திங்கள், 10 மார்ச், 2025

க்ஷேத்ர க்ஷேத்ரஞ விபாக யோகம் 13.26 - 13.27

||13.26|| ஞான சொரூபம்:

यावत्सञ्जायते किञ्चित्सत्त्वं स्थावरजङ्गमम्

क्षेत्रक्षेत्रज्ञसंयोगात्तद्विद्धि भरतर्षभ ।। २६ ।।

யாவத்ஸஞ்ஜாயதே கிஞ்சித்ஸத்த்வம் ஸ்தா2வரஜங்க3மம்

க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞஸம்யோகா3த்தத்3வித்3தி4 4ரதர்ஷப4 || 26||


भरतर्षभ  4ரதர்ஷப4  பரத சிரேஷ்டா    स्थावरजङ्गमम्  ஸ்தா2வரஜங்க3மம்  ஸ்தாவர ஜங்கமமாகிய     यावत् किञ्चित्  யாவத் கிஞ்சித்  யாதொரு    सत्त्वं  ஸத்த்வம்  வஸ்து     

सञ्जायते  ஸஞ்ஜாயதே  தோன்றியுள்ளதோ     तत्  தத்  அது    

क्षेत्र क्षेत्रज्ञ संयोगात्  க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ ஸம்யோகா3த்  க்ஷேத்திர க்ஷேத்திரஞனின் சேர்க்கையால் என்று    विद्धि  வித்3தி4  அறிக


அர்ஜுனா, நகர்கின்ற மற்றும் நகராததாகிய எவ்வுயிர் தோன்றியுள்ளதோ அது க்ஷேத்திர க்ஷேத்ரஞனின் சேர்க்கையால் என்று அறிக


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பரதக்காளையே, ஸ்தாவரமாயினும், ஜங்கமமாயினும் ஓருயிர் பிறக்குமாயின் அது க்ஷேத்திரமும் க்ஷேத்திரக்ஞனும் சேர்ந்தமையால் பிறந்ததென்றறி.


விளக்கம்:

நகர்கின்ற அல்லது நகராத எந்தவொரு வஸ்து தோன்றியுள்ளதோ அது க்ஷேத்திர க்ஷேத்திரஞனுடைய சேர்க்கையினால் நிகழ்ந்துள்ளது என்கிறார் கிருஷ்ணர். இந்த க்ஷேத்திர க்ஷேத்திரஞ சேர்க்கையை அறிவின் மூலமாக பிரித்தலே மோக்ஷம் எனப்படும். இனி, அனாத்மாவான க்ஷேத்திரத்திற்கும் ஆத்மாவான க்ஷேத்திரஞனுக்கும் இடையே சேர்க்கை என்பது சாத்தியமா? அது எவ்வாறு நடைபெறுகிறது? என விசாரிப்போம்


=> இணைப்பு சாத்தியமில்லை:

க்ஷேத்திரத்திற்கும் க்ஷேத்திரஞனுக்கும் இடையேயான இணைப்பு(ஸம்யோக3ம்) என்பது ஒருபோதும் சாத்தியமில்லை. அதை பின்வரும் இரு உதாரணங்களைக் கொண்டு ஆராயலாம்.

   (1) ஒரு கயிற்றையும் ஒரு பானையையும் இணைத்துவிட முடியும், ஏனெனில் இரண்டிற்கும் ஒரு திட்டவட்டமான வடிவமும் பாகங்களும் உண்டு. எனவே கயிற்றின் இரு முனைகளை பானையின் கழுத்தில் கட்டி அவற்றை ஒன்றாக இணைக்கலாம். இவ்வகையான இணைப்பு க்ஷேத்திர - க்ஷேத்திரஞனுக்கு இடையில் சாத்தியமில்லை, ஏனெனில் ஆத்மாவான க்ஷேத்திரஞன் உருவமற்றது, பாகங்களற்றது. அப்படியிருக்கையில் க்ஷேத்திரஞனின் எந்தப் பகுதியை நாம் க்ஷேத்திரத்துடன் இணைத்துவிட முடியும்? அது ஒரு பொருளுடன் ஆகாசத்தை இணைக்க முயற்சிப்பது போலாகும்.

