||14.26|| குணங்களைக் கடக்கும் உபாயம்:
मां च योऽव्यभिचारेण भक्तियोगेन सेवते ।
स गुणान्समतीत्यैतान्ब्रह्म भूयाय कल्पते ।। २६ ।।
மாம் ச யோऽவ்யபி4சாரேண ப4க்தியோகே3ந ஸேவதே ।
ஸ கு3ணாந்ஸமதீத்யைதாந்ப்3ரஹ்மபூ4யாய கல்பதே ।। 26 ।।
च य: ச ய: மேலும் யார் मां மாம் என்னை अव्यभिचारेण भक्तियोगेन அவ்யபி4சாரேண ப4க்தியோகே3ந பிளவுபடாத பக்தியோகத்தால் सेवते ஸேவதே உபாசிக்கின்றானோ
स ஸ: அவன் एतान् गुणान् ஏதாந் கு3ணாந் இந்த குணங்களை
समतीत्य ஸமதீத்ய முற்றும் கடந்து ब्रह्मभूयाय ப்3ரஹ்மபூ4யாய ப்ரம்மம் ஆவதற்கு
कल्पते கல்பதே தகுதியுடையவனாகிறான்.
மாறாத பக்தியோகத்தால் என்னை யார் உபாசிக்கிறானோ, அவன் இக்குணங்களை முற்றும் கடந்து ப்ரம்மம் ஆவதற்குத் தகுதியுடையவனாகிறான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
வேறுபாடில்லாத பக்தியோகத்தால் என்னை வழிபடுவோனும் குணங்களைக் கடந்து பிரம்மத்தன்மையை பெறத்தகுவான்.
விளக்கம்:
அர்ஜுனனின் மூன்றாவது கேள்விக்கான விடையாக, குணங்களைக் கடக்கும் உபாயத்தை இந்த சுலோகத்தில் கொடுக்கிறார் கிருஷ்ணர்.
=> பிளவுபடாத பக்தி:
சிதைவுறாத பக்தியினால் என்னை உபாசிப்பவன் இந்த மூன்று குணங்களையும் கடக்கிறான் — அவ்யபி4சாரேண ப4க்தியோகே3ந ஸேவதே, என்கிறார் பகவான். நாம் ஏற்கனவே பார்த்ததுபோல, கிருஷ்ணர் ‘நான்’ அல்லது ‘என்னை’ என்கிற சொல்லாடலை(தன்மை ஒருமை) பயன்படுத்தும்போது அவர் தன்னை ஈஷ்வரனாக முன்னிறுத்துகிறார். அது சகுண-ப்ரம்மமாகவோ, நிர்குண-ப்ரம்மமாகவோ அல்லது பிரத்யகாத்மாவாகவோ இருக்கலாம்.
கர்மயோகியோ அல்லது சந்யாசியோ, முமுக்ஷுவான யாரொருவன் ஈஷ்வரனை மாறாத, பிளவுபடாத பக்தியினால் வழிபடுகிறானோ அவன் ப்ரம்மத்தை அடைகிறான். இறைவனையே சாதனமாகவும் சாத்யமாகவும் கொள்வது பிளவுபடாத பக்தி ஆகும். பூச்சியில் தொடங்கி மனிதன் வரையில் அனைவருள்ளும் மெய்யுணர்வாக இருக்கின்ற அந்த ஈஷ்வரனை பக்தியின் வடிவில் அர்ப்பணிப்புடன் நாடுபவன் ப்ரம்மத்தை அடைகிறான். இங்கு பக்தி என்பது விசாரணையின் மூலம் ஏற்படுகிற தெளிவான அறிவைக் குறிக்கிறது. மெய்ப்பொருளைக் குறித்த விசாரத்தில் ஈடுபடுபவன் பக்தனாகிறான் ஏனெனில் அந்த விசாரணையின் பொருளாக விளங்குவது ஈஷ்வரனே ஆகும். இங்கு ‘நாடுதல்’ அல்லது ‘உபாசித்தல்’ என்பதை குறிக்கின்ற ‘ஸேவதே’ எனும் சொல்லானது பகவானைத் தேடுவதைக் குறிக்கவில்லை. பகவான் என்பவர் காலத்திலோ அல்லது ஒரு இடத்திலோ என பிற்காலத்தில் கண்டடைகிற ஒருவர் அல்ல. அவர் எப்பொழுதுமே இருக்கின்ற காரணத்தினாலும், என்றும் நம்மை விட்டு விலகாத காரணத்தினாலும், உண்மையில் இறைவனை நாடுதல் என்பது விசாரணையின் வடிவத்தில் மட்டுமே இருக்கமுடியும். அதன்மூலம் அவரை என்னவென்று அறிய முயற்சிக்கிறோம்.
