||17.11|| சாத்விக வழிபாடு:
अफलाकाङ्क्षिभिर्यज्ञो विधिदृष्टो य इज्यते ।
यष्टव्यमेवेति मन: समाधाय स सात्त्विक: ।। ११ ।।
அப2லாகாங்க்ஷிபி4ர்யஜ்ஞோ விதி4த்3ருஷ்டோ ய இஜ்யதே ।
யஷ்டவ்யமேவேதி மந: ஸமாதா4ய ஸ ஸாத்த்விக: ।। 11 ।।
अफल आकाङ्क्षिभि: அப2ல ஆகாங்க்ஷிபி4: வினைப்பயனை விரும்பாதவர்களால்
यष्टव्यम् एव इति யஷ்டவ்யம் ஏவ இதி ஆராதனையாகச் செய்தே ஆக வேண்டுமென்று
मन: மந: மனதை समाधाय ஸமாதா4ய ஸ்திரப்படுத்திக்கொண்டு
विधि दृष्ट: விதி4 த்3ருஷ்ட: சாஸ்திர ஆணைப்படி य: यज्ञ: ய: யஜ்ஞ: எந்த யாகம்(வழிபாடு) इज्यते இஜ்யதே செய்யப்படுகிறதோ स: सात्त्विक: ஸ: ஸாத்த்விக: அது சாத்விகமானது.
ஆராதனையாகச் செய்தே ஆகவேண்டும் என்று மனதை உறுதிப்படுத்திக் கொண்டு, வினைப்பயனை விரும்பாதவர்களால் சாஸ்திர விதிப்படி எந்த யாகம் செய்யப்படுகிறதோ அது சாத்விகமானது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
பயனை விரும்பாதவர்களாய், வேள்வி புரிதல் கடமையென்று மனந்தேறி, விதிகள் சொல்லியபடி இயற்றுவாரின் வேள்வி சத்துவ குணமுடைத்து.
விளக்கம்:
சுலோகம் பதினொன்று முதல் பதிமூன்று வரை பகவான் மூன்று வகையான வழிபாடுகளைக் குறித்துப் பேசுகிறார். இங்கு சாத்விக ஆராதனைப் பேசப்படுகிறது. சாத்விக வழிபாடானது பின்வரும் கூறுகளை உள்ளடக்கியது:
=> (1) சாஸ்திர விதி:
சாத்விக வழிபாடு சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட படி செய்யப்படுவதாக இருக்கிறது.
‘யஜ்’ என்கிற மூலச்சொல்லிலிருந்து உருவான ‘யஜ்ஞ’ எனும் வார்த்தை, கடவுளை வணங்குதல் என்கிற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. வழிபாடு, ஆராதனை அல்லது ஒருவனது கடமை என்கிற பொருளில் இங்கு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பொதுவாக, ‘யஜ்ஞ’ என்பது ஒரு வேத சடங்கை, யாகத்தைக் குறிப்பதாக இருக்கிறது. இங்கு இச்சொல்லைத் தகுதிப்படுத்தும் பெயரடையாக வந்துள்ள ‘விதி4 த்3ருஷ்ட’ என்பது சாஸ்திர விதியைக் குறிக்கிறது. சாஸ்திரத்தில் ஒருவனால் செய்யப்பட வேண்டியவைகள் என சில செயல்கள் கூறப்படுகிறது. அவைகளில் சில தினமும் செய்யப்பட வேண்டியவை; நித்திய-கர்மங்கள். மேலும் சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் செய்யப்பட வேண்டியவை; அவை நைமித்திக-கர்மங்கள்.