   (2) ஒரு துணியை எடுத்துக்கொண்டு, துணிக்கும் அதிலுள்ள நூலுக்குமிடையே இணைப்பு உள்ளது எனச் சொல்லிவிட முடியாது. ஏனெனில் அந்த துணி என்பது நூலேயாம். அதுபோல, க்ஷேத்திர - க்ஷேத்திரஞனுக்கு எந்த இணைப்புமில்லை ஏனெனில் அடிப்படையில் அவை இரண்டும் வெவ்வேறு விஷயங்கள் அல்ல. மேலும் க்ஷேத்திரஞன் மாற்றத்திற்கு உட்பட்டு க்ஷேத்திரமாக மாறிவிட்டது எனவும் இங்கு கூறமுடியாது. ஏனெனில் ஆத்மா மாற்றத்திற்கு உட்படாதது ஆகும்.


=> ஏற்றிவைத்தல்:

இணைப்பு சாத்தியமில்லை எனில் பகவான் இங்கு உயிர்களின் தோற்றம் க்ஷேத்திர க்ஷேத்திரஞனுடைய சேர்க்கையினால் நிகழ்ந்துள்ளது என எதைக் குறிக்கிறார்? சேர்க்கை அல்லது இணைப்பு எனும் அர்த்தத்தில் இந்த சுலோகத்தில் வந்துள்ளஸம்யோக3என்ற சொல், உண்மையில் அத்3யாச-த்தைக் குறிக்கிறது. ‘அத்3யாசம்என்பதன் அர்த்தம் ஆரோபித்தல் அல்லது ஏற்றிவைத்தல் ஆகும். க்ஷேத்திரம் என்பது அறியப்படும் பொருள், ஜடம். க்ஷேத்திரஞன் என்பது தூய உணர்வாகவுள்ள ஆத்மா. ஒளி மற்றும் இருள் போன்ற இயற்கையில் எதிர்மாறான இயல்பையுடைய இவையிரண்டும் அறியாமையின் காரணமாக ஒன்றோடொன்று ஏற்றிவைக்கப்படுவதால் இந்த இணைப்பு தெரிகிறது. ஆனால் உண்மையில் இது தவறான கிரஹித்தலைக் குறிக்கிறது. உடலைநான்என ஒருவன் கூறும்போது, அந்த உடலின் இருத்தலும் உணர்வும் ஆத்மாவிற்கு சொந்தமானது. அதேபோல, ‘நான் உயரமாக இருக்கிறேன்எனக் கூறும்போது, உடலின் பண்புகள் ஆத்மாவின்மீது ஏற்றிவைக்கப்படுகிறது. இவ்விதமே பிறவாத இறவாத ஆத்மா, பிறப்பு மற்றும் இறப்பிற்கு உட்பட்டதாக ஆக்கப்படுகிறது. ஆத்மா-அனாத்மா குறித்த சரியான பகுத்தறிவு இல்லாத காரணத்தினால் இந்த ஏற்றிவைத்தல் நிகழ்கிறது. எவ்விதம் அறியாமையினால் கயிற்றில் பாம்பை ஏற்றிவைக்கிறோமோ அதுபோல முற்றிலும் வெவ்வேறான இயல்பை உடைய க்ஷேத்திரத்தையும் க்ஷேத்திரஞனையும் அறியாமையினால் இணைத்துவிடுகிறோம்


=> உள்ளபடி அறிதல்:

ஒன்றோடொன்று ஏற்றிவைக்கப்பட்ட ஆத்ம-அனாத்மாவை பாகுபடுத்தி உள்ளபடி அறிதலே ஞானம் ஆகும். சாஸ்திரமானது க்ஷேத்திரத்தின் தன்மையையும் க்ஷேத்திரஞனின் இயல்பையும் உபதேசம் செய்கிறது. ஐம்பூதங்கள், உடல், புலன்கள், செயலுறுப்புக்கள், அஹங்காரம், ஆசை, வெறுப்பு, இன்பம், துன்பம் இவையாவும் க்ஷேத்திரம் என முந்தைய சுலோகங்களில் கூறப்பட்டது. சுருக்கமாக, க்ஷேத்திரஞனான ஆத்மாவைத் தவிர மற்றவை அனைத்தும் க்ஷேத்திரம் எனச் சொல்லப்பட்டது. இவ்விதம் சாஸ்திர ஞானத்தின் துணையுடன் ஒருவன் க்ஷேத்திரஞனை க்ஷேத்திரத்திலிருந்து பிரித்தல் வேண்டும். நம்மால் அறியப்படுகின்ற எந்தவொன்றிலும் ஒரு கூறு க்ஷேத்திரம், மற்றொன்று க்ஷேத்திரஞன். பொருளின் பெயரும் வடிவமும்(நாமரூப) க்ஷேத்திரம்; அதனுடைய இருப்பு க்ஷேத்திரஞன். எனவே ஒவ்வொரு கணமும் க்ஷேத்திரஞனும் க்ஷேத்திரமும் சேர்ந்தே கிடைக்கப்படுவதால், அது மிக கவனமாகப் பிரிக்கப்பட வேண்டும். ஸத்-சித்-ஆனந்தமான நிர்குண ப்ரம்மம் க்ஷேத்திரஞன் என்றும், அந்த ப்ரம்மத்தைச் சார்ந்துள்ள மாயையிலிருந்து தோன்றுவது க்ஷேத்திரம் என்றும் ஒருவன் புரிந்துகொள்ள வேண்டும். மர-யானையைப் பார்த்து பயந்தவனுக்கு, அது மரம் என்கிற ஞானம் யானையை மறைய வைக்கிறது. அதுபோல உண்மையை அறிந்தவுடன், அதைச் சார்ந்து இருக்கின்ற பொய்யானது தானாக விலகிவிடுகிறது.


