||3.4|| இவ்விரண்டு சாதனைகளுக்குமான சம்பந்தம்:
न कर्मणामनारम्भान्नैष्कर्म्यं पुरुषोऽश्नुते ।
न च सन्न्यसनादेव सिद्धिं समधिगच्छति ।। ४ ।।
ந கர்மணாமனாரம்பா4ந்நைஷ்கர்ம்யம் புருஷோऽச்1நுதே ।
ந ச ஸந்ந்யஸனாதே3வ ஸித்3தி4ம் ஸமதி4க3ச்ச2தி ।। 4 ।।
पुरुष: புருஷ: ஒரு மனிதன் कर्मणाम् கர்மணாம் கர்மங்களின் अनारम्भात् அனாரம்பா4த் ஆரம்பிக்காமையிலிருந்து नैष्कर्म्यं நைஷ்கர்ம்யம் கர்மமற்ற நிலையை(ப்ரம்மத்தை)
न अश्नुते ந அச்1நுதே அடைவதில்லை च ச மேலும்
सन्न्य सनात् एव ஸந்ந்யஸனாத் ஏவ வெறும் சந்யாசத்தினாலேயே सिद्धिं ஸித்3தி4ம் நிறைநிலையை
न समधिगच्छति ந ஸமதி4க3ச்ச2தி பெறுவதில்லை.
கர்மங்களைத் துவங்காமல் தவிர்த்து விடுவதால் மட்டும் ஒரு மனிதன் கர்மமற்ற நிலையை அடைவதில்லை. வெறும் சந்யாசத்தினாலேயே மோக்ஷத்தை பெறுவதில்லை.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
தொழில்களைத் தொடாமலே யிருப்பதனால் மனிதன் செயலற்ற நிலை அடைவதில்லை. துறவினாலேயே மனிதன் ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்.
விளக்கம்:
=> கர்ம யோகம் செய்து பக்குவப்படாமல் நிவ்ருத்தி மார்க்கம் முழு பலன் தராது:
முன் சுலோகத்தில், இரண்டு வகையான வாழ்க்கைமுறை, நிஷ்டா - ஞானயோக நிஷ்டா மற்றும் கர்மயோக நிஷ்டா முறையே சந்யாசிகள் மற்றும் கர்மயோகிகளால் மேற்கொள்ளப்படுகிறது என பார்த்தோம். மோக்ஷத்தை விரும்பும், சந்யாசிகளல்லாத மற்றவர்கள் கர்மயோகிகள் எனப்படுகிறார்கள். இதற்கான விளக்கத்தை, கர்மயோகத்திற்கும் ஞானயோகத்திற்குமான தொடர்பை பகவான் இந்த சுலோகத்தில் கூறுகிறார்.
விருப்பு-வெறுப்பிலிருந்து விடுதலையடைந்த ஒருவனாலேயே ஞானயோகியாக, முழுவதுமாக ஞானத்தை பின் தொடர முடியும். விருப்பு-வெறுப்பே நம்முடைய அனைத்து சலசலப்பிற்கும் மூலக்காரணம் என்று கீதை கூறுகிறது. ராகத்வேஷத்தை மட்டுப்படுத்தும் களமாக கர்மயோக வாழ்க்கை அமைகிறது. ஆகவே கர்மயோகம், ஞானயோகத்திற்கான தகுதியை அடைவிக்கும் சாதனையாகவும், ஞானயோகம் மோக்ஷத்திற்கான சாதனையாகவும் அமைகிறது.
சென்ற அத்யாயத்தில்(2.19) ‘ஸந்யாஸம்’ என்பதற்கான இரண்டு பொருளைப் பார்த்தோம். ஒன்று, ஞானத்தை அடையும் பொருட்டு உறவுகளையும் கடமைகளையும் துறக்கும் வாழ்க்கைமுறை. இனியொன்று, ஞானத்தினால் கர்மத்தை துறப்பது(ज्ञानेन कर्म संन्यास: _ஞானேன கர்ம ஸந்யாஸ:). பெரும்பாலும் சங்கரர் இந்த வகையான ஸர்வ-கர்ம-சந்யாசத்தையே சந்யாசத்திற்கான பொருளாக கொடுக்கிறார். ஏனெனில் இந்த வழிமுறையில் ‘ஆத்மாவாகிய நான், செயல் செய்பவன் அல்ல; அகர்த்தா’ என்ற ஞானத்தினால் அனைத்து செயல்களும் விடப்படுவதால் - ஞானேன கர்ம-ஸந்யாஸ:. ‘ந்யாஸ(न्यास)’ என்றால் துறவு; ‘ஸந்யாஸ’ என்பது குறைபாடற்ற பூரணமான அல்லது முற்றுப்பெற்ற துறவு. ஆகவே ஸர்வ-கர்ம-சந்யாசமே எல்லாவிதமான செயல்களிலிருந்தும் விடுவிக்கும் முற்றுப்பெற்ற துறவு; ஞானத்தினால் மட்டும் அடையப்படும் பூரணமான துறவு. இதற்கான சரியான மனநிலை கர்மயோகத்தினாலேயே அடையப்படும்.
