||13.28|| ஞானியின் பார்வை மற்றும் அதன் பலன்:
समं पश्यन्हि सर्वत्र समवस्थितमीश्वरम् ।
न हिनस्त्यात्मनात्मानं ततो याति परां गतिम् ।। २८ ।।
ஸமம் பச்1யந்ஹி ஸர்வத்ர ஸமவஸ்தி2தமீச்1வரம் ।
ந ஹிநஸ்த்யாத்மநாத்மாநம் ததோ யாதி பராம் க3திம் ।। 28 ।।
हि ஹி உண்மையில் सर्वत्र ஸர்வத்ர எங்கும் समं ஸமம் சமமாக
समवस्थितम् ஸமவஸ்தி2தம் நிலைத்திருப்பவனாகிய ईश्वरम् ஈச்1வரம் ஈஷ்வரனை
पश्यन् பச்1யந் பார்த்து आत्मना ஆத்மநா தன்னால் आत्मानं ஆத்மாநம் தன்னை
न हिनस्ति ந ஹிநஸ்தி அழிக்கின்றானில்லை तत: தத: அதனால்
परां गतिम् பராம் க3திம் பரகதியை याति யாதி அடைகிறான்.
எங்கும் ஒப்ப நிலைத்திருக்கும் ஈசனைக் காண்போன் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறானில்லை. அதனால் அவன் பரகதியை அடைகிறான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
எங்கும் சமமாக ஈசன் நிற்பது காண்பான், தன்னைத்தான் துன்பப்படுத்தி கொள்ளமாட்டான். அதனால் பரகதி அடைகிறான்.
விளக்கம்:
சென்ற சுலோகத்தில் விவரிக்கப்பட்ட விதத்தில் பார்ப்பவன், அதாவது ஞானி அடையும் பலனை இங்கு கூறுகிறார். அவன், எல்லா ஜீவராசிகளிடத்தும் சமமாக நிலைத்திருப்பவனாகிய ஈஷ்வரனைப் பார்க்கிறான் என ஞானியின் பார்வையை மீண்டும் குறிப்பிட்டுக் காட்டுகிறார். ‘ஸமவஸ்தி2தம்’ எனில் ‘ஸமயக்3 அவஸ்தி2தம்’, எந்த மாற்றமும் இல்லாமல்(நிர்விகாரதயா) வீற்றிருப்பவர். இந்த சிருஷ்டியின் இறைவனான ஈஷ்வரன் எந்த மாறுதலுமடையாத ஆத்மாவாக அனைத்து உயிர்களுக்குள்ளும் சமமாக அமர்ந்து கொண்டுள்ளார் எனப் பார்க்கிறான். இங்கு பார்த்தல் என்பது புலனுறுப்பின் செயலைக் குறிக்கவில்லை; மாறாக புத்தியின் செயலைக் குறிக்கின்றது. கண்கள் இருமையைத்(த்வைதம்) தான் காட்டும்; புத்தியே காரணத்தை, அதிஷ்டானத்தை, அத்வைதத்தைக் காட்டுகிறது. சென்ற சுலோகத்தில் நம்மால் பார்க்கப்பட்ட காரண திருஷ்டி என்பது புத்தியில் உண்டாவது ஆகும்.
இவ்விதம் ஈஷ்வரனிடமிருந்து பிரிக்கப்படாதவனாகத் தன்னைப் பார்ப்பவன், தன்னைத் தான் அழித்துக் கொள்வதில்லை — ஆத்மநா ஆத்மாநம் ந ஹிநஸ்தி, என்கிறார் பகவான். ‘தன்னைத் தான் அழிப்பதில்லை’ என்பதை இங்கு இருவகையாக விளக்கலாம்: (1) தற்கொலை செய்து கொள்ளமாட்டான், (2) தன்னைத் தான் துன்புறுத்திக் கொள்ளமாட்டான்.