=> மோக்ஷம்:

க்ஷேத்திரத்திற்கும் க்ஷேத்திரஞத்திற்கும் இடையிலான இந்த சேர்க்கையே(ஸம்யோக3) சம்சார காரணமாகவுள்ளது. ஆகையால் சம்சாரத்திலிருந்து விடுபட அவற்றின் பிரிதல்(வியோக3) தேவைப்படுகிறது. ஒருவனின் மரணத்தினால் இந்த பிரிவை ஏற்படுத்திவிட முடியாது ஏனெனில் இறப்பில் க்ஷேத்திரத்தின் ஒரு அம்சமான ஸ்தூல உடலிலிருந்து மட்டுமே பிரிதல் நடைபெறுகிறது. சூக்ஷம உடலுடன் இருந்து பிரிதல் இல்லையென்பதால் மறுபிறப்பு உண்டாகிறது. எனவே ஆத்ம-அனாத்மாவைப் பிரித்தல் என்பது தெளிவான அறிவினால் மட்டுமே நடைபெறுகிறது. இந்த அறிவின் விளைவாக அறியாமை நீங்குவதால், அறியாமையின் காரணமாக உண்டான இந்த மித்யா-ஞானம் நீங்கி சம்சாரத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது. இதுவே மோக்ஷம் ஆகும்

இந்த ஞானத்தை அடைந்தவரின் பார்வையை பகவான் பின்வரும் சுலோகங்களில் விரித்துரைக்கிறார்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

நீ வியக்தி ஸ்வரூபனாக இருக்கும் வரையில், அதாவது நீ ஜீவனாய் இருக்கும் வரையில் வெண்ணெய், மோர் என்ற இரண்டையும் அங்கீகரிக்க வேண்டும்; அதாவது ஈஷ்வரன், ஜகத் என்ற இரண்டையும் அங்கீகரிக்க வேண்டும். உவமையை விளக்கிச் சொல்வோமானால் முதன் முதலில் இருந்த பாலானது ஸமாதி மூலமாய் அறியப்படும் பிரம்மமாகும்; வெண்ணெய் ஈஷ்வரனாகும்; மோர் இருபத்து நான்கு தத்துவங்களாலான உலகமாகும்.

---------------------------------------------------------------------------------------------

||13.27|| ஞானம் அடைந்தவன் பரமாத்மாவை எப்படிக் காண்கிறான்:

समं सर्वेषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरम्

विनश्यत्स्वविनश्यन्तं : पश्यति पश्यति ।। २७ ।।

ஸமம் ஸர்வேஷு பூ4தேஷு திஷ்ட2ந்தம் பரமேச்1வரம்

விநச்1யத்ஸ்வவிநச்1யந்தம் : பச்1யதி பச்1யதி ।। 27 ।। 


सर्वेषु भूतेषु  ஸர்வேஷு பூ4தேஷு எல்லா உயிர்களிலும்    समं  ஸமம்  சமமாக   

तिष्ठन्तं  திஷ்ட2ந்தம்  இருக்கிறவனை   विनश्यत्सु  விநச்1யத்ஸு  அழிவனவற்றுள்     

अविनश्यन्तं  அவிநச்1யந்தம்  அழியாததை    परमेश्वरम्  பரமேச்1வரம்  பரமேஷ்வரனை   

: पश्यति  : பச்1யதி  யார் பார்க்கிறானோ    :  :  அவன்     पश्यति  பச்1யதி  பார்க்கிறான்.


