விடுகின்றன. குறிப்பிட்ட ஒரு குணம் ஆதிக்கம் செலுத்தும்போது அதனுடைய தன்மைகள் வெளிப்படத் தொடங்குகிறது. விழித்திருந்து அமைதியே வடிவெடுத்தவனாக மனிதன் ஆகும்போது சத்வகுணம் ஓங்கிநிற்கிறது. அப்பொழுது இன்பமும் ஞானமும் விரிவடைகின்றன. இதன் விளைவாக புலனடக்கம், மனவடக்கம், நற்பண்புகளைக் கடைபிடித்தல், மனவமைதி போன்றவை முன்னிலை வகிக்கின்றன.
ரஜோகுணம் தலையெடுக்கின்றபோது விதவிதமான கர்மத்தில் மனிதன் ஈடுபடுகிறான். ரஜஸ் ஆசைகளை உண்டாக்குவதால், அதன் விளைவாக ஒருவன் அதற்கான செயல்களில் தூண்டப்படுகிறான். தமோகுணம் ஓங்கும்போது மனிதன் கற்கவும் முடியாது, செயல் செய்யவும் முடியாது, சோம்பலுக்கும் தூக்கத்திற்கும் தன்னை ஒப்புக் கொடுக்கிறான். செய்யவேண்டியவற்றில் அக்கறையின்மையும், செய்கின்ற காரியத்தில் கவனமின்மையும் உண்டாகின்றது.
நாள்தோறும் மூன்று குணங்களும் மாறி மாறி முன்னிலைக்கு வருகின்றன. இது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது. இனி, இந்த குணங்கள் நமக்கு எவ்விதம் உதவுகின்றன? ஒரு குறிப்பிட்ட குணம் மேலோங்கி நிற்க என்ன காரணம்? என்பது குறித்து சிறிது விசாரம் செய்யலாம்.
=> இக்குணங்களின் தேவை:
* ஒருவனின் மோக்ஷத்திற்கு ஞானம் தேவை. அந்த ஞானத்தை அடைவதற்கு சத்வகுணம் தேவைப்படுகிறது.
* அடுத்ததாக, ஞானத்தை அடைவதற்கு தேவைப்படுகிற தகுதிகளான மனத்தூய்மை, மனஒருமுகப்பாடு, மனவமைதி முதலியவற்றை அடைவதற்கு, அதற்குண்டான சாதனங்களில் நாம் ஈடுபட வேண்டும். அதற்கு நமக்கு ரஜோகுணம் தேவைப்படுகிறது.
* சரியான அளவு ஓய்வு இருக்கின்றபோதே, அறிவுத் தேடலும் கர்மமும் சாத்தியப்படுகிறது. எனவே தேவையானபோது ஓய்வெடுத்து, பின் திறன்பட செயலில் ஈடுபட தமஸ் தேவைப்படுகிறது.
தமோகுணம் என்பது மூலமாக இருப்பதால் பொதுவாக அதை நாம் தனியாக அடையத் தேவையில்லை. ரஜஸை அடைந்து மனத்தூய்மையை எய்தி, பின் சத்வத்துடன் ஞான விசாரத்தில் ஈடுபடுதல் வேண்டும்.
=> குணத்தை நிர்ணயிக்கும் காரணி:
நாம்தான் நமது குணத்தை தீர்மானிக்கின்றோம். எந்த நேரத்தில் எந்த குணம் மேலெழுகிறது என்பதன் காரணத்தை இரு கூறுகளாகப் பிரிக்கலாம்.
(1) அந்த குறிப்பிட்ட நேரத்திற்குமுன் நாம் என்ன செயலில் ஈடுபட்டிருந்தோமோ அந்த செயலின் விளைவாக ஒரு குணம் கீழ் தள்ளப்பட்டு, இனியொன்று மேலே வரும். உதாரணமாக, அரைவயிறு உணவானது சத்வத்தையும், சரியான அளவு உணவு ரஜஸையும் மேலெழுப்பும். வயிறு புடைக்குமளவு உண்ணப்படும்போது அது தமஸை மேலெழுப்பி உறக்கத்தையே உண்டாகும்.
(2) இரண்டாவதான காரணியாக கர்மவினை அமைகிறது. ஒருவனது கர்மவினையின் சுழற்சியை பின்வருமாறு கூறலாம். நம்முடைய குணத்தின் அடிப்படையில் நாம் ஒரு செயலைச் செய்கிறோம். அது புண்ணிய-பாபத்தை உற்பத்தி செய்கிறது. நாம் ஈட்டிய புண்ணிய-பாபத்திற்கேற்ப சுக-துக்கத்தை அனுபவிக்கும் பொருட்டு அதற்கேற்ற உடல், மனம், உலகம் மற்றும் சூழ்நிலை ஆகியவற்றை அடைகிறோம். சூழ்நிலை மற்றும் மனமானது மீண்டும் கர்மத்தில் ஈடுபடுத்துகிறது.
குணம் -> செயல் -> புண்ணிய-பாபம் -> அதற்கேற்ற உடல், மனம்(குணம்).
இவ்விதமாக குணம் கர்மத்தைக் கொடுக்கிறது. கர்மம் குணத்தைக் கொடுக்கிறது. எனவே ஒருவனது உடல்வாகு போல அவனது குணமும் சுபாவமானது; இயற்கையாக இருப்பது. ஆகவே கர்மவினைக்கும்(முன் செய்யப்பட்டவை), முயற்சிக்கும்(இப்போது செய்யப்படுபவை) ஏற்றார்போல குணம் மேலே வருகிறது.
அவரவர்களின் குணம், மனம், உடல், உலகம் அனைத்தும் அவரவர்கள் ஈட்டியது. ஆகையினால் தமோகுணத்தின் காரணமாக ஏதேனும் தவறு நடந்துவிட்டால், அதையே எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிராமல், ‘வினைப்பயன் இவ்விதம் நடந்துவிட்டது, இனிமேல் இவ்விதம் நடக்காமல் பார்த்துக் கொள்வோம்’ என்கிற மனப்பான்மையுடன் நமது முயற்சியில் நம்பிக்கை வைத்து ஞானயோகத்திற்கான பயணத்தை தொடர வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------