நைஷ்கர்ம்யம் - செயலில்லாமல் இருத்தல். ப்ரம்ம, நிஷ்க்ரியம்; செயலற்றது. செயலை துவங்காமலிருத்தல், செயலற்ற நிலையை அடைய உபாயம் ஆகாது. மேலும் சந்யாசத்தை மேற்கொள்வதால் மட்டுமே ஒருவன் மோக்ஷத்தை(கர்மமற்ற நிலை_ நைஷ்கர்ம்யம்) அடைய முடியாது என்கிறார் பகவான். நைஷ்கர்ம்யம் என்பதற்கும் சித்தி என்பதற்கும் பொருள் ஒன்றே. பழம் முழுமையாக பழுக்குமிடத்து அது சித்தியாய்விட்டது எனலாம். அதற்கு முன்பு அது காய்ந்து முதிர்ந்து கனிகிற செயல்களெல்லாம் அதனுடைய கர்மமாகிறது. பழுத்த பழம் மரத்தை விட்டுப் பிரிவது அதன் சந்யாசம். மனிதனுடைய வாழ்க்கை இதற்கு ஒப்பானது. கர்மத்தின் மூலமே மனிதன் ஞானமுதிர்ச்சியடைகிறான்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
நீ அணிந்துள்ள ஆடையின் ஒரு நுனியில் வேதாந்தத்தை முடிந்து வைத்துக் கொண்டு ஆழ்ந்து சாதனத்தில் ஈடுபடு. அதாவது வாழ்க்கையின் குறிக்கோள் பரம்பொருளில் லயமாவது என்பதை மனதில் வைத்துக் கொண்டு உன் கர்மத்தைச் செய்.
--------------------------------------------------------------------------------------------------------------||3.5|| பலவந்தமாக ஏன் கர்மத்தை தியாகம் செய்யலாகாது?
न हि कश्चित्क्षणमपि जातु तिष्ठत्यकर्मकृत् ।
कार्यते ह्यवश: कर्म सर्व: प्रकृतिजैर्गुणै: ।। ५ ।।
ந ஹி கச்1சித்க்ஷணமபி ஜாது திஷ்ட2த்யகர்மக்ருத் ।
கார்யதே ஹ்யவச1: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்கு3ணை: ।। 5 ।।
जातु ஜாது எப்பொழுதாவது क्षणम् अपि க்ஷணம் அபி கணப்பொழுதும் कश्चित् கச்1சித் யாரும் अकर्मकृत् तिष्ठति அகர்மக்ருத் திஷ்ட2தி கர்மம் செய்யாதிருத்தல் न हि ந ஹி முடியாது
हि ஹி ஏனென்றால் प्रकृतिजै: ப்ரக்ருதிஜை: மாயையிலிருந்து தோன்றிய गुणै: கு3ணை: குணங்களால் सर्व: ஸர்வ: எல்லா உயிர்களும் अवश: அவச1: தன் வசமின்றி
कर्म कार्यते கர்ம கார்யதே கர்மத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
யாரும் ஒரு கணப்பொழுதேனும் செயலாற்றாமல் இருப்பதில்லை. ஏனென்றால் மாயையிலிருந்து உதித்த குணங்களால் ஒவ்வொரு உயிரும் தன் வயமின்றிக் கர்மம் செய்விக்கப்படுகின்றது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
எவனும் ஒரு கணப்பொழுதேனும் செய்கையின்றிருப்பதில்லை. இயற்கையில் விளையும் குணங்களே எல்லா உயிர்களையும் அவசரமாகத் தொழில் புரிவிக்கின்றன.