உயிர்களனைத்திலும் சமமாயிருக்கிறவனும், அழிவனவற்றுள் அழியாதவனுமாகிய பரமேஷ்வரனைப் பார்ப்பவனே பார்க்கிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

எல்லா பூதங்களிலும் சமமாக நிற்போன் பரசுராமன். அழிவனவற்றில் அவன் அழிவான். அவனைக்காண்போனே காட்சியுடையோன்.


விளக்கம்:

=> ஒரு ஞானியின் பார்வை:

இங்கு சுலோகத்தில் கூறிய விதத்தில் எவனொருவன் பார்க்கின்றானோ உண்மையில் அவனே பார்க்கின்றான்: பச்1யதி : பச்1யதி, என்கிறார் பகவான். இவ்விதம் கிருஷ்ணர் கூறுகிறார் எனில் அவன் மற்றவர்கள் பார்ப்பதிலிருந்து வித்தியாசமான ஒன்றைப் பார்க்கவேண்டும். இந்த வெளிப்பாடு அதையே நமக்குப் புகட்டுகிறது. அப்படி அவன் எதைப் பார்க்கின்றான்? பரமேஷ்வரனைப் பார்க்கின்றான். எல்லையற்றவரும், பரம், எல்லாவற்றிற்கும் காரணமானவருமான, ஈஷ்வர, பரமேஷ்வரனைப் பார்க்கின்றான். அனைத்திற்கும் காரணமானவர் என்றவுடன் எங்கோ ஓர் இடத்தில் அமர்ந்துகொண்டு அனைத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்பதாக அல்லாமல், எல்லா உயிரினங்களிலும் எந்த வேற்றுமையுமில்லாது சமமாக விளங்கிக் கொண்டுள்ளார்ஸர்வேஷு பூ4தேஷு ஸமம் திஷ்ட2ந்தம், என்பதாகப் பார்க்கின்றான். இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்திலேயே, இரண்டாவது சுலோகத்தில் பகவான் இதே கருத்தைக் கூறினார்க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்3தி4 ஸர்வக்ஷேத்ரேஷு பா4ரத, அனைத்து உடலுக்குள்ளும் என்னை க்ஷேத்திரஞன் என அறிக. இதில்ஸர்வக்ஷேத்ரேஷுஎன்பது இங்குஸர்வபூ4தேஷுஎன்றும், ‘மாம்என்பது இங்குபரமேச்1வரஎன்றும் கூறப்பட்டுள்ளது. மற்றபடி இரண்டின் கருத்தும் ஒன்றையே குறிக்கின்றது. எந்த குணங்களுமற்ற நிர்குண பரமேஷ்வரன், எல்லா உயிர்களிடத்தும் இருத்தலாக(ஸத்), உணர்வு சொரூபமாக(சித்), எல்லையற்று(அநந்த) சமமாக வீற்றிருக்கின்றார்.  

=> அழிவனவற்றுள் அழியாதவர்:

தொடந்து அழிவனவற்றுள் அழியாதவராகவிநச்1யத்ஸு அவிநச்1யந்தம்என பரமேஷ்வரனை மேலும் விளக்குகிறார். உடல் மரணிக்கிறது; எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்து கொண்டே இருப்பதால் மனம் அழிகிறது; கால வரையறைக்கு உட்பட்டதால் உலகமும் மாற்றத்திற்குள்ளாகி அழிகிறது. அனைத்துவித நாம-ரூபங்களும் அழிகின்றன, ஆனால் இருத்தலாகவுள்ளஸத்யம்ஒன்று மட்டுமே அழிவதில்லை. அழிந்துபோகின்ற அனைத்தின் மத்தியிலும் அழியாமலிருப்பது அந்த பரமேஷ்வரனே. அழிதல் என்பது இல்லாமல் போவதை மட்டும் குறிப்பதல்ல; அந்த குறிப்பிட்ட ஒன்றின் ஒவ்வொரு மாற்றங்களும் அதன் அழிவையே குறிக்கிறது. உலகில் எந்தவொரு ஜீவராசியும், அஸ்தி - இருத்தல்(காரணமாக கர்பத்தில் இருத்தல்), ஜாயதே - பிறத்தல், வர்ததே - வளர்தல், விபரிநமதே - மாற்றத்தை அடைதல், அபக்ஷீயதே - தேய்தல், மற்றும் இறுதியாக வினஷ்யதி - மடிதல் எனும் ஆறுவித மாறுபாடுகளுக்கு உட்பட்டதாக இருக்கின்றது. இந்த அனைத்து உயிர்களுக்குள்ளும் அவைகளின் பிறத்தல்களுக்கிடையே பிறவாது, வளர்தலுக்கிடையே வளராது, மாறுதலுக்கிடையே மாறாது, தேய்தல்களுக்கிடையே தேயாது, மடிதலுக்கிடையே மடியாது, எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாமல் தொடர்ந்து சமமாக இருப்பவராக பரமேஷ்வரன் உள்ளார். தோன்றிய ஒவ்வொன்றும் காலத்திற்கு உட்பட்டது, ஆனால் இந்த சிருஷ்டியின் ஆதாரமாக இருக்கின்ற இந்த எல்லையற்ற ஆத்மா காலத்தைக் கடந்ததாக இருக்கிறது. எனவே எந்த மாற்றத்திற்கும் உட்படுவதில்லையாகையால் அழியாதது