=>(2) பலனை எதிர்பாராமல் இருத்தல்:
யாரால் சாத்விக வழிபாடு செய்யப்படுகின்றது? எந்த பலனையும் எதிர்பார்க்காதவர்களால் செய்யப்படுகின்றது — அப2ல ஆகாங்க்ஷிபி4:. குழந்தையைப் பராமரிக்கும் தாய் கைம்மாறு கருதாது சேவையைத் தன் கடமையென்று செய்கிறாள். சாத்விக குணமுடையவர்கள் கடவுள் வழிபாடு செய்வதும் கைம்மாறு கருதியல்ல. இறை ஆராதனை அவர்களது இயல்பு. பலனை எதிர்பார்க்காமல் ஒருவனால் வழிபாட்டில் ஈடுபட முடியுமா? எனில், இதை அவர்கள் மனத்தூய்மைக்காக, காணிக்கையாக மட்டுமே செய்கிறார்கள் என நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
=> (3) செய்தே ஆக வேண்டுமென்ற பான்மை:
இந்த சாத்விக வழிபாடு எந்த மனப்பான்மையுடன் செய்யப்படுகிறது என்பதை ‘யஷ்டவ்யம் ஏவ இதி’ எனும் வாக்கியம் குறிக்கிறது. ‘இது என்னால் செய்யப்பட்டுத்தான் ஆக வேண்டும்’ எனும் பாங்குடன், கடன்பட்டவன் போல செய்யப்படுகிறது. எந்தவித பலனுக்காகவும் அல்லாமல், அதைச் செய்வதற்காக மட்டுமே செய்யப்படுகிறது. இந்த மனப்பான்மையுடன் செய்வது ஒருவனுக்கு மனத்தூய்மையை அளிக்கிறது. எனவே எந்த புருஷார்த்தமும்(இலக்கு) இதனால் நிறைவேறப் போவதில்லை எனினும் மனத்தூய்மைக்காக மட்டுமே இவ்வித வழிபாடு செய்யப்படுகிறது. அதாவது, அர்த்த - பாதுகாப்பு, காம - இன்பம் அல்லது தர்ம - புண்ணியம் போன்ற எந்த மனித இலக்குகளில் ஒன்றிற்காகவும் இது செய்யப்படுவதாக இல்லை.
=> (4) உறுதியான மனம்:
மேற்கூறப்பட்ட அந்த மூன்று புருஷார்த்தங்களிலும் அவனுக்கு ஆர்வம் இல்லை. மாறாக, இவைகள் அனைத்திலிருந்தும் தன்னை விடுவிக்கின்ற மோக்ஷத்தைக் கொடுக்கும் அறிவை அவன் தேடுகிறான். அப்படிப்பட்ட குறிக்கோளைக் கொண்ட ஒருவனுக்கு, இந்த அறிவைப் பெறத் தகுதியான மனதை மட்டும்தான் அவன் செய்யும் எந்தவொரு செயலும் கொடுக்கமுடியும். எனவே பலன் எதிலும் ஆர்வமில்லை எனினும் அது செய்யப்பட்டே ஆக வேண்டுமென்று உறுதியான மனதுடன், பலனுக்கான எந்த சஞ்சலமுமில்லாமல் மன ஒருமுகப்பாட்டுடன் அவன் வழிபாட்டில் ஈடுபடுகிறான் — மந: ஸமாதா4ய.
இனியொரு கோணத்தில், ‘மந: ஸமாதா4ய’ என்பது மன அமைதியுடன் செய்யப்படுத்துவதைக் குறிக்கலாம். இதன் பொருள் வழிபாட்டின்போது அவனிடம் ஒரு குறிப்பிட்ட உற்சாகத்துடன் கூடிய அமைதி இருக்கிறது என்பதாகும். இல்லையெனில், அர்த்த-காம-தர்ம ஆகியவற்றில் ஆர்வமில்லாத ஒருவன் வழிபாட்டுச் சடங்கை செய்ய நேரும்போது அவனிடம் ஒரு தயக்கம் அல்லது உற்சாகமின்மை இருக்க வாய்ப்புண்டு. அத்தகைய மனப்பான்மையுடன் செய்யப்படும்போது அது சாத்விகமாக இருக்கப் போவதில்லை. எனவே இங்கே அர்த்தம் என்னவென்றால், ஒரு அமைதியான உற்சாகமான மகிழ்ச்சியான மனதுடன் அது செய்யப்படுகிறது. தனது புருஷார்த்தம் மோக்ஷம் என்பது தெளிவாகத் தெரியும்போது மனம் இயல்பாகவே அமைதியாக இருக்கும். அப்படிப்பட்டவன் வழிபாட்டுச் சடங்கை செய்யும்போது அவன் மற்ற ஆசைகளால் அசைக்கப்படுவதில்லை. அத்தகைய யாகம் அல்லது வழிபாடு சாத்விகமானதாகக் கருதப்படுகிறது.
