||14.7|| ரஜோகுணத்தின் தன்மை:
रजो रागात्मकं बिद्धि तृष्णासङ्गसमुद्भवम् ।
तन्निबध्नाति कौन्तेय कर्मसङ्गेन देहिनम् ।। ७ ।।
ரஜோ ராகா3த்மகம் வித்3தி4 த்ருஷ்ணாஸங்க3ஸமுத்3ப4வம் ।
தந்நிப3த்4நாதி கௌந்தேய கர்மஸங்கே3ந தே3ஹிநம் ।। 7 ।।
कौन्तेय கௌந்தேய குந்திமகனே रज: ரஜ: ரஜோ குணம்
रागात्मकं ராகா3த்மகம் ஆசைவடிவுடையது तृष्णा आसङ्ग समुद्भवम् த்ருஷ்ணா ஆஸங்க3 ஸமுத்3ப4வம் வேட்கையையும் பற்றுதலையும் உண்டுபண்ணுவது என்று बिद्धि வித்3தி4 அறி तत् தத் அது कर्म सङ्गेन கர்ம ஸங்கே3ந வினைப்பற்றுதலால் देहिनम् தே3ஹிநம் தேஹியை निबध्नाति நிப3த்4நாதி பந்தப்படுத்துகிறது.
குந்திமகனே, ரஜோ குணத்தை ஆசை வடிவுடையதென்றும், வேட்கையையும் பற்றுதலையும் உண்டுபண்ணுவதென்றும் அறி. வினைப்பற்றால் அது தேகியைத் பந்தப்படுத்துகிறது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
ரஜோகுணம் விருப்ப இயல்புடையது; அவாவின் சேர்க்கையால் பிறப்பது. குந்திமகனே, அது ஆத்மாவைத் தொழிற் சேர்க்கையால் கட்டுகிறது.
விளக்கம்:
இந்த சுலோகத்தில் பகவான் ரஜோகுணத்தின் தன்மையையும், அது எப்படி ஒருவனை பந்தப்படுத்துகிறது என்பதைக் குறித்தும் விளக்குகிறார்.
=> ரஜஸின் தன்மை:
ரஜஸின் தன்மை ஆசை வடிவுடையதாக உள்ளது — ரஜ: ராகா3த்மகம், என்கிறார். ரஜோகுணமானது ஆசையின் வடிவையெடுத்து முடிவில்லாத பிரவ்ருத்தியை உண்டுபண்ணுகிறது. ‘ரஜஸ்’ என்ற சொல்லின் நேரடிப் பொருள் ‘தூசி’ ஆகும். இங்கு அது இந்த குறிப்பிட்ட குணத்தை குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. சிவப்பு சாயம் வெள்ளை துணியை சிவப்பாக்குவதைப் போல, ஒன்றை நோக்கி கவர்ந்திழுக்கும் மனோபாவத்தை கொடுத்து ஆசையானது(ராக3) அந்தகரணமான மனதை சாயமிடுகிறது. ஆசையினால் பீடிக்கப்பட்ட ஒருவன் அவ்வளவு எளிதில் அதிலிருந்து விடுபட முடியாது.
இந்த ஆசை இரண்டு விஷயங்களாக வெளிப்படுகிறது என்கிறார் கிருஷ்ணர். ஒன்று ‘த்ருஷ்ணா’, வேட்கை. அடையாத பொருளின்மீது அடைய வேண்டுமென்று கொண்டுள்ள விருப்பம் அல்லது ஏக்கம் ‘த்ருஷ்ணா’ ஆகும். உலகிலுள்ள எத்தனையோ பொருட்களில் பெரும்பாலானவை நாம் கவனிக்காதவைகளாக இருக்கின்றன. ஆனால் சில விஷயங்கள் மட்டும் விரும்பத்தக்கவையாக மனதில் தோன்றி, அவற்றை நோக்கி நம்மைச் செலுத்தும். இந்த பற்று திருஷ்ணாவிலிருந்து பிறக்கிறது.
