||17.7|| சாத்விக சிரத்தைக்கான உபாயம்:
आहारस्त्वपि सर्वस्य त्रिविधो भवति प्रिय: ।
यज्ञस्तपस्तथा दानं तेषां भेदमिमं शृणु ।। ७ ।।
ஆஹாரஸ்த்வபி ஸர்வஸ்ய த்ரிவிதோ4 ப4வதி ப்ரிய: ।
யஜ்ஞஸ்தபஸ்ததா2 தா3நம் தேஷாம் பே4த3மிமம் ச்1ருணு ।। 7 ।।
सर्वस्य ஸர்வஸ்ய ஒவ்வொருவருக்கும் प्रिय: ப்ரிய: பிரியமாயுள்ள
आहार: तु अपि ஆஹார: து அபி ஆகாரமும் கூட त्रिविध: த்ரிவித4: மூன்றுவிதங்களாக
भवति ப4வதி இருக்கிறது तथा ததா2 அங்ஙனமே यज्ञ: யஜ்ஞ: யக்ஞமும்
तपस् தபஸ் தபசும் दानं தாநம் தானமும் तेषां தேஷாம் அவைகளுள்
इमं भेदम् இமம் பே4த3ம் இந்த பேதத்தை शृणु ச்1ருணு கேட்பாயாக.
ஒவ்வொருவருக்கும் விருப்பமான உணவும் மூவகைப்படுகிறது. யாகமும், தபசும், தானமும் அங்ஙனமே அமைந்துள்ளன. அவைகளுள் இவ்வேற்றுமையைக் கேள்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
ஒவ்வொருவருக்கும் பிரியமான உணவும் மூன்றுவகைப் படுகிறது. வேள்வியும், தவமும், தானமும், அங்ஙனமே மும்மூன்று வகைப்படுகின்றன. அவற்றின் வேற்றுமையைக் கேள்.
விளக்கம்:
சிரத்தை மூன்று வகைப்படும். வழிபடும் தெய்வங்களையும், நோக்கத்தையும் கொண்டு ஒருவன் எந்த வகையான சிரத்தையுடன் கூடியவன், எந்த குணத்தை அடிப்படையாகக் கொண்டவன் என்று அடையாளம் காண முடியும் எனப் பார்த்தோம். இன்னும் எவைகளைக் கொண்டு மக்களின் குணத்தை வகைப்படுத்தலாம் என்கிற கேள்விக்கு விடையாக இந்த சுலோகம் அமைகிறது.
முந்தைய தலைப்பிலிருந்து இந்த தலைப்பை வேறுபடுத்திக் காட்டுவதற்காக ‘து’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. சிரத்தை மட்டுமல்ல, ஒருவன் விரும்பும் உணவு, செய்யும் வழிபாடு, கடைப்பிடிக்கும் ஒழுக்கங்கள் மற்றும் தானமும்கூட இயற்கையில் மூவிதமாக இருக்கிறது - சாத்விகம், ராஜஸம் மற்றும் தாமஸம். ராஜஸமும் தாமஸமும் தவிர்க்கப்பட்டு சத்வ குணத்தை வளர்ப்பதற்காக இங்கு அவை இரண்டும்கூட விரிவாகப் பேசப்படுகின்றன. இங்கு கூறப்படும் சாத்விக தன்மைகளில் சிலவற்றைப் பயிற்சி செய்யவதன் மூலமும், மேலும் சில ஒழுக்கநெறிகளைப் புரிந்துகொண்டு அதன்படி வாழ முயற்சிப்பதன் மூலமும் அடையலாம்.
=> சாத்விக சிரத்தைக்கான உபாயம்:
சாத்விக சிரத்தையை அடைதல் என்பது சாத்விகமான மனதை அடைவதைக் குறிக்கிறது. சாத்விகமான சிரத்தை மூலமாக சரியான அறிவு உண்டாகிறது; சரியான ஞானம் சரியான மனப்பாங்கினைக் கொடுக்கிறது; அதனால் ஒருவன் சரியான செயலில் ஈடுபட்டு அதற்கான கர்மபலனை அடைகிறான். நாம் ஈட்டிய கர்மபலனே நமது சூழ்நிலையை உருவாக்குகிறது. எனவே சூழ்நிலையாக வெளிப்படுகிற நம்மை சுற்றியுள்ள உலகத்தை, நாம்தான் உருவாக்கியுள்ளோம்.
சாத்விக சிரத்தை => சரியான ஞானம் => சரியான பாவனை => சரியான செயல் => அதன் கர்மபலன்.