இவ்விதம் இங்கு சொல்லப்பட்ட நான்கு விஷயங்களையும் பூர்த்தி செய்கிற வழிபாடு சாத்விகமானது ஆகும். மோக்ஷத்திற்காகவென்று மனத்தூய்மையில் மட்டுமே ஆர்வமுள்ள ஒருவனால்தான் இதை செய்ய முடியும். எனவே முழு மனதுடன், அது என்னால் செய்யப்பட வேண்டுமென்கிற பான்மையுடன், சாஸ்திரத்தில் கூறியபடி எந்த ஆராதனை செய்யப்படுகிறதோ அது சாத்விகமானது.
கர்மயோகத்தின் முழு சாரத்தையும் பகவான் இந்த ஒரு சுலோகத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
---------------------------------------------------------------------------------------------
||17.12|| ராஜஸ வழிபாடு:
अभिसन्धाय तु फलं दम्भार्थमपि चैव यत् ।
इज्यते भरतश्रेष्ठ तं यज्ञं विद्धि राजसम् ।। १२ ।।
அபி4ஸந்தா4ய து ப2லம் த3ம்பா4ர்த2மபி சைவ யத் ।
இஜ்யதே ப4ரதச்1ரேஷ்ட2 தம் யஜ்ஞம் வித்3தி4 ராஜஸம் ।। 12 ।।
तु து மாறாக फलं ப2லம் பயனை अभिसन्धाय அபி4ஸந்தா4ய விரும்பியோ
दम्भार्थम् अपि एव च த3ம்பா4ர்த2ம் அபி ஏவ ச ஆடம்பரத்துக்காகவோ यत् யத் எது
इज्यते இஜ்யதே செய்யப்படுகிறதோ भरतश्रेष्ठ ப4ரதச்1ரேஷ்ட2 பரத சிரேஷ்டனே
तं यज्ञं தம் யஜ்ஞம் அந்த யாகத்தை राजसम् विद्धि ராஜஸம் வித்3தி4 ராஜஸமானதென்று அறி.
பரதகுல சிரேஷ்டனே, பயனை விரும்பியோ, ஆடம்பரத்துக்காகவோ செய்யப்படுகிற ஆராதனையை ராஜஸமானதென்று அறிக.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
பயனைக் குறித்தெனினும், ஆடம்பரத்துக் கெனினும் செய்யப்படும் வேள்வி ராஜசமென்றுணர், பாரதரிற் சிறந்தாய்!
விளக்கம்:
ரஜோ குணமுடையவர்களின் வழிபாடு எத்தகையதாக இருக்கிறது என பகவான் கூறுகிறார்.
=> பலன்:
இங்கு ‘து’ எனும் சொல்லானது, இந்த வகையான யக்ஞத்தை முந்தைய சுலோகத்தின் சாத்விக யக்ஞத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இங்கும் வழிபாடானது சாஸ்திரத்தால் கட்டளையிடப்பட்டபடி செய்யப்படுகிறது, எனினும் அதனுடைய பிற அணுகுமுறைகள் வேறுபட்டவையாக இருக்கின்றன. பலன் குறித்த விஷயத்தில் ராஜஸ வழிபாட்டின் அணுகுமுறை சாத்விக வழிபாட்டிற்கு அப்படியே நேர் எதிரானதாக இருக்கிறது. இங்கு ஒரு திட்டவட்டமான பலனை எதிர்பார்த்து யக்ஞம் செய்யப்படுகிறது — ப2லம் அபி4ஸந்தா4ய. இந்த உலகத்திலோ அல்லது சொர்க்கம் போன்ற வேறு ஏதேனும் உலகத்திலோ பயன்படுகிற நோக்கத்துடன், செல்வம், பதவி, இன்பம், புண்ணியம் உள்ளிட்ட பலன்களைக் கருத்தில் கொண்டு இது போன்ற யக்ஞங்கள் செய்யப்படுகிறது. இத்தகைய வழிபாடு ரஜோகுணத்திலிருந்து பிறக்கிறது. கடையில் பண்டம் மாற்றுவது போல, தனது விருப்பத்தை நிறைவேற்றிவைக்க வேண்டுமென்று கடவுளை வேண்டி வணங்குவது சிறந்த வழிபாடாகாது.