இரண்டாவது ‘ஆஸங்க3’, பிடிப்பு அல்லது அதிகப்படியான பற்று. இது நம்மால் ஏற்கனவே அடையப்பெற்ற பொருளை விட்டுப் பிரியலாகாது என்கிற மனப்பான்மை. சாதாரணமான பற்று, ச1க்தி; அதிகப்படியான பிடிப்பு, ஆச1க்தி. பிரிகின்ற நேரம் வரும்போதும், ஒருவனால் பிரிந்து செல்லமுடியாத பல விஷயங்கள் உள்ளன. அப்படி எதையாவது இழக்கும்போது அது வெற்றிடத்தை உண்டாக்கினால் அது ஆஸக்தியின் வெளிப்பாடாகும்.
உலக விஷயத்திலுள்ள ஆசை இச்சா சக்தியாக மனதிலும், கிரியா சக்தியாக உடலிலும் வெளிப்படுகிறது.
=> பந்தப்படுத்தும் முறை:
அது தேஹத்தை உடையவர்களை வினைப்பற்றால் பிணைக்கிறது — கர்ம ஸங்கே3ந நிப3த்4நாதி, என்கிறார் கிருஷ்ணர். ஆசை உறுதியாகும்போது அது செயலாக வெளிப்படும். தோற்றத்திலுள்ள இவ்வுலகப் பொருட்களில் பற்றுதலும், தோன்றாதுள்ள மறுமையில் பற்றுதலும் ரஜோகுணத்தால் ஆத்மாவுக்கு வருகின்றன. விறகுக்கட்டையானது எரிகின்ற தீயை வளர்ப்பது போன்று ரஜோகுணம் வினைப்பற்றை வளர்க்கிறது. கர்மம் செய்யாத ஆத்மாவைக் கர்த்தாவாகப் பண்ணிவைக்கிறது இந்த குணம். அதாவது அகர்த்தாவான ஆத்மாவின்மீது செயல் செய்பவன் மற்றும் பலனை அனுபவிப்பவன் எனும் தன்மை இந்த குணத்தினாலேயே ஏற்றிவைக்கப்படுகிறது. நமது ஒவ்வொரு செயலுக்கும் திருஷ்ட மற்றும் அதிருஷ்ட பலன் உண்டு. கர்மங்களைச் செய்யுமிந்த செயல்பாட்டில், சரியான செயல்கள் மட்டுமல்ல, திருஷ்ணா(வேட்கை) மற்றும் ஆஸங்கத்தின்(அதீத பற்று) காரணமாக முறையற்ற செயல்களும் செய்யப்படுகிறது. இதனால் பாபம் உண்டாகிறது. ஆசையின் அழுத்தம் கர்மங்களைத் தவிர்க்க இயலாததாக ஆக்கி, ஒருவனை கர்மத்தில் பிணைக்கிறது. கர்மத்தினால் புண்ணிய-பாபம் உண்டாகி, அது மேலும் பிறவி அமைய காரணமாகிறது. பிறப்பினால் மீண்டும் கர்மம், கர்மத்தினால் மீண்டும் பிறப்பு எனும் இந்த சுழற்சி தொடர்கிறது. இவ்வாறு ரஜோகுணமானது தேகத்தை உடைய ஜீவாத்மாவை செயலில் பிணைத்து பந்தப்படுத்துகிறது.
ரஜஸின் விளைவு விக்ஷேபத்தை உண்டுபண்ணுகிறது; தேவையற்ற எண்ணங்களின் தாக்கம் மற்றும் பொறுமையின்மையைத் தருகிறது. கர்மேந்திரியங்களில் அபிமானத்தை உண்டாக்கி மனோமய மற்றும் பிராணமய கோஷத்தில் நம்மை பிணைக்கிறது.