=> (1) தற்கொலை செய்யமாட்டான்:
இங்கு தற்கொலை செய்தல் என்பது அறியாமையினால் பிறந்து பிறந்து இறத்தலைக் குறிக்கிறது. ஆத்மா நித்தியமானதாக இருந்தபோதிலும், அறியாமையினால் ஒருவன் ஆத்மாவை முழுவதுமாக ஒதுக்கி, அனாத்மாவான இந்த உடல்-மனதை தனது சுயம் என எடுத்துக்கொள்கிறான். இதனால் கர்த்தாவாக(செயல் செய்பவனாக) செயல்களில் ஈடுபட்டு புண்ணிய-பாபத்தைச் சேர்க்கிறான். மற்றும், போக்தாவாக இந்த உடல்-மனதின் இன்ப துன்பங்களை அனுபவிக்கிறான். வாழ்க்கையின் முடிவில் எதையும் சாதிக்காதவனாக அழிகிறான். புண்ணிய-பாபத்தின் காரணமாக மற்றொரு உடலைப் பெற்று, பின்னர் அதையும் இவ்விதமே அழிக்கிறான். இப்படி ஒன்றன் பின் ஒன்றாக புதிய உடல்களை எடுத்து, தனக்கு அளிக்கப்பட்ட தேர்வு சுதந்திரத்தை(free will) துஷ்பிரயோகம் செய்யும் அக்ஞானி, சம்சாரத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் வாய்ப்பை ஒவ்வொரு முறையும் இழக்கிறான். கயிற்றினால் கட்டப்பட்ட ஒருவனிடம் கத்தியைக் கொடுத்தால், தன் பிணைப்பை அறுப்பதற்குப் பதிலாக அவன் தனது தொண்டையை அறுத்துக் கொள்கிறான். அதுபோல, தன்னறிவை அடைவதற்காக கொடுக்கப்பட்ட மனிதப்பிறவியை அதற்காகப் பயன்படுத்தாமல் வீணடிப்பதால், அக்ஞானி தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான். ஒவ்வொரு தடவையும் தனது உடல் கூற்றை அழித்துக்கொண்டு புதிய பிறவியெடுக்கிறான். மாறாக, ஆத்மாவைப் பற்றிய தெளிவான பார்வையை உடைய ஞானியானவன் தன்னை தான் அழித்துக் கொள்ளவில்லை. தனக்களிக்கப்பட்ட உடலை எவ்விதம் சரியாக பயன்படுத்த வேண்டுமோ அதைச் செய்து ஈஷ்வரனுடனானத் தனது ஐக்கியத்தை உணர்ந்து கொண்டதால், அவன் மோக்ஷத்தை அடைகிறான் - பராம் க3திம் யாதி.
=> (2) துன்புறுத்திக் கொள்ளமாட்டான்:
இரண்டாவதாக, தன்னைத் தான் அழித்துக் கொள்ளமாட்டான் எனில் தனக்கே தான் துயரத்தைக் கொடுத்துக் கொள்ளமாட்டான் என்பது பொருள். உண்மையில் ஒருவனின் துயரம் என்பது அவன் அதை எப்படி பொருள்படுத்துகிறானோ அதைப்பொறுத்து அமைகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையோ அல்லது ஒரு குறிப்பிட்டச் சொல்லோ துயரத்தை தருவதாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் அதைப் பொருள்படுத்தும் மனமே அத்துயரத்திற்கு காரணமாகிறது. ஆத்மஞானத்துடன் கூடிய மனம் ஒருவனை துன்புறுத்துவதில்லை. தான் உட்பட எல்லோரிடத்திலும் ஈஷ்வரனையே பார்ப்பவன், தன்னையும் துன்புறுத்திக் கொள்ளமாட்டான்; மற்றவர்களையும் துன்புறுத்த மாட்டான். இவ்விதம் வாழ்ந்த பிறகு, அவன் மேலான கதியை(பராம் க3திம்) அடைகிறான். அதாவது சுக்ல கதி, கிருஷ்ண கதி போன்ற எந்தக் கதியும் இல்லாத ‘அக3தி’ -யை அடைகிறான். விதேஹ முக்தியை அடைகிறான், மீண்டும் பிறப்பதில்லை என்பது இதன் பொருள். சூக்ஷம சரீரமும் ஸ்தூல சரீரத்தைப் போலவே அழிந்து அந்தந்த தேவதைகளுடன் கலந்து விடுகிறது.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
குருவியின் கூண்டு அழிந்துபோனால், அக்குருவி ஆகாயத்தில் பறந்து போய்விடுகிறது. அதுபோல, சரீர உணர்ச்சியும் உலக உணர்ச்சியும் மனத்தைவிட்டு நீங்கினால் ஜீவாத்மாவானது பரமாத்மாவாகிய ஆகாயத்தில் பறந்து சென்று சமாதிநிலையில் ஐக்கியமாகிறது.