விளக்கம்:
=> கர்மத் தியாகம்:
முந்தய சுலோகத்தில் பகவான் கூறிய கருத்தின் தொடர்ச்சியாக இது அமைகிறது. கர்மத்தை ஆரம்பிக்காமல் கர்மமற்ற நிலையை, நைஷ்கர்ம்யத்தை அடைய முடியாது. வேத முறைப்படி சந்யாசத்தை எடுத்துக் கொள்வதால் மட்டும் ஒருவன் எல்லா செயலிலிருந்தும் விடுபட முடியாது. ஏனெனில் உடல் ரீதியாக அனைத்து கர்மத்தையும் துறப்பது என்பது முடியாத ஒன்றாகும். பிக்ஷைக்கு செல்லுதல், உணவை உண்ணுதல், ஸ்நானம் செய்தல், படித்தல், நடத்தல், சுவாசித்தல் என அனைத்துமே கர்மம் தான். ஆகவேதான் நைஷ்கர்ம்ய சித்தி என்பது ஸர்வ-கர்ம-சந்யாசத்தினால் மட்டுமே, ஞானத்தினால் கர்த்ருதுவத்தை(நான் செயல் செய்பவன் என்ற கோட்பாட்டை) துறந்தவனால் மட்டுமே அடையப்பட முடியும்.
=> செயலுக்கான காரணம்:
ஒருகால் செயல் என்பது ஒருவரின் விருப்பத்தின் காரணமாக செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம். அப்பொழுதும் கூட அவரவர்களின் குணத்திற்கு ஏற்றார் போல், அறியப்படாத காரணத்தினால் தூண்டப்பட்டவர்களாக, தன் வசமின்றி ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு செயலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். இதை பகவான் இச்சுலோகத்தின் இரண்டாவது வரியில் ‘ப்ரக்ருதி’ என்ற சொல்லின் மூலம் அறிமுகப்படுத்துகிறார்.
ப்ரக்ருதி_மாயை என்பது ஜகத்தின் உபாதான காரணமாக விளங்குவதைக் குறிக்கிறது. எதிலிருந்து சிருஷ்டி தோன்றியதோ அது மாயை. ஒவ்வொருவரின் மனமும் கூட மாயையின் வெளிப்பாடே. சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குண மாயையிலிருந்து தோன்றிய அனைத்தும் முக்குணத்துடனே விளங்குகிறது. தங்கத்தை கொண்டு உருவாக்கப்பட்ட வளையலில் தங்கத்தின் தன்மை காணப்படுவது போல மாயையிலிருந்து தோன்றிய மனமும் முக்குணத்தை அடிப்படையாகக் கொண்டது. இக்குணங்களுக்கு ஏற்றார் போல் அவரவர்களின் மனதில் விருப்பம் வெளிப்பட்டு அதற்கேற்றவாறு செயல்களும் நடைபெறுகின்றன. இக்குணங்களின் தன்மைகளை கீதையின் பின்வரும் அத்யாயங்களில் விளக்கமாகப் பார்க்கலாம். உதாரணமாக மூன்று வகையான தானம்_கொடுத்தல் பேசப்படுகிறது. தனக்கு தேவையான ஒன்று பதிலுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கொடுப்பது தமஸையும், பெருமைக்காகக் கொடுப்பது ரஜஸையும் காட்டுகிறது. கொடுக்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் கொடுத்து, கொடுக்கப்பட்ட பின் அதை மறந்து விடுதல் சத்வத்திலிருந்து தோன்றுவது. செயல் ஒன்றாக இருந்த போதிலும் இவை மூன்றிற்குமான தெளிவான வேறுபாட்டை நம்மால் பார்க்க முடியும்.
இப்படியாக ஒவ்வொரு உயிரும் மாயையின் முக்குணத்தினால் தூண்டப்பட்டு, அவற்றிலிருந்து வெளிப்படும் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஏதேனும் ஒரு செயலில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றன.
=> ‘கச்1சித்_ எவரும்’ என்பதின் 2 விதமான பொருள்விளக்கம்:
(1) கச்1சித்(कश्चित्) யாரும் = அக்ஞானி
ஆத்ம ஞானமில்லாது, அனாத்மாவான உடல்-மனதை ‘நான்’ என எடுத்துக் கொள்ளும் அக்ஞானி, ஒரு கணமும் கூட செயலற்று இருக்க முடியாது. ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குண மாயையிலிருந்து தோன்றிய அனாத்மா, கர்ம சொரூபம். அதில் கட்டுண்டு கிடப்பவர்கள் கர்மம் செய்தே ஆகவேண்டும். உண்பது, உறங்குவது, சுவாசிப்பது, ஹிருதயம் அடிப்பது ஆகியவை அனைத்தும் கர்மமே. அனாத்மாவிற்கு என்றுமே ஓய்வு கிடையாது. ஆகவே அனாத்மாவில் ‘நான்’ எனும் புத்தி வைத்தவனுக்கு ஒரு கணப்பொழுதேனும் கூட ஓய்வில்லை.