பக்தை மீராபாயினால் பாடப்பெற்ற அழகான பஜனை ஒன்று உள்ளது — ‘தர்சந் தோ கனஷ்யாமநாத்’. அதில் அவர், மனக்கோவிலில் தீபம் ஏற்றுவதன்மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுமாறு இறைவனை அழைக்கிறார். கோவிலின் எந்தவொரு சன்னதியைப் போலவே மனக் கோவிலிலும் இருள் சூழ்ந்திருப்பதால், இறைவனின் மஹிமையைக் காண தீபம் ஏற்ற வேண்டும். இறைவன் தன்னை விட்டு அகலவில்லை, மாறாக இருளில் மூழ்கியிருக்கும் தனது மனமெனும் கோவிலில் ஏற்கனவே இருக்கிறான் என மீரா அறிவார் என்பதை இப்பாடல் உணர்த்துவதாக உள்ளது. இங்கு, இறைவனது இருப்பை பிரகாசிக்கத் தேவையான ஒளி என்பது அறிவு. எனவே பார்வையற்றவள் பார்க்க, இறைவனுடைய கருணையின் கதவுகளை திறக்கும்படி அவர் வேண்டுகிறார். இங்கு ஆத்மா மற்றும் அனாத்மாவைக் குறித்த அறியாமையை இருள் எனவும், அதை நீக்கவல்ல ஒளியை அறிவு என்றும் கையாளுகிறார். இறையருள் இருந்தால் மெய்ப்பொருளை அறிகின்ற ஆவல் பிறந்து(ஜிக்ஞாஸா), குருட்டுதன்மை நீங்குகிறது.
மெய்ப்பொருளை அறிய விரும்புபவனே உண்மையான பக்தன் ஆகிறான். பகவானை அவன் தன்னிடமிருந்து வேறானவனாக அல்லாமல், தனது சொந்த எண்ணங்களின் ஆதாரமாக நாடுகிறான்.
இப்படிப்பட்டவன் குணங்களைக் கடக்கிறான். எந்தச் செயலினாலும் அல்லாமல், முற்றிலும் அறிவினாலேயே குணங்களைக் கடக்கிறான். ஆத்மாவாக தன்னையறிந்த இந்த குணாதீதன், ப்ரம்மத்திடமிருந்து எப்போதும் பிரிந்திராத காரணத்தினால் ப்ரம்ம சொரூபமாவதற்கு தகுதியை அடைகின்றான். இங்கு, ‘ப்ரம்மமாவதற்கான தகுதியடைகிறான் — ப்3ரஹ்மபூ4யாய கல்பதே’ என்பது ‘அவன் ப்ரம்மம்’ என்பதைக் குறிக்கிறது.
=> சுவாமி சித்பவானந்தரின் விளக்கம்:
‘பரம பிரேமை சொரூபமாயிருக்கிற பக்தி யோகத்தால் யார் ஒருவன் அனைத்தையும் நாராயண சொரூபமாகக் கருதி அந்தர்முக திருஷ்டியில் ஆத்மானு சந்தானம் செய்துகொண்டே இருக்கிறானோ அவன் பிரம்ம சொரூபம் ஆகிறான். வெளிச்சம் வர இருள் இருக்குமிடம் தெரியாது மறைவதுபோன்று பிரம்ம சாக்ஷாத்காரத்தில் திரிகுணத்தைக் கடத்தல் மிக எளிதாகிறது’, என சுவாமி சித்பவானந்தர் தனது நூலில் விளக்கமளிக்கிறார்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
பக்தனுக்கு ஈஷ்வரன் பல்வேறு உருவங்களில் தோன்றுகிறான். ஆனால் சமாதியில் பிரம்மஞானத்தை அடைந்தவனுக்கு அவன் அகண்ட நிராகார நிர்க்குணப் பிரம்மமாக இருக்கின்றான். இதில் தான் ஞானமும் பக்தியும் சமரசப்படுகின்றன.