=> தற்பெருமை:
ஆடம்பரத்திற்காகவும் புகழுக்காகவும் செய்யப்படுகிறது — த3ம்பா4ர்த2ம். செய்யப்பட வேண்டும் என்பதற்காக மட்டுமே செய்யப்படுகிற சாத்விக வழிபாட்டைப் போலல்லாமல், இங்கு தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காகவென தெய்வ வழிபாடு செய்யப்படுகிறது. தான் ஒரு மத ஆளுமை உடையவன் என்கிற அங்கீகாரத்தைப் பெறுவதற்காகச் செய்யப்படுகிற இத்தகைய வழிபாடுகள் ராஜஸிகமானது.
---------------------------------------------------------------------------------------------
||17.13|| தாமஸ வழிபாடு:
विधिहीनमसृष्टान्नं मन्त्रहीनमदक्षिणम् ।
श्रद्धाविरहितं यज्ञं तामसं परिचक्षते ।। १३ ।।
விதி4ஹீநமஸ்ருஷ்டாந்நம் மந்த்ரஹீநமத3க்ஷிணம் ।
ச்1ரத்3தா4விரஹிதம் யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே ।। 13 ।।
विधिहीनम् விதி4ஹீநம் வேதநெறி வழுவியது
असृष्ट अन्नं அஸ்ருஷ்ட அந்நம் அன்னதானமில்லாதது
मन्त्रहीनम् மந்த்ரஹீநம் ஒழுங்கான மந்திர உச்சாடனம் இல்லாதது
अदक्षिणम् அத3க்ஷிணம் தக்ஷிணை இல்லாததது
श्रद्धा विरहितं ச்1ரத்3தா4 விரஹிதம் சிரத்தையற்றது यज्ञं யஜ்ஞம் யக்ஞமானது
तामसं தாமஸம் தாமஸம் என்று परिचक्षते பரிசக்ஷதே பகரப்படுகிறது.
வேதநெறி வழுவியதும், அன்னதானமில்லாததும், ஒழுங்கான மந்திர உச்சாடனம் இல்லாததும், தக்ஷிணை இல்லாதததும், சிரத்தையற்றதுமாகிய யக்ஞம் தாமஸிகமென்று சொல்லப்படுகிறது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
விதி தவறியது, பிறர்க்குணவு தராதது, மந்திரமற்றது, தக்ஷிணையற்றது, நம்பிக்கையின்றிச் செய்யப்படுவது -- இத்தகைய வேள்வியைத் தாமசமென்பர்.
விளக்கம்:
தமோ குணத்திலிருந்து பிறந்த வழிபாடு இங்கு வரையறுக்கப்படுகிறது.
=> சாஸ்திரம் வழுவியது:
இந்த சுலோகத்திலுள்ள அனைத்து சொற்களும் யக்ஞத்தை குறிக்கிற பெயரடைகள் ஆகும். யாகமொன்று செய்யப்படும்போது அது வேதத்தில் பரிந்துரைக்கப்பட்டபடி செய்யப்பட வேண்டும். அதாவது, சாஸ்திர நெறியை மீறவோ அல்லது அதற்கு குறையவோ இல்லாமல் அங்கு சொல்லப்பட்டபடி நிறைவேற்றப்படுகிறது. இங்கே அது நேர்மாறானது. வழிபாட்டுச் சடங்கு செய்யப்படுகிறது, ஆனால் அனைத்து விதிகளும் முழுவதுமாகப் பின்பற்றப்படவில்லை — விதி4ஹீநம். அதாவது முறையாகச் செய்யப் போதுமான சிரத்தை அவர்களிடம் இருப்பதில்லை.
=> அன்னமில்லாதது:
யாகம் உள்ளிட்ட வழிபாட்டுச் சடங்கு செய்யப்படும்போது சில நிபந்தனைகள் உள்ளன. அவைகளில் ஒன்று, அன்னதானம் செய்யப்பட வேண்டும் என்பதாகும். அதிலும் குறிப்பாக யாகத்தை நடத்திக் கொடுக்க வந்துள்ள பிராமணர்களுக்கும், பூசாரிகளுக்கும் உணவு வழங்கப்பட வேண்டும். இது வழிபாட்டுச் சடங்கின் ஒரு அங்கமாகும். எனவே உணவு விநியோகமில்லாது செய்யப்படுவது ‘அஸ்ருஷ்ட அந்நம்’ எனப்படுகிறது.
