||14.3|| பிறவிக்கு மூலக்காரணம்:
मम योनिर्महद्ब्रह्म तस्मिन्गर्भं दधाम्यहम् ।
संभव: सर्वभूतानां ततो भवति भारत ।। ३ ।।
மம யோநிர்மஹத்3ப்3ரஹ்ம தஸ்மிந்க3ர்ப4ம் த3தா4ம்யஹம் ।
ஸம்ப4வ: ஸர்வபூ4தாநாம் ததோ ப4வதி பா4ரத ।। 3 ।।
भारत பா4ரத பரதகுலத்தில் உதித்தவனே महत् ब्रह्म மஹத் ப்3ரஹ்ம பெரிய பிரக்ருதி
मम योनि: மம யோநி: எனது கர்ப்பாசயம்(கருப்பை) तस्मिन् தஸ்மிந் அதில்
अहम् அஹம் நான் गर्भं க3ர்ப4ம் கர்ப்பத்தை दधामि த3தா4மி வைக்கிறேன்
तत: தத: அதிலிருந்து सर्वभूतानां ஸர்வபூ4தாநாம் எல்லா உயிர்களின்
संभव: ஸம்ப4வ: உற்பத்தி भवति ப4வதி உண்டாகிறது.
பாரதா, பெரிய பிரக்ருதி(மாயை) எனது கருப்பை. அதில் நான் கர்ப்பத்தை வைக்கிறேன். அதிலிருந்து உயிர்களெல்லாம் உற்பத்தியாகின்றன.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
பெரிய பரப்பிரம்மமே எனக்காதாரம்; அதில் நான் கருத்தரிக்கிறேன். பாரதா, எல்லா உயிர்களும் அதிலேதான் பிறக்கின்றன.
விளக்கம்:
=> இரு காரணங்கள்:
பிறவி எப்படி உண்டாகிறது? அதற்கான மூலக்காரணம் எது? என்பதற்கு விடையாக இந்த சுலோகம் வருகிறது. இங்கு கிருஷ்ணர் மனிதர்களான நம் மொழியில், அதாவது நாம் எவ்விதத்தில் வெளிப்படுத்துவோமோ அந்த முறையில் இந்த சிருஷ்டியின் தோற்றத்தை விளக்கிக் காட்டுகிறார். ஒரு குழந்தை பிறக்க தாயும் தந்தையும் தேவை. அதேபோல, இந்த முழு பிரபஞ்சத்தின் உருவாக்கத்திலும் ஒரு அறிவார்ந்த காரணமும்(நிமித்த காரணம்), ஒரு பொருள்காரணமும்(உபாதான காரணம்) இருக்கின்றது. இந்த பொருள்காரணத்தையே நாம் பிரக்ருதி அல்லது மாயை என அழைக்கிறோம். குழந்தை தாயிடமிருந்து பிறப்பது போல, இந்த சிருஷ்டி பிரக்ருதி எனும் பொருள்காரணத்திலிருந்து உருவாகிறது. மேலும் தந்தை இல்லாமல் தாய் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடியாது, அதுபோல ஜடமான பொருள்காரணத்துக்கு பிரக்ஞை எனும் அறிவார்ந்த காரணம் தேவைப்படுகிறது. ஆகவே, ஒரு குழந்தையைப் போலவே இந்த சிருஷ்டிக்கும், இரண்டு காரணங்கள் அவசியமாகிறது.
=> கருப்பை:
‘யோநி’ எனில் எதிலிருந்து பிறப்பு உண்டாகிறதோ அது; அதாவது கருப்பை அல்லது கர்ப்பப்பையைக் குறிக்கிறது. இந்த சுலோகத்தில் அது பிரக்ருதியைக் குறிக்கிறது. மேலும் இங்கு பகவான் யோநியைக் குறிப்பிடும்போது ‘எனது கருப்பை_மம யோநி’ என்கிறார். இதன் அர்த்தம் என்னுடைய கருப்பையாக அல்லது எனது பொருள்காரணமாக பிரக்ருதி உள்ளது என்பதல்ல; பிரக்ருதியெனும் இந்த பொருள்காரணம் என்னைச் சார்ந்ததாக உள்ளது எனப் புரிந்துகொள்ளவேண்டும். மாயையாகிய இந்த கருப்பை பரமேஷ்வரனிடமிருந்து பிரிக்கப்படாதது, ஏனெனில் மாயைக்கென சுயாதீனமான இருப்பு இல்லை. அது எப்போதும் ப்ரம்மத்தைச் சார்ந்தே உள்ளது. இந்த சுலோகத்தில் ‘யோநி’ எனும் சொல்லுக்கு இரு அடைமொழிகள் கொடுக்கப்படுகின்றன:
(1) மஹத் — இச்சொல்லின் நேரடிப் பொருள் ‘பெரிய’ என்பதாகும். காரியமாகப் பரிணமித்துக் கொண்டுள்ள அனைத்துமாய் மற்றும் அவைகளுக்கு அப்பால் இன்னும் தோன்றா நிலையிலும் அது இருப்பதால் ‘மஹத்’. வெளிவந்துள்ள அனைத்துக்கும் மூலக்காரணமாக இருப்பதால் ‘மஹத்’.