---------------------------------------------------------------------------------------------
||14.27 || ப்ரம்ம சொரூபம்:
ब्रह्मणो हि प्रतिष्ठाहममृतस्याव्ययस्य च।
शाश्वतस्य च धर्मस्य सुखस्यैकान्तिकस्य च ।। २७।।
ப்3ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டா2ஹமம்ருதஸ்யாவ்யயஸ்ய ச ।
சா1ச்1வதஸ்ய ச த4ர்மஸ்ய ஸுக2ஸ்யைகாந்திகஸ்ய ச ।। 27 ।।
अहम् हि அஹம் ஹி நானே ब्रह्मण: ப்3ரஹ்மண: ப்ரம்மத்துக்கும் अव्ययस्य अमृतस्य च அவ்யயஸ்ய அம்ருதஸ்ய ச அழியாத மோக்ஷநிலைக்கும் शाश्वतस्य धर्मस्य च சா1ச்1வதஸ்ய த4ர்மஸ்ய ச சாசுவதமான தர்மத்துக்கும் एकान्तिकस्य च सुखस्य ஏகாந்திகஸ்ய ச ஸுக2ஸ்ய ஒப்பற்ற சுகத்துக்கும் प्रतिष्ठा ப்ரதிஷ்டா2 இருப்பிடம்.
அழிவற்ற, மாற்றத்திற்கு உட்படாத மற்றும் நித்திய தர்மமமாக, ஒப்பற்ற சுகமாக இருக்கின்ற ப்ரம்ம சொரூபமாக நானே இருக்கின்றேன்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
சாவும் கேடுமற்ற பிரம்மத்துக்கு நானே நிலைக்களன்; என்றும் இயலும் அறத்துக்கும் தனிமையின்பத்துக்கும் நானே இடம்.
விளக்கம்:
பிளவுபடாத பக்தியுடன் தன்னை நாடும் பக்தன் ப்ரம்மாகிறான் என சென்ற சுலோகத்தில் பகவான் கூறினார். இப்படிப்பட்ட பக்தன் ஏன் ப்ரம்மாகிறான் என்பதற்கான காரணத்தை இங்கு கொடுக்கிறார். ஸத்-சித்-ஆனந்த ஆத்மாவே சிருஷ்டிக்கு காரணமான ப்ரம்ம என்ற அறிவுடன், பிரத்யகாத்மாவை பரமேஷ்வரனாக அறிகிறான் இந்த பக்தன்.
=> ப்ரம்மத்தின் ஆதாரம்:
குணங்களிலிருந்து விடுபட்டதாக ஆத்மாவை உணர்ந்தவன் ப்ரம்மத்தை அடைய தகுதியுடையவனாகிறான் எனச் சொல்லப்பட்டது. ஏனெனில் ‘நான்’ என்ற சொல்லின் பொருளே ப்ரம்மத்தின் ஆதாரம் ஆகும் — ப்ரதிஷ்டா2. ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரம்மத்தின் ஆதாரம் ஆத்மா. பொதுவாக ப்ரம்மமே உலகனைத்திற்கும் ஆதாரம் எனக் கூறப்படுகிறது. ஆனால் இங்கு பகவான், ‘நானே ப்ரம்மத்தின் ஆதாரம்’ என்கிறார். ‘ப்ரதிஷ்டா2’ எனில் ஆதாரம், இருப்பிடம் என்பது பொருள்.
ப்ரம்மம் என்பது ஒரு அறியப்படும் பொருளாக இல்லாத காரணத்தினால் சுருதியானது ப்ரம்மத்தை எவ்வித ஆதாரமும்(ப்ரதிஷ்டா2) அற்றதாகக் கூறுகிறது. மரத்திற்கு பூமி ஆதாரம், பானைக்கு களிமண் ஆதாரம். ஆனால் தனது இருப்புக்கு எதையும் சாராத, ஆதாரமற்ற ஒன்றாக ப்ரம்மத்தை சுருதி அறிமுகப்படுத்துகிறது. அத்தகைய ப்ரம்மத்திற்கு ஆதாரம் ‘நான்’, ஏனெனில் ‘நான்’ என்பது ப்ரம்மத்திடமிருந்து வேறாக இல்லை. வேறு மொழியில் சொல்வதானால், ‘நான்’ என்பது ப்ரம்மமே என்பதால் ப்ரம்மத்தின் ஆதாரமாக ‘நான்’ இருக்கிறது. ஆத்மாவைத் தவிர வேறெதுவும் அநாத்மா என்கிறோம். அநாத்மா என்பது அறியப்படும் பொருளாக இருக்கிறது. எனவே அறிபடு பொருளாக இல்லாத ப்ரம்மத்தை ஆத்மாவில் மட்டுமே அறியமுடியும்.