சத்வ குணம் அல்லது சாத்விகமான மனதிலிருந்து சாத்விக சிரத்தை உருவாகிறது என்பதால் எல்லா விதத்திலும் சத்வ குணத்தை அடைய ஒரு சாதகன் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். சத்வ குண சுபாவத்தை அடைவதென்பது ரஜஸ் மற்றும் தமஸிலிருப்பவர்களுக்கு ஆன்மீக சாதனையாக ஆகிறது. தற்போது சத்வகுணப் பிரதானமாக இருப்பவர்கள், ஒருகாலத்தில் தாங்கள் செய்த முயற்சியினாலேயே அப்படிப்பட்ட சுபாவத்தை தன்மயமாக்கிக் கொண்டுள்ளனர். எனவே சத்வ குணத்தை பற்றிய வகைகளை அறிந்து அதை அடைவதை சாதனையாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.
---------------------------------------------------------------------------------------------
||17.8|| சாத்விக உணவு:
आयु: सत्त्वबलारोग्यसुखप्रीतिविवर्धना: ।
रस्या: स्निग्धा स्थिरा हृद्या आहारा: सात्त्विकप्रिया: ।। ८ ।।
ஆயு: ஸத்த்வப3லாரோக்3யஸுக2ப்ரீதிவிவர்த4நா: ।
ரஸ்யா: ஸ்நிக்3தா4 ஸ்தி2ரா ஹ்ருத்3யா ஆஹாரா: ஸாத்த்விகப்ரியா: ।। 8 ।।
आयु: सत्त्व बल आरोग्य सुख प्रीति ஆயு: ஸத்த்வ ப3ல ஆரோக்3ய ஸுக2 ப்ரீதி ஆயுள் அறிவு பலம் ஆரோக்கியம் சுகம் விருப்பம் ஆகியவைகளை विवर्धना: விவர்த4நா: விருத்தி செய்கின்றவைகள் रस्या: ரஸ்யா: ரசமுள்ளவைகள் स्निग्धा: ஸ்நிக்3தா4: (எண்ணெய்) பசையுள்ளவைகள் स्थिरा: ஸ்தி2ரா: உறுதி தருபவைகள் हृद्या: ஹ்ருத்3யா: இன்பமானவைகள்
आहारा: ஆஹாரா: ஆகாரங்கள்
सात्त्विक प्रिया: ஸாத்த்விக ப்ரியா: சாத்விகர்களுக்குப் பிரியமானவைகள்.
ஆயுள், அறிவு, பலம், ஆரோக்கியம், சுகம், ருசி ஆகியவைகளை வளர்ப்பவைகள், ரசமுள்ளவைகள், பசையுள்ளவைகள், வலிவு தருபவைகள், இன்பமானவைகள் ஆகிய ஆகாரங்கள் சாத்விகர்களுக்குப் பிரியமானவைகள்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
உயிர், சக்தி, பலம், நோயின்மை, இன்பம், பிரீதி இவற்றை மிகுதிப் படுத்துவன, சுவையுடையன, குழம்பாயின, உறுதியுடையன, உளமுகந்தன -- இவ்வுணவு சத்துவ குணமுடையோருக்குப் பிரியமானவை.
விளக்கம்:
இந்த சுலோகத்தில் சாத்விகர்களுக்குப் பிரியமான உணவு குறித்து பகவான் விளக்கிக் கூறுகிறார். சாந்தோக்ய உபநிஷத்தில், உணவானது ஸ்தூல, சூக்ஷம மற்றும் அதிசூக்ஷம பகுதிகளாகப் பிரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதில் ஸ்தூலமானது வெளித்தள்ளப்பட்டுகிறது. சூக்ஷமமானது ரத்தம், சதை, எலும்பு உள்ளிட்ட உடல் அங்கங்களாக மாறுகின்றது. அதிசூக்ஷமப் பகுதியானது மனதிற்குச் செல்கிறது எனக் கூறப்படுகிறது. எனவே மனதை நிர்ணயிப்பதில் உணவும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் ஒருவனது மனவுறுதி, மனவமைதி மற்றும் சிந்திக்கும் திறன் ஆகியவற்றிக்கு பங்களிக்கின்ற உணவு வகைகள் அனைத்தும் சத்வத்தைச் சேர்ந்தது.
=> எப்படிப்பட்ட உணவு சத்வம்?