(2) ப்3ரஹ்ம — உண்மையில் இச்சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளது. இங்கு அது ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரம்மத்தைக் குறிக்கவில்லை. மாறாக, மாயைக் குறிக்கிறது. சொற்பிறப்பியல் ரீதியாக ‘எதன் காரணமாக அனைத்தும் வளர்ந்து நிலைத்து நிற்கிறதோ அது’ எனப் பொருள்படுகிறது. எங்கும் வியாபிக்கும் தன்மை அதனிடத்துள்ளது. எனவே ‘மஹத் ப்3ரஹ்ம’ என்பது மாயையைக் குறிக்கிறது.
=>கருவூட்டுதல்:
இந்த கருப்பையில், ‘நான் கருவூட்டுகிறேன் — அஹம் க3ர்ப4ம் த3தா4மி’ என்கிறார். நான் விதையை விதைக்கிறேன் என்கிறார். பூமியில் விதையை நடுகிறோம். பூமி யோனியாயிருக்கிறது. விதை கர்ப்பமாகப் பரிணமிக்கிறது. சிசு உண்டாவதில் பெண்பால் பிரக்ருதி தத்துவமாகவும் ஆண்பால் புருஷ தத்துவமாகவும் காரியப்படுகிறார்கள். அதுபோல, மூலப்பிரக்ருதியாக மாயை எனும் யோனியில் ஆத்ம சைத்தன்யம் எனும் கர்ப்பம் வைக்கப்படுகிறது. ஜடமான பிரக்ருதிக்கு ‘சித்’-தின் பிரதிபிம்பமாக உணர்வையும் இருப்பையும் வழங்குவதன்மூலம் பகவான் அதற்கு உருவாக்கும் திறனைக் கொடுக்கிறார். இதனால் மாயை, ஜகத்-காரணமாக ஆகிறது.
மாயை என்பது மித்யாவாக இருப்பதினால், அது முழுக்க முழுக்க ஸத்யம்-ஞானம்-அநந்தம்-ப்ரம்மமான பிரக்ஞையைச் சார்ந்திருக்கிறது. எனவேதான் பகவான் இந்த மாயையில் நான் கர்ப்பத்தை வைக்கிறேன் என்கிறார். ஆரம்பத்தில், சிருஷ்டி தொடங்குவதற்கு இதுபோன்ற ஏதாவது ஒன்று அவசியமாகிறது. இது வேறு சில சுருதிகளிலும் வெவ்வேறு விதமாக வெளிப்படுத்தப்படுகிறது. தைத்திரீய உபநிஷத்தில், ‘அவர் விரும்பினார் - ஸோ’காமயத’ என்றும், சாந்தோக்ய உபநிஷத்தில், ‘அது பார்த்தது - தத் ஐக்ஷத’ என்றும் கூறப்படுகிறது. இதில் விரும்புதல் அல்லது பார்த்தல் என்பது இச்சுலோகத்தில் சொல்லப்பட்ட கருவூட்டுதலைக் குறிக்கிறது. அது நிகழும்போது, மாயையானது இந்த உலகமாக மாறத் தேவையான அனைத்து மாற்றங்களுக்கும் உள்ளாக முடியும்.
அந்த மூலத்திலிருந்து உயிர்களெல்லாம் உற்பத்தியாகின்றன — தத: ஸர்வபூ4தாநாம் ஸம்ப4வ: ப4வதி, என்கிறார். அனைத்து ஸ்தூல சரீரங்களும், எல்லா உலகங்களும் அதனிடமிருந்து மட்டுமே உருவாகின்றன. எனவே முழு உலகமும் இப்போது பரமேஷ்வரனின் பிரக்ருதியான இந்த மாயையைத் தவிர வேறொன்றும் இல்லை. எனில், அது பரமேஷ்வரனிடமிருந்து வேறானதா? இல்லை, பரமேஷ்வரனின் ஆற்றலாக மாயா-சக்தி இருப்பதால் இந்த முழு சிருஷ்டியும் பரமேஷ்வரனாக ஆகிறது. ப்ரம்மத்தின் சித் இந்த சிருஷ்டியின் அறிவார்ந்த காரணம்(நிமித்த காரணம்) மற்றும் ஈஷ்வரனின் சக்தியாக இருக்கும் மாயை இதன் உபாதான காரணம், எனவே தந்தை பரமேஷ்வரன் மற்றும் தாய் மாயை.