இத்தகைய ப்ரம்மத்திற்கு பகவான் இங்கு சில அடைமொழிகளைக் கொடுக்கிறார். முதலில், அம்ருதமானது ப்ரம்ம — அம்ருத, என்கிறார். ‘அம்ருத’ எனில் மரணமற்ற, அழியாத என்பது பொருள். அது அழியவில்லை என்றாலும், அது எல்லா நேரத்திலும் மாறிக் கொண்டே இருக்கலாம் அல்லவா? என்ற கேள்வி எழலாம் என்பதால் அடுத்ததாக, ப்ரம்ம அவ்யயமானது — அவ்யய, என்கிறார். அதாவது எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாதது, மாறாமல் இருப்பது.
ப்ரம்ம சாசுவதமானது — சா1ச்1வத. கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் என காலத்தைக் கடந்து என்றுமுள்ளதாக இருக்கின்ற ப்ரம்ம, தர்மத்தின் அனைத்து அறிவையும் கொண்டதாக உள்ளது —த4ர்ம. ஞானயோகத்தின் வழியாக அடையப்படுவதாக இருப்பது ப்ரம்ம என சங்கரர் இங்கு விளக்கமளிக்கிறார். ‘த4ர்ம’ என்பதற்கு ‘த்ரியதே இதி தர்ம:, அனைத்தையும் தாங்குவது தர்மம்’ என்கிற அர்த்தமும் உண்டு.
மேலும், ப்ரம்ம சுகமானது — ஸுக2. அதாவது அதன் இயல்பே சுக சொரூபம். வேண்டும் என்கிற உணர்வோ அல்லது எந்தவித குறைபாடுகளோ இல்லாதது என்பதால் சுக சொரூபம்.
‘ஏகாந்திக’ எனில் மறுக்கப்பட முடியாதது எனப் பொருள். இது ‘ஸ்தய’-மாக இருப்பதால் எந்தவித முரண்பாட்டிற்கும் உட்படாத ஒன்றாக, என்றுமுள்ளதாக, மறுக்கமுடியாததாக இருக்கிறது. மாறாக, பெயர் மற்றும் வடிவமாக(நாமரூப) இருக்கின்ற மற்றவைகளனைத்தும் மித்யாவாக இருப்பதால் மாற்றத்திற்கு உட்பட்டது. இங்கு விவரிக்கப்பட்ட இத்தகைய ப்ரம்ம, பிரத்யகாத்ம சொரூபமாக புரிந்துகொள்ள வேண்டும். அதுவே இங்கு ஆதாரம்(ப்ரதிஷ்டா2) எனச் சொல்லப்படுகிறது.
ப்ரம்மமாக ஆகுதல் எனும் செயல்பாடுகளாக அல்லாமல், ப்ரம்மமாகவே இருக்கும் நிலை, ‘ப்3ரம்ம பா4வநா’ என்று அழைக்கப்படுகிறது. ‘நான்’ என்பது ப்ரம்மமாகவே இருக்கின்றபடியால்(ப்ரதிஷ்டா2) ஒருவனால் ப்ரம்மமாக ஆகுதல் என்பது இயலாது; ஏனெனில் அவனே ப்ரம்மம். எனவே குணங்களைக் கடந்த குணாதீதன் ஒருவன் தடைகளில்லாத காரணத்தினால் ப்ரம்மமாகவே இருக்கின்றான்.
ஆகவே பகவான் இங்கு, ‘மரணமற்ற, மாறாத, என்றுமுள்ள தர்மத்தினுடைய, துக்கம் கலவாத சுகமாக இருக்கின்ற ப்ரம்ம சொரூபமாக நான் இருக்கின்றேன்’ என்கிறார்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
ஒரு மனிதன் ஒரு காடு வழியே போயிக்கொண்டிருந்தான். வழியில் மூன்று திருடர்கள் அவனை மடக்கிப் பிடித்துக்கொண்டனர். அவனிடமிருந்த பொருள்கள் எல்லாவற்றையும் அவர்கள் பிடுங்கிக்கொண்டனர். அப்பால் முதல் திருடன் “இவனை உயிருடன் வைத்திருப்பதில் என்ன லாபம்?” என்று சொல்லித் தன் கத்தியை உருவி அவனை வெட்டப்போனான். அப்போது இரண்டாவது திருடன் “இவனைக் கொல்வதால் லாபம் என்ன? கை கால்களைக் கட்டி ஒரு பக்கத்தில் போட்டுவிட்டுப் போகலாம்,” என்றான். உடனே அவர்கள் அப்படியே செய்து சாலையின் பக்கத்தில் அவனைப் போட்டுவிட்டுச் சென்றனர். அவர்கள் கொஞ்சதூரம் சென்றதும் மூன்றாவது திருடன் திரும்பி அவனிடம் வந்து “அப்பா, உனக்கு நோகிறதா! நான் உன் கட்டுகளை அவிழ்த்து உன்னை விடுதலை செய்கிறேன். இரு” என்று சொல்லிக் கட்டுகளை அவிழ்த்துவிட்டு “என்னுடன் வா, வழியைக் காட்டுகிறேன்” என்று வெகுதூரம் அழைத்துக்கொண்டு போனான். அப்பால் அவன் “அதோ பார்; உன் வீடு தெரிகிறது, இந்த வழியே போவாயானால் சீக்கிரம் வீடுபோய்ச் சேருவாய்” என்றான். இதைக் கேட்டதும் வழிப்போக்கன் நன்றியறிவுடன், “அப்பா, நீ எனக்கு ஒரு பெரிய உபகாரம் செய்திருக்கிறாய். என்னுடன் கூட என் வீட்டுக்கு வரக்கூடாதா?” என்று கேட்டான். அதற்குத் திருடன், “நான் வரக்கூடாது. போலீஸார் வந்து என்னைப் பிடித்துக் கொள்வார்கள்,” என்று சொல்லிப் போய்விட்டான்.