---------------------------------------------------------------------------------------------
||14.8|| தமோகுணத்தின் தன்மை:
तमस्तवज्ञानजं विद्धि मोहनं सर्वदेहिनाम् ।
प्रमादालस्य निद्राभिस्तन्निबध्नाति भारत ।। ८ ।।
தமஸ்த்வஜ்ஞாநஜம் வித்3தி4 மோஹநம் ஸர்வதே3ஹிநாம் ।
ப்ரமாதா3லஸ்யநித்3ராபி4ஸ்தந்நிப3த்4நாதி பா4ரத ।। 8 ।।
भारत பா4ரத பரதகுலத்துதித்தவனே तम: तु தம: து தமோகுணமோ
अज्ञानजं அஜ்ஞாநஜம் அக்ஞானத்தில் பிறந்து
सर्वदेहिनाम् ஸர்வதே3ஹிநாம் எல்லா தேஹிகளுக்கும்
मोहनं மோஹநம் மயக்கத்தை உண்டுபண்ணுவது विद्धि வித்3தி4 அறி तत् தத் அது
प्रमाद आलस्य निद्राभि: ப்ரமாத ஆலஸ்ய நித்3ராபி4: அசட்டை, சோம்பல், உறக்கம் இவற்றால் तन्निबध्नाति நிப3த்4நாதி பந்தப்படுத்துகிறது.
பாரதா, தமோகுணமோ அக்ஞானத்தில் பிறந்ததென்றும், உயிர்களையெல்லாம் மயக்குவதென்றும் அறி. அது கவனமின்மை, சோம்பல், உறக்கம் இவற்றால் கட்டுகிறது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
தமோகுணம் அஞ்ஞானத்தில் பிறப்பதென்றுணர். இதுவே எல்லா ஜீவர்களையும் மயங்கச்செய்வது. தவறுதலாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும் அது கட்டுப்படுத்துகிறது. பாரதா!
விளக்கம்:
இந்த சுலோகத்தில் பகவான் தமோகுணத்தின் தன்மையையும், அது எப்படி ஒருவனை பந்தப்படுத்துகிறது என்பதைக் குறித்தும் விளக்குகிறார்.
=> தமஸின் தன்மை:
தமோகுணமோ அக்ஞானத்திலிருந்து பிறந்தது — அஜ்ஞாநஜம், என்கிறார் பகவான். சத்வம் மற்றும் ரஜஸ் உட்பட அனைத்தும் அக்ஞானத்திலிருந்துதான் பிறக்கிறது எனினும், இங்கு ஏன் குறிப்பாக தமஸ் என்று சொல்ல வேண்டும்? இங்கு அக்ஞானம் என்பது மாயையின் ஆவரண சக்தியைக் குறிக்கிறது. மாயைக்கு, (1) ஆவரண சக்தி மற்றும் (2) விக்ஷேப சக்தி எனும் இரு சக்திகள் உள்ளன. ஆவரணம் எனில் மறைத்தல்; விக்ஷேபம் எனில் படைத்தல் அல்லது தோற்றிவைத்தல் ஆகும். உதாரணமாக, இருக்கின்ற கயிறு மறைந்து(ஆவரணம்) இல்லாத பாம்பு தோன்றுவது(விக்ஷேபம்). தமஸ் என்பது மாயையின் ஆவரண சக்தியின் அம்சம் ஆகும்.
இது எல்லா ஜீவர்களுக்கும் மோஹத்தை உண்டாக்குகிறது — மோஹநம் ஸர்வதே3ஹிநாம். ‘மோஹம்’ எனில் மயக்கம், குழப்பம், தவறான அறிவு. மூன்று விஷயத்தில் இது நமக்கு குழப்பத்தை உண்டாக்குகிறது.
(i) சாதன - சாத்யத்தில், எது இலக்கு மற்றும் அந்த இலக்கை அடைவதற்கான சரியான வழி எது?
(ii) தர்ம - அதர்மத்தில், எது தர்மத்திற்கு உட்பட்ட செயல்? எது அதர்மமான செயல்? எது சரி, எது தவறு?
(iii) சத்ய - மித்யா, எது உண்மையில் இருப்பது? எது பொய்யாகத் தெரிவது?