=> மந்திரமில்லாதது:
வழிபாட்டுச் சடங்குகளில் இனியொரு முக்கிய நிபந்தனையாக இருப்பது மந்திர உச்சாடனம் ஆகும். அந்த குறிப்பிட்ட யாகத்திற்குரிய அனைத்து மந்திரங்களையும் ஓதாமலிருப்பது, அல்லது சில வார்த்தைகளை விட்டுவிட்டு ஓதுவது, அல்லது சில எழுத்துக்களைத் தவிர்த்தும், தவறான ஸ்வர உச்சரிப்புகளுடனும் முறையற்ற முறையில் ஓதுவது இங்கு ‘மந்த்ரஹீநம்’ எனப்படுகிறது. ஏனெனில் சரியான ஸ்வரம் இல்லாத ஒரு மந்திரம் மந்திரமே அல்ல என்பதால் இந்த குறைகளுடன் நடத்தப்படுகிற யாகம் மந்திரமற்றது எனக் கருதப்படுகிறது.
=> தக்ஷிணையில்லாதது:
அடுத்ததாக, ஒவ்வொரு யாகத்திற்கும் அதன் ஒரு பகுதியாகவே இருப்பது அதற்கென வழங்கப்படுகிற தக்ஷிணை ஆகும். அந்த குறிப்பிட்ட சடங்கிற்கு ஏற்றார்போல், பணம், நிலம் அல்லது சில கால்நடைகள் என பல்வேறு வகையான தக்ஷிணைகள் உள்ளன. யாகத்தை நடத்திக் கொடுக்கிற பண்டிதர்களுக்கும், அங்கு தகுதியான மற்றவர்களுக்கும் ஏதேனுமொரு வடிவத்தில் செல்வம் விநியோகிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் நடக்கின்ற சடங்கு ‘அத3க்ஷிணம்’ ஆகிறது. மேலும் அத்தகைய யாகம் முழுமையடையாததாகவே கருதப்படுகிறது.
=> சிரத்தையில்லாதது:
மேற்சொல்லப்பட்ட இந்த வகையான செய்கைகளைக் கொண்ட சடங்குகளின் மையப் பிரச்சினையாகவும், மேலும் அவைகளனைத்திற்கும் காரணமாகவும் இருப்பது சிரத்தை இல்லாத மனப்பாங்கு ஆகும். நாம் ஏற்கனவே பார்த்ததுபோல, ஒரு சடங்கின் செயல்பாட்டில் ஏதாவதொரு குறையிருந்து, ஆனால் அந்த வழிபாட்டில் முழு சிரத்தை இருந்தால், அந்த சிரத்தையே அனைத்தையும் ஈடுகட்டிவிடும். ஆனால் தாமஸிகமான இந்த வழிபாட்டில் அந்த சிரத்தை இல்லை. அல்லது, நாம் நான்காவது சுலோகத்தில் பார்த்ததுபோல பிரேதங்கள், ஆவிகளை வழிபடுகிற மற்றும் சூனியம் செய்கிற தாமஸிகமான சிரத்தை கொண்டவனாக இவன் இருக்கிறான். இத்தனை குறைபாடுகளோடு கூடியதால் இவ்வகையான ஆராதனை கீழ்த்தரமானதாகிறது.
இவ்வாறு பகவான் மூன்று வகையான வழிபாடுகளைப் பற்றிய விளக்கத்தை முடிக்கிறார்.
மனிதன் சிரத்தையோடு எதைப் பூஜிக்கிறானோ அவன் அதுவாகிறான் என்று பகவான் கூறினார். அதற்கு தவம் பெருந்துணைபுரிகிறது. அடுத்த மூன்று சுலோகங்களில், ப்ரம்ம வித்யாவிற்கான ஒழுக்கங்களைத் தருகிற தவங்கள் குறித்து பகவான் பேசுகிறார். இது ஒருவனை முதிர்ச்சியடைந்தவனாக ஆக்குகிறது என்பதால், ப்ரம்ம வித்யாவை நாடாதவர்களும்கூட இத்தவங்களை மேற்கொள்ளலாம்.
---------------------------------------------------------------------------------------------