ஆயுளை வளர்க்கக்கூடியது(ஆயு:); இதமானது அல்லது மனதிற்கு உற்சாகத்தை அளிக்கக்கூடியது(ஸத்த்வ); உடலுக்கு பலத்தையும்(ப3ல) ஆரோக்கியத்தையும்(ஆரோக்3ய) கொடுக்கக்கூடியவைகள் சாத்விகர்களுக்குப் பிரியமானவைகள் ஆகின்றன. ‘ஸுக2’ எனில் சாப்பிடும் போது இன்பத்தை கொடுப்பவைகள், ‘ப்ரீதி’ என்பது சாப்பிட்ட பிறகு இன்பத்தை கொடுக்கின்ற உணவுகள் ஆகும். சில உணவுகள் சாப்பிடும்போது சுகத்தைக் கொடுத்தாலும் உண்ட பிறகு வயிற்றிற்கு ஏகப்பட்ட தொந்தரவுகளைக் கொடுத்து ஜீரண அமைப்பையே பாழ்படுத்திவிடும்; பசியெடுக்காது செய்துவிடும். அப்படியல்லாது, ‘ப்ரீதி’ என்பது பசியை உண்டுபண்ணுவதை, அழகியல் ரீதியாக பார்ப்பதற்கும் மகிழ்ச்சியைக் கொடுப்பதைக் குறிக்கிறது. ‘ஸ்தி2ர’ எனில் நெடுநேரம் தாங்குவது என்று பொருள். சத்தில்லாத உணவு விரைவில் ஜீரணமாகிவிடுகிறது. அது உடலுக்கு பலம் கொடுக்காது. மேலும் ஜீரணம் செய்யமுடியாத கடினமான உணவு ஜீரணக் கருவிகளைக் கெடுத்துவிடுகிறது. அதனால் ஆயுள் குறைந்துபோகிறது.
மேலும் இனிப்புடன் கூடிய அல்லது ரசமுள்ளவைகள்(ரஸ்ய), உலராத மற்றும் எண்ணெய் பசையுடன் கூடிய(ஸ்நிக்3த4) உணவுகள் சாத்விக-பிரியர்களால் விரும்பப்படுகிறது. மேலும் பார்க்க, சுவாசிக்க மற்றும் சுவைக்க நன்றாக இருப்பவைகள், மனதிற்கு மகிழ்ச்சியை தரக்கூடிய உணவுகள் ‘ஹ்ருத்3ய’ எனப்படும். இவ்வகையான உணவுகள் சாத்விகர்களுக்கு பிரியமானவைகளாக உள்ளது.
இந்த உணவு வகைகள் காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்றவாறு மாறுபடுதல் இயல்பு. காலையில் உண்ணும் உணவு லேசானதாக இருத்தல் நல்லது. இரவில் உண்ட உணவில் பெரும் பகுதி தூங்கப்போகும் பொழுது ஜீரணமாயிருத்தல் வேண்டும். குளிர்ப் பிரதேசங்களில் உடலுக்கு கதகதப்பைத் தரும் உணவை அருந்துதலும், வெப்பம் நிறைந்த நாடுகளில் குளிர்ச்சி தருகிற உணவை உண்ணுதலும் விரும்பப்படுகிறது.
=> ஆகாரத்தில் கடைபிடிக்க வேண்டியவைகள்:
அத்தியாயம் ஆறில் உண்ணும் உணவு எப்படிப்பட்டதாக இருப்பது சிறந்தது எனச் சொல்லப்பட்டது. அங்கு செய்த விசாரத்தில் சிலவற்றை நினைவு கூறலாம்.
* அளவாக சாப்பிடுதல் சிறந்தது.
* 50% ஸ்தூல உணவு வகைகள், 25% நீர், 25% வாயு அதாவது வயிற்றை காலியாக விடுதல் நன்மை தரும்.
* பசி எனும் துயரம் நீங்குமளவு சாப்பிட வேண்டும். சாப்பிட்டது துயரத்தை கொடுக்குமளவு சாப்பிடுதல் கூடாது.
* இரு வேளை உணவருந்துபவன் யோகி, மூன்று வேளை உணவருந்துபவன் போகி. நான்கு வேளை சாப்பிடுபவன் ரோகியாகிறான். ஐந்து வேளை சாப்பிடுபவனை துரோகி எனலாம், ஏனெனில் அந்த ஐந்தாவது வேளை உணவு இனியொருவனுடையது.
* மெதுவாக நிதானமாக சாப்பிடுதல் நல்லது.
---------------------------------------------------------------------------------------------