இந்த உலகம் தான் அந்தக் காடு; ஸத்துவ, ரஜஸ், தமோகுணங்கள் மேற்கூறிய மூன்று திருடர்கள். ஜீவந்தான் காட்டுவழியே போன பிரயாணி. ஆத்ம ஞானம் அவனிடம் இருந்த பொருள். தமோகுணமும் ரஜோகுணமும் உலக பந்தங்களாகிய சங்கிலியால் அவனைக் கட்டுகின்றன. உலக பந்தங்களிலிருந்து அவனை ஸத்துவ குணம் காப்பாற்றுகின்றது. ஸத்துவகுணத்தைச் சரணமடையும் ஜீவன் தமோ ரஜோகுணங்களின் பயன்களாகிய காமக் குரோதாதி மாயைகளினின்றும் விடுதலையடைகின்றது. உலக பந்தங்களினின்றும் ஜீவனைக் கரையேற்றுவது அந்த ஸத்துவ குணந்தான் என்றாலும் அந்த ஸத்துவகுணமும் ஒரு திருடனே. பர பதத்துக்குச் செல்லும் வழியில் ஒருவனை அது அழைத்துவந்து, “அதோ உன் வீட்டைப் பார்,” என்று சொல்லிவிட்டு மறைந்துபோகிறது. ஸத்துவ குணமும் பரமபதத்தினருகே செல்லாது.
————————————————————————————————
ऒं तत्सत् । इति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
श्रीकृष्णार्जुनसंवादे गुणत्रयविभागयोगो नाम चतुर्दशोऽध्याय: ।। १४ ।।
ஓம் தத் ஸத்। இதி ஶ்ரீமத்3ப4க3வத்3கீ3தாஸு உபநிஷத்ஸு ப்3ரஹ்மவித்3யாயாம் யோக3சா1ஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே3 குண3த்ரயவிபா4க3யோகோ3 நாம சதுர்த3சோ1ऽத்4யாய: ।। 14 ।।
ப்ரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஶ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத் கீதை என்னும் உபநிஷத்தின்கண் குணத்ரய விபாகயோகம் என்ற பதிநான்காம் அத்தியாயம்.
---------------------------------------------------------------------------------------------
குணத்ரய விபாகயோகம் - சாரம்:
(1) உறுதிமொழி(பிரதிக்ஞா) மற்றும் ஞானபலன் [1 - 2]
(2) சிருஷ்டியைப் பற்றிய கருத்து [3 - 4]
(3) குணத்தைப் பற்றிய விசாரம் [5 - 18]
(4) மூன்று குணங்களின் அறிமுகம் [5]
(5) குணங்களின் இலக்கணம் [6 - 9]
(6) குணங்களின் ஆதிக்யம் [10]
(7) குணங்களின் அடையாளம் [11 - 13]
(8) குணங்களின் பரலோக பலன் [14 - 15]
(9) குணங்களின் இஹலோக பலன் [16 - 17]
(10) குணங்கள் குறித்த விசாரத்தின் முடிவுரை [18]
(11) ஞானயோகம் [19 - 20]
(12) அர்ஜுனனின் மூன்று கேள்விகள் [21]
(13) குணாதீதனின் அடையாளம் [39 - 42]
(14) குணங்களைக் கடந்தவனது நடைமுறை [23 - 25]
(15) குணங்களைக் கடப்பதற்கான உபாயம் [26 - 27]
---------------------------------------------------------------------------------------------