ஆனால் ஞானியானவன், அனாத்மா செயல்படும் பொழுது கூட, ‘நான் செயலற்ற ஆத்மா, அகர்த்தா’ எனும் ஞானத்தில் நிற்பதால் அவன் செயலற்றவனாக உள்ளான்.
(2) கச்1சித்(कश्चित्) யாரும் = ஞானி மற்றும் அக்ஞானி
எவராக இருந்தாலும் அனாத்மாவான சரீரத்தின் அடிப்படையில் செயல்படாமல் இருக்க முடியாது. இயற்கையில் இயங்காதிருப்பது எது? அணு முதல் அண்டம் வரையில் எல்லாம் அசைகின்றன. அதில் பிணிக்கப்பட்டுள்ள உயிர்க்குக் கர்மத்தை விடும் சுதந்திரம் கிடையாது.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
வைத்தியசாலைக்குள் நோயாளியாகப் பதிவு செய்யப்பட்டவன் நோய் தீரும் முன்பு அதைவிட்டுப்போக அனுமதிக்கப்படமாட்டான். நோய் நீங்கியபின் வைத்தியசாலைக்குள் அவனுக்கு வேலையில்லை. அங்ஙனம் அக்ஞானம் என்னும் நோய்க்கு உட்பட்டவர்கள் பிரகிருதி என்ற வைத்தியசாலைக்குள் இருந்தே ஆகவேண்டும். அப்பொழுது கர்மம் செய்தல் என்ற சிகிச்சைக்கு அவர்கள் உட்பட்டே ஆகவேண்டும்.
-------------------------------------------------------------------------------------||3.6|| பற்று மனதளவில் நீக்கப்படவில்லையெனில்:
कर्मेन्द्रियाणि संयम्य य अास्ते मनसा स्मरन् ।
इन्द्रियार्थान् विमूढात्मा मिथ्याचार: स उच्यते ।। ६ ।।
கர்மேந்த்3ரியாணி ஸ்ம்யம்ய ய ஆஸ்தே மனஸா ஸ்மரந் ।
இந்த்3ரியார்தா2ந் விமூடா4த்மா மித்2யாசார: ஸ உச்யதே ।। 6 ।।
य: ய: யாரொருவன் कर्मेन्द्रियाणि கர்மேந்த்3ரியாணி கர்மேந்திரியங்களை संयम्य ஸம்யம்ய அடக்கி इन्द्रियार्थान् இந்த்3ரியார்தா2ந் இந்திரிய விஷயங்களை मनसा மனஸா மனதால்
स्मरन् अास्ते ஸ்மரந் ஆஸ்தே எண்ணிக் கொண்டிருக்கின்றானோ स: ஸ: அவன்
विमूढात्मा விமூடா4த்மா மூடாத்மா मिथ्याचार: மித்2யாசார: பொய்யொழுக்கமுடையவனென்று
उच्यते உச்யதே சொல்லப்படுகிறது.
கர்மேந்திரியங்களை அடக்கி, இந்திரிய விஷயங்களை மனதால் எண்ணிக் கொண்டிருக்கும் மூடன் பொய்யொழுக்கமுடையவனென்று சொல்லப்படுகிறான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு :
கர்மேந்திரியங்களை அடக்கிக்கொண்டு, ஆனால் இந்திரிய விஷயங்களை மனத்தால் ஸ்மரித்துக் கொண்டிருப்போனாகிய மூடாத்மா பொய்யழுக்கமுடையவனென்று சொல்லப்படுகிறான்.
விளக்கம்:
=> மித்யாசாரன்(மித்2யாசார:):
பற்றானது மனதளவில் நீக்கப்படாமல், செயலற்ற நிலையை எடுத்துக் கொள்ளுதல் ஆன்மீக வாழ்க்கையில் வீழ்ச்சியை அடையச் செய்யும். வெளித்தோற்றத்தில் விட்டுவிட்டு மனதில் அப்பொருளை நினைத்துக் கொண்டிருப்பவன், தன்னையே ஏமாற்றிக் கொள்வதோடு, பொய்யான வாழ்க்கைமுறையை மேற்கொண்டவனாகிறான். அவன் மனதை அடக்காது வெளிக்கரணங்களை அடக்குவதால் தன் இயல்பை பிளவுபடுத்துகிறான். எது வாழ்வைக் குலைக்கிறதோ அது பொய்யொழுக்கம்.