---------------------------------------------------------------------------------------------
||13.29|| கர்மம் பிரக்ருதிக்கு உரியது:
प्रकृत्यैव च कर्माणि क्रियमाणानि सर्वश: ।
य: पश्यति तथात्मानमकर्तारं स पश्यति ।। २९ ।।
ப்ரக்ருத்யைவ ச கர்மாணி க்ரியமாணாநி ஸர்வச1: ।
ய: பச்1யதி ததா2த்மாநமகர்தாரம் ஸ பச்1யதி ।। 29 ।।
प्रकृत्या एव च ப்ரக்ருத்யா ஏவ ச பிரக்ருதியினாலேயே सर्वश: ஸர்வச1: எல்லா
कर्माणि கர்மாணி கர்மங்களும் क्रियमाणानि க்ரியமாணாநி செய்யப்படுகின்றன
तथा ததா2 மேலும் आत्मानम् ஆத்மாநம் ஆத்மா अकर्तारं அகர்தாரம் செயலற்றது என்றும் य: ய: யார் पश्यति பச்1யதி பார்க்கிறானோ स: पश्यति ஸ: பச்1யதி அவனே பார்க்கிறான்.
கர்மங்களெல்லாம் பிரக்ருதியினாலேயே செய்யப்படுகின்றனவென்றும், ஆத்மா செயலற்றது என்றும் யார் பார்க்கிறானோ அவனே பார்க்கிறான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
எங்கும் தொழில்கள் இயற்கையாலேயே செய்யப்படுகின்றன. ஆதலால்தான் கர்த்தா இல்லையென்று காண்பானே காட்சியுடையான்
விளக்கம்:
இந்த உலகில் நடைபெறுகிற செயல்களுக்கும் ப்ரம்ம ஞானிக்கும் ஒருவிதமான தொடர்பும் இல்லையா என்கிற கேள்விக்கு பதிலாக இந்த சுலோகம் வருகிறது. மேலும் இந்த உலகத்தைக் குறித்த ஞானியின் பார்வை எவ்விதமுள்ளது என்பதையும் இது காட்டிக்கொடுக்கிறது.
செயல்களனைத்தும் பிரக்ருதியினாலேயே செய்யப்படுகின்றன — ப்ரக்ருத்யா ஏவ ச ஸர்வச1: கர்மாணி க்ரியமாணாநி, என ஞானி பார்க்கின்றான். ‘ஸர்வச1:’ எனில் எல்லாவித கர்மங்களும் என்பது பொருள். இது உடலினால் செய்யப்படுகின்ற கர்மம்(காயிகம்), வாக்கினால் செய்யப்படுவது(வாசிகம்) மற்றும் மனதினால் செய்யப்படும் செயல்(மானஸம்) என அனைத்தையும் குறிக்கிறது. அல்லது தன்னறமாக செய்யப்படுகிற கடமைகள்(ஸ்வதர்ம), இன்பத்திற்காகவெனச் செய்கிற செயல்கள்(காம்ய கர்ம) மற்றும் செய்யக்கூடாது என சாஸ்திரத்தினால் தடை செய்யப்பட்டுள்ள செயல்கள்(நிஷித்த கர்ம) என இவைகளனைத்தும் கூட பிரக்ருதியினாலேயே செய்யப்படுகின்றது. இனியொரு கோணத்தில், மதம் சார்ந்த வைதிக கர்மங்களும், அன்றாட வாழ்வு சார்ந்த லெளகிக கர்மங்களும் என வெவ்வேறான செயல்கள் அனைத்தும் பிரக்ருதியினாலேயே செய்யப்படுகின்றது எனவும் கூறலாம். இங்கு, ‘மட்டும்’ என்கிற பொருளில் வந்துள்ள ‘ஏவ’ எனும் சொல்லின்மூலம் எந்தக் கர்மமும் பிரக்ருதியினால் மட்டுமே செய்யப்படுகிறது, வேறு எதனாலும் அல்ல என்பதை வலியுறுத்திக் கூறுகிறார்.