இவ்விஷயங்களில் தமோகுணம் குழப்பத்தை அளிப்பதால், அது விபரீதமான ஞானத்தை உண்டுபண்ணுகிறது. ஒரு விஷயத்திற்கு எவ்வளவு மதிப்புள்ளதோ அதற்குமேல் அவ்விஷயத்தை மதித்தல் என்பது மோஹத்தின் வெளிப்பாடாகும். தமஸ் ஆதிக்கம் செலுத்தும் ஒருவனால் தனது புத்தியை சரியாகப் பயன்படுத்த முடிவதில்லை. இதன் காரணமாக மோஹம் உண்டாகி, ஒன்று என்னவாக இருக்கிறதோ அது அப்படியே புலப்படாமல் அதிலிருந்து வேறுபட்டதான ஒன்று அவனுக்குத் தெரிகிறது. இதனால் எது சரி, எது தவறு என்கிற உணர்வில்லாதுபோய், தவறான விஷயங்களும் சரியானதாக இருப்பதைப் போன்றே தெரிகிறது. இது பண்புகள் மற்றும் முன்னுரிமைகளில் குழப்பத்தை உண்டாக்கி அவற்றை சிதைத்துவிடுகிறது. புரிந்து கொள்ளாமை அல்லது தவறான புரிதல் தமஸின் வெளிப்பாடாகும். மற்றவர்கள் நம்மை தவறாகப் புரிந்து கொள்ளும்போது, அவர்களுக்கு அங்கு தமோகுணமானது வேலை செய்துள்ளது என நாம் புரிந்துகொண்டால், நமக்கு சத்வகுணம் வேலை செய்துள்ளது என்று அர்த்தம்.
=> பந்தப்படுத்தும் முறை:
தமஸ் மூன்று விதத்தில் வெளிப்பட்டு ஒருவனைப் பந்தப்படுத்துகிறது.
(1) ‘ப்ரமாத’ என்பது கவனமின்மை, அசட்டை, செய்யத் தெரிந்ததைக்கூட செய்ய இயலாத தன்மையைக் குறிக்கிறது. இது, முயற்சியுடன் செய்யவேண்டிய விஷயத்தில் மறதியாகவும் மற்றும் செய்யாததன் விளைவை உணராத மனமாக, அதாவது பொறுப்புணர்வில்லாத தன்மையாகவும் வெளிப்படுகிறது. இது சத்வகுணத்திற்கு எதிரி ஆகும்.
(2) ‘ஆலஸ்ய’ எனில் சோம்பல் ஆகும். ஆசையானது ஒருவனை செயல்படத் தூண்டுகிறது, ஆனால் இந்த சோம்பல் அவனை எதையும் செய்யவிடாமல் தடுக்கிறது. சில நேரங்களில் இது செய்யவேண்டிய விஷயத்தில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவதால் அது உற்சாகமின்மையாக, சோம்பலாக வெளிப்படுகிறது. இது ரஜஸின் எதிரி ஆகும்.
(3) ‘நித்3ரா’ எனில் உறக்கம். தமோகுணத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒருவன் அதிகமாக உறங்குவான். செய்யவேண்டியதைச் செய்யாமல் தூங்கிக் கிடக்கத் தோன்றும் இந்த மந்தநிலையை சமாளிக்க, அவன் குறுக்குவழியைத் தேடுகிறான். இதனால் அனைத்து வகையான தவறான செயல்களும் தவிர்க்க முடியாதவையாக ஆகிவிடுகின்றன.
இவ்வகையான வெளிப்பாடுகளால் தமஸ் ஒருவனை பிணைக்கிறது. சத்வகுணத்தைக் கெடுப்பது ரஜோகுணம். தமோகுணமோ சத்வம், ரஜஸ் ஆகிய இரண்டையும் கெடுக்கிறது. அதனால் அறிவற்று, உணர்ச்சியற்று, செயலற்று மனிதன் ஜடம்போல் ஆகிவிடுகிறான்.
---------------------------------------------------------------------------------------------