அடுத்த சுலோகத்தில் தந்தை அம்சம் இன்னும் நன்கு தெளிவுபடுத்தப்படுகிறது.
---------------------------------------------------------------------------------------------
||14.4|| ‘தந்தை’ அம்சத்தை மேலும் விளக்குகிறார்:
सर्वयोनिषु कौन्तेय मूर्तय: संभवन्ति या: ।
तासां ब्रह्म महद्योनिरहं बीजप्रद: पिता ।। ४ ।।
ஸர்வயோநிஷு கௌந்தேய மூர்தய: ஸம்ப4வந்தி யா: ।
தாஸாம் ப்3ரஹ்ம மஹத்3யோநிரஹம் பீ3ஜப்ரத3: பிதா ।। 4 ।।
कौन्तेय கௌந்தேய குந்திபுத்திரா सर्व योनिषु ஸர்வயோநிஷு எல்லா கருப்பைகளிலிருந்தும் या: मूर्तय: யா: மூர்தய: எந்த வடிவங்கள் संभवन्ति ஸம்ப4வந்தி தோன்றுகின்றனவோ
तासां தாஸாம் அவைகளுக்கு
ब्रह्म महद्योनि: ப்3ரஹ்ம மஹத்3யோநி: பெரிய பிரக்ருதி பிறப்பிடமாகிறாள்
अहं அஹம் நான் बीजप्रद: பீ3ஜப்ரத3: விதையைக் கொடுக்கின்ற पिता பிதா தந்தை.
குந்திபுத்திரா, எல்லா கருப்பைகளிலிருந்தும் பிறக்கின்ற வடிவங்களுக்குப் பெரிய பிரக்ருதி தாயாகின்றாள். விதையைக் கொடுக்கின்ற தந்தை நான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
எல்லாக் கருக்களிலும் பிறக்கும் வடிவங்களனைத்திற்கும் பிரம்மமே பெரிய காரணம். நான் விதை தரும் பிதா.
விளக்கம்:
கருப்பைகள் அல்லது யோனிகள் கணக்கற்றவை. தேவர்களாக, மனிதர்களாக, விலங்குகளாக, பறவைகளாக, பூச்சிகளாக, புழுக்களாக, தாவரங்களாக என அவ்வவைகளுக்கேற்ற யோனிகளிடமிருந்தே உயிர்களெல்லாம் உண்டாகின்றன. ‘மூர்தய:’ எனில் வடிவங்கள், உருவங்கள் என்பது பொருள். இங்கு அது அங்கங்களுடன் கூடிய உடல் எனும் முழுக் கூட்டத்தைக் குறிக்கின்றது. மூர்சி2த அங்க அவயவ: மூர்தய: — வளர்ச்சிக்கு உட்பட்ட அங்கங்களை கொண்டவைகள். பல்வேறு கருப்பைகளில் பிறந்த இந்த அனைத்து வடிவங்களுக்கும் தாயாயிருப்பவள் மூலப்பிரக்ருதி. அனைத்திற்கும் பொருள்காரணமாகவும் எல்லாவற்றையும் நிலைநிறுத்துவதாலும் அவள் ‘பெரிய(மஹத்3) நாயகி’ என அழைக்கப்படுகிறாள்.
‘நான் விதையைக் கொடுக்கின்ற தந்தையாக உள்ளேன் — அஹம் பீ3ஜப்ரத3: பிதா’ என்கிறார். அறிவு சொரூபமாக நான் ஜடமான மாயையைக் கருவூட்டி அனைத்தையும் உருவாக்குகிறேன். மாயைக்கு தன்னளவில் இருப்பு கிடையாது, பரமாத்மாவைச் சார்ந்து மாயையானது இருப்பையும் உணர்வையும் அடைகிறது.
ஒருவனது கனவில் வருகின்ற மலை, மேகம், நீர், மனிதர்கள் உள்ளிட்ட உலகத்திற்கு மனமாகிய அவனது சம்ஸ்காரங்கள்(வ்ருத்தி) பொருள்காரணம் ஆகின்றன. அதை பிரகாசிக்கும் அவனது அறிவு சொரூபம், நிமித்த காரணம் ஆகிறது. அதுபோல, எல்லா கருப்பைகளிலிருந்தும் பிறக்கின்ற வடிவங்களுக்கு பொருள்காரணமாக இருப்பது மாயை. நிமித்த காரணமாக இருப்பது அறிவு சொரூபமான பரமாத்மா. பரமேஷ்வரன் விதையை கொடுக்கின்ற தந்தை; பிரக்ருதி தாய்.
இந்த பிரக்ருதி உயிர்களை எங்ஙனம் பந்தப்படுத்துகிறது என அடுத்த சுலோகத்தில் கூறப்படுகிறது.
---------------------------------------------------------------------------------------------