=> பார்த்தல்:

இவ்விதம் பார்ப்பவனே உண்மையில் பார்க்கிறான் என்கிறார். பார்த்தலை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்:

   (1) காரிய த்3ருஷ்டி - நேரடியான பார்வை. கண்களினால் காரியமான(விளைவு) இந்த உலகைக் காண்கின்ற நேரடிப் பார்வை.

   (2) காரண த்3ருஷ்டி - காரணத்தைப் பார்க்கின்ற பார்வை. காரணம் என்பது இங்கு ஆதாரத்தைக் குறிக்கிறது. ஆதாரத்தைச் சார்ந்து தோன்றிக் கொண்டிருப்பவைகள் அனைத்தும் வெறும் தோற்றமே; வந்து செல்பவைகள் ஆகும். ஆனால் என்றுமிருக்கின்ற ஆதாரமே சத்தியமானது என்பதாக புத்தியினால் காரணத்தைப் பார்க்கின்ற நுண்ணிய பார்வை. இதை ஸத்ய திருஷ்டி எனவும் அழைக்கலாம்

பொதுவாக மக்களனைவரும் காரிய திருஷ்டியுடன் தான் இருக்கின்றனர். ஆனால் ஒரு ஞானியின் பார்வை (2)-வது வகையைச் சார்ந்தது, அவர் காரணத்தைப் பார்க்கின்றார். தனது பாஷ்யத்தில் சங்கரர், மற்றவர்களின் பார்வையை கண்புரை உள்ளவரைப் போன்றது என வர்ணிக்கிறார். கண்புரை உள்ளவர்களுக்கு ஒரு சந்திரன் இருக்குமிடத்தில் இரண்டு சந்திரன்கள் தெரியும். அதுபோலவே, இங்கும் அறியாமையின் காரணமாக மற்றவர்கள் இருமையைக் காண்கிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. இருமையினால் ஒருவன் தன்னை ஒரு பொருளாகவும், இந்த உலகத்தை இனியொன்றாகவும் பார்க்கிறான். இதனால் இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் ஒரு முக்கியமற்ற உயிரினமாக ஆவதால், அதை ஒழிக்கும் பொருட்டு சாதனைகளைச் செய்தல் மற்றும் பல்வேறு விஷயங்களை அடைதல் எனும் முடிவிலா இலக்கை நோக்கி தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டேயிருக்கிறான். இதில் பிரச்சனை என்னவென்றால் எந்தவொரு சாதனையும் வரம்புக்குட்பட்டது. மேலும் அதுவரையறுக்கப்பட்டவன்எனும் உணர்வை அகற்றப் போவதில்லை. எப்போது அவன்அழிவனவற்றுள் அழியாதவனாக(விநச்1யத்ஸு அவிநச்1யந்தம்) இருப்பவன் நான்’, எனத் தன்னைப் பார்க்கிறானோ அப்போது மட்டுமே அது சாத்தியமாகிறது.

 

ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

சூரியன் உலகம் முழுவதிலும் சமனாகப் பிரகாசித்து வெளிச்சம் கொடுக்கிறது. ஆனால் ஒரு சிறுமேகம் அதை நம் கண்ணுக்குத் தெரியாது மறைத்து வைக்கிறது. அங்ஙனம் மாயையாகிய திரை எங்கும் நிறைபொருளைகடவுளை, நம் கண்ணுக்குத் தெரியாது மறைக்கிறது. மாயையை நீக்கிப் பார்ப்பவருக்கு எல்லாம் சச்சிதானந்த சொரூபமாகத் தோன்றும்

---------------------------------------------------------------------------------------------