=> பிரக்ருதி அல்லது மாயை:
சுவேதாஸ்வதர உபநிஷத், ‘மாயை காரணம் என்றும், அந்த மாயையைக் கையாள்பவர் ஈஷ்வரன் என்றும் அறிக - மாயாம் து ப்ரக்ருதிம் வித்3யாத் மாயிநாம் து மஹேச்1வரம்’, என்கிறது. மாற்றத்திற்கு உள்ளாகின்ற பொருள்காரணமாக(பரிணாமி-உபாதான-காரண) இருப்பது மாயை ஆகும். ஆனால் அந்த மாயைக்கு ஆதாரமாக விளங்கும் ப்ரம்மமான ஈஷ்வரனோ எந்த மாற்றத்தையும் அடையாத காரணமாக(விவர்த-உபாதான-காரண) இருக்கிறார். இந்த மாயையே பிரபஞ்ச அளவில், ஒட்டுமொத்த சூக்ஷம உடலாகவுள்ள ஹிரண்யகர்பனாகவும், ஒட்டுமொத்த ஸ்தூல உடலாகவுள்ள விராட் ஆகவும் மாறி அதற்கான செயலைச் செய்கிறது. தனிப்பட்ட அளவில் இந்த பிரக்ருதியே உடல், புலன்கள் மற்றும் மனமாக மாற்றப்பட்டு செயல்களில் ஈடுபடுகிறது. ஆனாலும் மாயையின் இந்த சக்திக்கு ஆதாரமாக இருப்பது பிரக்ஞையாக விளங்கிக் கொண்டிருக்கின்ற புருஷ-தத்துவமாகும். ஆத்மாவான இந்த புருஷன் எந்த செயலையும் செய்வதில்லை எனினும் இதன் சைத்தன்யத்தினால் உயிர்பெற்று பிரக்ருதி எல்லாச் செயல்களையும் செய்கிறது. இருப்பினும் நாம் முன்பே பார்த்ததைப் போல அறியாமையின் விளைவாக தோன்றிய அத்யாசத்தின் காரணமாக ஆத்மாவிற்கும் அனாத்மாவான பிரக்ருதிக்கும் இடையே ஒரு விசித்திரமான இணைப்பை உருவாக்கிவிட்டோம்.
ஆனால் ஞானி, பிரக்ருதியினாலேயே செயல்கள் நடைபெறுகின்றன என்றும், ஆத்மா செயலற்றது என்றும் தெளிவாகப் பார்க்கின்றான். எந்த உபாதியையும் சார்ந்திராமல் ஆத்மா உள்ளது, அதாவது உபாதியின் பண்புகள் ஆத்மாவிற்குச் சொந்தமானவைகள் அல்ல. ‘ஆத்மா அகர்த்தா’ எனும் கருத்தை இந்த சுலோகம் தெளிவாக எடுத்துரைக்கிறது. இவ்விதத்தில் யார் பார்க்கிறானோ அவனே உண்மையில் பார்க்கிறான் — ய: பச்1யதி ஸ: பச்1யதி, என்றார் பகவான். மாயையிலிருந்து தோன்றிய உடல் மற்றும் மனதினால்தான் அனைத்தும் செய்யப்படுகின்றன; நான் எதையும் செய்யாதவன் எனும் அறிவின் துணையுடன், மற்றவர்களின் செயல்களை பார்ப்பதைப் போலவே தனது உடல்-மனதின் செயல்களையும் அபிமானமற்றுப் பார்க்கிறான். இப்படிப்பட்ட ஞானியே உண்மையில் பார்க்கிறான். ‘நான்’ உடல் எனப் பார்க்கும்போது, இந்த உடல் செய்வதனைத்தும் ‘நான்’ செய்வதைப்போலத் தெரியும். ஆனால் அந்த அபிமானத்திலிருந்து சற்று விலகியிருந்து பார்க்கும்போது ‘நான்’ இந்த உடலைப் பார்க்கும் சாக்ஷி மட்டுமே என்றும், இந்த மனதிற்கு அதனுடைய சுகத்தையும் துக்கத்தையும் உணர்த்துகிற அறிவு சொரூபம் என்றும் புரியும்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
பரம்பொருளை சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களைச் செய்யாத நிஷ்கிரியர் என்ற கோட்பாட்டில் ப்ரம்மம் அல்லது புருஷன் என்று சொல்லுகிறேன். ஆனால் அத்தொழில்களைச் செய்தருளுகின்றார் என்ற கோட்பாட்டில் சக்தி, மாயை, பிரக்ருதி என்ற பெயர்களுள் ஒன்றால் அழைக்கிறேன்.
---------------------------------------------------------------------------------------------