மித்யா - பொய்; ஆசார: - ஒழுக்கம்;
மித்யாசார: - பொய்யழுக்கமுடையவன்; வெளியில் துறந்து மனதளவில் துறக்காதவன்.
அக்ஞானத்தில் இருப்பவன் கர்மத்தை விட்டுவிடுவதாகப் பாசாங்குசெய்வது மித்யாசாரம் ஆகிறது. அது துராசாரத்திற்கு ஒப்பானது.
=> ஆத்ம ஞானமில்லாமல் கர்மமற்ற நிலை சாத்தியமா?
ஆத்ம ஞானம் இல்லாத ஒருவன், செயலில் ஈடுபடாத நிலையே நைஷ்கர்ம்யம் என எண்ணி, எதுவும் செய்யாது அல்லது பேசாது அமர்கிறான். இந்நிலையில் அவன் எதைப் பற்றிச் சிந்திக்க முடியும்? ஏற்கனவே தான் அனுபவித்த பொருட்களையும், இந்திரிய விஷயங்களையும் மற்றும் வருங்காலங்களில் தான் அனுபவிக்கப் போகும் விஷயங்களையும் எண்ணிக் கொண்டிருப்பான். இப்படிப்பட்ட வாழ்க்கை பொய்யானது என்று பகவான் அர்ஜுனனிடம் கூறுகிறார். சங்கரர் தனது பாஷ்யத்தில் ஒரு படி மேலே சென்று இம்மாதிரியான வாழ்க்கை முறை பாபத்தை தருவது, ‘பாபாசார’ என்கிறார்.
ஆத்மாவை அறிந்தவனுக்கு இந்த பிரச்சனை இல்லை. ஆத்மா அகர்த்தா என்ற அறிவினால் அவன் ஏற்கனவே நைஷ்கர்ம்யத்தை அடைந்து விட்டான். பிராரப்தம் அதாவது ஊழ்வினை முடியும் வரை அவன் அந்த ஞானத்தையே எண்ணி சுகித்திருப்பான்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
மனிதனுடைய புண்ணிய பாபங்கள் அவனுடைய காரியங்களைச் சார்ந்திராமல் அவனுடைய மனநிலைமையைத்தான் சார்ந்துள்ளன. இரண்டு நண்பர்கள் கூடிப்போகையில் ஶ்ரீமத் பாகவதம் வாசிக்கப்படும் இடத்தையடைந்தனர். அவர்களில் ஒருவன், “நண்பா! இங்கே சற்று தாமதித்து அருள்மொழியைக் கேட்கலாமே” என்றான். மற்றவன், “பாகவதத்தை கேட்பதினால் என்ன சுகம்? தாஸி வீட்டில் போய் இன்பம் நுகரலாம் வா” என்றான். முன்னவன் அதற்கு இணங்கவில்லை. ஆதலால் அவன் பாகவதம் படிக்கும் இடத்தில் உட்கார்ந்து கதை கேட்கத் தொடங்கினான். மற்றவனோ தாஸி வீட்டிற்குப் போனான். என்றாலும் அவனுக்கு ஆங்கு இன்பம் ஏற்படவில்லை. “அடடா! என்ன செய்துவிட்டேன்! ஏன் இங்கு வந்தேன்? எனது நண்பன், ஹரியின் திவ்ய சரித்திரத்தை கேட்டு மகிழ்ந்திருப்பான்” என்று நினைத்துக்கொண்டு, தாஸி வீட்டிலிருந்த போதிலும் ஹரியைப்பற்றி நினைத்திருந்தான். பாகவதத்தைக் கேட்க உட்கார்ந்தவனுக்கு இன்பம் உண்டாகவில்லை. “என் நண்பனோடு தாஸி வீட்டுக்குப் போயிருந்தால் அவனைப் போல நானும் இன்ப நுகர்ச்சி பெற்றிருக்கலாம்” என்று நினைத்துக் கொண்டிருந்தான். ஆகவே, இவன் பாகவத படனம் செய்யும் இடத்தில் இருந்தபோதிலும், அதைக் கேட்காமல் தாஸி வீட்டைப்பற்றிய சிந்தனையுள்ளவனாக இருந்தபடியால், அங்கு நேரில் போகாதுபோனாலும் வாஸ்தவத்தில் போவதால் பெறக்கூடிய பாபத்தை அடைந்தான். தாஸி வீட்டிற்குச் சென்றவன் பாகவத படனத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தபடியால், அவனுக்கு அந்தக் கெட்ட இடத்திலுங்கூடப் புண்ணியமே வாய்த்தது.
-------------------------------------------------------------------------------------